Sunday, May 18, 2014

கண்டறியாதன கண்டேன்

தமிழகக் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்பு வாய்ந்த திருவிழாக்களில்  சித்திரை மாதத்தில்  திருவையாற்றில் நடைபெறும் சப்த ஸ்தான விழாவும் ஒன்றாகும். திருவையாறு உள்ளிட்ட ஏழு தலங்களின் பல்லக்குகள் ஒரு சேர பவனி வந்து காட்சி தரும் அற்புதக் காட்சியை வாழ்நாளில் ஒவ்வொருவரும் அவசியம் தரிசிக்க வேண்டும். ஏழு ஊர் மக்களும் ஒருங்கிணைந்து நடத்தும் வைபவம் இது.  காவிரியின் வறண்ட படுகையில் கொதிக்கும் மணலில் கால்கள் சுடுவதையும் பொருட்படுத்தாமல் ஆற்றைக் கடந்து  பல்லக்குகளைச் சுமந்து வருவார்கள். கரை ஏறும்போது மிகவும் பிரயத்தனப்பட்ட்டால் தான் , பல்லக்கை ஏற்ற முடியும். சுடுமணலில் தென்னை ஓலைகளைப் பரப்பி வைத்திருப்பார்கள். கரை ஏறியவுடன் வீதிகளில் நீரைத் தெளித்தும் ,பல்லக்குத் தூக்கிகளுக்கு நீரும், மோரும் வழங்கியும் ஊர் மக்கள் தொண்டு செய்வார்கள்.

சப்த ஸ்தான விழாவின் பின்னணியை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். சிலாத முனிவருக்குத் தவப்புதல்வனாகத் தோன்றிய அதிகார நந்திகேச்வரருக்குத்  திருமழபாடியில் தோன்றிய சுயசாம்பிகை என்ற பெண்ணைத் திருமணம் செய்துவைக்கத் திருவையாற்றிலிருந்து ஐயாறப்பரும் தர்மசம்வர்தனி அம்பிகையும் பங்குனி மாதம் புனர்பூசத்தன்று திருமழபாடிக்குப்  பல்லக்கில் எழுந்தருளுகிறார்கள். அன்று இரவே, புதுமணத் தம்பதியரோடு கொள்ளிடத்தைக் கடந்து, திருவையாற்றை அடைகிறார்கள்.  
புது மணத் தம்பதியரை அழைத்துக் கொண்டு ,சித்திரை மாதத்தில் பவுர்ணமியை ஒட்டி வரும் விசாகத்தன்று திருவையாற்றை விட்டுக் கண்ணாடிப் பல்லக்கில் புறப்பட்டு, அதைச் சுற்றிலும் உள்ள ஆறு ஊர்களுக்கு எழுந்தருளி அவர்களை ஊர் மக்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதே இவ்விழாவின் அடிப்படை. நோக்கம்.

திருவையாறு பல்லக்கு முதலில் கும்பகோணம் செல்லும் சாலையில்  சுமார் 3 கி.மீ. தொலைவிலுள்ள திருப்பழனத்தை அடைகிறது. இது திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர் ஆகியோரின் தேவாரப் பாடல்களைப் பெற்ற தலம். இத்தலத்து இறைவரான ஆபத்சகாயர் , அம்பிகையுடன் பல்லக்கில்; எழுந்தருளி வீதி வலமாகத் திருவையாற்றுப் பல்லக்குடன் , திருவேதிகுடியை அடைகிறார். வேதங்களால் வழிபடப்பெற்ற வேதபுரீஸ்வரரும் தமது பல்லக்கில் மற்ற இரு பல்லக்குகளுடன் சேர்ந்துகொள்கிறார்.

மூன்று பல்லக்குகளும் திருச்சோற்றுத்துறையை அடைகின்றன. மூவர் பாடலும் கொண்ட இத்தலம்  , கண்டியூருக்குக் கிழக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கோயிலில் அண்மையில் புதியதாகச் செய்யப்பெற்ற கண்ணாடிப்பல்லக்கில், ஒதனவநேச்வரரும்,அன்னபூரணி தேவியும் எழுந்தருளுகிறார்கள். தலத்தின் பெயருக்கு ஏற்ப அன்னதானம் செய்யப்படுகிறது. ஊரே விழாக்கோலம் பூண்டு விளங்குகிறது.

