Wednesday, December 19, 2018

சத்தி நாயனார் செய்த " ஆண்மைத் திருப்பணி "

வரிஞ்சையூர் சிவாலயம் 
தேவாதி தேவனான பரமசிவனை  அழைக்காமல் பிற தேவர்களை வைத்துக்கொண்டு தக்ஷன் யாகம் செய்தான். சிவபெருமானுக்கு ஆகுதி தராமல் எந்த யாகமும் செய்யலாகாது. தனது வலிமையைக் காட்டவும், சிவனை அவமதிக்கவும் துணிந்த தனது தந்தையை தாக்ஷாயணி  எவ்வளவோ அறிவுறுத்தியும் கேளாத தக்ஷன், சிவ நிந்தையும் செய்தான். அதனைக் கேட்கப் பொ றாத அம்பிகை தனது செவிகளைப் பொத்திக்கொண்டு அந்த வேள்வி அழிய வேண்டும் என்றும் அதில் கலந்து கொண்ட பாவத்திற்காகத்  தேவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சாபமிட்டு விட்டு, சிவ நிந்தையைக் கேட்டதற்காகத் தனது உடலைத் அக்கினிக்கு இரையாக்கினாள் . இதனை அறிந்த சிவபெருமானது சினத்திலிருந்து வெளிப்பட்ட வீரபத்திரர் , தக்ஷனையும், அவனது வேள்வியில் கலந்து கொண்ட தேவர்களையும் தண்டித்தார் என்று ஸ்காந்த மகா புராணம் கூறுகிறது.

சிவனடியார்களை நிந்தித்தவர்களைத்   தண்டிக்க வேண்டும் என்ற உணர்வுடன் தொண்டாற்றியவர் சத்தி நாயனார். அறுபத்து மூவருள் ஒருவரான இவரை , சுந்தரமூர்த்தி சுவாமிகள், "  சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன் " என்று பாடுகிறார். தாக்ஷாயணி தேவியார்   சிவ நிந்தையைப்  பொறுக்காமல் சாபமிட்டாள் . ஆனால் சத்தி நாயனாரோ சிவனடியார்களை நிந்தித்தவர்களையும் தண்டித்தார். 

காவிரி பாயும் சோழ வளநாட்டில் வரிஞ்சையூர் என்ற தலத்தில் வேளாளர் குலத்தில் அவதரித்தவர் நம் நாயனார். திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியிலுள்ள கீழ் வேளூரிலிருந்து  கச்சனம் செல்லும் பாதையில் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள தேவூரிலிருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது வரிஞ்சையூர் என்னும் அழகிய கிராமம். தற்போது அதனை வரிஞ்சியூர் என்று அழைக்கிரார்கள். 


சத்தி நாயனார் சன்னதி 
வரிஞ்சையூரில் அவதரித்த சத்தி நாயனார், மாலயன் முதல் தேவர்கள் காண மாட்டாத சிலம்படிகளுக்கு ஆட்செய்து பக்தியில் சிறந்து விளங்கினார். அவரது இயற்பெயர் இன்னதென்று அறியவில்லை. சிவனடியார்களை யாராவது இகழ்ந்தால்,அவர்களது நாக்கினைத்  தண்டாயுதத்தால் வலிந்து, கத்தியினால் அதனை அரிந்து விட்டதால் அவருக்குச் சத்தியார் என்ற பெயர் வழங்கலாயிற்று. சத்தி என்ற  ஆயுதத்தை இதற்காக அவர் ஏந்தி வந்தார். 


சிவனடியாரை இகழ்ந்தோரை நாயனார் தண்டித்தல்- தாராசுரம் சிற்பம் 
இவரது சிவபக்தியைச்  சிறப்பிக்கும் வகையில் இத் தொண்டினைச் சேக்கிழார் பெருமான், " அன்புடன் ஓங்கு சீர்த் திருத் தொண்டு " என்றும், "  ஆண்மைத் திருப்பணி " என்றும் போற்றுவார். மேலும் இச் செயற்கரிய செயலைச் செய்த நாயனாரை, "  வீரத் திருத் தொண்டர் "  என்றும் சிறப்பிக்கிறார். இவ்வாறு சிவனடியார்களை இகழ்ந்தோரது நாவினை அறுத்துத் தூய்மை செய்த நாயனார், பொன்னம்பலத்தில் அனவரதமும் நடமாடும் பெருமானது கழலடியைச் சேர்ந்தார்  என்கிறது பெரிய புராணம். 

