Friday, October 16, 2020

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – காசி விச்வநாதம் – VII

 

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் காசி  விச்வநாதம் VII

                                           சிவபாதசேகரன்

காசி மாநகரத்தில் விநாயகர்,சூரியன், சிவபெருமான், பராசக்தி, துர்க்கை, விஷ்ணு,நரசிம்ஹர்,பைரவர், ஆகிய தெய்வங்களின் கோயில்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. அவற்றுள் நாம் அறிந்த வரையில் அவற்றின் விவரங்கள் தரப்பட்டுள்ளன. உள்ளூர் வாசிகளிடம் உறுதி செய்து கொண்டு தரிசிக்கச் சென்றால் செல்லும் வழியைத் தெளிவாக அறியலாம்.

விநாயகர் ஆலயங்கள்:


                                                                           நன்றி:வலைத்தளப் படம் 

துண்டி விநாயகர் : துண்டி கணபதி எனப்படும் இவரது சன்னதி, விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ளது.

கணநாத விநாயகர்: துண்டி கணபதி சன்னதியிலிருந்து ஞான வாபிக்குச் செல்லும் வழியில் உள்ளது.

ஆஷா கணபதி: விசாலாக்ஷி கோயில் அருகில்.( மீர் காட் வரை படகில் சென்று படிகளில்  ஏறினாலும் அடையலாம்)

மணிகர்ணிகா விநாயகர்: மணிகர்ணிகா கட்டத்தில் சடுவா பாபா ஆசிரமத்தின் அருகில் உள்ளது.

ஸித்தி கணபதி: மணிகர்ணிகா காட் பக்கத்திலுள்ள யம தீர்த்தம் அருகில் உள்ளது.

வக்ரதுண்ட விநாயகர்: காசியின் வடபுறம் லோஹாட்டியா என்ற இடத்துக்கு அருகில் உள்ளது.

விக்ன ராஜ கணபதி: ராம் லீலா மைதான் அருகில் உள்ளது.

அர்க் விநாயகர்: லோலார்க் குண்ட்  என்ற இடத்தில் அஸி- கங்கா சங்கமத்திற்கு அருகில் உள்ளது.

துர்க் விநாயகர்: மேற்கூறிய அர்க் விநாயகர் சன்னதிக்குத் தெற்கே அமைந்துள்ளது.

லம்போதர கணபதி: அர்க் விநாயகர் கோவிலுக்கு வடக்கே உள்ளது கேதார் காட் சாலையில் உள்ள இக்கோயிலை சிந்தாமணி கணேஷ் கோயில் என்கிறார்கள். பெரிய மூர்த்தம்.

மோதகப் ப்ரிய கணபதி: த்ரிலோசன் காட் அருகில் உள்ளது. ப்ரஹலாத் காட்  என்றும் வழங்குவர்.

 உத்தண்ட் முண்ட் கணபதி: மேற்படி மோதகப் ப்ரிய கணபதி கோயிலுக்கு  தெற்கில் பில்பில தீர்த்தத்தில் உள்ளது.

நாகேஷ் விநாயகர்: மேற்படி உத்தண்ட் முண்ட் கணபதிக்குத் தென்புறம் உள்ளது. ( சௌக் பக்கத்தில் உள்ள சங்கட தேவி கோயிலருகில் )   

மித்ர விநாயகர்: சௌக் என்ற இடத்திற்கு அருகில் யம தீர்த்தத்தின் வடபுறம் உள்ளது.

ஸ்ரீ யக்ஷ் கணபதி: சௌக் என்ற இடத்திற்கு அருகில் ருத்ர பிரயாக்,       கோத்வால்புராவில் ஒரு வீட்டிற்குள் உள்ளது.  

ப்ரமோத கணபதி: சௌக் என்ற இடத்திற்கு அருகில் நைபலி கப்ரா என்ற இடத்தில் உள்ளது.

