Saturday, April 13, 2019

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் ஸ்ரீ சைலம் 3 ம் பகுதி

ஸ்ரீ  சைலத்தைப் பல நூல்கள்  புகழ்ந்து பேசுகின்றன. ஸ்கந்த மகா புராணத்தில் வரும் ஸ்ரீ சைல காண்டம், இத்தலத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. மேலும் மகாபாரத வன பர்வம், பத்ம புராண உத்தர காண்டம், மார்க்கண்டேய புராணம், சிவ புராண ருத்ர ஸம்ஹிதை, பாகவத பத்தாம் ஸ்கந்தம்,ஆதித்ய புராண சூத ஸம்ஹிதை,, ரச ரத்னாகர ரசாயன காண்டம், ஆதி சங்கரரின் சிவானந்த லஹரி, சோமேஸ்வரரின் கதா சரித்ர சாகரம், மாலதி மாதவம், பாணபட்டரின் காதம்பரி, ரத்னாவளி, ஆகியவை  இத்தலத்தின் மகிமையைக்  கூறும் நூல்களாகும். தேவார மூவரான திருஞான சம்பந்தர்,திருநாவுக்கரசர்,சுந்தரர்  ஆகியோர்  இத்தலத்தின் மீது திருப் பதிகங்கள் பாடி அருளியுள்ளார்கள். 

கி.பி. 1 ம் நூற்றாண்டில் இத்தலம் சாத வாகனர்களால் சிரிதான்  என்று வழங்கப்பட்டது. புலமாவி என்ற சாதவாகன மன்னனின் நாசிக் கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகிறது. சாதவாகனர்களின் தோழர்களான இக்ஷுவாக்கள் இதனை ஸ்ரீ பர்வதம் என்று அழைத்தார்கள். பின்னர் நான்காம் நூற்றாண்டில் சிம்ம வர்ம பல்லவன் இப்பகுதியைத் தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டான். த்ரிலோசனபல்லவன் என்பவன் ஸ்ரீ சைலக் காட்டின் ஒரு பகுதியைப் புனரமைத்து அந்தணர்களை அங்கு இருத்தினான். இப்பணியைப் பின்னர் பல்லவர்களை வென்ற சோழர்கள் செய்து முடித்தார்கள். நான்காம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த விஷ்ணுகுண்டியர்கள் இப்பகுதியை ஆண்டனர். அப்போது ஸ்ரீ சைல ஆலயம் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டது. 

பின்னர்  கடம்பர்கள் இதனைச்  சிறிது காலம் ஆண்டனர்.  ஆறாம் நூற்றாண்டில் கரிகால் சோழனின் சந்ததியினர் கடப்பா, கர்னூல் பகுதிகளை ஆண்டனர். பின்னர் கி.பி. 973 வரை ராஷ்ட்ரகூடர்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனர். மீண்டும் சாளுக்கியர்களது ஆட்சி மலர்ந்தபோது, சோழர்கள்  அவர்களை வென்றனர். 12 ம் நூற்றாண்டில் ஸ்ரீசைலம் காகதீயர்களின் வசமாயிற்று.  பிரதாப ருத்ரன் என்பவர் தன்  மனைவியோடு இங்கு வந்து மல்லிகார்ஜுனருக்குத்  துலாபாரம் தந்ததாக வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. கி.பி. 1323 ல்  காகதீய அரசன் முகமதியர்களால் சிறை பிடிக்கப்பட்டு டெல்லிக்குக்  கொண்டு செல்லும் வழியில் இறந்தான். காகதீய அரசும் அதோடு வீழ்ந்தது. 

