Sunday, October 11, 2020

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் – காசி விச்வநாதம் – VI

 ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் காசி  விச்வநாதம் VI

                                           சிவபாதசேகரன்

வலைத்தளப் படம்-நன்றி-விக்கிபீடியா 

காசி மாநகரத்தில் உள்ள அனைத்துக் கோயில்களையும், ஸ்நான கட்டங்களையும் தரிசிக்க வேண்டுமென்றால் அங்கு சில வாரங்கள் தங்கினால் மட்டுமே சாத்தியமாகும். ஆனால் காசிக்குச்  செல்பவர்கள் பெரும்பாலும் ஒரிருநாட்களே தங்கி விட்டுக்  கங்கையிலும் ஒரு சில கட்டங்களில் மட்டுமே  நீராடி விட்டு , விசுவநாதர், விசாலாக்ஷி , அன்னபூரணி, பைரவர், துர்க்கை ஆகிய மூர்த்திகளின் கோயில்களை மட்டுமே தரிசித்து விட்டு   வருகின்றனர். சுமார் 350 க்கும்மேற்பட்ட கோயில்களின் இருப்பிடமும் முக்கிய ஸ்நானகட்டங்களும் அவற்றின் பெருமைகளும் அறிந்து கொள்ளாமலேயே திரும்பி விடுகின்றனர். ஸ்ரீ விசுவநாதப் பெருமான் அருளால் , காசிக் கண்டத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்ற ஒரு நூல் கிடைத்தது. அதிலிருந்து பெறப் பட்ட சில முக்கியத் தகவல்களை இங்கு தருகின்றோம்.   நூலாசிரியர்கள் நமது நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள்.

முதலாவதாகக் காசியில் உள்ள தீர்த்தங்களின் பெருமையை அறிவோமாக. பகீரதனது தவத்தால் பூமிக்குக் கங்கை வந்தவுடன், சிவபெருமானும் விஷ்ணுவும் அவனுக்குக் காட்சி அளித்ததையும் திருமாலானவர் சுதர்சன சக்கரத்தால் தீர்த்தம் உண்டாக்கியபோது சிவனது காதிலிருந்த குண்டலம் அதி வீழ்ந்து, மணி கர்ணிகா எனப் பெயர் பெற்றதையும் முன்னரே கண்டோம்.அப்பகுதி முழுதும் தெய்வீக ஒளி  வீசியதால்அதற்குக் காசி என்று பெயர் வழங்கப்பட வேண்டும் என்று மகாவிஷ்ணு கூறினார். மத்தியான ஸ்நானத்திற்கு ஏற்ற இடமும் இதுவே. தெற்கில் கங்கா கேசவர் ( லலிதா காட்), வடக்கே ஹரிச்சந்திர மண்டபம், கிழக்கே கங்கை , மேற்கில் சுவர்க்க த்வாரி ( சௌராஹா க்ராஸ் ரோடு ) ஆகியவை மணிகர்ணிகா க்ஷேத்திர எல்லைகளாகும் என்று விஷ்ணு பகவான் கூறியிருக்கிறார். இப்பகுதியானது ஹரிச்சந்திரனது வரலாற்றுத் தொடர்புடையது. படகில் இங்கிருந்து வடக்கு நோக்கிச் சென்றால் சக்ர புஷ்கரிணி அருகிலுள்ள கரையில் நீராடலாம்.

 கங்கையில் நீராடுவதால் அனைத்துத் தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிட்டும் என்று காசிக் காண்டம் குறிப்பிடுகிறது. அதனை நினைத்தாலே புண்ணியங்கள் வந்து சேருகின்றன. அங்கு செய்யப்படும் தானங்களுக்கும் பலன் அதிகம். அதனால் முன்னோர்களும் நரகத்திலிருந்தால் அதிலிருந்து விடுபட்டு, சுவர்க்கத்தை அடைகிறார்கள். இங்கு கங்கை உத்தர வாகினியாகப் பாய்கிறாள். இங்கு இறக்கும் எல்லா உயிர்களும் முக்தி பெறுகின்றன. வேறு ஊரில் இறந்த உடலின் அஸ்தியைக்  கங்கையில் கரைத்தால் மோக்ஷம் கிட்டிவிடும்.

வருண நதியும் கங்கையும் சங்கமிக்கும் இடத்தில் மஹா விஷ்ணு தனது பாதங்களைக் கழுவிக் கொண்டதல் அந்த இடம் பாதோதக தீர்த்தம் எனப்படுகிறது. இதில் நீராடினால் ஏழு பிறவிகளில் செய்த பாவங்களும் நீங்கி விடுகின்றன. மரண பயமும் நீங்கி விடுகிறது. தற்போது அத்தீர்த்தம் ஒரு ஓடை வடிவில் காணப் படுகிறது.அருகில் த்ரிலோசநேச்வரர் கோயில் உள்ளது. அக்ஷய திருதியையன்று இங்கு மக்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.  