ஸ்ருஷ்டி கணபதி: சௌக் என்ற இடத்திற்கு அருகில் காளிகா கல்லி என்ற இடத்தில் சுக்ரேச்வரருக்கு எதிர்  சுவற்றில் உள்ளளர்.

கர்வ விநாயகர்: கங்கையும் வருணையும் சங்கமம் ஆகும் இடத்தில் ராஜ் காட் கோட்டையின் உட்புறம் ஆதி கேசவர் கோயிலருகிலுள்ள வீட்டில் உள்ளது.

ராஜ புத்ர விநாயகர்: கர்வ விநாயகர் கோவிலின் வடகிழக்கே ராஜ் காட் சாலையில் உள்ளது.

வரத விநாயகர்: ராஜ புத்ர விநாயகர் கோவிலுக்கு வட கிழக்கே நயா  மஹா தேவ் காளி மந்திர் /ப்ரஹலாத் காட் என்ற இடத்திலுள்ளது.

பிச்சண்டில் விநாயகர்: வரத விநாயகருக்கு வடகிழக்கே ப்ரஹலாத் காட் என்ற இடத்தில் உள்ளது.

கால விநாயகர் : பிச்சாண்டில் விநாயகருக்குத் தெற்கே ராம் காட் படிக்கட்டில் அரச மரத்தடியில் உள்ளது.  

பிரணவ விநாயகர்: மேற்படி ராஜ புத்ர விநாயகர் கோவிலுக்கு அருகாமையில் உள்ளது. த்ரிலோசன் காட்டில் உள்ள ஹிரண்ய கர்பேச்வரர் கோயிலில் இந்த சன்னதி உள்ளது.

தேஹ்லி விநாயகர்: காசியின் நுழைவாயிலில் (20 கி.மீ.) தொலைவில் உள்ள கிராமத்திலுள்ள கோயில்

கூஷ்மாண்ட கணபதி கோயில்: தேஹ்லி கணபதி கோயிலுக்குக் கிழக்கே பூல்வாரியா என்ற இடத்தில் உள்ளது.

பஞ்சாஸ்ய கணபதி: கூஷ்மாண்ட கணபதிக்குக் கிழக்கில் பிசாச் மோசன் என்ற இடத்தில் உள்ளது.பஞ்ச முக கணபதி என்ற நாமமும் உண்டு.

க்ஷிப்ர பிரசாத கணபதி:  பஞ்ச முக விநாயகருக்குக் கிழக்கில் பித்ரேச்வரர் கோயில் என்ற இடத்தில் உள்ளது.

த்வி முக் கணபதி: க்ஷிப்ர ப்ரசாத கணபதிக்குக் கிழக்கே சூரஜ் குண்ட்  என்ற இடத்தில் உள்ளது.

உத்தண்ட் விநாயகர்: மேற்படி தேஹ்லி விநாயகருக்கு மேற்புறம் (ராமேச்வர் அருகிலுள்ள கிராமத்தில்) உள்ளது.

முண்ட விநாயகர்: உத்தண்ட விநாயகர் ஆலயத்திற்குத் தென் கிழக்கே சதன் பஜார் பகுதியில் உள்ளது. தலைப் பகுதியை மட்டுமே தரிசிக்க முடியும்.

ஹேரம்ப விநாயகர்: முண்ட விநாயகருக்குத் தென்கிழக்கில் மல்தஹியா என்னுமிடத்தில் உள்ளது. ( வணிக வளாகத்தின் 2 வது மாடியில்)

சிந்தாமணி விநாயகர்: ஹேரம்ப விநாயகருக்குத் தெற்கில் பாபு பஜார் என்ற இடத்தில் உள்ளது.

ஜ்யேஷ்ட கணபதி: சிந்தாமணி வினாயகருக்குத்தே கிழக்கில் மைதாகின் என்ற இடத்தின் அருகே (ஜ்யேஷ்டேச்வரர் லிங்கம் அருகில்) உள்ளது.

