Sunday, December 29, 2013

பஞ்சாரண்யத் தலங்கள்

சோழ வளநாடு பொன்னி நதி பாய்வதால் வயல்களைத் தன்னகத்தே கொண்ட மருத நிலமாக மட்டும் அமையாமல் சிவபெருமான் நீங்காது உறையும் திருக்கோயில்கள் பலவற்றையும் கொண்டது. இதனிடையே பல பகுதிகள் முனிவர்கள் விரும்பித் தவம்  செய்துவந்த வனப்  பிரதேசங்களாக விளங்கின. தாருகாவனம்(வழுவூர்), பதரீ வனம்(கீழ்வேளூர்), தில்லை  வனம் (சிதம்பரம்) ,பாரிஜாதவனம்( திருக்களர்),சாயா வனம் (திருச்சாய்க்காடு) ஆகிய தலங்களைச் சில எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். காடு என்று முடியும் தலங்களாகத் தலையாலங்காடு, தலைச்சங்காடு,திருவெண்காடு  போன்ற தலங்களையும் உடையது இப் பகுதி. ஆரண்யம் என்றாலும் காடு என்று பொருள் படும். குடந்தையைச் சார்ந்த பகுதியில் ஐந்து ஆரண்யங்களாகத்  திருக்கருகாவூர், அவளிவநல்லூர் , அரித்துவாரமங்கலம், ஆலங்குடி மற்றும் திருக்கொள்ளம்பூதூர் ஆகியவற்றைக் குறிப்பர். இந்த ஐந்து தலங்களையும் மேற்படி வரிசையில் ஒரே நாளில் தரிசிப்பதும் வழக்கம். அதாவது, உஷக் காலத்தில்(காலை  6 மணி அளவில்) திருக்கருகாவூரையும்,  கால சந்தி நேரத்தில்  8 மணி அளவில் அவளிவநல்லூரையும்,  உச்சிக்காலத்தில் ( சுமார் 12 மணிக்கு) அரித்துவாரமங்கலத்தையும்) , சாயரக்ஷை  நேரத்தில் (மாலை 6 மணிக்கு) ஆலங்குடியையும், அர்த்தஜாம நேரத்தில் (இரவு 8 மணி அளவில்) திருக்கொள்ளம்பூதூரையும் தரிசிப்பர்.

1. திருக்கருகாவூர் :

 மாதவி வனம் என்று குறிப்பிடப்படும் இத்தலம் முல்லைக்காடாக விளங்கியது. இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனும் முல்லைவன நாதர் (மாதவி வனேச்வரர்) என்று அழைக்கப்படுகிறார். சுயம்பு மூர்த்தியாகிய இப்பெருமானைத் திருஞான சம்பந்தரும் ,திருநாவுக்கரசரும் தேவாரப்பதிகங்களால் போற்றியுள்ளனர்.இத்தலத்தைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மூன்று அடி நடந்தால் முதலாவது அடியால் பாவ வினைகள் முழுதும் அகலும் என்றும், இரண்டாவது அடியால், அமரர் உலகையும் பெறலாம் என்றும், மூன்றாவது அடியால் சிவசாயுஜ்ஜியம் பெறலாம் என்றும் தலபுராணம் குறிப்பிடுகிறது. இத்தலத்தை நினைத்தாலும், இதன் பெயரைச்சொன்னாலும் , அதனைக் கண்டாலும், அங்கு வசித்தாலும், இதன் வழியாகப் பிற ஊர்களுக்குச் சென்றாலும் பாவங்கள் நீங்கப்பெற்று, போகங்கள் யாவும் பெற்று, நிறைவாக இறைவன் கழலடியை அடைவர் என்கிறது தலபுராணம்.


 கும்பகோணத்திலிருந்து ஆவூர் வழியாகத் தஞ்சை செல்லும் பேருந்து வழியில் வெட்டாற்றின் தென்கரையில் இத்தலம் அமைந்துள்ளது.கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்தின் எதிரில் திருப்பாற்குளம் என்ற தீர்த்தம் உள்ளது. ராஜகோபுர வாயிலைக் கடந்து முதல் பிராகாரத்தை அடைந்தால் நந்தவனமும்,வசந்தமண்டபமும் இருக்கக் காணலாம். முதல் பிராகார வாயிலில் விநாயகப் பெருமானைத் தரிசித்துவிட்டுக்  கொடிமரம், நந்தி,பலிபீடம் ஆகியனவற்றையும் தரிசிக்கிறோம். அறுபத்துமூன்று நாயன்மார்களும் சந்தனாச்சார்யர்களும் சமயாச்சார்யர் நால்வரும் தரிசனம் தருகின்றனர். நிருதிமூலையில் கணபதியும், சுவாமி - அம்பாள் சன்னதிகளுக்கு  இடையில்   ஆறுமுகப்பெருமானது சன்னதி இருப்பது சோமாஸ்கந்த வடிவை நினைவு படுத்துகிறது. தேவகோஷ்டங்களில் மேற்கில் அர்தநாரீஸ்வரரும், தெற்கில் தட்சிணாமூர்த்தியும் சிறப்பு வாய்ந்த மூர்த்தங்கள். வடக்கு பிராகாரத்தில் ஸ்தல விருக்ஷமான முல்லை உள்ளது. சபா மண்டபம் குதிரை பூட்டிய ரத வடிவில் உள்ளது. இங்கு நித்துருவர்,கார்க்கியர், சங்குகர்ணன் ஆகியோர் பூஜித்த சிவலிங்கங்கள் உள்ளன.

   விநாயகரை வணங்கியவாறே சுவாமி சன்னதிக்குள் நுழைகிறோம். மகாமண்டபத்தில் நடராஜ சபையும், நவக்ரகங்களும் இருக்கக் காண்கிறோம். சோமாஸ்கந்த மண்டபத்தைத் தரிசித்துவிட்டு, மூலவரான முல்லைவனநாதப் பெருமானது சன்னதி வாயிலை அடைகிறோம். சுவாமி, ப்ருத்வியால்   ஆன உயரமான பாணம். பெருமான் முல்லைக் கொடி சுற்றியுள்ள வடிவோடு காட்சி அளிக்கிறார். அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடத்தப் படுகின்றன. எல்லா உலகங்களுக்கும் கண்ணாகவும் , கருவாகவும் இருக்கும் இந்தப்பெருமானைத் துதிக்கும் அப்பர் தேவாரத்தால் நாமும் பாடி வழிபடுகிறோம்:

 " குருகாம் வயிரமாம் கூறு நாளாம் கொள்ளும் கிழமையாம் கோளே தானாம்
   பருகா அமுதமாம் பாலின் நெய்யாம் பழத்தின் இரதமாம் பாட்டில் பண்ணாம்
   ஒருகால் உமையாள் ஓர் பாகனுமாம் உள் நின்ற நாவிற்கு உரையாடியாம்
   கருவாய் உலகிற்கு முன்னே தோன்றும் கண்ணாம் கருகாவூர் எந்தைதானே. "

அம்பாள் சன்னதிக்குச் செல்லும் வழியில் சத்திய கூபம் என்ற தீர்த்தமும் கௌதமேச்வரர் கோவிலும் உள்ளன. புத்திர பாக்கியம் தந்து, கருவைக் காப்பவளாகக் கர்ப  ரக்ஷாம்பிகை (கருக்  காத்த நாயகி) அருட் காட்சி அளிக்கிறாள். இச்சன்னதியில் பிள்ளைவரம் வேண்டுவோர் பலர் பிரார்த்தனைகள் செய்கின்றனர். நிருத்துருவமுனிவரின் பத்தினி வேதிகை, கர்பகாலத்தில் நேர்ந்த அயர்ச்சியால், அங்கு வந்த ஊர்த்துவபாத முனிவரை உபசரிக்க  இயலாமல் போகவே, கோபம் கொண்ட முனிவர், அவளது கர்ப்பம் சிதையுமாறு சபித்தார். அதனால் துயரமுற்ற தம்பதியர்,இறைவனையும் இறைவியையும் சரணடைந்து துதிக்கவே, வேதிகையின் கரு சிதையாமல் அம்பாள் காத்து ரக்ஷித்தபடியால் கர்ப்ப ரக்ஷாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்.

அகந்தையால் படைப்புத் தொழிலை இழந்த பிரமன் இங்கு வந்து,தன் பெயரால் தீர்த்தம் அமைத்து,இறைவனை வழிபட்டு மீண்டும் படைப்புத் தொழிலைக் கைவரப்பெற்றான். கேரள தேசத்தைச் சேர்ந்த சுவர்நாகரன் என்பவன் சாபத்தால் பைசாச வடிவம் கொண்டு பல பிறவிகள் துன்புற்ற பின்னர், கார்க்கிய முனிவரின் அறிவுரைப்படி இத்தலத்திற்கு வந்து,பிரம தீர்த்தத்தில் நீராடி,இறைவனை வழிபட்டதால் பழைய வடிவை மீண்டும் பெற்றான். கோஹத்தி தோஷம் நீங்க வேண்டி கௌதம முனிவர் இத்தல இறைவனை வழிபட்டு,நற்கதி பெற்றார். சாபத்தினால் புலி வடிவம் கொண்ட குஜத்வஜன் என்ற மன்னன் கார்த்திகை ஞாயிறுகளில் இறைவனை வழிபட்டுப் பழைய வடிவம் பெற்று, வைகாசியில் பிரம்மோற்சவ விழா நடத்தினான். குரு சாபத்தால் பேய் உருவம் பெற்ற சங்கு கர்ணன் என்பவன் முல்லைவன நாதரை மார்கழித் திருவாதிரையன்று வழிபட்டுப் பழைய உருவம் பெற்றான். தக்ஷ சாபம் நீங்க வேண்டிச் சந்திரன் வழிபட்டான். இன்றும் பங்குனி மாதப் பௌர்ணமியில் சந்திரனின் கிரணங்கள் இறைவன் மீது படுவதைக் காணலாம். கோவிலுக்கு எதிரில் உள்ளதும்,காமதேனுவின் பாலால் ஏற்பட்டதுமான பால் குளத்தில் சிவராத்திரியன்று தீர்த்தவாரி நடைபெறுகிறது. ஊருக்குத் தென்மேற்கிலுள்ள பிரம தீர்த்தத்தில் நடராஜப்பெருமான் மார்கழித் திருவாதிரையிலும் முள்ளிவாய்,விருத்த காவேரி என்று அழைக்கப்படும் வெட்டாற்றின் படித்துறையில் வைகாசி விசாகத்தில்  தீர்த்தவாரியும்  நடைபெறுகிறது.

