Monday, October 31, 2011

தலையாலங்காட்டுத் தல வரலாறு

                                              
   திருச்சிற்றம்பலம்
கங்கை எனும் கடும் புனலைக் கரந்தான் தன்னைக்
    காமரு பூம்பொழிற் கச்சிக் கம்பன் தன்னை
அங்கையினில் மான்மறி ஒன்று எந்தினானை
    ஐயாறு மேயானை ஆரூரானைப்
பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் தன்னைப்
    பரிதிநியமத்தானைப் பாசூரானைச்
சங்கரனைத் தலையாலங்காடன்தன்னைச்
    சாராதே சால நாள் போக்கினேனே.
திருச்சிற்றம்பலம்
           --- திருநாவுக்கரசு நாயனார் தேவாரம்

தலமும் இருப்பிடமும்: புண்ணியத் தலங்களும் தீர்த்தங்களும் நிறைந்த சோழ வளநாட்டில் தெய்வப்பொன்னி நதியின் தென்கரையில் உள்ள தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலங்களுள் 93 வது தலமாக விளங்குவது திருத்தலையாலங்காடு எனும் தலம்.  இது வரலாற்றுச் சிறப்பும், புராணச் சிறப்பும் மிக்க தலமாக விளங்குகிறது.

இருப்புப் பாதை வழியில் செல்வோர் திருவாரூரில் இறங்கி, கும்பகோணம் செல்லும் பேருந்து மார்க்கத்தில் 14 கி.மீ. பயணித்தால், தலையாலங்காட்டை அடையலாம். சோழ சூடாமணி ஆற்றின் வடகரையில் 5 நிமிட நடைதொலைவில் ஆலயம் அமைந்துள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து ரயிலில் வருபவர்கள், கும்பகோணத்தில் இறங்கி,
25 கி.மீ. தூரம் திருவாரூர் செல்லும்  பேருந்தில் பயணித்தால் இத் தலத்தை அடையலாம்.

தலத்தின் தொன்மை:   தலையாலங்கானத்துப் போர் தமிழக சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. பாண்டியன் நெடுஞ்செழியன், இங்கு நடைபெற்ற போரில் சோழனை வென்றதால் "தலையாலங்கானத்துச் செரு வென்ற 
நெடுஞ்செழியன்" எனப்பட்டான். 

தலத்தின் பெருமை: ஆலங்காடு எனப்படும் தலங்களுள் இது முதன்மையானது எனக் கருதுவர். இதனை, முக வடாரண்யம் என்று வடமொழியில் கூறுவர்.




கோயில் அமைப்பு: ஊரின் நடுவில் அமைந்துள்ள இச்சிவாலயம்,கிழக்கு நோக்கியது. எதிரில் மகிமை வாய்ந்த சங்க தீர்த்தம்  என்ற திருக்குளம் உள்ளது. இதில் அல்லிமலர்கள் அழகாகக் காட்சி அளிக்கின்றன. இதன் மேல்கரையில் படித்துறை விநாயகர் சன்னதி உள்ளது. மேல் கரையிலும். தென்கரையிலும் ஸ்நான கட்டங்கள் விளங்குகின்றன. மேல்கரையில், ஆலய மதிலை ஒட்டியபடி ஜப் மண்டபம் உள்ளது.  ராஜ கோபுரம் இல்லாததால் நுழைவு வாயிலில் பஞ்ச மூர்த்திகளோடு கூடிய வாயிலாக அமைக்கப்படுகிறது.வாயிலைக் கடந்து   உள்ளே சென்றால், கொடிமர விநாயகரையும் பலிபீடம், நந்தி ஆகியவற்றையும் தரிசிக்கலாம். இதன் அருகில் வலப்புறம்,  தெற்கு நோக்கிய அம்பாள் சன்னதியைக் காணலாம். மூலவர் சன்னதி சற்று உயரத்தில் காணப்படுகிறது. நின்ற கோலத்தில் கணபதியும், அமர்ந்த கோலத்தில் பாசாங்குசம் ஏந்தியவளாக அம்பிகையும் முன்மண்டபத்தின்  இரு புறமும் காணப்படுகின்றனர்.

 .


சுவாமி சன்னதியின் நுழைவாயிலில் மகாமண்டப முகப்பில் கணபதியும் கந்தனும் காட்சி அளிக்கின்றனர். மகாமண்டபச் சுவற்றில் அப்பர் பெருமான் இத்தலத்து இறைவனைப் பாடிய திருத்தாண்டகப் பாடல்கள் கல்வெட்டில் அமைக்கப்பெற்றுள்ளது. தெற்கு பிராகாரத்தில் காசி விஸ்வநாதரும் விசாலாக்ஷியும் தனி சன்னதி கொண்டுள்ளனர். கன்னி மூலையில் கணபதிக்குத் தனிச் சன்னதி உள்ளது. வடமேற்கு மூலையில் முருகன்,வள்ளி, தெய்வானை சமேதராகக் காட்சி அளிக்கிறார். இவ்விரண்டு  சன்னதிகளுக்கும் இடையில் சிவலிங்க மேடை அமைய உள்ளது.


