![]() |
| தூரத்தில் தெரிவது மஹாகாளேசுவர சுவாமி ஆலயம் |
ஏழு மோக்ஷபுரிகளுள் ஒன்றான உஜ்ஜைனி,
முற்காலத்தில் அவந்திகா என்று வழங்கப்பட்டது. மாளவ தேசமாகிய அவந்தி நாட்டுத் தலை
நகராக விளங்கிய இதுவே விக்கிரமாதித்தன் தோன்றியதும்,
அவனது மரணத்திற்குக் காரணமாக இருந்த சாலிவாகனன் வசித்ததும் ஆகிய சரித்திரப்புகழ்
பெற்றது. இவ்விருவரையும் முன்னிட்டு இரு சகாப்தங்கள் தோன்றின. நர்மதை நதிக்கு
வடக்கே விக்கிரம சகமும், தெற்கில் சாலிவாகன சகமும் தோன்றின. மகாகவிகளான
காளிதாசன்,தண்டி,பர்திருஹரி ஆகியோர் வாழ்ந்ததும் இந்நகரில்தான். இந்நாட்டை ஜைன
மன்னனாகிய சுதன்வா என்பவன் ஆண்டதால் உஜ்ஜைனி என்ற பெயர் மாற்றம் ஏற்பட்டது. சிப்ரா
நதியின் கரையில் உள்ள இந்நகர எல்லையில் மாள்வா என்ற புராதன பட்டணமும், விக்கிரமாதித்தன்
காலத்திய கோட்டையின் சின்னங்களும் உள்ளன.
![]() |
| விக்கிரமாதித்தன் |
விக்கிரமாதித்தனுக்கு
அருளிய காளி நகருக்கு உள்ளும் , காளிதாசனுக்கு அருள் செய்த காளி ஊருக்கு 2 கி. மீ. வெளியிலும் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.
தேவகியின் எட்டாவது குழந்தையால் தனக்கு மரணம் வரும் என்று அறிந்த கம்சன், அவள்
ஈன்றெடுத்த பெண் குழந்தையை வீசி எறிந்து கொல்ல முயன்றபோது அப்பெண் குழந்தை காளியாக
உருக்கொண்டு, பின்னர் உஜ்ஜைனியில் வந்து தங்கியதாகப் புராணம் கூறும். கயிலை
மலையிலிருந்து இராவணன் கொண்டு வந்த காளியே இங்கு தங்கியதாகவும் கூறுவர். இவளே
விக்கிரமாதித்தனுடன் நேரிடையாகப் பேசியதாகவும் காளிதாசனை மகா கவியாக ஆக்கியவள்
என்றும் உலகம் போற்றுகிறது. விக்கிரமாதித்தனுக்கு அருளிய காளியை ஹரசித்தி மாதா
என்றும் அழைக்கிறார்கள்.
மேகத்தைத்
தூதுவிடுவதாக அமைக்கப்பெற்ற மேகதூதம் என்ற தனது காப்பியத்தில், மகாகவி காளிதாசன்,
மேகத்தை நோக்கி, “ விந்திய மலைக்கு வடக்கே செல்லும் மேகமே, நீ செல்லும்
வழியிலிருந்து சற்று விலகியிருந்தாலும், அவந்திகா நகரையும், அங்கு எழுந்தருளியுள்ள
ஈசனையும் காணத் தவறாதே. ஒருவேளை நீ காணாவிட்டால் கண் பெற்ற பயனை அடைய மாட்டாய்”
என்று சொல்வதாக அமைத்துள்ளது இன்புறத்தக்கது.
![]() |
| சிப்ரா நதி |
ஊர் நடுவே உள்ள மகா
காளேச்வரர் ஆலயத்திற்கு ஏராளமான யாத்ரீகர்கள் வருகை தருகிறார்கள். இந்த ஆலயம்
ஐந்து நிலைகளைக் கொண்டது. கருவறையில் சுமார் மூன்று அடி உயரத் தோற்றத்துடன் மகாகாள
நாதர் காட்சி அளிக்கிறார். ஆவுடையார் பூமிக்கு அடியில் இருக்கிறது. சுவாமி தெற்கு
முகமாக எழுந்தருளியுள்ளார்.ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்களுள் தக்ஷிண முகமாக அமைந்துள்ள
மூலவர் சன்னதி இது மட்டுமே ஆகும். ஜ்யோதிர் லிங்க பாணத்தைக் கண் குளிரத்
தரிசிக்கலாம். தினமும் விடியற்காலை சுமார் நான்கு மணிக்கு நடைபெறும் விபூதி
அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆரத்தியும் (பஸ்மாரத்தி) பிரசித்தியானவை.
நாள்தோறும் ஐந்து முறை ஆரத்தி நடைபெறும். நடுவில் உள்ள நிலையில் ஓங்காரேச்வரர்
சன்னதியும், மேல் தளத்தில் நாக சந்திரேசுவரர் சன்னதியும் உள்ளன.நாக பஞ்சமியன்று
மட்டுமே நாக சந்திரேசுவரரைத் தரிசிக்கலாம். பிராகாரத்திலுள்ள கோடி தீர்த்தம்
புனிதமானது .இந்த ஆலயம் மராட்டிய, சாளுக்கிய, பூமிஜா கலைப் பாணியில் அமைந்துள்ளது.