2. அவளிவநல்லூர்: 


பஞ்சாரண்யத் தலங்களுள்  இரண்டாவதாகத் திகழும் இத்தலத்திற்குக் கும்பகோணத்திலிருந்தும் தஞ்சாவூரிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. தஞ்சை - நீடாமங்கலம் வழியிலுள்ள அம்மாபேட்டைக்கு 6 கி.மீ. தொலைவிலும், கும்பகோணம்- நீடாமங்கலம் வழியிலுள்ள வெட்டாற்றுப் பாலத்திலிருந்து  8 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. சாட்சிநாதபுரம், புல்லாரண்யம், பாதிரிவனம் ஆகிய பெயர்கள்  இத்தலத்திற்கு உண்டு. இரண்டு ப்ராகாரங்களுடன் கூடிய இக்கோயிலுக்கு ராஜ கோபுரம் இல்லை. வெளிப் ப்ராகாரத்தில், அம்பாள் சன்னதி, வசந்த மண்டபம், மடைப்பள்ளி ஆகியன உள்ளன. மூலவருக்கு சாக்ஷி நாதர், பாதிரிவனேச்வரர் , தம்பரிசுடையார் ஆகிய பெயர்கள் வழங்கப்படுகின்றன. கர்ப்ப க்ருகத்தில்   சுயம்புவாகக் காட்சி அளிக்கும் மூலவருக்குப் பின்னர் உமாதேவியோடு ரிஷப சகிதராக சாக்ஷி சொன்ன கோலத்தில் பெருமான் அருட் காட்சி வழங்குகின்றான். சௌந்தர நாயகி என்றும் அழகம்மை என்றும் வழங்கப்படும் அம்பிகை தெற்கு நோக்கியவாறு தனிச் சன்னதி கொண்டு விளங்குகிறாள். சுவாமியின் உட்ப்ராகாரத்தில் கணபதி, நால்வர், கண்வர், வீரபத்திரர், சப்த கன்னியர் , அறுபத்து மூவர் , ஆறுமுகர், கஜலக்ஷ்மி, சண்டேசர், ஆனந்த சபேசர், விஸ்வநாதர்,விசாலாக்ஷி, சூரியன், பைரவர், நவக்கிரகங்கள் ஆகிய மூர்த்தங்களையும், தேவ கோஷ்ட மூர்த்தங்களையும் தரிசிக்கிறோம்.

கோவிலுக்கு எதிரிலுள்ள சிவபுஷ்கரணி தீரா நோய்களையும் தீர்க்க வல்லது. தை அமாவாசை யன்று சாக்ஷிநாத சுவாமி பரிவாரங்களோடு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும்போது, இத்தீர்த்தத்தில் ஏராளமானோர்  நீராடுவர்.  பாதிரி மரத்தடியில் பெருமான் ஸ்வயம்பு மூர்த்தியாகத் தோன்றியதால் ஸ்தல விருக்ஷம் பாதிரியாகத் திகழ்கிறது.

பிரமனும் சூரியனும்,அகத்திய முனிவரும்  வழிபட்ட தலம் இது. வராக வடிவம் கொண்ட திருமால் இப்பெருமானை வழிபட்டுப் பேறு பெற்றார். இத்தலத்து சிவாசார்யாரின் இரு பெண்களுள் மூத்தவளை மணந்த சம்புபாதசர்மா என்பவர்,காசி யாத்திரைக்குச் சென்று திரும்பியபோது, தன் மனைவி நோயுற்றுத் தன் கண் பார்வையையும் உடல் அழகையும் இழந்தாள். ஆகவே, சம்புபாதர்  அவளது தங்கையைச் சுட்டிக்காட்டி அவளே தனது மனைவி என்று பொய் உரைத்தார். மூத்தவளோ, கலங்கியவளாக இறைவனை அடைக்கலம் அடைந்து முறையிட்டாள் அப்போது சிவபெருமான் உமா தேவியோடு எழுந்தருளி, " நீ மணம் செய்துகொண்டவள் நீ சொல்வதுபோல் அல்ல. அவள் இவளே " என்று மூத்த சகோதரியைச் சுட்டிக்காட்டி சாக்ஷி சொன்னபடியால் ஊரின் பெயர்  அவள் இவள் நல்லூர் என்றும் சுவாமிக்கு சாக்ஷிநாதர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. சம்புசர்மாவும் தனது பிழைக்காக இறைவனிடம் மன்னிப்பு வேண்டியவராகத் தனது மனைவியோடு திருக்குளத்தில் நீராடி எழுந்தபோது, அப்பெண் தனது இழந்த கண் பார்வையைப் பெற்றதோடு, உடல் வனப்பும் பெற்றாள்.

அவளிவநல்லூர்ப் பெருமானைத் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தேவாரப்பதிகங்களால் போற்றியுள்ளனர். அப்பர் பெருமானது ஒரு பதிகத்தில் கயிலை மலையைப் பெயர்க்க முயன்ற இராவணனுக்கும் இரங்கி அருள் புரிந்த திறத்தைப் பாடல் தோறும் பரவியுள்ளது அறிந்து மகிழத்தக்கது.

" ஏனமாய் இடந்த மாலும்  எழில் தரும் முளரியானும்
ஞானம் தான் உடையராகி நன்மையை அறிய மாட்டார்
சேனந்தான் இல்லா அரக்கன் செழு வரை எடுக்க ஊன்றி
ஆனந்த அருள்கள் செய்தார் அவளிவனல்லூராரே"

3. அரித்துவார மங்கலம் {அரதைப் பெரும் பாழி } :

பிரமனும் திருமாலும் தமக்குள் யார் உயர்ந்தவர் என்று சண்டையிடும்போது அவர்களுக்கு முன்னர் சிவபெருமான் ஜோதிப் பிழம்பாகத் தோன்றி, "யார் இதன் அடியையும் முடியையும் காண்கிறாரோ அவரே பெரியவர்"  என்று கூறவே, பிரமன் முடிதேடியவராக அன்ன வடிவில் உயரப் பறந்தார். திருமாலோ வராக அவதாரம் கொண்டு பூமியைக் குடைந்து செல்வாராயினார். எவ்வளவு காலமாகியும் இருவராலும் அடி-முடி காண முடியவில்லை. தமது இயலாமையை ஒப்புக் கொள்ள வேண்டி மீண்டும் பூமிக்குமேல் ஹரி வந்த இடமே, இந்த ஹரித்வார மங்கலம். தனது தோல்வியை ஒப்புக் கொண்டதன் அடையாளமாகத் தன் வராக வடிவின் கொம்புகளை வராகமூர்த்தியானவர்  இறைவனுக்குச் சமர்ப்பிக்க, அதனை சிவபிரான் தனது மார்பில் அணிந்தார். இந்நிகழ்ச்சிக்கு அடையாளமாக மூலவருக்கு முன்னர் ஒரு பெரிய பள்ளம்  இருப்பதை இன்றும் காணலாம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இத்தலத்தைக் கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து மூலம் அடையலாம். குடந்தையிலிருந்து இத்தலம் சுமார் 20 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. வன்னி வனமாக இருந்ததால் வன்னி மரம்  ஸ்தல வ்ருக்ஷமாக இருக்கிறது. பஞ்சாரண்யத் தலங்களுள் இது மூன்றாவது தலம்.

 கிழக்கு நோக்கிய சுவாமி சன்னதிக்கு நேராக ராஜஜோபுரம் எழிலுடன் விளங்குகியது. அலங்காரவல்லி அம்பாளும் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளாள். அந்த சன்னதி எதிரில் ஸ்தல விருக்ஷமான வன்னி மரம உள்ளது. ஸ்தலவிருக்ஷ மேடையில் விநாயகரைத் தரிசிக்கிறோம். பிராகார வலம் வரும் போது கணபதி,சோமாஸ்கந்தர் , சண்டிகேஸ்வரர் சன்னதிகளையும் தரிசனம் செய்கிறோம். சுவாமி பிராகார கோஷ்டங்களில் தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர்,பிரமன் ஆகிய மூர்த்திகளைக் காண்கிறோம். கர்ப்பக் க்ருகத்தில் ஸ்வயம்புவாகக் காட்சி அளிக்கிறார். பாதாள வரதர்.
ராஜகோபுரத்தை ஒட்டிய  மண்டபத்தில் பிள்ளையார், காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி, சூரியன், சந்திரன்,பைரவர், சம்பந்தர்,சுந்தரர்  ஆகிய மூர்த்தங்களையும் தரிசிக்கலாம்.