நான்கு பல்லக்குகளும்  அஷ்ட வீரட்டத்துள் ஒன்றான திருக்கண்டியூரை வந்து அடைகின்றன. அங்கு பிரம்ம சிர  கண்டீஸ்வரர் அம்பாளுடன் பல்லக்கில் எழுந்தருளி, வீதி வலமாகத் திருப்பூந்துருத்தி என்ற பாடல் பெற்ற தலத்தை  அடைகிறார். அப்பர் பெருமான் பல காலம் தங்கி, சிவப்பணி செய்த இத்தலத்திலிருந்து ஆறு பல்லக்குகளும் காவிரிக்கரையில் உள்ள திரு நெய்த்தானத்தை வந்து சேர்கின்றன. தில்லைஸ்தானம் என்று தற்காலத்தில் வழங்கப்படும் இப்பாடல் பெற்ற தலத்தில் ஏழு பல்லக்குகளையும்  கோயிலுக்குள் காணலாம். பாலாம்பிகையும் க்ருதபுரீஸ்வரரும் பல்லக்கில் எழுந்தருளி, ஏனைய ஆறு பல்லக்குகளுடன் திருவையாற்றை நோக்கிப் புறப்படும்போது தீபாராதனை, வாணவேடிக்கைகள் ஆகியன நடைபெறுகின்றன.

ஏழு பல்லக்குகளும் திருவையாற்று வீதிகளில் எழுந்தருளி , ஐயாறப்பரின் திருக்கோயில் வாயிலை அடைந்தவுடன் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் பிற தலங்களில் இருந்து வந்த பல்லக்குகள் தமது ஊருக்குத் திரும்புகின்றன.

கண் பெற்ற பயன் கண்ணாடிப் பல்லக்கைத் தரிசிப்பது தான். அது உண்மை என்பதை இவ்விழாவை நேரில் கண்டு களித்தவர்கள் உணர்வார்கள். ஒரே நேரத்தில் ஏழு தலத்து மூர்த்திகளையும் தக்ஷிண கயிலாயமான திருவையாற்றில் காணும்போது நம் கண்கள் நீர் பனிக்க,  அப்பர் பெருமானின் வாக்கான " கண்டேன் அவர் திருப்பாதம் ; கண்டறியாதன கண்டேன்" என்ற பாடல் வரிகளை இசைத்து,  சிந்திப்பரிய ஐயாறன் அடித்தலத்தை மீண்டும் மீண்டும் தரிசிக்கிறோம். கண்கள் அத்திருவடிகளை விட்டு அகல மறுக்கின்றன. 

Tuesday, May 6, 2014

செங்காட்டங்குடியதனுள் கண்டேன்

திருச்செங்காட்டங்குடி என்ற பழமை வாய்ந்த சிவஸ்தலத்தில் சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் பரணி நட்சத்திரத்தன்று அமுது படையல் என்ற வைபவம் நடைபெறுகிறது. இதனைத் தரிசிக்க அருகிலுள்ள கிராமங்களிலிருந்தும் தொலைவிலுள்ள ஊர்களிலிருந்தும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். பிள்ளைக்கறி பிரசாதம் பெற்றுக்கொண்டு, விடியற்காலையில் ரிஷப வாகன தரிசனமும் செய்து கொண்டு, நிறைவான மனத்துடன் தமது ஊருக்குத் திரும்புகிறார்கள்.

கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்த தோஷம் நீங்குவதற்காக விநாயகப் பெருமான் சிவபூஜை செய்ததால் சுவாமிக்குக் கணபதீஸ்வரர் என்றும் ஆலயத்திற்குக் கணபதீச்வரம் என்றும் பெயர்கள் வழங்கலாயின. அசுரனுடைய இரத்தம் பெருகி ஆறாக ஓடியபடியால், இத்தலம் செங்காட்டங்குடி எனப்பட்டது.

