Saturday, March 16, 2019

ஜோதிர்லிங்க ஸ்தலங்கள்

லிங்கோத்பவ மூர்த்தி 

முன்னுரை: சிவபெருமான் ஒளிமயமானவன். ஜோதியுள் ஜோதி எனத் திகழ்பவன். ஸ்வயம் பிரகாசனாக என்றென்றும் விளங்குபவன். அவ்வொளியிலிருந்து தோன்றியருளியதே சிவலிங்கமாகிய ஜோதி வடிவம். தம்முள் யார் பெரியவர் என்று பிரமனும் விஷ்ணுவும் பல்லாண்டுகள் போரிடும்போது அவர்களுக்கு இடையில் மகா சிவராத்திரி நன்னாளன்று சிவ பெருமான் அழல் மலையாகத் தோன்றியருளியதும்  இருவரும் அந்தச் சுடரொளியின் அடிமுடி காணாது போகவே, ஜோதிர் லிங்கமாகத் தோன்றினான் முழு முதற்கடவுளாகிய சிவபெருமான் என்று சிவ மகாபுராணம் குறிப்பிடுகிறது. இந்த லிங்கோத்பவக்  கோலத்தைத்தான் சிவாலயங்களில் மூலவர் கருவறையின் பின்புறம் நாம் காண்கிறோம்.

ஒரு உருவமும், ஒரு பேரும் இல்லாத அனைத்தும் கடந்த கடவுளை நாம் பல்வேறு உருவங்களும் பெயர்களும் கொண்டவனாக நமது பக்குவத்திற்கேற்ப வழிபடுகிறோம். இதற்கு அடுத்த நிலையே உருவமும் அருவமும் கலந்த உருவாருவ நிலையாகிய இலிங்க வடிவம். இவ்வடிவை வழிபடின்  சிவஞானம் பெற்று அருவ நிலையையும் உணரத் தொடங்க ஏதுவாகிறது. இத்துணை அருமை பெருமைகளை வாய்ந்த சிவ லிங்க வடிவமே பெரும்பாலும் சிவாலயங்களில் நடு நாயகமாக இருக்கக் காண்கிறோம். பிற தேவதா மூர்த்தங்கள் அனைத்தும் உருவ வடிவில் இறைவனைச் சுற்றிலும் அமைந்துள்ளனர். எனவே ஒவ்வொரு சிவலிங்கமும் ஜோதிர் லிங்கமே எனப் பொதுப் படையாகக் கொண்டாலும் நமது நாட்டில் பன்னிரண்டு இடங்களில் உள்ள ஜோதிர் லிங்கங்கள் தொன்மை வாய்ந்ததும், சிறப்பு மிக்கனவுமாகப் பெரியோர்களால் கருதப்பட்டு வருகிறது.
சிருங்கேரி ஸ்ரீ விதுசேகர பாரதி ஸ்வாமிகள் ஜ்யோதிர்லிங்க பூஜை 


பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள்: துவாதச ஜோதிர் லிங்கங்களின் இருப்பிடத்தைப் பின் வரும் சுலோகத்தால் அறியலாம்:

சௌராஷ்ட்ரே ஸோமனாதம் ச ஸ்ரீ சைலே மல்லிகார்ஜுனம்; உஜ்ஜயின்யாம் மஹாகாளம்  ஒங்காரமமலேச்வரம்; 
பரல்யாம் வைத்யநாதம் ச டாகின்யாம் பீம சங்கரம்  ஸேது பந்தே து ராமேசம் நாகேசம் தாருகாவனே ; வாரணஸ்யாம் து விச்வேசம் த்ரயம்பகம் கௌதமீ தடே ; ஹிமாலயே து கேதாரம் குஸ்மேசம் ச சிவாலயே .
ஏதாநி ஜ்யோதிர்லிங்காநி ஸாயம் ப்ராத: படேந் நர: ஸப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி .   
           

