![]() |
| கடலுக்குள் இரு சிவலிங்கங்களை அலைகள் தழுவுகின்றன. |
ஸோம்நாத் ஆலயத்தை அல்லாவுதீன் கில்ஜியின் தளபதி நிர்மூலமாக்கிச் சென்ற
பிறகு ஜுனாகத் மகாராஜா மணிபாலா என்பவர் அதனை மீண்டும் பழுது பார்த்தார். கி.பி. 1393 வரை மேலும்
பாதிப்புக்கு ஆளாகாத இக் கோயிலை ஜாபர்கான் என்ற குஜராத் கவர்னர் சிதைத்து
விட்டான். அதனுள் ஒரு மசூதியையும் கட்டினான். மக்களை மத மாற்றம் செய்ய அவன்
முயன்றபோது, எதிர்ப்பு ஏற்பட்டது. அஹமத் ஷா என்பவன் மதம் மாற்றுதலில் அதி தீவிரமாக
ஈடுபட்டான். குஜராத்தின் முழுப் பகுதியும் இவனது ஆளுகைக்குள் வரவே,
செல்லுமிடங்களில் எல்லாம் இருந்த கோயில்களை இடித்துத் தள்ளினான். பின்னர் ஒருவாறு
சோம்நாத் ஆலய பூஜைகள் தொடரலாயின. அக்பரது ஆட்சிக் காலத்திலும் பெரிய அளவில்
பாதிப்பு இல்லை என்கிறார்கள். ஊர் எல்லையில் சிறு கோயிலில் ஸோமேசுவரர் வழிபாடு
நடந்து வந்தது.
![]() |
| கடலும் கோயிலும் |
கி.பி.1783ம் ஆண்டு இந்தூர்
மகாராணி அஹல்யா பாய் அவர்கள் பழைய கோயிலுக்குச் சற்றுத் தள்ளிப் புதிய கோயில்
ஒன்றைக் கட்டினார். அங்கு ஓர் பாதாள அறையில் பாதுகாப்பாக சிவலிங்கம்
நிறுவப்பட்டது.
பிற்காலத்தில் பிரபாஸ் பரோடா அரசின் கீழ் வந்தது. அப்போதும் ஜுனாகத்
நவாபின் தலையீட்டால் பரோடா அரசு செல்வாக்கை இழந்தது. அஹல்யா பாய் கட்டிய கோயிலும்
பொலிவிழந்தது. பிரிட்டிஷ் அரசாங்கமும் இதில் தலையிட விரும்பவில்லை.
1922 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓர் இளைஞனாக இங்கு சென்ற
திரு முன்ஷிஜி அவர்கள் கோயிலின் நிலையைக் கண்டு கதறி அழுதிருக்கிறார். கிருஷ்ண
பகவான் தன்னுடலை நீத்த இடத்திலிருந்து கடலை நோக்கிய வண்ணம் குமுறியிருக்கிறார்.
மீண்டும் அங்கு கோயில் எழும்புமா என்பது அப்போது அவருக்கு எளிதில் நிறைவேற முடியாத
கனவாகவே தோன்றியது.
ஜுனாகத் நவாப் உட்பட பல இஸ்லாமிய அரசர்கள் நாட்டு விடுதலையின் போது
பாகிஸ்தானுடன் சேர்ந்து விட எத்தனித்தார்கள். எண்பது சதவீதத்திற்கும் மேற்பட்ட
இந்துக்களைக் கொண்ட ஜூனாகத்தில், நவாப்பின் இச் செய்கை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இணையான
ஒரு அரசாங்கத்தையே அவர்கள் தோற்றுவிக்கலாயினர். அதை சமாளிக்க முடியாமல் நவாப் தனது
மனைவிகள், மக்கள், நகைகளோடு
பாகிஸ்தானுக்கு ஓடி விட்டார்.
டெல்லியில் திரு முன்ஷிஜியும் சர்தார் படேலும் பேசிக் கொண்டிருந்த
வேளையில் தொலைபேசி ஒலித்தது. இந்தியப்படை ஜுனாகத் நகருக்குள் நுழைய நவாப்
சம்மதித்து விட்டார் என்ற செய்தி வந்தது. மகிழ்ச்சி வெள்ளம் கரை போண்டு ஓடியபடி, “ஜெய் ஸோம்நாத் “ என்று முன்ஷிஜி கோஷமிட்டவுடன் சர்தார் படேல் புன்னகைத்தார். இருவருமாக
ஸோம்நாத் சென்று ஆலயத்தை மீண்டும் நிர்மாணிப்பது பற்றி ஆலோசனை நடத்தினர். அப்போது
படேல் அவர்கள் அஹல்யா பாய் கட்டிய கோயிலில் ஆற்றிய உரையைக் கீழே தருகிறோம்:
“ On this
auspicious day of the new year, we have decided that Somanatha should be reconstructed. You, people of Sowrashtra
,should do your best. This is a Holy task in which all should participate.”
கோயிலின் அப்போதைய நிலை:
கோயிலின் பழைய அமைப்புக்களான கர்ப்பக்கிருகம், பிரதக்ஷின வழி, நடு
மண்டபம், சிதைக்கப்பட்ட சிற்பத் தூண்கள், உடைக்கப்பட்ட கர்பக்கிருகத் தரை இருப்பது
தெரிய வந்தது. தொல் பொருள் ஆய்வின்படி, இடிக்கப்பட்ட கோயில்களின் இடிபாடுகள்
பூமிக்கடியில் ஏராளமாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. கற்பலகைகளில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருந்ததைக் கண்டனர். ஆவுடையார் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.
உடைந்த சிற்பங்களில் பல்வேறு கடவுள்கள், நாட்டியமாடும் பெண்கள் காணப்பட்டனர். ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராம்மி கல்வெட்டு
ஒன்றும் இருந்தது. சிற்பிகளின் பெயர்களும் ஒவ்வொரு சிற்பத்துடன் காணப்பட்டன.
கர்ப்பகிருகத்தின் அஸ்திவாரம் 13 அடி ஆழத்தில் இருந்தது. கடல் சுவர் இடிந்து போயிருந்தது. லார்ட் கர்சன்
இக்கோயிலை பழங்காலச் சின்னமாக அறிவித்ததோடு சுற்றுச் சுவரையும் அமைத்துக்
கொடுத்தார். இது தொடர்பாக முன்ஷிஜி கூறியதைக் கேளுங்கள் :
“ We were
,however, firm in our view that the Temple of Somanatha was not an ancient
monument. It lived in the sentiment of the whole nation and its reconstruction
was a national pledge. Its preservation should not be a mere matter of
historical curiosity “