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பேருந்தில் ஏறி, திருமருகலில் இறங்கி அங்கிருந்து சுமார் மூன்று கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். ரயிலில் வருபவர்கள் நன்னிலத்தில்     இறங்கிக்  காரைக்கால் ,நாகை செல்லும் பேருந்துகள்  மூலம் திருமருகலை அடையலாம். திருவாரூரிலிருந்தும்  பேருந்து மூலம் திருச்செங்காட்டங்குடியை வந்து  அடையலாம்.

ராஜகோபுரத்தைக் கடந்தவுடன் வெளிப் பிராகாரத்தில் நந்தி,கொடிமரம்,அலங்கார மண்டபம் அம்பாள் சன்னதி ஆகியவற்றைத் தரிசித்துவிட்டு, உள்ளே நுழைகிறோம். அடுத்த பிராகாரத்தில் அமைந்துள்ள திருமாளிகைப்பத்தியில்  சிறுத்தொண்ட நாயனார்  தனது குடும்பத்தினருடன் உத்திராபதீஸ்வரர் சன்னதியை நோக்கி அஞ்சலி செய்தவராகக் காட்சி தருகிறார். எதிரில் மிகப்பழமையான ஆத்தி மரம் இருக்கிறது. மூல சன்னதியில் கணபதியால் வழிபடப்பெற்ற கணபதீஸ்வரர் தரிசனம் தருகிறார். பிராகாரத்தில் வாதாபி கணபதியின் சன்னதி இருக்கிறது.

சிவனடியார்க்கு நாள் தோறும் அமுதளிப்பதை நியமமாகக்கொண்ட சிறுத்தொண்டரைச்  சோதிக்க ,பைரவக் கோலத்தோடு உத்திராபதியாராக வந்த சிவபெருமானைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்ற சிறுத்தொண்டர், வந்தவர் கேட்டபடியே, மனமுவந்து, தனது ஒரே மகனான சீராளனைத் தன் மனைவியார் பிடிக்கத்தானே அரிந்து அமுதாக்கி , அடியவர்க்குப் படைத்தார் என்று பெரிய புராணம் கூறுகிறது. இறைவன் திருவருளால் அக்குழந்தை உயிர்பெற்றதோடு, அவனது பெற்றோரும்,தாதியாரும் காணும்படியாக, உமையும் கந்தனும் தன்னோடு ரிஷப வாகனத்தில் வர, அவர்களுக்குக் காட்சி தந்து, முக்தி அளித்த வரலாற்றை நினையும்படி இன்றும் அதனை விழாவாக நடத்திக் காட்டுகிறார்கள்.

காலையில் உத்திராபதீச்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் நடை பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து, சுவாமிக்கு வெள்ளை சார்த்தி, சுமார் பத்து மணி அளவில் உள்  பிராகாரத்திலும், வெளிப்பிராகாரத்திலும் சுவாமி வலம் வந்துவிட்டு தனது சபையை அடைகிறார். வழி நெடுகிலும் சுவாமிக்குப் பன்னீரைக் காணிக்கை ஆக்குகிறார்கள் பக்த கோடிகள்.
நண்பகலில் சுமார் இரண்டு மணிக்கு மீண்டும் உத்திராபதியார் புறப்பாடு நடைபெறுகிறது. அதற்காக அலங்கரிக்கப்பட்ட பவழக் கால் சப்பரத்தில் எழுந்தருளியவாறு, தெற்கு வீதியின் கோடியில் உள்ள சிறுத்தொண்டரது மனைக்குச் செல்கிறார் பெருமான். சிவனடியாரைத்தேடிக்கொண்டு சிறுத்தொண்டர் வெளியில் சென்று விட்டபடியால், அவரது மனைவியான திருவெண்காட்டு நங்கையும்,சந்தனத்தாதியாரும் சுவாமியை எதிர் கொண்டு அழைக்கிறார்கள். ஆண்கள் இல்லாத வீட்டில் நுழைவது முறை அன்று என்று சுவாமி மீண்டும் கோயிலில் உள்ள ஆத்தி மரத்தடிக்கே வந்து அமர்கிறார்.