" வரி அரா என்பு அணி மார்பினர் நீர் மல்கும்
   எரி அராவும் சடை மேல் பிறை ஏற்றவர்
   கரிய மாலோடு அயன் காண்பரிதாகிய
  பெரியர்  கோயில் அரதைப் பெரும்பாழியே. "
                                                       --- சம்பந்தர் தேவாரம்

4. ஆலங்குடி ( திரு இரும்பூளை) :


கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி செல்லும் வழியிலுள்ள இத்தலத்தை , நீடாமங்கலத்திலிருந்தும் (18 கி.மீ.) அடையலாம். பஞ்சாரண்யங்கள் ஐந்தில் நான்காகத் திகழும் இத்தலம், திருஞானசம்பந்தரால் பாடப் பெற்றது. காசி ஆரண்யம் என்பது இதன் வட மொழிப்பெயர் ஆகும். திருப்பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது எழுந்த ஆல கால விஷத்தை சிவபெருமான் உகந்து பருகித் தன் கண்டத்தில் வைத்து, அகில உலகங்களையும் காத்ததால் ஆலம் குடித்தவனாக ஆனான். உலக வழக்கில் அவனை ஆலங்குடியான் (ஆலங்குடியைச் சேர்ந்தவன் என்ற பொருளில்) என்று மக்கள் அழைக்கிறார்களே என்று சிலேடையாகக் காளமேகப்புலவர் பாடி, அவ்வாறு அவன் ஆலம் குடிக்காவிட்டால் அனைத்து உயிர்களும் மாயந்திருக்க வேண்டியிருக்கும் அல்லவா என்று வினவுகிறார். அப்பொருள் நயம்  மிகுந்த பாடலைக் காண்போம்:

" ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை
   ஆலங்குடியான் எனு ஆர் சொன்னார்  -- ஆலம்
   குடியானே யாகில் குவலயத்தோர் எல்லாம்
   மடியாரோ மண் மீதினில்."

அழகிய ஐந்து நிலை ராஜ கோபுரத்தைக் கொண்ட இத திருக்கோயில் கிழக்கு நோக்கியது. கோபுர வாயிலில் கலங்காமல் காத்த கணபதியைத் தொழுதவாறே, உள்ளே நுழைகிறோம். ஸ்வாமிக்குக் காசியாரண்யேச்வரர்  என்றும் ஆபத்சகாயேச்வரர் என்றும் இரும்பூளை நாதர் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. அம்பிகை, ஏலவார் குழலி என்ற திருநாமத்துடன் தெற்கு நோக்கிய சன்னதி கொண்டுள்ளாள். இது குரு பரிகாரத்  தலமாகக் கருதப்படுகிறது. தட்சிணாமூர்த்தியை சிறப்பு மூர்த்தியாகப் பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

கஜமுகாசுரனால் தேவர்களுக்கு வந்த ஆபத்தை நீக்கி அவர்களைக் காத்தபடியால், விநாயகப்பெருமான், கலங்காமல் காத்த கணபதி எனப்படுகிறார். அம்பிகை தவம்  செய்து இறைவனை மணந்ததால்  அந்த இடம்   திருமணமங்கலம் எனப்படுகிறது. அத்திருமணத்தைக் காண வந்த திருமால்,பிரமன், லக்ஷ்மி, சாஸ்தா, அஷ்டதிக் பாலகர்கள், வீரபத்திரர், கருடன் ஆகியோர் தத்தம் பெயரில் இலிங்கம் நிறுவி வழிபட்டுள்ளனர். முசுகுந்தன், சுவாசனன் ஆகியோரும்  பூசித்துள்ளனர்.  சுந்தரர் இங்கு வந்தபோது வெட்டாற்றில் ஒடக்காரனாக வந்து சிவபெருமான் அருளியதாகச் செவிவழிச் செய்தி குறிப்பிடுகிறது.

திருமாளிகைப்பத்தியில் சூரியன்,சுந்தரர், நால்வர், ஆகிய மூர்த்திகளும், சூரியேசர் , சோமேசர் , குருமோக்ஷேச்வரர் , சப்தரிஷிநாதர், விஷ்ணுநாதர் , பிரமநாதர், ஆகிய இலிங்கங்களும் தரிசனம் தருகின்றனர். அதோடு, விஸ்வநாதர்,விசாலாக்ஷி, அகஸ்தியர், ஆக்ஞா  கணபதி, சோமாஸ்கந்தர், நின்ற கணபதி, சந்திர சேகரர், வள்ளி  தெய்வானை சமேத சுப்பிரமணியர், சப்த மாதாக்கள், சண்டேசர், கஜலக்ஷ்மி , நவக்கிரகங்கள் ஆகிய மூர்த்திகள் உள்ளனர்.சபாநாதர் சன்னதியை அடுத்து, உற்சவ தக்ஷிணாமூர்த்தியைத் தரிசிக்கிறோம். கீழ்ப்புறம் உள்ள திருமாளிகைப்பத்தியில் பைரவர், சந்திரன் ஆகியோர் தரிசனம் தருகின்றனர். மூலவர் ஆபத்சகாயரின் தென்புறக் கோஷ்டத்தில் அழகும் ஞானமுமே வடிவாகத்  தக்ஷிணாமூர்த்தி பகவான் காக்ஷி அளிக்கிறார். மேற்புற கோஷ்டத்தில் லிங்கோத்பவரும், வடபுறம் பிரமனும் துர்க்கையும் எழுந்தருளியுள்ளார்கள்.  வெளியில் சுக்கிரவார அம்மன் சன்னதி , பள்ளியறை ஆகியன உள்ளன.

அடியார்களை நோக்கி வினவுவதாகத் திருஞானசம்பந்தர் இத்தலத்தில் அருளிய திருப்பதிகம் சிறப்பு வாய்ந்தது: இரும்பூளை ஈசன் எதற்காகக் காட்டில் ஆடுகிறான் என்று கேட்பதாக அமையும்  பாடலைக் காண்போம்:

" தொழலார் கழலே தொழும் தொண்டர்கள் சொல்லீர்
   குழலார் மொழிக் கோல்வளையோடு உடன் ஆகி
   எழிலார் இரும்பூளை இடம் கொண்ட ஈசன்
   கழலான் கரி கானிடை ஆடும் கருத்தே."

5. திருக்கொள்ளம்பூதூர் :


பஞ்சாரண்யத் தலங்களுள் ஐந்தாவதான வில்வாரண்யம் எனப்படும் இத்தலம், கொரடாச்சேரியிலிருந்து செல்லூர் வழியாகவும், கும்பகோணம் மற்றும் திருவாரூரிலிருந்து வரும்போது குடவாசல்,ஓகை வழியாக செல்லூர் வழியாகவும் அடைதற்குரியது.முள்ளியாறு என்றும் அகஸ்திய காவேரி என்றும் கூறப்படும் வெட்டாற்றின் கரையில் உள்ளது. ஆற்றின் மறு கரையில் நம்பர் கோயில் உள்ளது. திருஞானசம்பந்தர் இந்த ஊருக்கு எழுந்தருளியபோது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியதால் ஓடம்  விடுவோரைக் காணாது , தனது நாவையே ஒடமெனக் கொண்டு மறுகரையில் உள்ள கொள்ளம்பூதூர்ப் பெருமானைப் பாடினார். ஓடம்  தானாகவே தொண்டகளுடன் மறுகரையை அடைந்தது.

கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்
நட்டம்  ஆடிய நம்பனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே

என்பது அப்பதிகத்தின் முதல் பாடல்.

இத்தலம், வில்வவனம், பிரம வனம், பஞ்சாக்ஷரபுரம், காண்டீபவனம், ஆகிய பெயர்களையும் கொண்டது. பாற்கடலில் அமுதம் கடைந்தபோது எழுந்த அமுதத் திவலைகள் இங்கு தெரித்து விழுந்து வில்வமரங்கள் ஆயின . குரு வடிவாய் சுவாமி பஞ்சாக்ஷர உபதேசம் செய்வதால் பஞ்சாக்ஷரபுரம் எனப்படுகிறது. காண்டீபனாகிய அர்ச்சுனன் தவமியற்றி, இத்தலம் என்பெயரை உடையதாக இருக்க வேண்டும் என வரம் வேண்டியதால், காண்டீப வனம் எனப்பட்டது.

முதல் வாயிலில் கோபுரம் இல்லாவிடினும்,இரண்டாவது வாயிலில் கோபுரம் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் விநாயகர், வசந்த மண்டபம் ஆகியவற்றைக் காண்கிறோம். அடுத்த கோபுர  வாயிலில் பொய்யாக் கணபதியும் தண்டபாணியும் காட்சி அளிக்கின்றனர். பிராகாரத்தில் மடைப்பள்ளி, ஆதி வில்வ விருக்ஷம், வலம்புரி விநாயகர்,சோமாஸ்கந்தர், பஞ்சலிங்கம், முருகப்பெருமான், கஜலக்ஷ்மி, பைரவர்,பள்ளியறை, நவக்கிரகங்கள் ஆகியவற்றைத் தரிசித்துவிட்டு, நடுமண்டபத்தில் உற்சவ மூர்த்திகளையும் அருகில் சௌந்தர நாயகி சன்னதியும் அமைந்திருக்கக் காண்கிறோம். கல்வெட்டுக்களில் பெருமான் , கொள்ளம்பூதூர் உடையார் என்றும் தேவியார், அழகிய நாச்சியார் என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.

கோவிலுக்கு முன்புறம் உள்ள பிரம தீர்த்தம் , பிரமனால் ஏற்படுத்தப்பட்டது. இதில் தை வெள்ளிகளில் நீராடுவர். கோயிலுக்கு வடப்புறம் உள்ள அர்ஜுன தீர்த்தத்தில் பங்குனிப் பௌர்ணமியில் நீராடினால்  நற்பயன்களை அடையலாம். அகத்தியர் தோற்றுவித்த அகத்திய தீர்த்தத்தில் கார்த்திகை சோம வாரங்களில் நீராடி தோஷங்கள் நீங்கப்   பெறலாம்.   வெட்டாற்றை ஒடம்போக்கி ஆறு எனவும் வழங்குவர்.