பாஸ் பாணி (பாச பாணி) விநாயகர்: காசியின் வடக்கிலுள்ள சதர் பஜாரில் அமைந்துள்ளது.

விகடத்வஜ விநாயகர்: பாஸ் பாணி விநாயகருக்குத் தெற்கில் தூமாதேவி கோவிலில் தூப் சண்டி என்ற இடத்தில் உள்ளது.

கூட் தண்ட்  விநாயகர்: காசியின் மேல்திசையில் கிநாராம் ஆச்ரமம், க்ரீம் குண்ட் , சிவாலா என்ற இடத்தில் இருக்கிறது.

ஏக தந்த விநாயகர்: கூட் தண்ட் விநாயகருக்கு வடக்கில் புஷ்ப தண்டேச்வர், பெங்காலி தோலா எனுமிடத்தில் இருக்கிறது.

சிங் துண்ட் விநாயகர்: ஏக தந்த விநாயகருக்கு வடக்கில் காளிஸ்புராவில்  (தசாஸ்வமேத காட் அருகில்) உள்ளது 

காளிப் ப்ரிய கணபதி: சிங் துண்ட் விநாயகருக்கு வடபுறம் மனப்ரகாமேச்வரர்  கோயிலில் உள்ளது.(சாக்ஷி விநாயகருக்குப் பின்புறம்)

அபய விநாயகர்: தசாஸ்வமேத காட்டில் சூல்  டங்கேச்வரர் கோயிலில் உள்ளது. 

ஸ்தூல் தண்ட் விநாயகர் : மேற்படி அபய விநாயகருக்குவடக்கில் மன்மந்திர் காட்டின் அருகில் உள்ளது.  

பீம் சண்ட்  விநாயகர் : வாரணாசிக்கு வெளியில் பஞ்சகோசி போகும் வழில் உள்ளது.

சால் கண்ட் விநாயகர்: பீம் சண்ட் விநாயகருக்கு வடக்கில் உள்ளது.

 

சூரியன் ஆலயங்கள்:

காசியை நீங்காது இருப்பதற்காக சூரியன் பன்னிரண்டு இடங்களில் ஆலயம் கொண்டு தரிசனம் தருகிறார்.

அருணாதித்யர்  ஆலயம்: வினதையின் குமாரனான அருணன் பூசித்துத் தனது அங்கஹீனம் நீங்கி ஆதித்தனது சாரதியாகப் பெறும் அருள் பெற்றதால் சூரியபகவான் இங்கு அருணாதித்யர் எனப்படுகிறார்.  த்ரிலோச்சன் காட்டில் உள்ள த்ரிலோசனேச்வரர் கோயிலில் இந்த சன்னதி உள்ளது.

த்ரௌபத் ஆதித்யர் ஆலயம்: பாண்டவர்கள் வனவாசத்தின்போது திரௌபதிக்கு எடுக்க எடுக்கக் குறையாது அன்னம் அளிக்கும் அக்ஷயபாத்திரத்தைக் கொடுத்த ஆதித்யர் இங்கு த்ரௌபதாதித்யர் எனப்படுகிறார். காசிக்கு வருபவர்கள் இங்கு வழிபட்டால் துயரம் யாவும் நீங்கப் பெறுவர் என்றும் சூரியன் வரமளித்தார். இக்கோயில், அக்ஷய வடம், விச்வேச்வரர் கோயில் அருகில் உள்ளது. அருகில் நகுலேச்வரர் சன்னதியும் உள்ளது.

கங்காதித்யர் கோயில்: கங்கையைத் துதித்தபடி அருள் வழங்குவதால் சூரியனுக்கு இப்பெயர் வந்தது. தசாஸ்வமேத் அருகில் லலிதா காட் என்ற இடத்தில் இந்தக் கோயில் உள்ளது. அருகில் நேபால் பசுமதிநாத் மந்திர் இருக்கிறது.