ஆந்திரத்தின் 72 சிற்றரசர்கள் முகமதியர்களோடு போரிட்டு  மீண்டும் இந்து ராஜ்ஜியங்களை நிறுவினார்கள். இவர்களுள் அத்தங்கி வேமா ரெட்டி என்பவர் குறிப்பிடத்தக்கவர். அவரது குல தெய்வம் திரிபுராந்தகத்தில் உள்ள மூர்த்தியே ஆவார். ப்ரோலய ரெட்டி என்பவர் தன்னை  ஸ்ரீசைல மல்லி கார்ஜுனரின்  பாத சரண தாசன் என்று சொல்லிக் கொண்டார். ஸ்ரீ சைல மலை ஏறி வரும் பக்தர்களுக்காக ரெட்டி மன்னர்கள் படிக்கட்டுக்களை அமைத்ததாக சாசனங்கள் மூலம்  அறிகிறோம். ஸ்ரீ சைலத்தில் பாதாள கங்கை எனப்படும் கிருஷ்ணா நதிக்குச் செல்வதற்குப்  படிக்கட்டுக்கள் கட்டப்பட்டன.  அன மேவா ரெட்டியின் ஆட்சிக்கு ஸ்ரீ சைலம், மகா நந்தி பகுதிகள் உட்பட்டன. விஜயநகரப் பேரரசு இப்பகுதியை வசமாக்கிக் கொண்ட பிறகு, ஆலய முன் மண்டபம், தெற்கு கோபுரம்  ஆகியவை கட்டப்பெற்றன. நிறைய தானங்கள் அளிக்கப் பட்டன. கிருஷ்ண தேவ ராயர் காலத்தில் கிழக்கு கோபுரமும் ரத வீதியில் மண்டபங்களும் கட்டப்பட்டன. விமானத்திற்குத் தங்க முலாம் பூசப்பட்டது. பிற்காலத்தில் அனேக பக்தர்கள் மூலம்  கொடிமரம், நந்தவனம், கோயில் மணி ஆகியவை அளிக்கப்பட்டன. 

கி.பி. 1674 ல் சத்ரபதி சிவாஜி மகாராஜ்  இக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். பிற்காலத்தில் ஸ்ரீ சைல ஆலயத்தின் மீது படையெடுப்பு நிகழ்ந்தபோது மராட்டிய வீரர்கள் கடைசி வீரன் உள்ளவரை போரிட்டதாகக் கூறுவர். அவர்களது சந்ததியினர் இன்றும் ஆண்டுக்கு ஒரு முறை  தங்களது முன்னோரது நினைவாக இங்கு வருகை தந்து வழிபடுகிறார்கள். 

முகலாய அரசன் ஔரங்கசீப்பின்  ஆட்சிக்கு உட்பட்ட பிறகு இப்ராஹீம் கான் என்பவன் அனுதாப அடிப்படையில் ஸ்ரீ சைல ஆலய சொத்துக்களை மீண்டும் ஒப்படைத்தான். இப்பிரதேசம் ஹைதராபாத் நவாபுகளின் வசமான பிறகு இச்சொத்துக்கள் ஸ்ருங்கேரி சங்கர மடத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் நவாப் தனது அரசாட்சிக்கு உட்பட்ட பகுதிகளைக் கிழக்கிந்திய கம்பெனிக்குக் கொடுத்து விட்டான். அதில் ஸ்ரீசைல தேவஸ்தானமும் அடங்கும். ஆங்கிலேயர்கள் , இவ்வாலய நிர்வாகத்தைப் புஷ்பகிரி பீடத்திடம் ஒப்படைத்தனர். ஆனால் நிர்வாகம் சரிவர செயல் படாது போகவே, ஆலயம் மிகவும் பழுதடைந்தது. 1949 வரை ஒரு குழுவின் பொறுப்பில் இருந்த இவ்வாலய நிர்வாகத்தை  , அறநிலையத் துறை மேற்கொண்டது. 

