Wednesday, March 20, 2019

ஜ்யோதிர் லிங்கங்கள் ஸோம் நாத்- பகுதி 5

இதே இடத்தில் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் கோயில் இருந்ததை அகழ்வாராய்வுகள் உறுதி செய்தன. பழைய கோயிலின் தூண்கள் பெரும்பாலும் கடல் அரிப்புக்கு ஆளாகி விட்டதால் அவற்றின் மேல் ஏற்றப்படும் சிகரத்தைத் தாங்கும் வலிமை அவற்றுக்கு இல்லை. தொல்பொருள் ஆராயச்சித்துறையும் இதனை உறுதி செய்தது. எனவே புதிய கோயிலை அவ்விடத்தில் கட்டுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. கோயிலின் வளர்ச்சிக்கு எதுவாக சுற்றிலும் உள்ள இடத்தை விரிவாக்கம் செய்வது என்று  தீர்மானிக்கப்பட்டது. 1949 ம் ஆண்டு ஜனவரி 23 ம் தேதியன்று சர்தார் படேல் உள்ளிட்ட பிரமுகர்கள் ஜாம்நகரில் கூடி டிரஸ்ட் ஒன்று ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டது. முன்ஷிஜி அவர்களைக் கொண்டு டிரஸ்டின் ஷரத்துக்கள் (deed)  வரையறுக்கப்பெற்றன.

அகில இந்திய சம்ஸ்க்ருத சர்வகலாசாலை ஒன்றை பிரபாஸில் அமைக்க வேண்டும் என்றும் யாத்திரீகர்கள் தங்கி ஓய்வெடுக்க வீடுகள் அமைக்க வேண்டும் என்றும் கிருஷ்ண பகவான் தனது மானுட உடலை நீத்த தேஹோத் சர்கா என்ற இடத்தை மீண்டும் புனரமைக்க வேண்டும் என்றும்,கோசாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் பல அம்சங்கள் அதில் அடங்கியிருந்தன. சர்தார் படேல் அவர்கள் அக்டோபர் 1949 ல் ட்ரஸ்டிகளை நியமனம் செய்தார். அரசாங்க ஒப்புதலுக்குப் பிறகு, ஸோம்நாத்தின் எழாவதுகோயில் கட்டுவதற்கான தாங்குதளக் (Foundation work) கட்டுமானப் பணிகள் 1950 ம் ஆண்டு மே மாதம் எட்டாம் நாளன்று துவங்கியது. வெள்ளியாலான நந்தி ஒன்று சுவாமிக்கு முன்னே அமைக்கப்பெற்றது.

“ This national urge was reflected when Sardar , with uncanny insight , saw that we should never genuinely feel that freedom had come, nor develop faith in our future, unless Somanatha was restored “
                                                                                        - K . M. Munshi

தான் எழுதிய “Somanatha the eternal shrine “என்ற புத்தகத்தை முன்ஷிஜி அவர்கள் சர்தார் படேல் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்தவராக,அதில் எழுதியுள்ளதைக் கீழே தருகிறோம்:

To Sardar Patel…. But for whom mine eyes would not have seen the shrine of Somanath rise again .”

 நேருவின் விருப்பம் வேறாக இருந்தபோதிலும் எல்லாம் வல்ல சோமநாத சுவாமியின் விருப்பப்படியே ராஷ்ட்ரபதி ராஜேந்திர பிரசாத் அவர்களின் முன்னிலையில் 1951 ம் ஆண்டு மே மாதம் பதினோராம் நாளன்று சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பெற்றுக் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாகச் செய்விக்கப்பட்டது. நாட்டின் பல பாகங்களிலிருந்து பக்தர்கள் இந்த அபூர்வ வைபவத்தைக் காண வந்திருந்தனர்.

திரிவேணி சங்கமம் 
காசி ராமேசுவரம் செல்வது போலவே ஹிந்துக்கள் தமது ஆயுளில் ஒரு முறையாவது ஸோம்நாத் ஜ்யோதிர் லிங்கத்தைத் தரிசிக்க வேண்டும். கார்த்திகை சோமவாரங்கள், மகாசிவராத்திரி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். திரிவேணி சங்கமத்தில் நீராடி,முன்னோருக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

ஜெய் ஸோம்நாத் - வெளியில் விற்கப்படும் படம் 
கோயிலுக்குச் சற்றுத் தள்ளியே நுழைவாயில் இருப்பதால் நாம் நமது உடைமைகளான கைப்பை, மொபைல் ,கேமெரா போன்றவற்றைப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்க வேண்டும். பாதுகாப்புப் பரிசோதனைகள் செய்யப்பட பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். நேராகச் சென்று சோமநாதரின் சன்னதியை அடைகிறோம். அந்த அருட்காட்சியில் நாம் லயிக்கிறோம். நூறு ஆண்டுகளுக்கு முன் பிறந்திருந்தால் இவ்வற்புதக் காட்சியைக் காணாமலேயே வாழ்க்கை முடிந்திருக்குமே என்று எண்ணும்போது கண்கள் பனிக்கின்றன. உயரமான ஜ்யோதிர் லிங்கத் திருமேனியைச் சுற்றிலும் வட்டமான ஆவுடையார். ஒளியில் மின்னும் பெருமானின் அழகில் மயங்கி நின்றாலும் அதிக நேரம் நிற்க முடியாமல் பின்னால் பக்தர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். பாணத்தின் மீது ஓம் என்று அழகாக சந்தனத்தால் வரைந்திருக்கிறார்கள். 