இத்தலத்தில் இறப்பவர்களுக்கு வில்வவனேசர் அம்பிகையோடு எழுந்தருளி, வலது செவியில் பஞ்சாக்ஷர உபதேசம் செய்து முக்தி அளிப்பதாகப் புராணம் கூறுகிறது. விநாயகர், கங்கை, காவேரி, சாண்டில்யர், ஆதிசேஷன், இடைக்காடர், வரகுணபாண்டியர், கோச்செங்கட்சோழர்,பிருகு முனிவர், காச்யபர், மார்கண்டேயர், கண்வர்,வசிஷ்டர், வாமதேவர் ஆகியோரும் பூஜித்துள்ளனர். பன்றியாகப் பிறந்த அந்தணன் ஒருவன் இங்கு வந்து அகத்திய தீர்த்தத்தில் மூழ்கி, தேவ வடிவம் பெற்று முக்தி அடைந்தான். வழிப்பறி செய்த வேடன் ஒருவன், நல்வினைப்பயனால் இங்கு வந்து, பிரம தீர்த்தத்தில் சிவராத்திரியன்று நீராடி முக்தி வரம் பெற்றான். இவ்வாறு இங்கு வந்து நீராடி இறைவனைத் தரிசிப்போர் காசிக்குச் சென்று கங்கையில் நீராடிய பலனைப் பெறுவர்.

இத்தலத்தில் ஓடத்  திருவிழா ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் நடைபெறுகிறது. திருஞானசம்பந்தர் அடியார்களுடன் ஆற்றின் மறுகரையிலிருந்து பதிகம் பாடிக்கொண்டே ஓடத்தில் ஏறி இக்கரைக்கு வரும் காட்சியும் மேலவாயிலில் ரிஷபாரூடராகப் பெருமான் அவருக்கும் மற்ற அடியார்களுக்கும் தரிசனம் கொடுக்கும் காட்சியும்   மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பஞ்சாரண்யத்தலங்கள் இகபர நலன்கள் எல்லாவற்றையும் வழங்குபவை. யாத்திரை செய்யும் அடியார்கள்  மனம் ஒன்றி வழிபடுவதுடன்  ஆலய வளர்ச்சிக்கும் , ஆலய சிப்பந்திகளின் நலனுக்கும் தங்களால் இயன்ற அளவில் உதவினால் பெரிய சிவபுண்ணியமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
  

Wednesday, September 4, 2013

கும்பாபிஷேகக் காட்சிகள்

கும்பாபிஷேகம் என்றவுடன், ஆலய கும்பங்களின்மீது புனித நீர் ஊற்றப்படுவதே நினைவுக்கு வரும்.  அண்மையில் நல்லூர் என்ற பாடல் பெற்ற தலத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியின் போது ஒரு சிவாச்சாரியார் கூறிய விளக்கம் சற்று வித்தியாசமாகச் சிந்திக்க வைத்தது.
அப்பெரியவர் சொன்னார்:  " கும்பாபிஷேகம் என்றால் கும்பத்துக்கு செய்யப்படும் அபிஷேகம் என்பது மட்டும் அர்த்தம் இல்லை. கும்பித்தல் என்றால் சேர்தல் என்றும் பொருள் கொள்ளலாம். இவ்வைபவத்தின் போது ஆயிரக்கணக்கான அடியார்களின் கைகள் சேர்ந்து தலைமீது கூப்புகின்றன. பல புண்ணிய தீர்த்தங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட நீர் கும்பத்தின்மீதும்  மூர்த்திகளின் மீதும் ஒருசேர அபிஷேகிக்கப்படுகின்றது. மனங்களும் கைகளும் சேர்ந்து கும்பிக்கின்ற  அற்புதமான வைபவம் இது.  அதையே பெருமான் அபிஷேகமாகவும் ஆராதனையாகவும் ஏற்கிறான் .  "

கும்பித்தல் என்பதற்கு இவ்வாறு பல பொருள்கள் இருக்கக்கூடும். அதிலிருந்துதான் கும்பிடுதல் என்ற சொல்லும் வந்திருக்கலாம். இப்படிச் சேர்ந்த பொருள் கும்பி, கும்பம் என்றெல்லாம்  ஆவது இருக்கட்டும். சாக்கடையில் சேர்ந்த மண்ணைக்கூட கும்பி என்பார்கள். அதே நேரத்தில்   " நின் மலரடிக்கே கூவிடுவாய்; கும்பிக்கே இடுவாய்.." என வரும் திருவாசகத் தொடரில் கும்பி என்றால் நரகம் என்று பொருள் காண்கிறது தருமை ஆதீனத் திருவாசக உரை. அனைவரது கும்பிடுதலுக்கும் புகலிடமான  மலரடிக்கே வருக என்று கூவி அருளி அக்கும்பிக்கே இடுவாயாக என்று வேண்டுவதாகவும் பொருள் கொள்ள ஏதுவாகிறது. கும்பித்த அடியேனை நரகத்தில் இடர்ப்பட விடுவாயோ என்ற கேள்வியாகவும் பொருள் காண்பர்.

நல்லூர்  என்னும் சிறந்த சிவ ஸ்தலத்தில்  திருப்பணிகள் நிறைவேறி, மகாகும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. காளஹஸ்தி போன்ற ஸ்தலங்களை தக்ஷிண கைலாசம் என்பார்கள். ஆனால் தேவாரத்தில் நல்லூரைக் கயிலைக்கு இணையாக வைத்துப் போற்றியிருப்பதை, " வட பால் கயிலையும் தென்பால் நல்லூரும் அவர் வாழ் பதியே" என்று அப்பர் சுவாமிகளின் திருப்பதிகத்தால் அறியலாம். பாண்டவர்களின் தாயான குந்தி தேவிக்காக சுவாமி ஏழு கடல்களையும் வரவழைத்த பெருமையை உடையது. கும்பகோணத்திற்கு முன்பாகவே மாசி மக ஸ்நான விசேஷத்தைப் பெற்றதும் இந்த நல்லூர் தான்.

அகஸ்தியருக்காகக் கல்யாணக் காட்சி காட்டிய கல்யாண சுந்தர மூர்த்தியின் சன்னதி மிகவும் பிரசித்தி பெற்றது. மூலவர் ஸ்வயம்பு மூர்த்தி. பின்னால்  சுதை வடிவில் உமா மகேஸ்வரர்கள் காட்சி அளிக்கிறார்கள். கர்பக் கிருகம் மாடக்கோயில் மீது  அமைந்துள்ளது. கோச்செங்கட் சோழ நாயனார் கட்டியது. மூலஸ்தான விமானத்தின் கம்பீரமும் அழகும் நம்மை வியக்க வைக்கின்றன. அதிலுள்ள பெரிய வடிவிலுள்ள தக்ஷிணாமூர்த்தி, நரசிம்ஹர்  ஆகிய மூர்த்திகள் நம்மைப் பெரிதும் கவர்கின்றன. மாடக் கோயில் படிகளை ஏறும்போது முதலில்  கைலாச கணபதியைத்  தரிசிக்கிறோம்.

அருகிலுள்ள திருச்சத்திமுற்றத்தை வழிபட்ட திருநாவுக்கரசர்  வேண்டியபடியே, அவரை இறைவன் நல்லூருக்கு வா என்று அழைத்து, அவரது சிரத்தின் மீது பாத மலர் சூட்டினான். இன்றும் சுவாமி சன்னதியில் தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு, இறைவனது பாதுகையை சிரத்தில் வைத்துப் பிரசாதம் வழங்குகிறார்கள். கிடைத்தற்கரிய இப் பாக்கியத்தை எல்லோரும் பெற வேண்டும்.
  
வெளிப்பிராகாரத்தில் தனி சன்னதி கொண்டு வேண்டும் வரம் அருளும் காளி தேவியை தரிசித்து வேண்டுதல்களை செலுத்துகிறார்கள்.  மாடக் கோயிலில் கிரிசுந்தரி என்ற பெயருடன்  அம்பாள்  தரிசனம் தருகிறாள்.

சம்பந்தர்,அப்பர்  ஆகியோரது தேவாரத் திருப்பதிகங்களை உடையது இத்தலம். அமர்நீதி நாயனாரது அன்பை சோதிக்க இறைவனே நேரில் எழுந்தருளி, அடியவரின் பக்தியை உலகறிய வைத்தான். நாயனாரது மடம் கோவிலுக்கு வெளியில் அமைந்துள்ளது.

1991 ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்குப் பிறகு, சரியாக 12  ஆண்டுகள் ஆனபிறகு இக்கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது பாராட்டப் பட வேண்டியது. இங்கிருந்து வெளியூர்களில் வேலை நிமித்தமாகக் குடியேறியவர்கள், தங்கள் ஊரில் நடைபெறும் இந்த வைபவத்திற்காகத் தங்களாலான எல்லா உதவிகளையும் செய்ததோடு, நேரில் வந்து கலந்துகொண்டு அருள் பெற்றார்கள். இது மற்ற கிராமங்களிலும் அவசியம் பின்பற்றப் பட  வேண்டிய ஒன்றாகும். எக்காரணம் கொண்டும் தங்களது சொந்த ஊர் கோயில்களைப் புறக்கணிக்காமல் அவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும் நல்லூர் வாசிகளைப் பார்த்தால் பெருமையாக இருக்கிறது. அவர்களுக்கு சிவக்ருபை கிட்டும் என்பதில் சந்தேகமே இல்லை. இதில் மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். இந்த ஊரைச் சேர்ந்தவர் இல்லாவிடினும் இதன் பெருமைகளை அறிந்த சென்னை அன்பர் ஒருவர் இங்கு ஒரு கட்டிடம் கட்டி அதில் அன்னதானம் செய்தது மிகவும் பாராட்டத் தக்கது. மற்றொரு அன்பர் ,கோயில் மதில்கள் ,சன்னதிகள் ஆகியவற்றை அழகுற வர்ணம் பூசித் தந்துள்ளார். 100  வருஷங்கள் முன்பு கொடிமரத்தை அமைத்துக் கொடுத்த ஒரு குடும்பத்தின் வாரிசுகள் ,  அந்தக் கொடிமரம் பழுதாகிவிடவே, புதிய மரத்தை நிறுவி, அதற்குச் செப்புத் தகடுகளைப் பொருத்தியுள்ளார்கள் என்பதும் மற்ற ஊர்க்காரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும். 