சிவனடியார் வந்துவிட்டுப் போன செய்தியை மனைவியின் மூலம் அறிந்த சிறுத்தொண்டர் ஆனந்தம் மேலிடக் கோயிலுக்குச் சென்று அவரை வணங்கி, உணவு அருந்தத் தனது  மனைக்கு அழைக்கிறார். தான் உண்பது நரப்பசு என்று சொல்லியும், அதற்கு உடன்பட்ட சிறுத்தொண்டர் , பெருமானைத் தன்  மனைக்கு வர அழைக்கிறார். இரவு சுமார் ஒன்பது மணிக்குச்  சிறுத்தொண்டர் பெருமானை அழைக்க வரும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. அதற்கான பெரியபுராணப் பாடல்களை ஓதுவாமூர்த்திகள் பாடுகிறார்கள். இரவு இரண்டு மணி அளவில் உத்திராபதீச்வார் , சிறுத்தொண்டர்  மனைக்கு எழுந்தருளுகிறார். மக்கள் கூட்டம் வெளியில் அமர்ந்தவாறு அப்போது ஓதப்படும் பெரியபுராணப் பாடல்களை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருக்கிறது. அமுது படைக்கும் பொது உள்ளேயிருந்து ஒரு சப்தம் கேட்கிறது. சற்று நேரத்திற்கெல்லாம் சுவாமி விரைவாகக் கோயிலுக்குச் சென்று விடுகிறார்.

உத்திராபதியார் அருளால் மீண்டும் உயிர் பெற்ற தனது குமாரனுடனும் மனைவி,தாதி ஆகியோருடனும்  கோயிலை நோக்கி சிறுத்தொண்டர் வரும்போது,தெற்கு வீதியில் விடியற்காலையில் ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்த வடிவில்  அவர்களுக்குத் தரிசனம் கிடைக்கிறது. பாடல்கள் இசைக்கப்படுகின்றன. தீபாராதனை பெருமானுக்கும் சிறுத்தொண்டருக்கும் நடைபெறுகிறது. நால்வரும் பெருமானை வலம் வந்து விட்டுக் கோயிலுக்குச் சென்று விடுகின்றனர். சுவாமி நான்கு வீதிகளையும் வலம் வந்தவாறு திருக்கோயிலைச் சென்று அடைகிறார். 

கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் தோளில் சுவாமியைத் தூக்கி வரும் ஆட்கள் பாராட்டுக்கு உரியவர்கள். வீதியில் உள்ள மக்களும் அந்த ஆட்களின் பாதங்கள் வெய்யிலால் வருந்துமே என்று, வழி நெடுகிலும் தண்ணீர் தெளித்து வைக்கிறார்கள். தரிசிக்க வரும் அன்பர்களின் தாகம் தீர்க்கத் தண்ணீர், நீர்மோர் ஆகியவை பலரால் ஆங்காங்கே தரப்படுகிறது. இவை எல்லாமே சிவபுண்ணியம் தான்! 

" சிறுத்தொண்டன் பணி செய்ய" அதனைப் பெருமான் அன்று ஏற்று அருளியவாறு, இக்காலத்திலும் அவனுக்குப் பணி செய்தால் அவனருளைப் பெறலாம் என்பது நிச்சயம்.   கண்கள் தாரையாக உருகும் சிறந்த அடியார்களைக் காண வேண்டும் என்றால் அமுது படையல் உற்சவத்தில் காணலாம். எத்தனையோ குடும்பங்களுக்குக் குல தெய்வமான உத்திராபதீச்வரரையும் அவனே கதி என இருக்கும் அடியார்களையும் "செங்காட்டங்குடியதனுள்  கண்டேன் நானே"  என்று அப்பர் பெருமான் அருளியதுபோல் நாமும் காண்கிறோம்.