Friday, November 13, 2020

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – 12– க்ருஷ்ணேஷ்வர்

 

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் 

 12–க்ருஷ்ணேஷ்வர்(Grushneshwar)

                                         சிவபாதசேகரன்


 மகாராஷ்டிரா மாநிலத்தில் ஔரங்காபாத் நகருக்கு வடமேற்கில் சுமார் 30 கி.மீ.தொலைவில் உள்ளது க்ருஷ்ணேஷ்வர் என்ற ஜோதிர் லிங்க ஸ்தலம். பன்னிரு ஜோதிர் லிங்க வரிசையில் பன்னிரண்டாவதாக அமைவது .

புராதனமான இந்த ஆலயம் முகலாய மன்னர்களால் கி.பி. 13-14 நூற்றாண்டுகளில்  இடிக்கப்பட்டது. தற்போது நாம் காண்பது 18 ம் நூற்றாண்டில் இந்தூர் மகாராணி அகல்யாபாய் ஹோல்கர் என்பவரால் மீண்டும் கட்டப்பட்டதாகும். அதற்கு முன்னதாக , சிவாஜி மகாராஜின் பாட்டனார் வெருல் நகரைச் சேர்ந்த மாலோஜி போஸ்லே என்பவர் 16ம் நூற்றாண்டில்  கட்டிய கோயிலும் முகலாயர்களால் இடிக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே இந்தூர் மகாராணி அவர்கள் இக் கோயிலை மீண்டும் நிர்மாணித்தார்கள். இம்மாதரசி இவ்வாறு காசி போன்ற இடங்களில் முகமதியர்களால் அழிக்கப்பட்ட ஆலயங்களை மீண்டும் எழுப்பினார் என்று வரலாறு கூறுகிறது.

                                                                     வழித்தோற்றம் 

மகாராணி அகல்யாபாய் அவர்களால் மீண்டும் எழுப்பப்பட்ட இக் கோயில் , முழுவதுமாகச் சிவந்த கற்களால் கட்டப்பட்டது. சுவாமி  விமானம் ஐந்து தளங்களைக் கொண்டது. பன்னிரு ஜோதிர் லிங்கத் தலக் கோயில்களுள் இது அளவில் சிறியதாகக் காணப்பட்டாலும் கீர்த்தியில் குறைந்ததல்ல.  

சுவாமிக்கு எதிரில் உள்ள மஹா மண்டபம் 24 தூண்களைக் கொண்டதாகும். அவற்றில்  சிவபுராணக் கதைகள் அழகு வாய்ந்த சிற்பங்களாக அமைக்கப்பட்டிருக்கின்றன.  நந்தியெம் பெருமானது அழகிய திருவுருவத்தையும் காண்கிறோம். கருவறையானது  சிறியதும் சதுர வடிவம் ( 17’ x 17 ‘ ) கொண்டதுமாகும்.  விமானத்தில் சிற்ப வேலைப்பாடுகள் நுட்பமாக அமைக்கப்பட்டுள்ளன. சிவமகா புராணம் , ஸ்கந்த புராணம் ஆகிய நூல்களில் இத்தலத்தைப் பற்றிய குறிப்புக்களைக் காணலாம்.  இக் கோயிலுக்கு அருகில் சிவ ஸரோவர் என்ற புனிதமான தீர்த்தம் ஏரியாக உள்ளது. மகா சிவராத்திரி நாட்களில் ஏராளமான பக்தர்கள் இங்கு தரிசிக்க வருகிறார்கள்.

க்ருஷ்ணேஷ்வர் ஆலயத்தைத் தரிசித்த பிறகு இதற்கு அண்மையில் சுமார் ஒரு கி.மீ. தொலைவில் சாலை ஓரமாக அமைந்திருக்கும் எல்லோரா குகைக் கோயில்களையும் அவசியம் பார்க்க வேண்டும். UNESCO வினால் உலகப் பாரம்பர்யப் பொக்கிஷங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் இதுவும் ஒன்றாகும்.  