யாகசாலையையும் மிகச் சிறப்பாக அமைத்திருந்தார்கள். சுவாமி, அம்பாள், காளி தேவி ஆகிய மூன்று பிரதான மூர்த்திகளுக்கும் தனித்தனியே ஒன்பது குண்டங்கள் அமைக்கப்பட்டு ஆறு கால பூஜைகள் செய்யப்பட்டன. திருவாவடுதுறை ஆதீனக் கோயில் ஆதலால் மரபு மாறாமல் இவை  நடத்தப் பெற்றன. மகா சந்நிதானமும் யாக சாலைக்கு எழுந்தருளி தரிசனம் செய்தார்கள். வந்திருந்த ஆயிரக்கணக்கான சேவார்த்திகளுக்கும் ஆங்காங்கே அன்ன தானம் நடைபெற்றது கண்கொள்ளாக் காட்சி ஆகும். அதிக பஸ் வசதி இல்லாத கிராமமாக இருந்தபோதிலும் பக்கத்துக் கிராம மக்கள் சாரிசாரியாகக் கால் நடையாகவே வந்து கும்பாபிஷேகத்தைத் தரிசித்தார்கள்.
கயிலை நாயகன் நல்லூரில் நடத்திக்கொண்ட வைபவம் அல்லவா! அவன் விருப்பமாக உறைவது வடக்கில் கயிலை மலையும் தெற்கில் நல்லூரும் என்று அப்பர் பெருமானும் பாடியிருக்கிறார். எனவே கயிலையில் நடந்த கும்பாபிஷேகமாகவே பாவித்து , நிறைந்த மனத்துடன்  அன்பர்கள் அனைவரும் அந்த "ஆனந்தத் தேன் உறையும் பொந்தைப் பரவி " இல்லம் திரும்பினர்.

நல்லூர்  கும்பாபிஷேகம் ஆன சில நாட்களிலேயே மூவலூரில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மயிலாடுதுறை ரயிலடிக்கு மேற்கில் சுமார்  2 கி.மீ. தொலைவில் கும்பகோணத்திற்குச்  செல்லும் சாலையின்  அருகாமையில் உள்ளது மூவலூர் மார்கசகாயேசுவர சுவாமி ஆலயம். வழித்துணை நாதர் என்று இத்தலப் பெருமானைத் தமிழில் அழைப்பர். மங்கள நாயகியாகவும், சௌந்தர நாயகியாகவும் அம்பிகை இரு சன்னதிகள் கொண்டு அருட் காட்சி அளிக்கிறாள்.  அப்பர் தேவாரத்தில் இத்தலப் பெயர் குரிப்பிடப்பட்டதால் இது வைப்புத்தலமாக எண்ணப்படுகிறது. சம்பந்தர் இத்தலத்தை தரிசித்ததாகப் பெரிய புராணம் கூறுகிறது. ஆனால் அப்போது பாடிய பதிகம் தற்போது கிடைக்கவில்லை.

புன்னை மர நீழலில் பிரமன்,விஷ்ணு,ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் மார்கசகாயேச்வரப் பெருமானைப் பூசித்துள்ளனர். எனவே இவ்வூர் மூவரூர் என்று ஆகிப் பிற்காலத்தில் மூவலூர் என்று ஆயிற்று என்பர். நாகர்களில் தக்ஷகனும், வாசுகியும் பூஜித்த தலம். சோழ,பாண்டிய, விஜயநகர அரசர்கள் காலக் கல்வெட்டுக்களை உடையது.

மூவலூர் கும்பாபிஷேகத்திற்காக சுவாமிக்கும் அம்பாள்  இருவருக்குமாக மொத்தம் பதினைந்து குண்டங்களும் பரிவாரங்களுக்கான குண்டங்களும் அமைக்கப்பெற்று, நான்குகால பூஜைகள் விமரிசையாக நடைபெற்றன. உள்ளூர்வாசிகளும்  பிற அன்பர்களும் காட்டிய ஆர்வம் மகத்தானது. பன்னிரண்டு ஆண்டுகள் ஆனவுடன் கும்பாபிஷேகம் செய்யப்படும் கோயில் இது.

ஆகம விதிப்படி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்வதால் கோயிலை  நன்கு பராமரிக்க ஏதுவாகிறது. ஆலயப்  புனிதமும் காக்கப் படுகிறது. ஏராளமான ஆலயங்கள் ஐம்பது அறுபது ஆண்டுகள் ஆகியும் கும்பாபிஷேகம் செய்யப் படாததால் மரங்கள் முளைத்து, மிகப்பெரிய திருப்பணி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறன. இதைக் கவனத்தில் கொண்டு உரிய காலத்தில் கும்பாபிஷேகம் செய்ய எல்லோரும் முன்வரவேண்டும். இதனால் எல்லோருக்கும் இறைவழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கவும் சாத்தியமாகிறது.  

Tuesday, August 20, 2013

சிவ ராஜதானி

                            
                      சிவ சிவ
                திருச்சிற்றம்பலம்


               சிவ ராஜதானி
(நாகைப்பட்டினத்துப் பன்னிரு சிவாலயங்கள்)



திருவாதிரையான் திருவருட் சபை, சென்னை.


பணிவுரை
                                                                                         
தெய்வப் பொன்னி நதி வளம் கொழிக்கும் சோழ வளநாட்டில் காவிரியின் இருகரைகளிலும் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் 190  ஆகும். அவற்றுள், காவிரித் தென்கரைத் தலங்களுள் ஒன்றாக விளங்குவதும், மிகப் பழமையானதும், தேவார மூவராலும் பாடல் பெற்றதும்,சக்தி பீடங்களுள் ஒன்றும், சப்த விடங்கத் தலங்களுள் ஒன்றும்,பல்வேறு புராண வரலாறுகளைக் கொண்டதும் ஆகிய தலம், நாகப்பட்டினம் என்று தற்போது வழங்கப்பெறும் நாகைத் திருத்தலம். நாகராஜனாகிய ஆதிசேஷன் வழிபட்ட சிறப்புடையதால்,இப்பெயர் வந்தது என்பர் .

ஊழிக்காலத்தில் அனைத்தும் இங்கு ஒடுங்குவதால்,இத்தலம் சிவராஜதானி எனப்பட்டது எனத் தல புராணம் கூறுகிறது. காயா ரோஹாணர் என்ற பெயருடன் சிவபெருமான் அருட் காட்சி வழங்கும் தலங்கள், காஞ்சி, கும்பகோணம்(மகாமகக் குளக் கரை), நாகை ஆகிய மூன்றுமாம். கயிலை யையும்,காசியையும் போன்று முக்தி மண்டபம் இங்கு இருக்கிறது.

இத்தல எல்லைக்குள், ஸ்ரீ நீலாயதாக்ஷி அம்பிகா சமேத ஸ்ரீ காயாரோகண ஸ்வாமி ஆலயம் உள்ளிட்ட பன்னிரண்டு சிவாலயங்கள் உள்ளன. இவை யாவும் புராணச் சிறப்பும்,பழமையும் வாய்ந்தவை. இப்பன்னிரண்டு ஆலயங்களையும் பலர் ஒரே நாளில் தரிசிப்பர்.

இப்பன்னிரண்டு ஆலயங்களின் இருப்பிடம், வரலாறு ஆகியவை பற்றிய செய்திகளுடன் ஒரு சிறு நூல் வெளியிட்டால் இக்கோயில்களைத் தரிசிக்க வருவோர்க்குப் பெரிதும் பயன் படும் என்ற எண்ணத்தால் இச் சிறு முயற்சியை மேற்கொள்கிறோம். சிவராஜதானியாகிய நாகைக்கு வரும் அன்பர்கள் இதனை வரவேற்பர் எனக் கருதி, இதனைத் திருவாதிரையான் திருவருட் சபையின் வெளியீடாக ஆதி புராணனாகிய காயாரோகணப் பெருமானின் மலரடிகளில் சமர்ப்பிக்கிறோம். 
    

 --சிவபாதசேகரன் ,திருவாதிரையான் திருவருட் சபை, சென்னை/  



                                               1. காயாரோகணம்
             (ஸ்ரீ நீலாயதாக்ஷி சமேத ஸ்ரீ காயாரோகண ஸ்வாமி ஆலயம்)


                      திருச்சிற்றம்பலம்
         நிருத்தனை நிமலன் தன்னை நீணிலம் விண்ணின் மிக்க
         விருத்தனை வேத வித்தை விளைபொருள் மூலமான
         கருத்தனைக் கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட
         ஒருத்தனை உணர்தலால் நாம் உய்ந்தவா நெஞ்சினீரே..
                                                      திருச்சிற்றம்பலம்
                         --- திருநாவுக்கரசு நாயனார் தேவாரம்

                           
தலமும் இருப்பிடமும்: புண்ணியத் தலங்களும் தீர்த்தங்களும் நிறைந சோழ வளநாட்டில் தெய்வப்பொன்னி நதியின் தென்கரையில் உள்ள தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலங்களுள் 82 வது தலமாக விளங்குவது திருநாகைக் காரோணம் எனும் இத்தலம்.  இது, மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புடையதாய் விளங்குகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாகைக்குவர இரயில் மற்றும் பேருந்து வசதிகள் இருக்கின்றன.  இரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி. மீ தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.

தலத்தின் தொன்மை: பல ஊழிக்காலங்களுக்கும் அப்பாற்பட்டதால் இதனை ஆதி புராணம் என்றும் சுவாமியை ஆதி புராணேச்வரர் என்றும் தல புராணம் குறிப்பிடுகிறது.

தலத்தின் பெருமை: உமா தேவியும்,ஆதிசேஷனும்,புண்டரீக முனிவரும் வழிபட்ட தலம். அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான அதிபத்த நாயனார் அவதரித்த தலமும் இதுவே ஆகும்.  