இதன்மூலம்,  ஸோமநாதமும், ஸ்ரீ சைலமும், உஜ்ஜைனி மஹாகாளமும்,ஒங்காரேச்வரமும்,பரலி வைத்யநாதமும், பீமசங்கரமும், ராமேச்வரமும்,, நாகேசமும்,காசி விச்வேசமும், த்ரயம்பகமும், கேதாரமும்,குஸ்மேசமும் ஜோதிர் லிங்க ஸ்தலங்கள் என்று குறிக்கப்படுகின்றன.                                                                            ஸோமநாதம்                                         
ஸோம நாதர் ஆலயத்தின் எழில் தோற்றம்  
                           
பன்னிரண்டு ஜோதிர்லிங்க ஸ்தலங்களுள் முதன்மையாக வைத்து எண்ணப்படுவது இதுவேயாகும்.
ஸோம லிங்கம் நரோ த்ருஷ்ட்வா ஸர்வபாபாத் ப்ரமுச்யதே ; என்ற வாக்கியம் இதன் பெருமையை உணர்த்தும்.

குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்திலிருந்து வேராவல் ரயில் நிலையத்தை அடைந்து அங்கிருந்து சுமார் ஐந்து கி.மீ. சென்றால் அரபிக் கடலோரம் கம்பீரமாய் நிற்கும் ஸோம்நாத் ஆலயத்தை அடையலாம். மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டுத் தூய்மையாகக் காட்சி அளிக்கும் இவ்வாலயம் அனைவரையும் பரவசப்படுத்துவது.
மிகப்பழைய காலத்தில் சௌராஷ்டிரத்தின் பிரபாஸ் பட்டன்/ தேவபட்டன பகுதியைச் சேர்ந்ததாக விளங்கியது. இமயமலை தோன்றும் முன்பே இப்பகுதி இருந்ததாகவும், கற்கால மனிதர்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சிந்து வெளி நாகரிகம் தழைத்தபோது சிவனைப் பசுபதி என்று பெயரிட்டு வணங்கி வந்தனர். பாண்டவர்கள் இப்பகுதியை அமைத்தபோது, அதற்குக் குசஸ்தலி என்று பெயரிட்டனர். பின்னர்தான் இப்பகுதி, சுரதா, சௌராஷ்டிரா என்றெல்லாம் வழங்கப்பட்டது. ஒரு காலத்தில் பிரபாஸ் பன்னாட்டு வணிகச் சிறப்பு வாய்ந்த துறைமுகமாக விளங்கியது.

மேற்குக் கடற்கரை ஓரம் இருந்த தலங்களுள் பாரத காலத்திலிருந்தே பிரபாஸ் மிகப்புனிதம் வாய்ந்த தலமாகக் கருதப்பட்டது. இந்திரன்,சூரியன், முனிவர்கள் பலரும் வழிபட்ட இத்தலத்தைப பாண்டவர்களும், கிருஷ்ணனும்,பலராமனும், வழிபட்டனர். கோகர்ணத்திலிருந்து துவாரகை செல்லும் வழியில் அர்ச்சுனன் இங்கு வந்ததாகக் கூறப்படுகிறது. பரீக்ஷித் மன்னன், ஜனமேஜயன் ஆகியோரும் இங்கு யாத்திரை செய்துள்ளனர். எனவே, க்ருஷ்ணரது காலத்திற்குப் பல காலம் முன்னதாகவே புனிதம் மிக்க தலமாக இது திகழ்ந்துள்ளதை அறியலாம்.