வரிஞ்சையூரில் உள்ள சிவாலயத்தில் சத்தி நாயனாருக்காக தனிச் சன்னதி அழகாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் கூப்பிய கரங்களுடன், சுவாமி சன்னதியை நோக்கியவாறு நாயனார் காட்சி அளிக்கிறார். அம்பிகை சன்னதி தெற்கு நோக்கியது. சுவாமி சன்னதியின் அர்த்த மண்டபத்தில் பெரிய புராணத்தில் வரும் சத்தி நாயனார் புராணத்தைக் கல்வெட்டில் பொறித்து வைத்திருக்கிறார்கள். ஒரு கால பூஜையே நடைபெறுகிறது. அர்ச்சகர் வெளியூரிலிருந்து வருகிறார்.  பிற ஊர்களில் இருந்து வரும் அடியார்களுக்கு உள்ளூர் அன்பர்கள் ஆலய தரிசனம் செய்து வைக்கிறார்கள். ஐப்பசி மாதப் பூச நக்ஷத்திரத்தன்று நாயனாரது குருபூஜை நடைபெறுகிறது. வெளியூர் அன்பர்கள் வந்து கலந்து கொள்கிறார்கள். மற்ற நாட்களில் உள்ளூர் அன்பர்கள் தங்களால் இயன்ற பணியைச் செய்து வருகிறார்கள் . 
தொலை தூரத்திலிருந்து இங்கு வரும் அன்பர்கள் குறைவாக இருந்தாலும் , தேவூர், கீழ்வேளூர், திருவாரூர், சிக்கல், நாகை ஆகிய ஊர்களிளிருந்தாவது அன்பர்கள் அடிக்கடி இங்கு தரிசிக்க வர வேண்டும். அதனால் ஆலயம் நன்கு பராமரிக்கப் படுவதுடன், அர்ச்சகரையும் ஊக்குவிக்க முடியும். முதிர்ந்த வயதிலும் வெளியூரிலிருந்து வந்து பூஜை செய்து விட்டுப் போகும் அர்ச்சகர் நலனைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை அல்லவா ? 

நாயன்மார்கள் அவதரித்த தலத்தை மக்கள் ஒருபோதும் கை விடலாகாது. இயன்ற வகையில் எல்லாம் அக்கோயில்களுக்கு நம்மாலான உதவியையும் பணியையும் செய்ய முன் வர வேண்டும். போக்குவரத்து வசதிகள் நிரம்ப உள்ள இக்காலத்திலும் நாம் புறக்கணித்தால்,  இனி வரும் சந்ததியர்க்கு முற்றிலுமாக அக்கறை இல்லாமல் போய் விடும். அதற்காகவாவது நாம் வழி நடத்திக் காட்ட வேண்டாமா ? நமது பண்டைய வரலாறுகளும், மரபுகளும், கலைச்  செல்வங்களும் பாதுகாக்கப் பட வேண்டாமா ? நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய நேரம் இது. 