சுவாமி கருவறை விமானம் நேர்த்தியாக அமைந்துள்ளது.திருநாவுக்கரசர் தேவாரத்தில் இத்தலம் உஞ்சேனை மாகாளம் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ரத்னமாலா என்ற
மலையில் வசித்து வந்த அரக்கன் ஒருவன் மகாகாளநாதரின் பரம பக்தர்களாக விளங்கிய
நான்கு அந்தணச் சிறுவர்களைக் கொன்று விடுவதாக மிரட்டவே, அச்சிறுவர்கள் ஈசனைத்
தஞ்சம் அடைந்தனர். பெருமானும் அங்குத் தோன்றி, அரக்கனை அழித்து.அவர்களைக்
காப்பாற்றினான். அத்தலத்திலேயே நிரந்தரமாக வீற்றிருந்து அடியார்களுக்கு எல்லா
நலன்களையும் அருளுமாறு அக்குழந்தைகள் வேண்டவே, அதற்கிசைந்த சிவபிரான், அதுமுதல்
அந்நகரில் கோயில் கொண்டு விளங்குகின்றான் என்று தல புராணம் கூறுகின்றது.
இங்குப் பன்னிரண்டு
ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகா கும்பமேளாவில் நீராடி , இறைவனைத் தரிசிக்கப்
பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். சந்நியாசிகள் பலரும் வருகை தருவர்.
![]() |
| கால பைரவர் ஆலயம் |
காசியைப்போலவே இங்கும் பைரவருக்கென்று தனிக்
கோயில் உள்ளது. அவருக்கு எதிரில் நின்ற வண்ணமாக நாய் காணப்படுகிறது. குங்குமத்தால்
அலங்கரிக்கப்பட்டும் மராட்டா பாணியில் தலையில் பக்ரி அணிவிக்கப்பட்டும் பெரிய
உருவில் கால பைரவர் காட்சி தருகிறார். அவரே இந்நகரக் காவல்
தெய்வமாகவும்,சேனாபதியாகவும் போற்றப்படுகிறார். காலபைரவ வழிபாடு,கபாலிகர்களுக்கும், அகோரிகளுக்கும் மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
மாலை
நேரங்களில் இக்கோயிலில் ஏற்றப்படும் தீபங்கள் காண்போரைப் பரவசப்படுத்துபவை.
உயர்ந்து விளங்கும் தீபஸ்தம்பத்தின் மீது ஏறி விளக்குகளை ஏற்றுகிறார்கள்.
ஹர்சித்தி மாதா
கோயில் : 52 வது சக்தி பீடமாக இதனைக் கூறுகிறார்கள். இவளது அருளுக்குப் பாத்திரமான
விக்கிரமாதித்தன், தனது தலையை பதினோரு முறை வெட்டி அர்ப்பணித்தான் என்றும் ஒவ்வொரு
முறையும் காளி தேவியின் அருளால் தலையானது உடலோடு மீண்டும் சேர்ந்து விடும் என்றும்
வரலாறு கூறும்.
மகா கணபதி கோயில் :
மகாகாளேச்வரர் ஆலயத்திற்கு வடக்கில் உள்ளது. இங்கு விநாயகப்பெருமான் மிகப்பெரிய
சுதை உருவில் காட்சி அளிக்கிறார். இக்கோயிலில் இளம் சிறுவர்கள் வேதம்
கற்கிறார்கள். ![]() |
| வேத வகுப்பு |
ஸ்ரீ கோபால் மந்திர்:
சாத்ரி சௌக்கில் உள்ள இந்தக் கோயிலில் ராதை, கிருஷ்ணன் ஆகிய மூர்த்திகளைத்
தரிசிக்கலாம். இதனைக் கட்டியவர், பைஜா பாய் ஆவார்.
காளி கோயில்:
மேற்கண்ட கோபால் மந்திர் அருகில் உள்ளது. காளிதாசனுக்கு அருளிய காளி இவள். பெரிய
உருவுடன் காட்சி அளிக்கும் இவளைக் கண்கண்ட தெய்வமாக யாத்ரீகர்கள் வழிபடுகின்றனர்.
மற்றும்
ஓங்காரேசுவரர், அகலேசுவரர், ரிண முக்தேசுவரர், மங்களேசுவரர், ஆகியோரது
சன்னிதிகளையும், கிருஷ்ணனின் குருவான சந்தீப ரிஷியின் ஆசிரமம் இருந்த இடத்தையும்,
பர்த்திருஹரியின் குகையையும் தரிசிக்கலாம்.
வேத காலம்
முதற்கொண்டே உஜ்ஜைனி நகரம் சிறந்து விளங்கியதாகத் தெரிகிறது. அசோகச் சக்கரவர்த்தி
இதனை ஆண்டிருக்கிறார். பின்னர் முகலாயர் ஆட்சிக்கு உட்பட்ட இந்நகரம், 1810 ம் ஆண்டு முதல் சிந்தியா அரசர்களின் ஆளுகைக்கு வந்தது.
இந்தூர் வழியாக
வருபவர்கள் அங்கிருந்து ரயில் மூலமாகவும் சாலை மார்கத்திலும் உஜ்ஜைனியை வந்து
அடையலாம். இங்கு தங்குவதற்கான வசதிகள் இருப்பதால் அனைத்து ஆலயங்களையும் நிதானமாகத்
தரிசிக்க முடியும். மேலும் மோக்ஷத்தைத் தரவல்ல தலமாக இருப்பதால் ஒரிரவேனும் தங்கி
,சிப்ரா நதியில் நீராடிவிட்டு மகாகாளேசுவரரையும் , காளி, பைரவர் ஆகிய
மூர்த்திகளையும் தரிசனம் செய்துவிட்டு
வருதல் மரபு ஆகும்.




