கேசவாதித்யர் கோயில்: காசியில் சிவலிங்க பூஜை செய்துகொண்டிருந்த மஹாவிஷ்ணு , அப்பூஜையின் சிறப்பை சூரியனுக்குக் கூறியதால் இங்கு கேசவாதித்யர் ஆனார். பாதோதாக தீர்த்தமாடிய பிறகு, கேசசவாதித்தரை ஞாயிற்றுக் கிழமை மற்றும் சப்தமியில் வழிபடுதல் சிறப்பு. இக்கோயில், ராஜ்காட் கோட்டை என்னுமிடத்தில் உள்ளது.    

காலோல்க் ஆதித்யர் கோயில்  : காசிப முனிவரின் மனைவிகளான கத்ரு, வினதை ஆகிய இருவருள், கத்ரு , வினதையை வஞ்சித்து அவளை அடிமையாக்கிக் கொண்டாள். இந்த அடிமையிலிருந்து நீங்குமாறு அவளது புதல்வனான கருடன் காசியில் சிவலிங்க பூஜை செய்ய அறிவுறுத்தினான். அவளுக்குக் காட்சியளித்த சிவபிரான் கருடனை விஷ்ணுவின் வாகனமாக்கியதோடு, சூரியனும் வினதைக்குப்  பாப விமோசனம் அளித்ததாகக் காசி காண்டம் கூறுகிறது.  ப்ரஹலாத் காட் அருகில், காமேச்வர் கோயில் என்ற இடத்தில் இந்த சன்னதி உள்ளது.

 லோலார்க் ஆதித்யர் கோயில்:ஏழேழ் பிறவிகளில் செய்த பாவங்களையும் நீக்கவல்ல இக்கோயில், துளசிகாட் என்ற பகுதியில் உள்ளது. லோலார்க் குண்டத்தில் நீராடி இவரைத் தரிசிக்க மக்கள் வருகிறார்கள். தோல் நோய்கள் நீக்க வல்ல கோயில் என்று இதனைக் காசி காண்டம்  சிறப்பிக்கிறது.

 

மயூக் ஆதித்யர் கோயில்: பஞ்ச கங்கா கட்டில் ஒருமுறை லிங்க ஸ்தாபனம் செய்து சூரியன் தவம் செய்யும்போது எழுந்த வெப்பத்தால் உயிர்கள் வாடின. சிவபெருமான் சூர்யன் முன் காட்சியளித்து அவனை மெதுவாகத் தொட்டவுடன் வெப்பம் குறைந்தது. சூரியனின் பிரகாசத்தால் மயூக் ஆதித்யன் எனப்பட்டான். மயூக் என்ற சொல் வெம்மையைக் குறிப்பதாகும். சிவபெருமானால் தொடப் பட்ட இவரது விக்ரஹம் எப்பொழுதும் ஈரத்தோடு குளிர்ந்து காணப்படுகிறது. மயூக் ஆதித்யரை வழிபட்டால் நோய் அண்டாது என்கிறது காசி காண்டம். பஞ்சகங்கா கட் வரை படகில் சென்று, படி ஏறிச் சென்று கோயிலை  அடையலாம். காலபைரவர் கோயில் வழியாகவும் செல்லலாம்.   இக்கோயிலுக்கு  உள்ளே,  சூரியனால் வழிபடப்பட்ட கபஸ்தீஸ்வரர், மங்கள் கௌரி ஆகிய மூர்த்திகளைத் தரிசிக்கலாம். இக்கோயிலின் அருகில் ப்ரஹ்மேச்வரர் மற்றும் ப்ரஹ்மசாரிணி கோயில்கள்  இருக்கின்றன.