மகா சிவராத்திரி தேர்த் திருவிழா 
ஸ்ரீ சைல ஆலயம்: சுமார் இருபது அடி உயர  மதில் சுவற்றின்  வெளிப்புறம் , சிற்பங்கள் பல செதுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் , பார்வதி திருமணம், நடராஜர், கஜ சம்ஹாரம், பாற்கடல் கடைதல் , கண்ணப்பர் சிவபூஜை, கணபதியின் சிவபூஜை, பிக்ஷாடனர், கணபதியின் நாட்டியத்திற்கு அனுமன் குழல் ஊதுதல், மகிஷாசுர மர்த்தனி , லக்ஷ்மி கணபதி முதலிய மூர்த்திகள் இவற்றுள் சிலவாகும். பிராகாரத்தின் எட்டுத் திக்குகளிலும் அஷ்ட திக் பாலகர்களைக் காண்கிறோம். 
ஆலயத்தின் கிழக்குக் கோபுரம் கிருஷ்ண தேவராயரால் 15  ம்  நூற்றாண்டில் கட்டப்பட்டது. வடக்குக் கோபுரத்தை  கி.பி. 1677 ல்  சத்ரபதி சிவாஜி கட்டினார். பின்னர் மேற்கு கோபுரம், 1966 ல் கட்டப்பட்டது. மல்லிகார்ஜுன சுவாமியின் விமானம் கி.பி. 1230 ம் ஆண்டு காகதீய கணபதி ராஜனின் சகோதரி மைலம்ம தேவியால் கட்டப்பட்டது. கருவறையில் உள்ள ஜ்யோதிர் லிங்க மூர்த்தி சிறிய அளவில் காணப்பட்டாலும் கீர்த்தி மிகவும் பெரிது. விசேஷ நாட்கள் தவிர, அதிக கூட்டம் இல்லாதபோது சுவாமியைத் தீண்ட அனுமதிக்கிறார்கள். 

ஆலயத்தின் முன்புறம் உள்ள ரங்க மண்டபத்தை  விஜய நகர அரசர் இரண்டாம் ஹரிஹர ராயர் கட்டினார். இதனுள்  ரத்ன கர்ப்ப கணபதி, பத்ர காளி, வீரபத்திரர் ஆகியோரைத் தரிசிக்கிறோம். இம்மண்டபத்தின் முன் புறம் உள்ள வீர மண்டபம், 38 தூண்களோடு கட்டப்பட்டது. ஆனால் தற்போது 16 தூண்களே உள்ளன. நந்தி மண்டபத்தில் நந்திக்கு ( சென கல பசவண்ணா ) கடலை மாலை சமர்ப்பிக்கப்படுகிறது. நந்தியம்பெருமானின் திருவுருவம் காண்போரைக் கவர வல்லது. ஆலய வடகிழக்குப் பகுதியில் சப்த மாதர்களைத் தரிசிக்கலாம். இங்குள்ள ஆழ் கிணறு மேற்கூரையோடு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல மற்றோர் ஆழ்கிணறு சுவாமி சன்னதிக்குத் தென்புறம் உள்ளது. சப்த மாதா மண்டபத்தை ஒட்டிய ஆழ்கிணறு, விஷ்ணு குண்டம் எனப்படுகிறது. சுவாமி சன்னதிக்கு வடகிழக்கில் அன்னபூர்ணா சன்னதி உள்ளது. இங்கு யாத்ரீகர்களுக்கு அன்னதானம் செய்யப்படுகிறது. 

சிவபெருமானின்  மூர்த்தங்களான  பவ, சர்வ, ஈசான்ய, பசுபதி, ருத்ர, உக்ர , பீம, மகாதேவ  லிங்க வடிவங்களையும் தரிசிக்கிறோம். இவற்றோடு, ஜல லிங்கம், சூர்ய லிங்கம்,சந்த்ர லிங்கம், வாயு லிங்கம், அக்னி லிங்கம்,ஆகாச லிங்கம், மோக்ஷ லிங்கம் ஆகியவற்றையும் தரிசிக்கிறோம். குமார ஸ்வாமியான  முருகன் ஆறு திருமுகங்களோடு தரிசனம் தருகிறார். இவரது சன்னதியை ஒட்டியுள்ள மண்டபத்தை ஆஸ்தான மண்டபம் என்றும் அலங்கார மண்டபம் என்றும் அழைப்பார்கள். இதனுள்  மல்லிகர்ஜுனரின் பக்தைகளான அக்கமஹா தேவி, ஹேமா ரெட்டி மல்லம்மா  ஆகியோரின் திருவுருவச் சிலைகளைக் காணலாம். சுவாமி சன்னதிக்குப் பின்புறம் படி ஏறிச் சென்றால் பிரமராம்பிகையின் சன்னதியை அடையலாம். இந்த அம்பிகையின் சன்னதி,  சக்தி பீடங்களுள் ஒன்று.இதனருகில் சீதா தேவி பிரதிஷ்டை செய்த சஹஸ்ர லிங்கம் உள்ளது. அம்பாள் சன்னதிக்கு வடகிழக்கிலுள்ள யாகசாலையில் பௌர்ணமி தினங்களில் சண்டி ஹோமம் செய்கிறார்கள்.