எல்லோரா குகைக் கோயில்கள் கி.பி.ஆறாம் நூற்றாண்டைச்  சேர்ந்தவைகளாகக் கருதப்படுகின்றன. சுமார் நூற்றுக்கும்  அதிகமான குகைகள் இருந்தாலும் பொது மக்கள் , 34 குகைகளை மட்டுமே பார்க்க முடியும். சயாத்ரி மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குகைகளில் ஒன்று முதல் பன்னிரண்டாவது குகை வரை புத்த மதத்தொடர்புடையவை. பதின்மூன்றாவது முதல் இருபத்தொன்பதாவது குகை வரை ஹிந்து மதத்தோடு  தொடர்புடையவை. முப்பது முதல் முப்பத்துநான்கு  வரை சமண மதத் தொடர்புடையவை. ஹிந்து மற்றும் புத்த மதக் குகைகள் ராஷ்ட்ர கூட மன்னர்கள் காலத்தவை என்றும், சமண சமயக் குகைகள் யாதவ மன்னர்கள் காலத்தவை என்றும் அறியப்படுகிறது.

பௌத்தக் குகைகள் ஏறத்தாழ கி.பி.600 முதல்  730 வரையிலுள்ள காலகட்டத்தில் அமைக்கப்பெற்றவை. அவற்றுள் ஆறாவது குகை மிகப் பழமையானது. புத்தர்,போதி சத்துவர்கள் சிற்பங்களைத் தவிரவும் , விகாரங்கள்,  அறைகள், மாடங்கள் ஆகியவற்றைக் கொண்டவை அவை. பத்தாம் எண்ணுள்ள குகை , விச்வகர்மா குகை என்பதாகும். அது முக்கியமான வழிபாட்டுக் கூடமாக விளங்குகிறது.

இராவணன் கயிலையைப் பெயர்க்க முயச்சித்தல் 

ஹிந்து மதச் சார்புள்ள குகைகள் ஆறாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டுக்குள் அமைக்கப்பட்டவை. கணபதி, சிவன்,பார்வதி,துர்க்கை சப்த மாதர்கள், ஆகிய மூர்த்தி வடிவங்களை 21 வது குகையில் காணலாம். அதன் நுழைவாயிலில் பெரிய உருவில் நதி தேவதைகளான கங்கையும் யமுனையும் காட்சியளிக்கின்றனர்.

ஒரே கல்லிலிருந்து பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட கைலாசநாதர் கோயிலை 16 ம் எண்ணுள்ள குகையில் காணலாம். இது முதலாம் கிருஷ்ணா என்ற ராஷ்ட்ர கூட மன்னரால் (கி.பி. 756- 773) கட்டப்பட்டது. நுழைவாயிலில் ஒரு தாழ்ந்த கோபுரம் உள்ளது. ஆலயத்தில் ஒரு சிவலிங்கமும் அதன் எதிரில் நந்தியும் இருக்கக் காணலாம். இராமாயண மகாபாரதச் சிற்பங்கள் வெளிச்சுவர்களில் காணப்படுகின்றன. இதனைக் கண்டு வியந்த கார்மெல் பெக்ஸன் என்பவர், உலக அதிசயம் ( Wonder of the World)என்று வருணித்துள்ளார்.

15 ம் எண்ணுள்ள குகையில் தசாவதாரச் சிற்பங்களைக் கண்டு மகிழலாம். அவை யாவும் உயிரோவியங்கள். நம்மைச் சிலிர்க்கச் செய்பவை. ஹிரண்ய வதம், கஜேந்திர மோக்ஷம், கண்ணன் கோவர்த்தனகிரியை ஏந்தியது, சிவபெருமான் திரிபுரத்தை எரித்தது, அந்தகாசுர சம்ஹாரம், கால சம்ஹாரம் ஆகிய சிற்பங்கள் அவசியம் காணத்தக்கவைகளாகும்.

குகை எண்கள் 14,22 ஆகியவற்றில் இராவணன் கயிலையைத் தூக்க முயன்றது, நீலகண்டன் ஆனது ஆகிய புராண வரலாறுகள் மற்றும் ஏராளமான சிற்ப வரிசைகள் உள்ளன.

சோட்டா  கைலாஸா ,இந்திர சபா, ஜகந்நாத சபா ஆகிய குகைகளில் சமணச் சிற்பங்கள் இருக்கக் காணலாம்.