ஸாம்ப ஆதித்யர் கோயில் : ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரைப்படி சாப நிவர்த்தி பெற வேண்டி, ஸாம்பன் காசிக்கு வந்து ஸாம்ப குண்டம் நிறுவி சூரிய பகவானைக் குறித்துத் தவம் மேற்கொண்டான். அதனால் அவனைப் பற்றியிருந்த நோய் அகன்றது. அக்குண்டம் தற்காலத்தில் சூரஜ் குண்ட் எனப்படுகிறது . இதில் நீராடி, ஸாம்ப ஆதித்யனை வழிபட்டால் தீராத நோய்களும் தீரும் எனப்படுகிறது. இக்கோயில் சூரஜ் கண்ட் என்ற இடத்தில் உள்ளது. இங்கு ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபடுவது சிறப்பு.

உத்தர்க் ஆதித்யர் கோயில்: பெற்றோரை இழந்த சுலக்ஷணா என்ற பெண் உத்தர்க் ஆதித்யனை வழிபட்டுக் கொண்டு இருந்தபோது அருகில் இருந்த ஒரு ஆட்டுக்கு மனம் இரங்கினாளாம். அவளுக்குப் பார்வதி-  பரமேச்வரர்கள் தரிசனம் தந்தபோது சுலக்ஷணாவின் வேண்டுகோளை ஏற்ற பார்வதி தேவி, அந்த ஆட்டைத் தனது பணிப் பெண் ஆகுமாறு மாற்றி அருளினாள். இங்குள்ள குண்டம் பக்ரி(யா) குண்டம் எனப்படுகிறது. இதில்  தை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் நீராடி, சூரிய பகவானைத் தரிசித்தல் மிகுந்த பலனைத் தரும்.  

விமல் ஆதித்யர் கோயில்: விமல்  என்பவன் ,  தொழு நோயால் பாதிக்கப்பட்ட போது காசியில் உள்ள இந்த இடத்திற்கு வந்து சூரியனை வழிபட்டு நோய் நீங்கப்பெற்றான். இந்நோயால் எவரும் பாதிக்கப்படக் கூடாது என்ற வரத்தையும் பெற்றான். தரிசித்தவுடனேயே அனைத்து நோய்களையும் இந்த சூரிய பகவான் தீர்த்து வைப்பதாகக் காசி காண்டம் உரைக்கிறது. இக்கோயில், காரி கௌன் பின்புறத்தில் கோடவ்லியா அருகே ஜங்கம்பரி என்ற  இடத்தில் உள்ளது.

வ்ருத்த ஆதித்யர் ஆலயம்: வயதில் முதியவராக இருந்த ஹரித் என்பவர் தவம் செய்ய இளமையை சூரியனிடம் வேண்டிப் பெற்றார். எனவே வயோதிகரால் வழிபடப்பெற்ற சூரிய பகவான் வ்ருத்த ஆதித்யர் எனப்படுகிறார். இந்த ஆலயம்,தசாச்வமேத் விச்வநாத் கல்லிக்கு அருகில், பாரே ஹனுமான்ஜிக்குத் தென்புறம், மிர் கட்டில் உள்ளது. படகு மூலம் மீர் கட் சென்றும் அடையலாம்.

யம ஆதித்யர் ஆலயம்: ஸங்கட் கட்டில் யமனால் வழிபடப்பெற்ற யமேச்வர லிங்கப்பெருமானையும், சூர்ய பகவானையும் தரிசிக்கலாம், சூர்யனும் இதனால் யம ஆதித்யர் எனப்படுகிறார். இங்கு யம தீர்த்தம் உள்ளது.

                                                 ( காசியின் பெருமைகள் தொடரும் )   

     

2 comments:

  1. Appears to be a very comprehensive list, unlikely to be known to the average pilgrim. Important contribution.

    ReplyDelete
  2. ஆசிரியர் காசி மகாத்மியம் பற்றி தனி புத்தகம் பிரசுரிக்கலாம். காசி யாத்திரை செல்பவர்களுக்கு உபயோகமாகவும் செல்லாதவர்களுக்கு மனநிறைவு கொடுப்பதாகவும் இருக்கும். அதே போல தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கும் எழுதி பிரசுரிக்கலாம். மிக சிறப்பு.

    ReplyDelete