கோயில் அமைப்பு: கிழக்கு நோக்கிய இச்சிவாலயத்தின் முகப்பிலுள்ள முற்றுப்பெறாத கோபுர வாசலைக் கடந்தால், நாகாபரண விநாயகர், சுதையாலான நந்தி, முக்தி மண்டபம்,ஆகியவற்றைத் தரிசிக்கலாம்.

ஐந்து நிலை கோபுர வாசலைக் கடந்தால்,தெற்கு நோக்கிய அம்பாள் சன்னதியும், அருகில் கொடிமரம் ஆகியன அமைந்துள்ளன. சுவாமி பிராகாரத்தில், அருகாமையில் தியாகராஜமூர்த்தி சன்னதியும், எதிரில் சுந்தரரும் இருக்கக் காணலாம். இப்பிராகாரத்தில், அறுபத்து மூவர், புண்டரீக முனிவர், சாலீசுக மன்னன்,முருகன்,கஜலக்ஷ்மி,தசரதன் ஸ்தாபித்த சநீச்வரன்,நவக்ரகங்கள்,காட்சி கொடுத்தவர்,நடராஜர்,பிக்ஷாடனர் அதிபத்தர் ஆகிய மூர்த்திகளையும் தரிசிக்கலாம்.தியாகராஜர் சன்னதியில் சுந்தர விடங்கரையும் தரிசிக்கலாம். மூலவரான காயாரோகண சுவாமிக்குப் பின்னால் சப்த ரிஷிகளுக்கும் காட்சி தந்த சோமாஸ்கந்தரையும் தரிசிக்கலாம். ஸ்தல விருக்ஷமான மாமரத்தின் அருகில் மாவடிப் பிள்ளையார் வீற்றிருக்கிறார்.

தீர்த்தங்கள்: சர்வ தீர்த்தம் என்னும் புண்டரீக தீர்த்தம் கோவிலின் மேற்கிலும், சிவகங்கை என்னும் தேவ தீர்த்தம் முக்தி மண்டபத்தருகிலும், தேவநதியாகிய உப்பாறு ஊருக்கு மேற்கிலும் உள்ளன. கடலும் சிறந்த தீர்த்தமாவதால், விசேஷ நாட்களில் இதில் நீராடுவது சிறப்புடையதாகக் கருதப் படுகிறது.                     
நாகைப் புராணம் : வடமொழியில் இருந்த இத்தலத்தின் புராணத்தைத் தமிழில் இயற்றித் தருமாறு அன்பர்கள் வேண்டவே, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் மகாதேவ சாஸ்திரிகள் என்பவரிடமிருந்து தமிழாக்கம் செய்து கொண்டு, செய்யுள்நடையில்1868ம் ஆண்டு இயற்றினார்கள். புராணம் முழுதும் இயற்றப்பட்டவுடன், 1869 ம் ஆண்டு நாகைப் புராண அரங்கேற்றம் நடைபெற்றது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் 65 வது பீடாதிபதியாக விளங்கிய ஸ்ரீ மகா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், கீழ்வேளூர் சுப்ரமணிய தேசிகர் ஆகியோர் பிள்ளைஅவர்களை ஆசீர்வதித்துச் சென்றார்கள். அதே சமயத்தில் சென்னையிலும் இந்நூல் அச்சேறியது.
            
மகாவித்துவான் பிள்ளை அவர்களின் மாணாக்கரான டாக்டர் உ.வே. சுவாமிநாத ஐயர் அவர்கள், இப்புராணத்தின் அருமை பெருமைகளைப் பின்வருமாறு விளக்கியுள்ளார்கள்:
           
 “இந்நூலில் பல நயங்கள் மிகுந்து விளங்கும். சொல்லணி,பொருளணி,    தொடைநயம்,பொருட்சிறப்பு,சுவைநயம்,நீதி,சிவபக்தி,சிவத்தலச்சிறப்பு, நாயன்மார் பெருமை முதலிய பலவும் நிரம்பியுள்ளன. சுவைப் பிழம்பாக விளங்கும் இக்காப்பியத்தைப் பெறுதற்குத் தமிழ்நாடு தவம் செய்திருக்க வேண்டும். பல புலவர்களின் வாக்குகளை ஒருங்கே பார்த்து மகிழ வேண்டுபவர் இந்நூலைப் படித்தால் போதும்.”

ஞானசம்பந்தர் அருளிய திருமுகப் பாசுரத்தின் ஒவ்வோரு பாடலுக்கும் சேக்கிழார் விரிவுரை செய்ததைப் போலப் பிள்ளை அவர்களும், சுந்தரர் இத்தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் இப்புராணத்தில் விளக்கம் அளித்துள்ளது அறிந்து மகிழத் தக்கது.

2506 பாடல்களைக் கொண்ட இப்புராணத்தைத் திருவாவடுதுறை ஆதீனம், 1970 ம் ஆண்டு, குறிப்புரையுடன் வெளியிட்டுத் தமிழ் கூறு நல்லுலகிற்குத் தந்து பேருபகாரம் செய்தது, நன்றியுடன் இங்கு நினைவுகூரத் தக்கது.

புராண வரலாறுகள்:ஏழு முனிவர்களுக்கும் சோமாஸ்கந்த வடிவில் காட்சி அளித்தது, அகஸ்தியருக்குத் திருமணக் காட்சி அளித்தது, சாலீசுக மன்னனுக்குத் தரிசனம் அளித்தது, தசரதன் தனியே சனிப் பிரதிஷ்டை செய்தது, சுகுமாரன் என்ற அந்தணனுக்கு சிவராத்திரி அன்று நற்கதி அளித்தது,புண்டரீக முனிவரைக் காயத்தோடு ஆரோகணம் செய்தது, திருமால், பிரமன் முதலிய தேவர்களும், அகத்தியர், வசிஷ்டர் முதலிய முனிவர்களும், முசுகுந்தன்,அரசகேசரி,விசித்திரகவச்சன்,  விரூரகன், பத்திரசேனன் என்னும் அரசர்களும் ,பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்ட தருமன் என்னும் அந்தணர்களும் தருமன் முதலிய வணிகர்களும் வழிபட்டது ஆகியவற்றைப்  புராணம் விரித்து உரைக்கிறது. சுந்தர மூர்த்தி நாயனார் இப்பெருமானைப் பாடிக்,குதிரை, முத்தாரம்,வயிரம், கஸ்தூரி,சாந்து,பொன்,பட்டாடை,காம்பினோடு நேத்திரம்,ஆகியவற்றைப் பெற்றதாகப் பெரிய புராணம் கூறுகிறது.இறைவன் தனது குதிரை வாகனத்தை சுந்தரருக்கு அளித்ததால், அன்றுமுதல் இக்கோவிலில், குதிரைவாகன விழா, சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கே நடைபெறுவதாகப் புராணம் கூறும்.

திருவிழாக்கள்: வைகாசியில் பிரமோற்சவமும், ஆனி ஆயில்யத்தில் புண்டரீக மகரிஷி ஐக்கியமும், ஆனி கிருஷ்ண பக்ஷ அஷ்டமியில் பஞ்சக் குரோச உற்சவமும் நடைபெறும்.அப்போது, சாலீசுகனுக்குத் திருமணக்காட்சி அளித்த பின், பல்லக்கில் புறப்பட்டு, பஞ்சகுரோச யாத்திரையாக, பொய்யூர், பாப்பா கோவில், சிக்கல், பாலூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய தலங்களுக்குச் சென்று விட்டு, மறுநாள் காலை, நாகை அடைந்து, கோபுர வாசல் தரிசனம் நடை பெறுகிறது.
          
ஆடிப் பூரத்தில் நீலாயதாக்ஷி அம்பிகைக்கு விமரிசையாக உற்சவம் நடைபெறும். ஆவணியில் அதிபத்த நாயனார் விழாவும், ஆடி - தை அமாவாசைகளில் சமுத்திர தீர்த்த வாரியும், தியாகராஜப் பெருமானுக்குப் பங்குனி உத்திர விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.கார்த்திகை சோமவாரங்களில் சங்காபிஷேகம் நடைபெறுகிறது.


                      அமர நந்தீசுவரர் கோவில்

                           
           
நாகை பெரிய கோவில் கீழை சன்னதித் தெருவின் முனையில்,கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது இந்த ஆலயம்,சிறிய கோபுர வாசலைக் கொண்டது. நாகைக் காரோணப் புராணத்தில் அமரரேந்திரேச்வரர் என்று காக தீர்த்தப் படலத்தில் சுவாமி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. காலப்போக்கில் மக்கள் வழக்கில் அது,அமர நந்தீஸ்வரர் என ஆயிற்று போலும்!
          
புராண வரலாறு: அகலிகையை நாடிய இந்திரன் கௌதம முனிவரின் சாபத்தால் காக்கையாக மாறினான். சாப விமோசனத்திற்காக நாகை வந்து ஒரு தீர்த்தத்தை உண்டாக்கினான். அதுவே காக்கை தீர்த்தம் எனப்படுவது. தினமும் அதில் நீராடி, காயாரோகனரை வழிபட்டு நற்கதி பெற்றான். ஆலயத்தின் கிழக்கே, ஒரு சிவலிங்க மூர்த்தியை பிரதிஷ்டை செய்து, தனது வஜ்ராயுதத்தால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, வழிபட்டான். இம்மூர்த்திக்குஅமரனந்தீசுவரர் என்றும், தீர்த்தத்திற்கு வஞ்சி கங்கை தீர்த்தம் பெயர்கள் ஏற்பட்டன.

ஆலயம் அழகிய கருங்கல் திருப்பணி செய்யப்பட்டு விளங்குகிறது.
      