தக்ஷன் தனது 27 பெண்களைச் சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தான். அவர்களுள் ரோகிணியிடம் மட்டுமே சந்திரன் பிரியமாக இருக்கக்கண்டு மற்ற பெண்கள் தந்தையிடம் முறையிட்டனர். அதனால் வெகுண்ட தக்ஷன், சந்திரனின் கலைகள் தேய்ந்து போகும்படி சபித்து விட்டான். அந்நிலையில் சிவபெருமான் ஒருவரே அவனுக்கு அடைக்கலம் தந்து, பிறைச் சந்திரனை ஏற்று அருளியதோடு கலைகள் 15  நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் வளருமாறு அருளினார். அவ்வாறு சந்திரன் இறைவனை வழிபட்ட இடமே பிரபாஸ் என்கிறார்கள். அது முதல் சுவாமிக்கும் சோமநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. ஊரும் ஸோம்நாத் ஆயிற்று.                                                      ஒவ்வொரு ஆலயத்திற்கும் வரலாற்றுப் பின்னணி உண்டு. ஆனால், ஸோம் நாத்திற்கோ சோக மயமான பின்னணி இருக்கிறது. ஆம். சோகம் ஒரு முறை ஏற்பட்டதல்ல. 18 முறைகள் கறை படிந்த சம்பவங்களால் ஏற்பட்ட மாளாத சோகம் அது. நமது வரலாற்றுப் புத்தகங்களில் ஒரே வரியில் எழுதப்பட்டுள்ள போதிலும், புதையுண்ட அவ்வரலாற்றுச் செய்திகள் நாம் ஒவ்வொருவரும் அறிய வேண்டுவனவாகும். முகலாயப் படையெடுப்புக்களால் சூறையாடப் பெற்று முற்றிலும் அழிக்கப்பட்ட இந்த ஆலயத்தின் சோக வரலாற்றைப் பற்றி சுருங்கக் காண்போம்:


குப்தப் பேரரசின் போது இவ்வாலயம் நன்கு பராமரிக்கப்பட்டு வந்தது. ஜூனாகாத் நகரைத் தலைநகரமாகக் கொண்ட குப்த சாம்ராஜ்ஜியத்தில் பிரபாஸ் புகழோடு விளங்கியது. ஸோம்நாத்தைப் பராமரிக்க ஒரு கிராமம் அளிக்கப்பட்டது. இவ்வாறு சுமார் இருநூறு ஆண்டுகள் உன்னத நிலையில் இக் கோயில் இருந்து வந்தது. கி.பி. 1026 ம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ம் நாள் கஜினி முகமதின் முகலாயப் படைகள் இங்கு வந்து கோயிலை நாசம் செய்தன. மூல லிங்கமானது கஜினியினால் உடைக்கப்பட்டது ( இதை எழுதக் கை கூசுகிறது). கோவிலின் விலையுயர்ந்த ஆபரணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. சிறுவர்களும் பெண்களும் கடத்திச் செல்லப்பட்டனர்.

பின்னர் ஜுனகாத் அரசர் , அஜ்மீர் மால்வா ஆகியோர், கோயிலை மீண்டும் நிர்மாணித்தனர். ஆனால் கி.பி.1298 ம் ஆண்டு டெல்லி சுல்தான் அல்லாவுதீன் கில்ஜியின் படைகள் இக்கோயிலைத்  தாக்கின. ஜோதிர்லிங்கம் உடைக்கப்பட்டது. பிறகு ராஜா ராவன்வர் என்பவர் மீண்டும் கோயிலை உருவாக்கி, சிவலிங்கத்தைத் ஸ்தாபித்தார். கியாசுதீன் துக்ளக்கின் மகன் பதவி ஏற்றதும் சோம்நாத் ஆலயம் சூறையாடப்பட்டது. சிவலிங்கமும் மூன்றாவது முறையாகக் கொள்ளை அடிக்கப்பட்டது. பின்னர் பிரபாஸ் மற்றும் ஜுனேகாத் அரசர்கள் இணைந்து டெல்லிப் படையை விரட்டி விட்டு, மீண்டும் சோம்நாத் ஆலயத்தைக் கட்டி, சிவலிங்க பிரதிஷ்டை செய்தனர். ஆனால் ஜாபர் கான் என்பவனால் நான்காவது முறையாக சோம்நாத் ஆலயம் சூறையாடப்பட்டது.1377 ல் ராஜா பஜாடி என்பவர் புதுப்பித்த கோயிலை ஜாபர் கான் இடித்ததால் ஐந்தாம் முறையாக ஆலயம் சூறையாடப்பட்டது. ஆனாலும் இந்துக்கள் அங்கு சென்று பூஜை செய்வதைக் கண்டு சகிக்காமல்,ஜாபர்கான் கோயிலுக்குள் நுழைந்து சிவலிங்கத்தை உடைத்து, பூஜை நடை பெறாதபடி செய்தான். இந்த ஆறாவது தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரமான கொள்ளைகள் நடைபெற்று ஆலயம் சீரழிந்தது.

