Wednesday, December 19, 2018

சத்தி நாயனார் செய்த " ஆண்மைத் திருப்பணி "

வரிஞ்சையூர் சிவாலயம் 
தேவாதி தேவனான பரமசிவனை  அழைக்காமல் பிற தேவர்களை வைத்துக்கொண்டு தக்ஷன் யாகம் செய்தான். சிவபெருமானுக்கு ஆகுதி தராமல் எந்த யாகமும் செய்யலாகாது. தனது வலிமையைக் காட்டவும், சிவனை அவமதிக்கவும் துணிந்த தனது தந்தையை தாக்ஷாயணி  எவ்வளவோ அறிவுறுத்தியும் கேளாத தக்ஷன், சிவ நிந்தையும் செய்தான். அதனைக் கேட்கப் பொ றாத அம்பிகை தனது செவிகளைப் பொத்திக்கொண்டு அந்த வேள்வி அழிய வேண்டும் என்றும் அதில் கலந்து கொண்ட பாவத்திற்காகத்  தேவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சாபமிட்டு விட்டு, சிவ நிந்தையைக் கேட்டதற்காகத் தனது உடலைத் அக்கினிக்கு இரையாக்கினாள் . இதனை அறிந்த சிவபெருமானது சினத்திலிருந்து வெளிப்பட்ட வீரபத்திரர் , தக்ஷனையும், அவனது வேள்வியில் கலந்து கொண்ட தேவர்களையும் தண்டித்தார் என்று ஸ்காந்த மகா புராணம் கூறுகிறது.

சிவனடியார்களை நிந்தித்தவர்களைத்   தண்டிக்க வேண்டும் என்ற உணர்வுடன் தொண்டாற்றியவர் சத்தி நாயனார். அறுபத்து மூவருள் ஒருவரான இவரை , சுந்தரமூர்த்தி சுவாமிகள், "  சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன் " என்று பாடுகிறார். தாக்ஷாயணி தேவியார்   சிவ நிந்தையைப்  பொறுக்காமல் சாபமிட்டாள் . ஆனால் சத்தி நாயனாரோ சிவனடியார்களை நிந்தித்தவர்களையும் தண்டித்தார். 

காவிரி பாயும் சோழ வளநாட்டில் வரிஞ்சையூர் என்ற தலத்தில் வேளாளர் குலத்தில் அவதரித்தவர் நம் நாயனார். திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியிலுள்ள கீழ் வேளூரிலிருந்து  கச்சனம் செல்லும் பாதையில் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள தேவூரிலிருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது வரிஞ்சையூர் என்னும் அழகிய கிராமம். தற்போது அதனை வரிஞ்சியூர் என்று அழைக்கிரார்கள். 


சத்தி நாயனார் சன்னதி 
வரிஞ்சையூரில் அவதரித்த சத்தி நாயனார், மாலயன் முதல் தேவர்கள் காண மாட்டாத சிலம்படிகளுக்கு ஆட்செய்து பக்தியில் சிறந்து விளங்கினார். அவரது இயற்பெயர் இன்னதென்று அறியவில்லை. சிவனடியார்களை யாராவது இகழ்ந்தால்,அவர்களது நாக்கினைத்  தண்டாயுதத்தால் வலிந்து, கத்தியினால் அதனை அரிந்து விட்டதால் அவருக்குச் சத்தியார் என்ற பெயர் வழங்கலாயிற்று. சத்தி என்ற  ஆயுதத்தை இதற்காக அவர் ஏந்தி வந்தார். 


சிவனடியாரை இகழ்ந்தோரை நாயனார் தண்டித்தல்- தாராசுரம் சிற்பம் 
இவரது சிவபக்தியைச்  சிறப்பிக்கும் வகையில் இத் தொண்டினைச் சேக்கிழார் பெருமான், " அன்புடன் ஓங்கு சீர்த் திருத் தொண்டு " என்றும், "  ஆண்மைத் திருப்பணி " என்றும் போற்றுவார். மேலும் இச் செயற்கரிய செயலைச் செய்த நாயனாரை, "  வீரத் திருத் தொண்டர் "  என்றும் சிறப்பிக்கிறார். இவ்வாறு சிவனடியார்களை இகழ்ந்தோரது நாவினை அறுத்துத் தூய்மை செய்த நாயனார், பொன்னம்பலத்தில் அனவரதமும் நடமாடும் பெருமானது கழலடியைச் சேர்ந்தார்  என்கிறது பெரிய புராணம். 

வரிஞ்சையூரில் உள்ள சிவாலயத்தில் சத்தி நாயனாருக்காக தனிச் சன்னதி அழகாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் கூப்பிய கரங்களுடன், சுவாமி சன்னதியை நோக்கியவாறு நாயனார் காட்சி அளிக்கிறார். அம்பிகை சன்னதி தெற்கு நோக்கியது. சுவாமி சன்னதியின் அர்த்த மண்டபத்தில் பெரிய புராணத்தில் வரும் சத்தி நாயனார் புராணத்தைக் கல்வெட்டில் பொறித்து வைத்திருக்கிறார்கள். ஒரு கால பூஜையே நடைபெறுகிறது. அர்ச்சகர் வெளியூரிலிருந்து வருகிறார்.  பிற ஊர்களில் இருந்து வரும் அடியார்களுக்கு உள்ளூர் அன்பர்கள் ஆலய தரிசனம் செய்து வைக்கிறார்கள். ஐப்பசி மாதப் பூச நக்ஷத்திரத்தன்று நாயனாரது குருபூஜை நடைபெறுகிறது. வெளியூர் அன்பர்கள் வந்து கலந்து கொள்கிறார்கள். மற்ற நாட்களில் உள்ளூர் அன்பர்கள் தங்களால் இயன்ற பணியைச் செய்து வருகிறார்கள் . 
தொலை தூரத்திலிருந்து இங்கு வரும் அன்பர்கள் குறைவாக இருந்தாலும் , தேவூர், கீழ்வேளூர், திருவாரூர், சிக்கல், நாகை ஆகிய ஊர்களிளிருந்தாவது அன்பர்கள் அடிக்கடி இங்கு தரிசிக்க வர வேண்டும். அதனால் ஆலயம் நன்கு பராமரிக்கப் படுவதுடன், அர்ச்சகரையும் ஊக்குவிக்க முடியும். முதிர்ந்த வயதிலும் வெளியூரிலிருந்து வந்து பூஜை செய்து விட்டுப் போகும் அர்ச்சகர் நலனைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை அல்லவா ? 

நாயன்மார்கள் அவதரித்த தலத்தை மக்கள் ஒருபோதும் கை விடலாகாது. இயன்ற வகையில் எல்லாம் அக்கோயில்களுக்கு நம்மாலான உதவியையும் பணியையும் செய்ய முன் வர வேண்டும். போக்குவரத்து வசதிகள் நிரம்ப உள்ள இக்காலத்திலும் நாம் புறக்கணித்தால்,  இனி வரும் சந்ததியர்க்கு முற்றிலுமாக அக்கறை இல்லாமல் போய் விடும். அதற்காகவாவது நாம் வழி நடத்திக் காட்ட வேண்டாமா ? நமது பண்டைய வரலாறுகளும், மரபுகளும், கலைச்  செல்வங்களும் பாதுகாக்கப் பட வேண்டாமா ? நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய நேரம் இது. 

No comments:

Post a Comment