Sunday, March 17, 2019

ஜோதிர் லிங்கங்கள் ஸோம்நாத் தொடர்ச்சி


சோம்நாத் ஆலயம் மீண்டும் எழுவதற்கு மூல காரணமாய் இருந்த சர்தார் படேல் அவர்களுக்கும் திரு. K.M. முன்ஷி அவர்களுக்கும் ஹிந்துக்கள் என்றென்றும் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள். கோயில் கட்டுவதற்கு காந்தி-நேரு ஆகியோர் மூலம் அரசாங்க உதவி மறுக்கப்பட்ட நிலையிலும், இவ்விருவரும் ஒரு ட்ரஸ்ட் நிறுவி ஆலயத்தை எழுப்பி அழியாப் புகழ் பெற்றனர். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக சர்தார் படேலின் திருவுருவச் சிலை சோமநாதர் ஆலயத்தை நோக்கி நிறுவப்பட்டிருப்பதைக் காணலாம்.

திரு முன்ஷி அவர்கள் அகழ்வாராய்ச்சிகள்  மூலமும், பொறியியல் வல்லுனர்கள் மூலமும் நன்கு பரிசீலித்து இத்தனை அழகான கோயிலை நிர்மாணிக்க உதவியுள்ளார்கள். அவர்கள் எழுதியுள்ள “ Somanatha the shrine eternal “ என்ற அருமையான நூல் முதன் முதலாக 1951 ம் ஆண்டு பாரதீய வித்யா பவன் மூலம் வெளி வந்தது. பின்னர் பல பதிப்புக்கள் வெளிவந்துள்ளன.

மகாபாரதத்தில் பலமுறைகள் சரஸ்வதி நதி கடலில் சங்கமம் ஆகும் இடத்தில் பிரபாஸ்  இருந்த செய்தி தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பாரதப்போர் முடிந்ததும் யாதவர்கள் குடிபோதையில் தங்களுக்குள் போரிட்டு மாண்டார்கள்.கிருஷ்ணபகவானும் பலராமனும் மட்டுமே எஞ்சினார்கள். மான் உறங்கிக்கொண்டிருப்பதாகத் தவறாகக் கருதிய வேடன் ஒருவனது அம்பு அங்கு உறங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணன் மீது பாயவே  கிருஷ்ணாவதாரம் நிறைவு பெற்றது. அவ்வாறு கிருஷ்ணன் தனது சரீரத்தை நீத்த இடம், சோம்நாத் கோயிலருகில் உள்ள பாலகடிர்தா என்பதாகும். இங்கு ஹிரண்யா, சரஸ்வதி, கபிலா ஆகிய மூன்று நதிகள் கடலோடு சங்கமிக்கின்றன.

புராணங்கள் மூலம் பாதாள லோகத்தில் நாகர்கள் வசித்ததை அறிகிறோம். மூன்று விதமான நெருப்புடன் சரஸ்வதி நதி இங்கு கடலில் கலப்பதாகப் புராணம் கூறும். எனவே அதனை அக்னி தீர்த்தம் என்றும் கூறுவதுண்டு. நாக லோகத்திற்கும் சோமநாதருக்கும் உள்ள தொடர்பு பற்றியும் புராணம் விவரிக்கிறது. நாகர்களான பார சைவர்கள் ஆண்ட போது சிவ வழிபாடு மேலோங்கி இருந்தது. ( We find Shiva everywhere in this period” says Jayaswal- K.P. Jayaswal, History of India P. 55) 

நாகர்களது ஆட்சிக்குக் கீழ் குஜராத் இருந்ததாலும் அதில் மிகப் புனிதம் வாய்ந்த பிரபாஸும் இருந்தததாலும்  சிவத்தை முன்னிறுத்திய கலாசாரம் மேலோங்கியது. சமஸ்க்ருத மொழி வளர்ச்சி பெற்றது. காசியிலும், நர்மதைக் கரையிலும் அஸ்வமேத யாகங்கள் நடைபெற்றன. இவ்வாறு நாக மன்னர்கள் ஹிந்துமதத்தின் புதிய எழுச்சிக்கு அஸ்திவாரம் நிறுவியதாக டாக்டர். ஜெயஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.     
ஸோமவித்யா என்ற நூலும், ஸ்காந்த மஹா புராணமும், ஸோமவார அமாவாசையன்று இங்கு உள்ள சரஸ்வதி நதி,மற்றும் கடல் நீராட்டையும், ஸோம நாதர் தரிசனத்தையும் மிகவும் புனிதம் வாய்ந்தவையாகக் குறிப்பிடுகின்றன.