பஞ்சநத தீர்த்தம் எனப்படும் பஞ்சகங்காவில் நீராடுவது சிறப்பு வாய்ந்தது. இது பிரயாகையில் மாக மாதம் முழுதும் நீராடுவதற்குச் சமம். பித்ரு காரியங்கள் இங்கு செய்வதால் பித்ருக்களின் ஆசியைப் பெறலாம். அஸ்வமேத யாக பலனும் கிட்டிவிடுகிறது. கார்த்திகை மாதத்து  மாலை வேளைகளில்  விளக்குகளை மூங்கில் கூடைகளில் வைத்து நீரில் விடுகின்றனர். இது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.  கார்த்திகை மாத சூர்யோதய காலத்தில் ஏராளமானோர் இங்கு நீராடுகின்றனர்.

பிரமதேவன் பத்து அஸ்வமேத யாகங்களைச் செய்த இடத்தைத் தசா அஸ்வமேத கட்டம் என்கிறார்கள். அங்கு பிரம்மா ஸ்தாபித்த லிங்கத்திற்கு தசாச்வமேதேச்வரர் என்று பெயர். இங்கு செய்யப்படும் ஸ்நானம், ஜபம், பாராயணம், பூஜை,தர்ப்பணம்,தானம் ஆகியவை விசேஷ பலன்களை அளிக்கும். அன்ன தானம் செய்வதும் மிகுந்த பலன் அளிக்க வல்லது. இங்கு ஆடி அமாவாசைக்குப் பிறகு பதினைந்து நாட்கள் ஸ்நானம் செய்து தசாச்வமேதேச்வரரைத் தரிசிக்க வேண்டும். மேலும் இவ்விடத்தில் தினமும் இரவு 7 அணி அளவில் கங்கைக்கு ஆரத்தி செய்யப்படுகிறது.

இந்நகரின் தெற்கே அஸி கங்கா சங்கமம் உள்ளது. வருணும் அஸியும் சங்கமிப்பதால் ஊருக்கு வாரணஸி என்று பெயர் வந்தது. முற்காலத்தில் நதியாக இருந்த அஸி தற்போது ஓடையாகக் காணப்படுகிறது. இந்த இடத்திலும் கங்கா ஆரத்தி நடைபெறுகிறது. வருண கங்கா சங்கமம் வரை படகில் சென்று ஸ்நானம் செய்து பஞ்ச கட்ட பிண்டம் தருகின்றனர்.

பிப்பில தீர்த்தம் என்பது தற்போது கிணறு வடிவில் த்ரிலோசநேச்வரர் கோயிலருகில் உள்ளது. அக்ஷய திருதியையன்று இங்கு நீராடுதல் சிறப்பு.

வாரணஸியில் உள்ள பெரிய தீர்த்தம் விமல தீர்த்தமாகும். துர்கா தேவி ஆலயம் செல்லும் வழியில் உள்ள லோலார்க் ஆதித்யர் கோயிலில் உள்ள லோலார்க் குண்டத்திலும் நீராடுவது எல்லா நன்மைகளையும் தரும்.

ஈசானன் என்ற திக்பாலன் தனது சூலத்தால் ஏற்படுத்திய தீர்த்தம் கிணறு வடிவில் ஞான வாபி என்று காட்சியளிக்கிறது. அருகில் விசுவநாதர் கோயில் உள்ளது. ஞானத்தை நீராடுபவர்க்கு அளிப்பதால் இது ஞான வாபி எனப்பட்டது. காசி கண்டம் இதன் பெருமையை வருணிக்கிறது.

கங்கைக் கரையிலுள்ள எல்லா ஸ்நானகட்டங்களின் பெயர்கள், அவற்றின் சிறப்புக்கள் ஆகியவற்றைத் தெரிவிக்கும் நூல்கள் உள்ளன. ஆர்வமுள்ளோர் அதைப் படித்துத் தெரிந்து கொண்டு காசிக்குச் செல்வது உத்தமம்.

காசி நகரக் கோயில்களைப் பற்றி அடுத்த பதிவில் காண்போம்.

 

                                          ( காசியின் பெருமைகள் தொடரும் )

2 comments:

  1. ஏற்கெனவே ஆசிரியரிடமிருந்து நமக்குக் கிடைத்திருக்கிற ஐந்து பாகங்களைப் போலவே இந்தப் பகுதியும் அழகாகவே அமைந்திருக்கிறது.ஆசிரியருக்கு ம்கவும் நன்றி.

    ReplyDelete
  2. ஆசிரியரின் சிறந்த தகவல்கள், எளிய நடை, மற்ற பிற நுலாசிரியர்களை பெருமைப் படுத்துவது போன்றவை பாராட்டுக்குக்குரியன.

    ReplyDelete