வெளியில் இருக்கும் ஒரே பிராகாரத்தில் நின்று கொண்டு சுவாமி விமானத்தை அண்ணார்ந்து பார்க்கிறோம். மீண்டும் ஒரு முறை உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்று ஆசை எழுகிறது. அவனைத் தரிசிக்க அருள் செய்தமைக்குக் கைமாறாக நம் வேறு என்ன செய்ய முடியும் ? எவ்வளவு பேருக்கு வாழ்க்கையில் இத்தரிசனம் கிடைக்கிறது? “ என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே “ என்ற திருஞான சம்பந்தரின் வாக்கு நினைவுக்கு வருகிறது.

இறைவா , மீண்டும் மீண்டும் உன்னைத் தரிசிக்கும் பாக்கியத்தை அருளுவாயாக என்று பிரார்த்தித்துக் கொண்டே வெளியே வருகிறோம். 

ஸோம்நாத்தில் தரிசிக்க வேண்டிய இடங்கள் பல உண்டு. அவை ஒவ்வொன்றும் சற்றுத் தள்ளியே அமைந்திருப்பதால் ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு அனைத்தையும் தரிசிக்கலாம். ஆட்டோகாரர் ஒரு கார்டு தருகிறார். அதில் சுமார் 12 இடங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. ஒவ்வொரு இடத்திற்கும் நாம் சென்ற ஆட்டோ டிரைவர் பொறுமையாக அழைத்துச் சென்று அவற்றைப் பற்றி விளக்கமும் அளித்தார். அவருக்கு நம் நன்றி உரியது.

புதிய சோமநாத் கோயிலைத் தரிசித்ததும் ஆட்டோவில் ஏறி பழைய சோம்நாத் ஆலயத்தை அடைகிறோம். சிவலிங்க மூர்த்தி ஆழத்தில் இருப்பதைக் காண்கிறோம்.

அடுத்ததாகத்  திரிவேணி சங்கமத்தை அடைகிறோம். அங்கு சரஸ்வதி உள்ளிட்ட மூன்று நதிகள் சங்கமித்துக் கடலோடு கலக்கின்றன. ரம்மியமான காட்சி. கரைகளை சுத்தமாக வைத்திருப்பதை நம்மவர்கள் போய்ப் பார்க்க வேண்டும். கடல் பறவைகள் , யாத்திரீகர்கள் தரும் தான்யங்களைக் கொத்த வட்டமடிக்கின்றன.

பாண கங்கா என்ற இடத்தில் கடலுக்குள் இரு சிவலிங்கங்களைத் தழுவியபடி அலைகள் திரண்டு வருவதைக் கண்டு மெய் சிலிர்க்கிறோம்.

ஆதி சங்கரர் 
இனி த்வாரகா சங்கர மடத்தை அடைகிறோம். அருமையான சூழலில் ஆதி சங்கரர், சிவ லிங்க பாணங்கள் ஆகியவற்றின் தரிசனம் கிடைக்கிறது.

சூரியனுக்கு ஓர் ஆலயம் இருப்பதைக் காண்கிறோம். காலத்தால் மிகப் பழமையான சூரிய பகவானது திருவுருவ தரிசனம் கிடைக்கிறது.
சூர்யா மந்திர் 

ஹிங்கஜ் மாதாஜி குகை என்ற இடத்துக்குச் செல்கிறோம். குகைக்குள்  உட்கார்ந்தபடியே சென்றால் தேவியின் தரிசனம் கிட்டுகிறது.

கீதா மந்திர் என்ற கோயிலுக்குள் கீதோபதேசக் காட்சியைத் தத்ரூபமாக அமைத்திருக்கிறார்கள். தூண்களில் பகவத் கீதை கல்வெட்டாக அமைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணனின் பாதுகை எனப்படும் இடத்தில் -- கிருஷ்ணாவதாரம் நிறைவு பெற்ற அதே இடத்தில் பகவானின் பாதுகைகளை நிறுவியிருக்கிறார்கள். இங்கு அமர்ந்து ,அமைதியாக தியானம் செய்ய வருவோர் இருக்கிறார்கள்.

இதைத்தவிரவும் லக்ஷ்மிநாராயண் மந்திர், பல்தேவ் குகை ஆகிய இடங்களுக்கும் நாம் சென்று வழிபடுகிறோம். ஊருக்கு வெளியில் 5 கி.மீ. தொலைவில் வேனேஷ்வர்  கோயிலும், பிட் பஞ்ஜன் மகாதேவர் கோயிலும், பாலகா தீர்த்தமும் உள்ளன.

சிவ சிந்தனைகளோடு நிரம்பித் ததும்பும் மனத்துடன் ஸோம்நாத் யாத்திரையை நிறைவு செய்கிறோம்.     

2 comments:

  1. Great concluding piece. As the mind is cleansed and filled with divine reflections, warm gratitude for Kanhaiyalalji and Vallabhbhai also joins them.

    ReplyDelete
  2. A nice travelogue covering the heavy legacy with useful tips for pilgrims.

    ReplyDelete