மல்லிகார்ஜுனரின் பின்புறம் ஸஹஸ்ர லிங்க சன்னதி உள்ளது. ராமபிரானால்  பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பர். சுவாமிக்குக் கிழக்கில், அத்தி, அரசு, வன்னி மரங்கள் மூன்றும் இணைந்து காணப்படுகின்றன. தத்தாத்ரேயர் இதனடியில் தவம் புரிந்ததாகக் கூறுவார்கள். 

அருகிலுள்ள ஆலயங்கள்: கோயிலைத் தரிசித்துவிட்டு வெளியில் வந்தால், வீரபத்திரர், கங்காதர மூர்த்தி, கிரிஜா சங்கரர், பசுபதிநாதர் ஆகிய மூர்த்திகளையும், கங்கா- பவானி ஸ்நான கட்டம், கோகர்ண தீர்த்தம், சிவாஜி கோபுரத்தின் அருகிலுள்ள சந்த்ர குண்டம், பாதாள கங்கை, ஆகிய தீர்த்தங்களும், 2 கி.மீ. தொலைவில் சாட்சி கணபதி ஆலயமும் உள்ளன. ஸ்ரீ சைலத்தை தரிசித்ததாகக் கைலாயத்தில் சாட்சி சொல்வதல் இந்தக் கணபதியை சாட்சி கணபதி என்கிறார்கள்.  

இந்த ஆலயத்திற்கு அருகில் உள்ள பள்ளத்தாக்கில் பஞ்ச தாரைகளாக நீர் வீழ்ச்சிகளும், ஆதி சங்கரர் தவம் செய்த இடம் என்று ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்கள் காட்டி அருளிய இடமும் உள்ளன. ஒரு காலத்தில் ஸ்ரீ சைலம் வரை மலை ஏறி வர இயலாதவர்கள் ஸ்ரீ சைல பர்வதங்களிலேயே மிக உயரமான (  2830 அடிகள் ) சிகரேசுவரத்தைத்  தரிசித்தபடியே மல்லிகார்ஜுனசுவாமியைத் தியானிப்பார்கள்.  இங்கிருந்தபடியே, ராமபிரான் , மல்லிகார்ஜுனரைத் தரிசித்ததாகச் சொல்வர்.  8 கி.மீ  தொலைவிலுள்ள இச்சிகரத்தின் மேலுள்ள வீர சங்கர சுவாமிக்குப் பக்தர்கள் செக்கில் எள்ளை  ஆட்டி  அதனைப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து நந்தியின் கொம்புகளுக்கு     இடையிலிருந்து மல்லிகார்ஜுன ஆலய சிகரத்தைத் தரிசிக்கிறார்கள். பாதாள கங்கையில் கலக்கும் பீமன்குள  ஊற்றுக்கு அருகில் பீமேசுவர சுவாமி ஆலயம் உள்ளது. பாதாள கங்கையிலிருந்து பரிசிலில் கிருஷ்ணா நதியில் சென்று அக்க மகா தேவி தவம் செய்த குகையை அடையலாம். அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள இஷ்ட காமேசுவரி ஆலயத்தையும் பக்தர்கள் பிரார்த்தனைத் தலமாக வழிபடுகிறார்கள். பரிசிலில் அக்கரை  அடைந்தபின், தத்தாத்ரேயர்  தவம் செய்த கதலீ  வனத்தைக் காணலாம். தியானம் செய்வதற்கேற்ற அமைதியான இடம் இது. 

