Saturday, November 7, 2020

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – காசி விச்வநாதம் – XII

 

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் காசி  விச்வநாதம் XII

                                           சிவபாதசேகரன்


மேலுலகிலிருந்து கங்கையைப் பகீரதன் அருந்தவம் செய்து கொண்டு வந்ததால் பாகீரதி என்றும் ஜன்னு முனிவரது ஆசிரமத்தினுள் புகுந்து வெளி வந்ததால் ஜான்னவீ என்றும் பெயர்களைப் பெற்ற கங்கை, காசியில் உத்தரவாகினியாக ஓடுகிறாள்.  கங்கை,யமுனை,சரஸ்வதி,       க்ருணா, தூதபாபா ஆகிய ஐந்து நதிகள் இங்குக் கூடுவதால் பஞ்ச கங்கா கட்டம் என்ற இடத்தில் புனிதமான துறை இருக்கிறது.

கோஸ்வாமி துளசிதாசர் இங்குத் தங்கியபடியே பல நூல்களை இயற்றினார்.அவரது கோயிலும் இங்கு உள்ளது. அவ்விடத்தைத் துளசி கட்டம் என்கிறார்கள். அவரது பாதுகைகளையும் அவரால் வழிபடப்பட்ட ஹனுமான் விக்ரஹத்தையும் காணலாம்.  ப்ரஹ்லாத கட்டத்தில் துளசி தாசர் இராமாயணம் எழுதியதாகக் கூறுவர்.

கேதார கட்டத்தில் ஸ்ரீ குமரகுருபர ஸ்வாமிகள் ஸ்தாபித்த குமாரசுவாமி மடம் உள்ளது. சரஸ்வதி தேவி மீது சகலகலாவல்லி மாலை பாடி, ஹிந்துஸ்தானி மொழியில் புலமை பெற்று, டில்லி பாதுஷாவை சந்திக்கச்  சிங்கத்தின் மீதேறிச் சென்று அவர்  வெகுமானங்களைப் பெற்றதாகவும் கருடன் பறக்காத காசியில் தனது தவவலிமையால் கருடன் வட்டமிடச் செய்து அப்பகுதி முழுதையும் பாதுஷாவிடம் பெற்று அங்கே மடத்தை  ஸ்தாபித்ததாக வரலாறு.  அங்குள்ள கேதாரீச்வரர் கோயிலும் மடத்தால் பரிபாலிக்கப் படுவதாகும்.

கால பைரவர் கோயிலில் பூஜை செய்பவர்கள் யாத்திரீகர்களின் முதுகில் தட்டுவார்கள். காசியில் தண்டம் (கால பைரவரின் தண்டனை,முதுகில் தட்டுவது),  பிரயாகையில் முண்டம்(மொட்டை அடித்துக் கொள்வது), கயையில் பிண்டம் ( பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்வது) என்ற மூன்றையும் யாத்திரீகர்கள் அனுசரிக்கிறார்கள்.

காசியில் பார்க்கத்தக்க பிற இடங்கள்: கோபால மந்திரம், ரண சோடசி மந்திரம், பல்தேவ்ஜி மந்திரம், நேபாளி மந்திரம் ஆகியவை பிரசித்தி பெற்றவை. க்வாலியர் திவான் தினகர் ராயர் கட்டிய ராம மந்திரம் மிக்க அழகானது. கோரக்நாத மந்திரம், பாபா கோரக் நாதரின் பாதங்களைக் கொண்டு விளங்குவது ஆகும். கபீர் சௌராவில் கபீர் தாசரின் பாதச் சுவடுகளை வைத்திருக்கிறார்கள். அருகே, அவர்பயன் படுத்திய பொருள்களையும் வைத்துள்ளனர். ஜெய்பூர் மகாராஜா ஜெய சிம்மன் என்பவர் டில்லி, மதுரா, உஜ்ஜைன் ஜெய்பூர் ஆகிய இடங்களில் கட்டியுள்ளது போலவே காசியிலும் ஒரு வேதியல் சாலை (Observatory) கட்டியுள்ளார். பாரத மாத கோயிலுக்கும் அநேகர் விஜயம் செய்கிறார்கள். அஸி சங்கமத்திற்கு சுமார் 2  கி.மீ.தொலைவில் உள்ள ராம் நகரில் காசி ராஜாவின் அரண்மனை உள்ளது. மதன் மோகன் மாளவியா ஸ்தாபித்த காசி விச்வ வித்யாலயா(1916) , காசி வித்யா பீடம் ஆகிய கல்விக் கூடங்களும் காசிக்குப் பெருமை சேர்ப்பன. கௌதம புத்தர் நீண்ட காலம் வசித்த சாரநாத் என்ற இடம் இங்கிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.  

குரு க்ஷேத்திரப் போர் முடிவடைந்த பின்னர், பாவ நிவர்த்திக்காகப் பாண்டவர்கள் வாரணாசிக்கு வந்து சிவபெருமானை வழிபட்டனர் என்று புராணம் கூறுகிறது. வேத காலத்து நகராகக் கூறப்படும் காசியை முகமது கோரியின் சேனை கி.பி. 1194 ம் ஆண்டு நிர்மூலமாக்கியது. விச்வநாதர் கோயிலும் அழிவுக்கு ஆளானது.இது போன்று பல கோயில்கள் இடிக்கப்பட்டுவிட்டன. மீண்டும் கட்டினாலும் முகலாய மன்னர்கள் இடித்து வந்தனர். ராணி அஹல்யா பாய் ஹோல்கர் என்பவரால் கி.பி. 1780 ம் ஆண்டு மசூதிக்கு அருகில் ஆலயம் மீண்டும் கட்டப்பட்டது. இதுவே நாம் இப்போது காணும் விச்வநாதர் கோயிலாகும். கங்கைக் கரையில் காணப்படும் கட்டங்கள், மராத்திய ,பேஷ்வா, ஷிண்டே மன்னர்கள் கட்டியவை.மன்  மந்திர் காட்டில் உள்ள கட்டிட வேலைப்பாடுகள் அழகு மிக்கவை. ஆயுர்வேதம், சங்கீதம் ஆகியவற்றுக்குக் காசியின் பங்கு குறிப்பிடத்தக்கது. வல்லபாசார்யா, சைதன்யா போன்றோர் இசைக்கு ஆற்றிய தொண்டு மகத்தானது.

ஆதி சங்கரர் இங்கு இருந்தபோது, மனீஷா பஞ்சகம்,காசி பஞ்சகம் ஆகிய நூல்களை இயற்றினார். சிருங்கேரி சாரதா மடத்தின் 13 வது பீடாதிபதிகளால் கி.பி. 1346 ம் ஆண்டு, கேதாரீச்வரர் கோயிலின்  அருகிலுள்ள மடத்தில் ஸ்ரீ சந்த்ர மௌலீச்வர லிங்கம்ஸ்தாபிக்கப்பட்டது. 

அன்னபூர்ணாஷ்டகம்,விஸ்வநாதாஷ்டகம், கால பைரவாஷ்டகம் முதலிய ஸ்தோத்ரங்கள் நித்திய பாராயணம் செய்யப்படுபவை .

காசியின் பெருமை சொல்லுக்கு அடங்காதது. மேலும் பல தகவல்களை அறிய ஆர்வமுள்ளோருக்குப் பல நூல்கள் துணையாக விளங்குவன எனக் கருதி இத்துடன் நிறைவு செய்கிறோம். 

No comments:

Post a Comment