மொகன்சாதாரோவில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களில் சிவன் ஹடயோகியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். ஸோம்நாத்தில் உள்ள லகுளீசர் சிற்பமும் இதையே காட்டுகிறது. பாரத நாடு முழுமைக்கும் பாசுபத வழிபாடு ஸோம்நாத் ஆலயத்தை மையமாகக் கொண்டே இருந்திருக்கிறது. பாசுபத ஆசார்யர்களுள் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த லகுளீசர் என்பவர் நர்மதைக் கரையில் உள்ள ப்ரோச் நகருக்கு அருகில் தோன்றியவர். சிவனது வடிவாகவே எண்ணப்பட்டவர். சோம சர்மா என்ற பாசுபத ஆச்சார்யர் தனது நான்கு மகன்களுடன் பிரபாஸ் தீர்த்தத்திற்கு வந்து தங்கி விட்டார். எனவே கி.பி. முதல் நூற்றாண்டிலேயே ஸோம்நாத்தில் முதல் கோயில் இருந்ததாகக் கொள்ளலாம்.

குப்தர்கள் ஆட்சிக்குப் பிறகு வலபி மன்னர்கள் ஆட்சியில் சோம்நாத்தில் இரண்டாவது கோயில் கட்டப்பட்டது ( கி.பி. 640-649) என்றும் அப்போது பழைய கல்வெட்டுக்கள் மறைந்து போயின என்றும் சரித்திர ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். முதல் கோயில் இருந்த இடத்திலேயே இரண்டாவது கோயிலின் கர்ப்பக் கிருகம் எழுப்பப்பட்டது. கடல் உள்ளே வராதபடி தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. கி.பி. 641-644 களில் சீன யாத்ரீகர் யுவான் சுவாங் சௌராஷ்ட்ரத்திற்கு வருகை தந்தார். நாட்டின் பிற பகுதிகளைப் போலவே இங்கும் கலாசாரம் விளங்கியதாகக் குறிப்பிடுகிறார்.

நான்காம் தாரசேன மன்னரது ஆட்சியில் இப்பகுதி பன்னாட்டுத்துறைமுகமாக விளங்கியது.கி.பி.722 ல்      
பாதாமியை ஆண்டு வந்த சாளுக்கியர்கள் கைவசம் வலபியர்களின் அரசு மாறியது. இதே சமயத்தில் தான்  ( கி.பி. 711 ) அரேபியர்களின் பார்வை பாரத நாட்டின் மீது விழுந்தது. சிந்து மாநிலம் வழியாக முன்னேறிய அரேபியப் படை மார்வார், ப்ரோச், உஜ்ஜைன்,மால்வா ஆகிய பகுதிகளை வென்று சௌராஷ்டிர மன்னரையும் வென்று தனது ஆளுகைக்குக் கொண்டு வந்தது. கி.பி. 725-726 ஆண்டுகளில் விதி நம் தேசத்தின் மீது விளையாடத் தொடங்கி விட்டது. “An Unforgettable National disaster “– K.M. Munshi  

4 comments:

  1. THANK YOU! Once again a very readable exposition of a narrative of mixed feelings to Sanatanic readers!

    ReplyDelete
  2. Excellent. We wish to visit the place once again after reading your email

    ReplyDelete
    Replies
    1. Thank you. This is the reply for which I have been waiting all these years. The posts were written with the prayer on the lips that at least one person must be inspired to visit the place. Thanking Almighty for the great blessing.

      Delete
  3. Religious discourses and articles can have a brief box for highlighting important kshetras,travel tips as an essential part. Repeated appeals are required to enhance awareness and commitment.

    ReplyDelete