அடர்ந்த காடுகளிடையே அமைந்த அற்புதத் தலம் ;  அமைதி தேடுவோர்க்கு  ஏற்ற சூழல். புண்ணிய மூர்த்தியைத் தாங்கும் புண்ணிய சிகரங்கள்; கண்ட மாத்திரத்திலேயே பிறவிப்பிணியை நீக்கிடும் தெய்வீக மலைத் தொடர்கள்; இவை அனைத்தும் ஒருங்கே காட்சி  அளிக்கும்   ஸ்ரீசைல   பர்வதத்தை வாழ்நாளில் ஒரு முறையாவது அன்பர்கள் சென்று தரிசித்து நலம் பெற வேண்டும்.        
  

Friday, April 5, 2019

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் ஸ்ரீ சைலம் பகுதி 2

மலைகளுக்கு நடுவில் வளைந்து செல்லும் பாதை 
கர்நூலிலிருந்து  ஸ்ரீசைலம்  செல்லும் வழியில் மலைப் பாதைகளில் பயணிக்கிறோம். இரண்டு பக்கமும் மூங்கில் மரக்காடுகள். மைல் கணக்கில் அவை நம்மைத்  தொடர்ந்து வருகின்றன. இத்தனை அடர்ந்த மூங்கில் காடுகளை  அதுவரையில்  பார்த்திராததால், வியப்பின் எல்லைக்கே செல்ல வேண்டி இருந்தது.  அவ்வப்போது  தோன்றும் குரங்குக் கூட்டங்கள்  நம்மைக் குதூகலிக்க வைக்கின்றன. புலி, மான் ஆகியவற்றின்  படங்களை வைத்திருக்கிறார்கள்.  நமது கண்ணில் மட்டும்  அவை தென்படாதது துரதிருஷ்டமே. ஒருவேளை இரவில் அவற்றின் நடமாட்டம் அதிகமாக இருக்கலாம்.  மகாசிவராத்திரியை முன்னிட்டுப் பல பக்தர்கள்  தங்களது தலைகளில் இருமுடி சுமந்து கொண்டு  நடந்தே மலை ஏறிச் செல்வதைப் பார்க்கிறோம்.  ஒருவேளை அவர்கள் வீர சைவர்களாக இருக்கலாம். பிரார்த்தனை செய்துகொண்டு  இப்படி நடந்தே  வருகிறார்கள்.  காட்டுப் பாதையாக இருப்பதால் திருடர்கள் பயமும் உண்டு என்று ஒருவர்  கூறினார்.  திருடர்களுக்கோ, கொடிய விலங்குகளுக்கோ  அஞ்சாமல்  கால் நடையாகவே மலை ஏறும்  பக்தர்களை எப்படிப் புகழ்வது ? 

வழியில் கடக்கும் ஒரு ஆறு 
ஸ்ரீ சைலத் தலபுராணம் தரும் செய்திகளையும் நாம் இங்கே சிந்திக்கலாம். முன்  ஒரு காலத்தில் சிலாத முனிவர் என்பவருக்கு இரு குமாரர்கள் சிவனருளால் பிறந்தனர். அவர்கள்  நந்தி என்றும் பர்வதன் என்றும்  அழைக்கப்பட்டனர். அவ்விருவரும் வயது வந்தவுடன் சிவனை நோக்கித் தவம் புரிந்தனர்.  தான் மலை வடிவாக ஆகி அதன் மீது இறைவன் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்ற வரத்தை சிவபெருமானிடம் நந்தி பெற்றார். நந்தி பர்வதமாக ஆன இடமே, ஸ்ரீ சைலத்திலிருந்து சுமார்   200  கி.மீ.தொலைவில் உள்ள நந்தியால் என்ற புனிதமான தலம் .  