                  அக்கரை குளம் சொக்கநாதர் கோவில்

          
         
நாகை பெரிய கோவிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. குறுகிய தெருக்கள் வழியாகச் செல்லவேண்டும். ஆலயத்தின் அருகில் அழகிய குளம் அமைந்துள்ளது.ஒரே ப்ராகாரத்துடன் கூடிய சிறிய கோயில். செட்டியார் பரம்பரையினர் நிர்வகிக்கின்றனர். மொட்டைக்கோபுர வாயிலின் மேல் சுவாமியின் மடியில் முருகனும் அம்பிகையின் அருகில் கணபதியும் அமர்ந்துள்ளவாறு சுதை வடிவங்கள் உள்ளன. சுவாமி, சுந்தரேசுவரர் என்றும் அம்பிகை, மீனாக்ஷி என்றும் அழைக்கப்படுகின்றனர். நாகைக் கோயில்கள் பண்ணிரண்டின் விவரங்களை ஒரு பலகையில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

                                சட்டையப்பர் கோயில்

                          
           
பிரபலமான சிவாலயம். முன்னமே தோன்றியதால் ஆதி காரோணம் என்று வழங்கப்பெறும்.புண்டரீகமுனிவர் ஆதிபுராணருக்குத் தென்மேற்கில் ஒரு ஆசிரமம் அமைத்து, லிங்கப்ரதிஷ்டை செய்து வழிபட்டுவந்தார். தினந்தோறும் சர்வ தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து,,பெருமானை வழிபட்டு வந்தார். இறைவன் அவரைத் தனது காயத்துடன் ஆரோகணித்துக் கொண்டதால்,காயாரோகணர் எனப்பட்டார். சர்வதீர்த்தமும், புண்டரீக தீர்த்தம் எனப்பட்டது.

கோயில் பெரிது. திருக்குளம் உள்ளே அமைந்திருக்கிறது. தக்ஷிணாமூர்த்திக்கு  அழகிய தனி சன்னதி அமைந்திருக்கிறது.சுவாமிக்கு ஆதி காயாரோகணேசுவரர் என்று பெயர். அம்பிகை இக்ஷுரஸ பாஷிணி எனப்படுகிறாள். அதாவது, கருப்பஞ்சாறு போன்று இனிக்கும் குரல் வளமுடையவள் என்று பொருள் படும்.

இக்கோயிலின் சிறப்பு மூர்த்தியாக சட்டைநாதர் தனிச் சன்னதி கொண்டு அருளுகிறார். கண்கண்ட தெய்வமான இவருக்கு உள்ளுர் மற்றும் வெளியூர் அன்பர்கள் பிரார்த்தனை செலுத்த வருகிறார்கள். மிகவும் நியமத்தோடு பூஜைகள் செய்யப்படுகின்றன. சட்டைநாத சுவாமி, அம்பிகையோடு காட்சி அளிப்பது சிறப்பு அம்சம்.


 நாகநாத சுவாமி ஆலயம்

.                       
         
நாகையில் சட்டையப்பர் வடக்கு வீதியின் வட சிறகில் இக்கோயில் அமைந்துள்ளது. முகப்பில் மூன்று நிலை ராஜ கோபுரம் அணி செய்கிறது. உள்ளே சென்றால் ஓர் கருங்கல் மண்டபத்தில் விநாயகர்,நந்தி,பலிபீடம் இருக்கக் காணலாம்.சன்னதிக்குச் செல்லும் வழியிலுள்ள சுவற்றில், ஆதிசேஷன் சிவபெருமானைப் பூஜிக்கும் திருவுருவம் இருக்கக் காண்கிறோம்.இடப்புறச் சுவற்றில்,நாக கன்னிகை இருக்கிறாள். அம்பிகை அகிலாண்டேச்வரியாக தனிச் சன்னதி கொண்டு காட்சி அளிக்கிறாள். நாகநாத சுவாமி சன்னதியில் நாகப்புற்றுக்கள் உள்ளன. அருகிலுள்ள மேடையில் ராகு, கேது ஆகியோரின் திருவுருவங்கள் காணப்படுகின்றன. இது சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலம் என்பர்.

பிராகாரத்தில், தக்ஷிணாமூர்த்தி,கருவறைச் சுவற்றை ஒட்டி கோஷ்டமாக மட்டும் இராமல் தனிச் சன்னதி கொண்டு விளங்குகின்றார்.இது போன்ற அமைப்பு, இக்கோயிலிலும்,சட்டையப்பர் கோயிலிலும் மட்டுமே உள்ளன.
  
ஸ்தல விருக்ஷமான சரக்கொன்றை தற்போது இல்லை.ஒரே இடத்தில் ஆலும்,வேம்பும் இணைந்த தோற்றத்தையே காண்கிறோம்.இங்கு நாகப்-பிரதிஷ்டைகள் செய்திருக்கிறார்கள்.தென்மேற்கில்வினாயகப்பெருமானின் சன்னதியும்,வடக்குத் திருச்சுற்றில் முருகப்பெருமானது சன்னதியும் உள்ளன. மயில் வாகனனாக, வள்ளி-தெய்வானையுடன் அற்புதக் காட்சி வழங்குகின்றான் ஆறுமுகன். கஜலக்ஷ்மி,துர்க்கை,சண்டேசர்,சூரியன்,சனி, பைரவர் ஆகிய மூர்த்திகளையும் பிராகாரத்தில் தரிசிக்கலாம்.
  
புராண வரலாறு: சனத்குமார முனிவரின் வேண்டிக்கோளுக்குக்கிணங்கி, நந்தியெம்பெருமான், நாகையில் திருக்கோயில் கொண்டுள்ள நாகநாதப் பெருமானுடைய பெருமைகளைக் கூறுவதாகப் புராணம் அமைந்துள்ளது. பாதாள உலகை ஆண்டுவந்த ஆதிசேஷனுக்கு மகப்பேறு இல்லாததால் மிகவும் மனச்சோர்வடைந்து வசிஷ்ட முனிவரை அணுகினான். சிவ பூஜை செய்துவந்தால் மகப்பேறு சித்திக்கும் என்று முனிவர் அருளவே, சிவராத்திரி தினத்தன்று இரவு நான்கு காலங்களும் முறையே, குடந்தைக் கீழ்க்கோட்டம்(கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி ஆலயம்), திருநாகேசுவரம், திருப்பாம்புரம் ,திரு நாகைக் காரோணம் ஆகிய நான்கு தலங்களை வழிபட்டான். நாகையை அடைந்து, தேவ தீர்த்தத்தில் நீராடி, காயாரோகணப் பெருமானையும், நீலாயதாக்ஷி அம்பிகையையும் முறைப்படி வழிபட்டான்.சர்வ தீர்த்தத்தின் மேல்திசையில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தான். அதன் பயனாக அவனது மனைவி ஒரு பெண் மகவை ஈன்றெடுத்தாள். ஆனால் அக்குழந்தைக்கோ மூன்று தனங்கள் இருக்கக் கண்டு வருந்தலாயினான். அப்போது அசரீரி, “நாகராஜனே! வருந்தாதே. இவளுக்குத் தக்க மணாளன் வரும்போது மூன்றாவது தனம் மறையும்” என ஒலித்தது.
            
ஆதிசேஷனின் மகளான நாக கன்னிகை, நாள்தோறும் ஆதிபுராணரை மனமுருகி வழிபட்டுவந்தாள். ஒருநாள் தேவதீர்த்தக்கரையில் சோழ அரசகுமாரனாகிய சாலீசுகனைக் கண்டாள். அப்போது அவளது மூன்றாவது தனம் மறையவே, இவளே தனது மணாளன் என அறிந்து, தன் பெற்றோரிடம் கூறினாள். பிலத்துவாரம் வழியே நாகலோகம் சென்ற சோழனை ஆதிசேஷன் வரவேற்றுத் தன் மகளை அவனுக்கு மணம் செய்துவித்தான். பின்னர் அவனை அரசாட்சி செய்யுமாறு கூறிவிட்டு, நாகராஜன் நாகையை வந்து அடைந்தான். நாக தீர்த்தத்தில் நீராடித் தான் பிரதிஷ்டை செய்த நாக லிங்கத்தை வழிபாட்டு வந்தான். இத்தீர்த்தத்தில் நீராடுவோரைப் பாம்பு தீண்டினாலும் விஷம் ஏறாமல் இருக்கக் கடவது என்ற வரமும் பெற்றான்.இவ்வாறு மாசி மாத மகாசிவரத்திரியன்று பூஜை செய்யும்போது, இறைவன் காட்சி நல்கினான். அப்போது ஆதிசேஷன், "இறைவா, இந்நகரம் அடியேனது பெயரில் அழைக்கப்படவேண்டும். இந்த லிங்க மூர்த்தியில் தாங்கள் எப்போதும் இருத்தல் வேண்டும். இங்கு வந்து வணங்கும் அன்பர்களுக்கும் வேண்டிய வரம் அனைத்தையும் தந்தருள வேண்டும்.” என்று வீழ்ந்து வணங்கினான். நாகநாதப் பெருமானும் அவன் வேண்டிய வரத்தைத் தந்தருளினார் நாகநாதப்பெருமானது அருளை வேண்டி, வாசுகி, கார்கோ டகன், தனஞ்சயன், ஐராவதன், குளிகன்,சங்கபாலன் ஆகிய நாகங்களும் வழிபட்டதை மேலைத் திருச்சுற்றில் காணலாம். கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு இது பரிகாரத் தலம் எனப்படுகிறது.

சீதையைத் தேடிவந்த இராமபிரான் தென்புறம் ஓர் லிங்கமூர்த்தியை நிறுவி பூஜித்தார். அம்மூர்த்தியே ராமலிங்கேசுவரர் என்பதாகும்.கிரகண காலங்களிலும்,அர்தோதய-மகோதய புண்ணிய காலங்களிலும் இங்குள்ள கடலில் மூழ்கி இராமனாதப் பெருமானை வணங்குவோர், எல்லா நன்மைகளையும் அடைவர். இத்தலத்தை வழிபடுவோர், மணப்பேறு, புத்திரப்பேறு, நோய் நீக்கம்,ஆகியன அருளப்பெறுகிறார்கள் கார்த்திகை சோமவாரம் பங்குனி உத்தரம் மற்றும் மாதந்திர விசேஷ நாட்கள் அனைத்தும் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.