Sunday, December 16, 2018

பெருமிழலைக் குறும்ப நாயனார் அவதாரத் தலம்


அண்மையில் கும்பகோணம் சென்றிருந்தபோது இந்த அதிசய நிகழ்ச்சி நடந்தது. பேருந்துக்காகக் காத்திருந்தபோது சுமார் நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஒருவர் என்னிடம் வந்தார். கரிய நிறம். ஒரு விவசாயியைப் போன்ற எளிய தோற்றம். கையில் ஒரு சிறிய பையை வைத்திருந்தார். என்னிடம் ஏதோ கேட்க வந்தவர் போலத் தோன்றியது. ஆனால் அவரோ தனது கைப்பைக்குள் கையை விட்டுத் துழாவி, ஒரு பொட்டலத்தை எடுத்தார். அதைப் பிரித்துவிட்டு அதிலிருந்த ருத்திராக்ஷ மணியை எடுத்துக் காட்டினார். அதைத்  தான் அணியலாமா என்று பார்த்துச் சொல்லவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த சந்தேகத்தை முன்பின் அறியாத என்னிடம் வந்து, அதுவும் பேருந்து நிற்கும் இடத்தில் ஏன் கேட்டார் என்று இன்னமும் புரியவில்லை. அம்மணியைக் கையில் வாங்கிப் பார்த்தேன். ஐந்து முகங்கள் கொண்ட மணி அது. அதை அவர் அணிந்து கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும், அவரது வீட்டிலுள்ளோரோ , சுத்தமாக இருந்தால் தான் அணியலாம் என்று கூறி விட்டதாகவும் சொல்லி வருத்தப்பட்டார். 

வயிறு அசுத்தமானவற்றை ஏற்றுக்கொள்கிறது என்பதால் அவ்வாறு கூறினார்கள் போலிருக்கிறது. ஆனாலும் அவரது உள்ளத்தூய்மையை நோக்கும் போது ஒன்று சொல்லத் தோன்றியது.    அம்மணியைக் கண்டத்தில் (கழுத்தில்) அணிவதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.  " அது அணிபவரைத் தூய்மைப் படுத்தவே செய்யும். அணிந்தவுடன் வீட்டார் விரும்புவதுபோலவே தூய சைவ உணவை மட்டுமே உண்ணத் தொடங்குவீர்கள் என்று நம்புகிறேன் " என்று கூறினேன். அந்த நபரும் சமாதானம் அடைந்தார். 

அடுத்தபடியாக அவர் கூறிய செய்தியே என்னைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது. அவர் கூறியதாவது : "  நான் திருப்பனந்தாள் செல்லும் வழியில் உள்ள கோயிலாச்சேரியில் வசிக்கிறேன். அங்கு செல்லும் பேருந்துக்காகவே காத்துக் கொண்டு இருக்கிறேன். எங்கள் ஊரில்தான் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான பெருமிழலைக் குறும்ப நாயனார் அவதாரம் செய்தார். நீங்கள் அந்தக் கோயிலை அவசியம் தரிசிக்க வேண்டும். திருக்குளத்தை ஒட்டிய சாலையில் நடந்தால் அருகாமையிலேயே கோயில் இருக்கிறது " என்றார். 

மிழலைக் குறும்பர் அவதரித்த பதி பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. " மிழலை நாட்டுப் பெருமிழலை " என்று சேக்கிழாரும் ,  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ளது என்று சிலரும், திருவீழி மிழலை என்று சிலரும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் கோவிலாச்சேரியே மிழலை என்பதை அன்று தான் கேள்விப்பட முடிந்தது. இருப்பினும் அவரிடம் வினா எழுப்பினேன்,                           " நாயனாருக்கு விக்கிரகம் இருக்கிறதா " என்று   " இருக்கிறது " என்று உடனடியாகப் பதில் வந்தது. அதோடு நான் ஏற வேண்டிய பேருந்தும் வந்து விட்டதால் பேச்சைத் தொடரமுடியவில்லை. விடை பெற்றுக்கொண்டு பேருந்தில் ஏறி விட்டேன். இன்று வரை அவரை மீண்டும் பார்க்கவில்லை. ஆனால் எப்படியாவது ஒரு நாள் கோயிலாச்சேரிக்குச் சென்று சிவ தரிசனமும் நாயனார் தரிசனமும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது. 

 " மிழலை நாட்டுப் பெரு மிழலை" என்றே இவர் அவதரித்த பதியைக் குறிப்பிடுகிறது பெரிய புராணம். சிவபெருமானுக்கு அடிமை செய்த மிழலைக் குறும்பர் சிவனடியார்களுக்கு அமுதும் நிதியமும் அளித்துப் பிறவிப் பயனைப் பெற்றார். திருவெண்ணெய் நல்லூரில் இறைவனால் ஓலை காட்டி ஆட்கொள்ளப் பெற்ற நம்பியாரூரராகிய சுந்தரரைத் தனது குருவாகக் கொண்டு அவரது பாதம் நினைக்கும் நியமத்தில் தலை சிறந்து நின்றதால் அவருக்கு அணிமா முதலிய சித்திகள் எளிதில் கைவரப் பெற்றன. மாலறியா,நான்முகனும் காணா மலரடிகளை அடையும் உபாயம் இதுவே எனத் தெளிந்து அந்நெறியில் நின்றார். 