அடர்ந்த காட்டுப் பிரதேசம் 
பர்வதன் பெருமானிடம் ஒரு வரம் வேண்டிப் பெற்றான். அதாவது, பர்வத மலையாகத் தான் ஆகவும், அதன் மீது பர்வத லிங்கமாகப் பெருமான் எழுந்தருள வேண்டும் என்பதே அது. அந்த சிகரத்தைத் தரிசிப்பவர்கள் முக்தி பெற வேண்டும் என்றும் எல்லா தீர்த்தங்களும் இங்கு சன்னிதி கொள்ள வேண்டும் என்றும்  வேண்டினான். அதன்படி ஸ்ரீ பர்வதம் எனவும் ஸ்ரீ சைலம் எனவும் இத்தலம் அழைக்கப்படலாயிற்று. தேவாரத்திலும் இத்தலம் திருப்பருப்பதம் என்றே குறிப்பிடப்படுகிறது.

கோயிலும் மதில் சுவரும் 
சந்திரவதி  என்ற அரச குமாரி  ஸ்ரீசைல நாதரை மல்லிகைப் பூக்களால் அர்ச்சித்து பூஜை செய்து வந்தபடியால் சுவாமிக்கு மல்லிகார்ஜுனர் என்ற பெயர் வந்தது. மருத மரம் (அர்ஜுன விருக்ஷம்)ஸ்தல விருக்ஷமானதால் இப்பெயர் வந்ததாகவும் கூறுவார்கள். வசுமதி என்ற பக்தியின் வேண்டுகோளால் ஸ்ரீ பர்வதம் என்ற பெயர் ஏற்பட்டது எனவும் கூறப்படுகிறது.

 உலகை வலம் வந்ததற்கு சமமாக உமாமகேசுவர்களை முதலில் வலம் செய்த  விநாயகப் பெருமான் அவர்களது ஆசி பெற்றதோடு, சித்தி, புத்தி ஆகிய இருவரையும் மணந்தார்.  மயில் ஏறிச் சென்று உலகை நொடிப் பொழுதில் வலம் வந்த குமார சுவாமியான முருகன் கோபம் கொண்டு அவ்விடத்திலிருந்து நீங்கி, கிரௌஞ்ச  மலையைச் சென்றடைந்தார். முருகன் சமாதானமாகாமல் அங்கே தங்கி விடவே, தெய்வ தம்பதியரும் அதற்கு அருகிலுள்ள ஸ்ரீ சைலத்தில் தங்கி விட்டனர். 

மதில் சுவற்றில் சிற்பங்கள் 
சிவபக்தையான அக்கமஹா தேவியை கௌசிகன் என்ற ஜைன அரசன் மணக்க விரும்பியபோது, அதற்கு சம்மதிக்காத அக்கமஹா தேவி, அரசனை வீர சிவன் ஆக்குவேன் எனக் கூறிவிட்டு, அவனை சந்திக்கச் சென்றாள் . அரசனின் தவறான  செய்கையால் மனம் நொந்து, தவத்தை மேற்கொண்டு இறைவனது கழலடிகளை அடைந்தாள். ஸ்ரீ சைல ஆலய வளாகத்தில் அக்க மகா தேவியின் திருவுருவச் சிலை பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது. 

ஸ்ரீ சைலத்திற்கு அருகிலுள்ள ராமாபுரம் என்ற ஊரில் 14 ம் நூற்றாண்டில் வசித்து வந்த  நாகி ரெட்டி- கௌரம்மாள்  இருவரும் பிள்ளை வரம் வேண்டி ஸ்ரீ சைலம் வந்தனர். இறைவனருளால் அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது.  அக்குழந்தை மல்லம்மா என்று அழைக்கப்பட்டாள். வயது வந்தவுடன் அவளை ,அருகிலுள்ள சித்தாபுரத்தைச் சேர்ந்த பரமா ரெட்டி என்பவனுக்கு மணம் செய்து வைத்தனர். புகுந்த வீட்டுக்கு மல்லம்மா வந்தவுடன் அங்கு பசுக்களும் விளைச்சலும் பல மடங்கு அதிகரித்தன. ஏழைகளுக்கு மல்லம்மா உதவி செய்து வந்தாள் . இதைக் கண்டு பொறாமை  கொண்ட உற்றார் உறவினர்கள், அவளது கணவனிடம் சென்று   வீண் பழி சுமத்தி அவனைக் கோபமுறச் செய்தார்கள். அதை உண்மை என நம்பிய கணவனும், மல்லம்மாவைக் கொன்று விட நினைத்து அவளிடம் சென்றான். ஆனால் அவளோ மெய் மறந்து சிவபூஜை செய்து கொண்டிருப்பதைக் கண்டு தனது செயலுக்கு வருந்தினான். மல்லம்மாவும், தவறு செய்த அனைவரையும் மன்னித்து, அனைவருக்கும் சிவ மகிமையைப் போதித்து, கடைசியில் பெருமானுடன் ஐக்கியம் ஆனாள்.  ஸ்ரீ சைல ஆலயத்தில் பின் பிராகாரத்தில் மல்லமாவின் பசுத் தொழுவம் இருக்கிறது. அருகில் மல்லம்மாவின் விக்கிரகமும் இருக்கிறது. 