   
அழகர் கோயில்

                                 
அழகிய நாதருடைய இக்கோயில்,ஒரு அழகிய கற்றளி. மொட்டை ராஜ கோபுர வாசலின் மேல் கணபதியும் கந்தனும் இருபுறமும் நிற்க காட்சிகொடுத்த நாதர் ரிஷபத்தின் மீது சாய்ந்தவாறு அம்பிகையுடன் நமக்குத் தரிசனம் தருகிறார். கருவறையில் சற்று உயரத்தில் அழகிய நாதர் பொலிவுடன் காட்சியளிக்கிறார்.அம்பிகை,சௌந்தரவல்லி என்ற பெயரோடு அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாகத் தனிச் சன்னதி கொண்டு விளங்குகிறாள்.

திருப்பாற்கடலைக் கடையும் போது ஆலகால விஷம் வெளிப்பட்டதால் திருமாலின் மேனி கருமை நிறமாக மாறியது. மீண்டும் தனது அழகைப் பெறுவதற்காக விஷ்ணுவானவர் நாகைக்கு வந்து லிங்கப்ரதிஷ்டை செய்து,அதன் மேற்கில் அம்ருத புஷ்கரணி என்ற தீர்த்தத்தை உண்டாக்கி வழிபட்டு வந்தார். ஈசனும் அவருக்குக் காட்சி அளித்து, “ நீ கரிய நிறத்தவனாக இருப்பினும் அழகைப் பெறுவாய் “ என்று வரமளித்தார்.  இவ்வாறு தனது அழகை மீண்டும் பெற்ற திருமால்,சௌந்தரராஜப்பெருமாள் என்ற திருநாமத்துடன், இக்கோயிலின் தென்மேற்குத் திசையில் கோயில் கொண்டுள்ளார்.


நடுவூர் கோயில்

                      
நாகைக்கு நடு நாயகமாகத் திகழ்வதால் இத்தலம் நடுவூர் எனப்பட்டது. வடமொழியில் இதனை மத்யபுரி என்பர். சுவாமிக்கு மத்யபுரீஸ்வரர், நடுஸ்தல ஈசர் என்றும் திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன. அம்பிகை,சௌந்தரநாயகி எனப்படுகிறாள்.முன்னொரு காலத்தில்,படைப்புத் தொழிலை அடையவேண்டித் திருமாலின் சொற்படி பிரம தேவன் நாகைக்கு வந்து,ஊரின் நடுவில்ஒரு சிவலிங்கத்தை நிறுவி,அதன் மேற்கே ஒரு தீர்த்தம் உண்டாக்கிவழிபட்டு வந்தார். ஈசனும் வெளிப்பட்டு, பிரமனுக்குப் படைக்கும் தொழிலை அளித்தருளினார். அதுமுதல் தீர்த்தமும் பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்பட்டது. திருக்கடவூரில் ஈசனால் தண்டிக்கப்பட்ட இயமனும் இங்கு வந்து வழிபாட்டு, தனது பதவியை மீண்டும் பெற்றான். தீர்த்தத்திற்கு இயம தீர்த்தம் என்ற பெயரும் உண்டு.


வீரபத்ர சுவாமி கோயில்

                        

ஸ்ரீ விசாலாக்ஷி சமேத ஸ்ரீ விஸ்வநாதர் கோயில், அதன் பிரதான மூர்த்தியான வீரபத்ரரின் பெயரால் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் இராஜ கோபுரம் ஐந்து நிலைகளை உடையது. வீரபத்திரருக்கென்று தனிச் சன்னதி இருக்கிறது. சிவபெருமானை மதியாது தக்ஷன் செய்த யாகத்தில் பங்கேற்ற குற்றத்திற்காக வீரபத்திரர் தோன்றி அத்தேவர்களைத் தண்டித்தார். அதனால் ஏற்பட்ட தோஷம் நீங்குவதற்காக சிவனை வழிபட்டார். பெருமானும், “ யாகத்தில் பயன்படுத்தப்பட்ட மாலைகளை கங்கையில் போட்டு அவை எங்கே கரை சேருகின்றனவோ, அங்குசிவ-லிங்கப்ப்ரதிஷ்டை செய்து என்னை வழிபடுவாயானால், பாவம் நீங்கப்பெறுவாய் “ என்று அருளினார். அம்மாலைகள் நாகையில் கரை ஒதுங்கின. வீரபத்திரரும், காளியைக் காவல் தெய்வமாகக் கொண்டு லிங்கப் பிரதிஷ்டை செய்து, அப்பெருமானுக்கு விஸ்வநாதர் என்று பெயரும் இட்டார்.


கட்டியப்பர் கோயில்

                           
தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடையும் போது, அமிர்த கலசம் வெளிப்பட்டது. அதனை அசுரர்கள் கைப்பற்றாத வண்ணம் எடுத்துக்கொண்டுபோய் நாகையை அடைந்த தேவர்கள், அதனை வேத தீர்த்தத்தின் தென் கரையில் வைத்துவிட்டு, நீராடச் சென்றார்கள். திரும்பிவந்து பார்க்கையில்,அக்குடம், சிவலிங்கமாக மாறியதுகண்டு வியந்தனர். அவர்களுக்குக் காட்சி கொடுத்த இறைவனும்,அவர்கள் விரும்பியவண்ணம் ஒரு அமிர்த கலசத்தை வரவழைத்துக் கொடுத்தார். தேவர்கள் மிகவும் மகிழ்ந்து,பெருமானைப் போற்றினர்.
   
இக்கோயிலின் ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. தேவாசுரர்கள் பாற்கடலைக் கடையும் காட்சி சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.   

சுவாமி அம்ருதகடேசுவரர் என்றும் அம்பிகை, பிரம்மானந்த சுந்தரி என்றும் வழங்கப்படுகிறார்கள்.


10 மலை ஈசுவரன் கோயில்

                
ஸ்தல யாத்திரையாக நாகைக்கு வந்த பராசர முனிவர்க்கு பதினாறாயிரம் சிகரங்கள் கொண்ட கயிலையங்கிரியைத் தரிசிக்கும் ஆவல் வந்தது. அதிலும்,அம்மலையை நாகையிலே தரிசிக்கவேண்டும் என்ற பேராவல் ஏற்பட்டது. ஒரு பட்டை ஆயிரம் சிகரங்களுக்கு சமம் என்ற நோக்கில் பதினாறு பட்டைகளை உடைய பாணத்தோடு கூடிய சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். அப்பெருமானை ஒரு உயர்ந்த கட்டுமலையில் வைத்து வழிபாட்டு வந்தார். அதன் பயனாக நீண்ட ஆயுள் பெற்றுப் பின்னர் கைலைநாதனின் கழலடி அடைந்தார்.

இக்கோயிலின் நுழை வாயிலில் இராஜ கோபுரம் இல்லை. சுதை வடிவங்களாக ரிஷப வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் காட்சி அளிக்கிறார்கள். இருபுறமும் கணபதியும் கந்தனும் காட்சி தருகிறார்கள். மாடக்கோயிலின் கீழே நந்தியும் பலிபீடமும் அமைந்துள்ளன. மேலே பதினெட்டுப் படிகள் ஏறிச்சென்றால் சுவாமி சன்னதியை அடையலாம். பதினாறு பட்டை லிங்கமாக கைலாசநாதப் பெருமான் தரிசனம் தருகிறார்.  
            

11 காசி விசுவநாதர் கோயில்


                         
             
ஸ்ரீ காயாரோகண சுவாமி ஆலயத்தின் தெற்கு மடவிளாகத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

முன்னொரு காலத்தில் தர்மம் குன்றி, அதர்மம் மேலோங்கி இருந்தபோது, சிவனருளால் நாகையில் தேவ தீர்த்தம் தோன்றியது. அதன் வடகரையில் உள்ள காசி விசுவநாதரை வழிபட்டால் பாவங்கள் அனைத்தும் நீங்கும். இங்கு முக்தி மண்டபம் அமைந்துள்ளது. இங்குதான் நாகைக் காரோணப் புராணம் அரங்கேற்றம் செய்யப்பெற்றது. இங்குள்ள விஸ்வரூப விநாயகரின் திருவுருவம் தரிசிக்கத்தக்கது.

12 அகஸ்தீசுவரர் கோயில்
        
இக்கோயில் வெளிப்பாளயத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீஅகஸ்தீசுவரசுவாமியை அகத்தியமுனிவர் வழிபட்டுள்ளார்.
              
திருக்கயிலையில் சிவ-பார்வதியரின் திருமணம் நடந்தபோது,  வடதிசை தாழவே, பூமியைச் சமன் செய்யும் பொருட்டு, அகத்திய முனிவரைத் தென்திசைக்கு அனுப்பினார் சிவபெருமான். அதன்படி பொதிகையை நோக்கி வந்த முனிவர் நாகையில் தங்கி, காயாரோகணத்தின் வடக்கே ஓர் சிவலிங்கத்தை ஸ்தாபித்து, பூஜித்து வந்தார். அதன் கிழக்கில் ஓர் தீர்த்தமும் ஏற்படுத்தினார். அத்தீர்த்தம்
அகத்திய தீர்த்தம் எனப்படுகிறது. கடலில் மறைந்த வண்ணம் தேவர்களை அசுரர்கள் தாக்கும்போது துன்பப்பட்ட தேவர்கள் அகத்தியரை அணுகினர். அகத்திய முனிவரும் கடல்நீரைப் பருகிவிட்டார். அதனால் வெளிவந்த அசுரர்களைத் தேவர்கள் வென்றனர். இவ்வாறு தர்மத்தை நிலைநிறுத்துகையில், அகத்தியர் தங்கி பூஜித்த ஆலயம் இது என்பர்.            
            .