முகலாயர் ஆட்சிக் காலத்தில் எல்லோரா குகைச் சிற்பங்கள் பல உடைக்கப் பட்டுவிட்டன.

நிறைவுரை:

தென்னிந்தியர்கள் பெரும்பாலும்  காசி ,ராமேச்வரம் ஆகிய இரு ஜோதிர்லிங்க யாத்திரைகளையே மேற்கொள்கிறார்கள். மற்ற பத்து ஜோதிர்லிங்கத் தலங்களையும்  அடையாளம் காட்டுவதே இப்பதிவுகளின் நோக்கம். ஒவ்வொரு தலத்தைப் பற்றியும் முழுமையாக அறிய வேண்டுமானால் அங்கெல்லாம் தங்கி உள்ளூர் வாசிகளிடம் மேலும் பல தகவல்களையும் அனுபவங்களையும் அறிந்து கொள்ளலாம். மேலும் அவற்றைப் பற்றிப் பல புத்தகங்களும் வெளிவந்துள்ளன. சுருக்கமாகவேனும் அத்தலங்களைப் பற்றி அறிந்த வரையில் பதிவிட்டால் சிலருக்கு அங்கு சென்று தரிசிக்க ஆர்வம் எழ வேண்டும் என்ற அவாவுடன் வெளியிடப்பட்ட பதிவுகள் இவை.  

பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களுள்  நாகநாதம், வைத்யநாதம், பீமசங்கரம் ஆகியவற்றின் இருப்பிடம் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அதே பெயர்களில் வேறு இடங்களிலும் ஜோதிர் லிங்க மூர்த்தங்கள் இருப்பதாகவும் கருதுகின்றனர். 

மகாராஷ்ட்ராவிலுள்ள ஔத் நாகநாதம் தவிர, குஜராத்தில் த்வாரகாவிற்கு 20 கி.மீ. தொலைவிலுள்ள நாகேஷ்வரும், அல்மொராவின் தாருகாவனப் பகுதியில் உள்ள ஜோகேஷ்வரே நாகேசம் என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன. 

மகாராஷ்ராவில் அமைந்துள்ள வைத்யநாதம் தவிர, ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள தியோகர் என்னுமிடத்திலுள்ள கோயிலையும் ஹிமாச்சல ப்ரதேசத்திலுள்ள  பைஜ்நாத் கோயிலையும் வைத்யநாத ஜோதிர்லிங்கமாகக் கருதுகிறார்கள். 

மகாராஷ்டிர பீமசங்கரம் தவிர, கௌஹாதி நகரின் புறத்திலுள்ள டாகினி கோயிலையும் ஜோதிர்லிங்கமாக எண்ணுகின்றனர். 

இவ்வாறாக ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் கூறப்பட்டாலும் அவற்றையும் தரிசிப்பதே உயர்வு. 

                                  

4 comments:

  1. மிகவும் சிறப்பு

    ReplyDelete
  2. திரு மணி சொல்வது போல, மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது இந்த்ப் பதிப்பு.
    1.வெஸ்டர்ன் காட்ஸை ஸஹ்யாத்ரி என்றே குறிப்பிடலாம்.
    2.இந்த அழகான திருக்கோவிலை குஷ்மா (घुष्मा)என்ற சிறந்த சிவபக்தையின் பெயரை ஒட்டி குஷ்மேஷ்வர் என்ற பெயருள்ள ஜ்யோதிர்லிங்க மந்திரமாக அமைத்தார்களென்றும், அப்பெயரே மருவி க்ருஷ்ணேஷ்வர் என்று ஆகிவிட்டது என்றும் வழக்கிலிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. 1 Sahyadri is indeed the correct name of Western Ghats. Thanks for citing the error.

      2 Dwadasa Jothir Linga Sthotram mentions this place as " Gusmesam " It was named after the Siva Bhakthai as you rightly pointed out. { Gusmesam > Grushmesam > Grushmeshwar }

      Delete
    2. நன்றி. பதிவு என்றில்லாமல் பதிப்பு என்று குறித்தது தவறு. மன்னிக்கவும்.

      Delete