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சோலாப்பூரில் 12 ம் நூற்றாண்டில் முத்தன்ன கெளட் -  சுகுலா தேவி என்ற வயோதிக தம்பதியர் வசித்து வந்தனர். பிள்ளை இல்லாத அவர்களுக்குக் குலகுருவான ரேவண சித்தர்  ஒருநாரத்தம் பழத்தைக் கொடுத்து, சிவ பூஜை செய்து வருமாறு ஆசி வழங்கினார். அப்படியே  செய்த அத்தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்தான். சித்தர் அருளால் பிறந்ததால் அக்குழந்தைக்கு ஸித்தப்பா  எனப் பெயரிட்டனர். அச் சிறுவனுக்கு ஆறு வயதான போது ஒரு வயோதிகர் அவன் முன் தோன்றித்  தன் பெயர்  மல்லையா என்றும் தான்  மிகவும் பசியோடு இருப்பதாகவும் கூறவே, ஸித்தப்பா  ஓடோடிச் சென்று அவரது பசி தீர்க்க வேண்டி உணவும் பாயசமும் கொண்டு வந்தான். ஆனால் அங்கு வயோதிகர் காணப்படவில்லை. அவரது பெயரைக் கூவிக் கொண்டு ஸ்ரீ சைலம் செல்லும்  பக்தர்களோடு உணவு எதுவும் உட்கொள்ளாமல் ஸ்ரீ சைலத்தை அடைந்தான். மல்லையா என்பவரைப் பார்த்தீர்களா என்று பக்தர்களைக் கேட்டபோது, அதற்கு அவர்கள் மல்லிகார்ஜுன லிங்கத்தைக் காட்டி, " இவரே மல்லையா " என்றனர். சிறுவனானபடியால் அதனை நம்பாமல் தேடுவதைத் தொடர்ந்தபோது ஓரிடத்தில் கையிலிருந்த பாயசத்துடன் ஒரு பள்ளத்தில் தவறிப்போய் விழும் தருவாயில் சுவாமி அவன் முன் தோன்றி அவனைக் காப்பாற்றினார். இன்று அப்பள்ளம் , ஸித்தராமப்பா குளம் எனப்படுகிறது.  பின்னர் தனது ஊரை அடைந்த ஸித்தராமப்பா , அங்கு ஓர் சிவாலயத்தைக் கட்டினான். அதில் வேலை செய்தவர்களுக்குக் குளத்து மண்ணைக் கூலியாகக் கொடுத்தான். அது தங்கத் துகளாக மாறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பின்னர் , தான் வெட்டியகுளத்திலேயே ஜீவசமாதி அடைந்தான். பிற்காலத்தில் அங்கு ஸித்தராமேஸ்வரர்  ஆலயம் எழுப்பப்பட்டது.  