ஒரு ஆடி மாதத்து சுவாதி நன்னாளன்று திருவஞ்சைக்களத்தில் இருந்த சுந்தரர்  கயிலைக்குச் செல்ல இருப்பதை யோகத்தால் முன்கூட்டியே அறிந்தார் மிழலைக் குறும்பர். சுந்தரரைப் பிரிந்து  கண்ணின் மணியை இழந்தவரைப் போல வாழேன் என்று துணிந்தவராய் , அவருக்கு முன்பாகச் சிவன் தாளை இன்றே சென்று சேர்வேன் என்று எண்ணி யோகத்தில் ஆழ்ந்தார். ஆடி சித்திரை  நன்னாளன்று, பிரமநாடி வழியாகக் கபாலம் திறக்கப்பெற்றுக் கயிலை நாதனின் கழலடி அடைந்தார். இந்நிகழ்வை திருத்தொண்டர் திருவந்தாதி பாடிய நம்பியாண்டார் நம்பிகள் எடுத்துப் போற்றும் பாடலைக் காண்போம்: 

"  சிறை நன் புனல் திருநாவலூராளி செழும் கயிலைக்கு

 இறை நன்கழல் நாளை எய்தும் இவன் அருள் போற்ற  இன்றே 

 பிறை நன் முடியன் அடி அடைவேன் என்று உடல் பிரிந்தான் 

 நறை மலர்த் தார் மிழலைக் குறும்பன் எனு நம்பியே "

கும்பகோணத்திலிருந்து சோழபுரம் வழியாகத் திருப்பனந்தாள் செல்லும் நெடுஞ்சாலையில் இருப்பது கோவிலாச்சேரி என்ற சிறிய கிராமம். பெருவழியை ஒட்டிய திருக்குளத்தை ஒட்டித் திரும்பிச் சிறிது தூரம் சென்றவுடனேயே திருக்கோயில் கண்ணுக்குத் தெரிகிறது. திருப்பணிகள் செய்யப்பெற்றுப் பல  வண்ணங்களுடன் மிளிர்கிறது. ஆனால் ஒரு கால பூஜையே நடைபெறுகிறது. பக்கத்திலுள்ள கல்லூர் என்ற ஊரிலிருந்து அர்ச்சகர் வந்து பூஜை செய்கிறார். 

இத்திருக்கோயில் ஒரே ப்ராகாரத்துடன் விளங்குகிறது. முன் மண்டபத்தைக் கடந்து , மகா மண்டபத்தில் நுழைந்தவுடன்  கிழக்கு நோக்கிய மூலவரான கயிலாய நாதரையும், தெற்கு நோக்கிய காமாக்ஷி அம்பிகையையும் தரிசிக்கிறோம். மகாமண்டபத்தில் சுவாமியை நோக்கியவராகக்  கூப்பிய கரங்களுடன் பெரு  மிழலைக் குறும்ப நாயனார்  காட்சியளிக்கிறார். ஆடி சித்திரையன்று இவரது குருபூஜை நடைபெறுகிறது. வெளிப் பிராகாரத்தை வலம் வந்து ஆலய தரிசனத்தை நிறைவு செய்கிறோம்.  

குடந்தைக்கு அண்மையில் உள்ள இக்கோயிலை அன்பர்கள் தரிசிக்க வேண்டும். எவ்வளவு பேருக்கு இப்படி ஒரு புராணச் சிறப்பு வாய்ந்த கோயில் இருக்கிறது என்று தெரியும் ? ஒருவேளை தெரிந்தாலும் நேரில் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அந்த ஈசனே தோற்றுவிக்க வேண்டும்.  " ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே "  என்று மாணிக்க வாசகர் அருளியது சத்தியமான வார்த்தை.