கி.பி.1415 ல் அகமது ஷா என்பவன் இக்கோயிலின் எந்த பகுதியும் இருக்கலாகாது என்று ஆணை இட்டான். இந்துக்கள் மத மாற்றம் செய்யப்பட்டனர். இதன் பிறகு ஜுனாகத் அரசர் கி.பி. 1451முதல்  ஐந்து ஆண்டுகள் இக்கோயிலைத் திரும்பவும் கட்டி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தார். கி.பி. 1490 ல் பிரபாஸ் மீண்டும் சூறையாடப்பட்டது. எண்ணற்ற கோயில்கள் அழிக்கப்பட்டன.இந்து உருவங்களைப் பூஜிப்பதைத் தடை செய்தனர். இதனால் மனம் உடைந்த இந்துக்கள் சரஸ்வதி ஆற்றையே இறைவனாக வழிபட்டனர். கி.பி. 1547 ம் ஆண்டு போர்ச்சுகீசியர்களது படையெடுப்புக்கு இப்பகுதி உள்ளானது. அக்பரது காலத்தில் நிலைமை ஓரளவு கட்டுக்குள் இருந்தது. ஆனால் கி.பி. 1665 ல் அப்துல் கான் என்பவனுடன் இங்கு வந்த ஔரங்கசீப் முதலில் அந்தணர் ஒருவரையும்,ஒரு பசுவையும் கொன்று விட்டு, ஸோம்னாத்தின் மீது படை எடுத்தான். கி.பி. 1704 ல் மீண்டும் சோம்நாத் மீது படை எடுக்க ஔரங்கசீப் ஆணையிட்டான். ஆனால் அது நிறைவேறும் முன்பாக 1707 ம்  ஆண்டு மாண்டு போனான். பிறகு கி.பி. 1786 ம் வருடம் இந்தூர் மகாராணி அகல்யா பாய் அவர்கள் சோம்நாத் கோயிலை புனர் நிர்மாணம் செய்து சிவலிங்க பிரதிஷ்டை செய்தார். 1947 வரை அமைதியாக இருந்த  நிலையில் ஜுனாகத் நவாப் பாகிஸ்தானுடன் சேர முயற்சி செய்தார். ஆனால் இதற்கு எதிர்ப்பு ஏற்படவே, நவம்பர் 9 ம் தேதி தான் மட்டும் பாகிஸ்தானுக்கு ஓடி விட்டார்.

நவம்பர் 15 ம் தேதி ஜுனாகத் மாகாணம் இந்தியாவுடன் இணைந்தது. இந்தியாவின் இரும்பு மனிதர் எனப்படும் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் சீரிய முயற்சியால் சோம்நாத் கோயில் அறக்கட்டளை துவக்கப்பட்டது. ஜாம்நகர் ராஜா திக் விஜய் சிங் அதற்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். கி.பி. 1951 ம் ஆண்டு சோம்நாத் ஆலயம் முழுவதுமாகக் கட்டப்பெற்று சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இந்தியக் குடியரசின் முதல் ஜனாதிபதியான டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்களால் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.                                                    

4 comments:

  1. Excellent informative write up .Do you have more photographs?
    Looking forward to similar notes on the other 11 also
    Thanks and regards

    ReplyDelete
  2. Dear Sekhar, Thank you for giving thiscomprehensive account of the Rakshasa forces that went on accumulating their load of dushkarma and the invaluable redeeming acts of several Indian rulers of Prabhasa Kshetra, culminating finally with the efforts of Sardar Patel, to which we owe the glory of the Present appearance of Sri Somanatha's shrine. Can any mortal force claim to be able to destroy the shrine of pure Divine jyoti? They only thought they succeeded. It was Swami;s sankalpa to honour the rulers and modern India's leaders by using them to rebuild the shrine.

    ReplyDelete
  3. Crisp comprehensive write up. These stories should reach our brothers and sisters to sensitise them on the danger surrounding us.

    ReplyDelete