சிவபெருமானை மணக்க விரும்பிய ராஜகுமாரி ஒருவள்  இறைவனது  ஆணைப்படி ஒரு வண்டைப் பின்தொடர்ந்து சென்று ஸ்ரீ சைல காட்டுப் பகுதியை அடைந்தாள். அங்கு காட்டு வாசிகள் அவளுக்கு உணவு அளித்தனர். அவள்  கிழ வடிவில் வந்த பெருமானை  மணம் செய்து கொண்டாள். மலை வாசிகள் தங்கள் வழக்கப்படித்   திருமண விருந்து கொடுத்தனர். அதனை ஏற்காமல் இறைவன் அங்கிருந்து கிளம்பும்போது  மல்லையா என்று ராஜகுமாரி பலமுறை அழைத்தும் பலன் இல்லை. இதனால் ஏமாற்றமடைந்த ராஜகுமாரி, கிழவரைப் பார்த்து லிங்க வடிவிலேயே இங்கு தங்கி விடுக என்றவுடன் இறைவனும் அப்படியே ஆனார்.  அதைக் கண்ட பார்வதி, வண்டைப் பின் தொடர்ந்து வந்த நீ வண்டாகப் போவது என்று ராஜகுமாரியைச் சபித்தாள். ஸ்ரீசைலத்தில் அம்பாளுக்குப் பிரமராம்பிகை என்ற பெயர் வழங்கப்படுவது கவனிக்கத்தக்கது. ( பிரமரம் என்பது வண்டைக் குறிக்கும் சொல் ) 

ஸ்ரீ சைலத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் கேசப்பா என்ற குயவன் மண்பாண்டங்கள் விற்று அந்த வருமானத்தில் சிவ பக்தர்களுக்கு அன்னம்  பாலித்து வந்தான். அதனைக் கண்டவர்கள் அவனது மண்பாண்டங்களையும் சக்கரத்தையும் உடைத்து விடவே, சிவராத்திரிக்கு வரும் பக்தர்களுக்கு எவ்விதம் உணவு அளிப்பேன் என்ற ஆழ்ந்த கவலையோடு இருந்தான். அப்போது அவனது வீட்டுப் பரணில் சுவாமி தங்கலிங்க மயமாகப் ப்ரத்யக்ஷமாகி, "அஞ்சாதே, உனது வீட்டில் குறைவில்லாமல் எப்போதும் உணவு அளித்து வருவாயாக "  என்று அருளினார்.  வீட்டிற்குள் சென்ற கேசப்பா, பாத்திரங்கள் நிறையப் பல உணவு வகைகளைக் கண்டு, திருவருளை வியந்தவனாக, அடியார்களுக்கு அன்னம் பாலித்தான். அவ்வாறு பெருமான் அவனுக்குக் காட்சி அளித்த இடம், அடிகேச்வரம்  எனப்படுகிறது. 

ஸ்ரீசைலத்தைச் சேர்ந்த உமாமகேசுவரத்தில் இருந்த சிற்பி இரு நந்தி சிலைகளைச் செய்தான். அவற்றை கிருஷ்ணா நதியைத் தாண்டி எவ்வாறு ஸ்ரீ சைலத்திற்குக் கொண்டு செல்வது என்று கவலையில் ஆழ்ந்தான். அவனது கனவில் தோன்றிய இறைவன், ஒரு கயிற்றைக் கொடுத்து, அதைக் கொண்டு நந்திகளைத் திரும்பிப் பார்க்காமல் இழுத்துச் செல்லும்படி கட்டளை இட்டார். துயில் நீங்கிக் கயிற்றைக் கண்ட சிற்பி, அதைக் கொண்டு இரு நந்திகளையும் பிணைத்து இழுத்து வரும்போது, ஒரு நந்தி  பாறைகளிடையே சிக்கவே, திரும்பிப் பார்த்தான். அதனால் அந்த நந்தி அங்கேயே நின்று விட்டது. மற்றொரு நந்தியை மட்டுமே ஸ்ரீ சைலத்திற்குக் கொண்டு வந்தான் என்று  சொல்வார்கள். ஆற்றின் நடுவில் உப்பிலி பசவண்ணா என்று பக்தர்களுக்குத் தரிசனம் அளித்து வந்த நந்தி இப்போது ஸ்ரீ சைலம்  அணைக்கட்டில் ஆழத்தில் மூழ்கி இருக்கிறது.