            

வடக்கு பிராகாரத்தில் ஸ்தல விருக்ஷமான பலா மரம் மிகவும் தொன்மை வாய்ந்ததாகக் காணப்படுகிறது. கோமுகத்தின் அருகில்  சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. இதன் அருகில் பத்துக் கரங்களுடன் வடக்குத் திசையை நோக்கியவளாகக் காளி தேவி காட்சி அளிக்கிறாள்.இப் ப்ராகாரத்தில் வில்வ மரம் உயர்ந்து விளங்குகிறது. பைரவர் சன்னதியில் இரு பைரவர்கள் உள்ளனர்.  நால்வர்களில் அப்பரும் சுந்தரரும் மட்டுமே இருக்கிறார்கள். சம்பந்தர், மணிவாசகர்  ஆகிய மூர்த்திகள் நூதனமாகப்  பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. தெற்கு நோக்கிய அம்பாள சன்னதியின் முகப்பில் கிழக்கு நோக்கியவாறு அனுக்ரக சனி பகவான் சன்னதி கொண்டுள்ளார். அம்பிகை சன்னதியின் கோமுகிக்கு அருகில் சண்டிகேச்வரி இருக்கக் காணலாம்.
       
சுவாமி சன்னதியின் அர்த்தமண்டபச் சுவர்களில் உள்ள பஞ்ச கோஷ்டங்களுள் தக்ஷிணாமூர்த்தி மட்டுமே காணப் படுகிறார். மூலவர் விமானம் உயரமானது. இதில் தக்ஷிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, முதலிய சுதைச் சிற்பங்கள் காணப படுகின்றன.

விமானத்தின் கிழக்கு முகப்பில் பெரிய வடிவில் சோமாஸ்கந்தர காட்சிளிக்கிறார்.

மூர்த்திகள்: தலத்து இறைவர் சதுர ஆவுடையார்மீது கருவறையில் தரிசனம் தருகிறார். முயலகன் மீது ஆடியதால், நர்த்தனபுரீஸ்வரர் என்றும் ஆடவல்லநாதர் என்றும் வழங்கப்படுகிறார்.இவரைத் தரிசிக்காமல் நாட்களை வீணாக்கிவிட்டேனே என்று அப்பர் சுவாமிகள் பாடல்தோறும் குறிப்பிடுகிறார். மேலும், இப்பெருமான், தொண்டர்களுக்குத் தூய நெறி காட்டுபவனாகவும், நரகத்தில் வீழாமல் நம்மைக் காப்பவனாகவும்மும்மூர்த்தி வடிவில் விளங்குபவனாகவும், அடியார் சிந்தையில் புகுந்திருந்து நீங்காதவனாகவும், வேத வடிவினனாகவும், கயிலை மலையை எடுத்த அரக்கனை மன்னித்து அவனுக்கு இராவணன் என்ற பெயர் கொடுத்த கருணாகரனாகவும் விளங்குவதாக அப்பர் பெருமானின் தேவாரப் பதிகம் நமக்கு எடுத்துரைக்கிறது.
,           
அம்பிகையின் திருநாமம் பாலாம்பிகை என்பதாகும். இவளைத் திருமடந்தை என்று தலத் திருப்பதிகம் குறிப்பிடுகிறது. அவளது அழகுக்கு ஒருவரும் நிகர் இல்லை என்னும்படிப் பொலிவுடன் காட்சி அளிக்கிறாள். உலகுக்கெல்லாம் தாயான இவள் கருணையே வடிவமானவள். ஊர்  மக்களுக்குக் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள்.

திருநள்ளாற்றில் இருப்பது போலவே, அம்பாள சன்னதியின் வாயிலருகில் கிழக்கு நோக்கியபடி, அனுக்ரஹ சனி பகவான் சன்னதி கொண்டுள்ளார். சனிப் பெயர்ச்சியின் போது இவருக்கு விசேஷ வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

தேவகோஷ்டத்தில் கண்கவர் குருநாதனாகக் காட்சி அளிக்கும் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் அர்ச்சனைகள் நடைபெறுகின்றன.


 
பத்துக் கரங்களுடன் வடக்கு முகமாக அருள் பாலிக்கும் காளி தேவியை மக்கள் வெள்ளிக் கிழமைகளில் வழிபட்டு, வேண்டிய வரங்கள் யாவும் பெறுகின்றனர். பைரவர் சன்னதி மிகவும் சிறப்பானது. இரு பைரவர்கள் இங்கு காட்சி அளிக்கின்றனர். ஒருமூர்த்தியிடம் மட்டும் நாய் வாகனம் உள்ளது. தேய் பிறை அஷ்டமியில் திரளான மக்கள் இவரை வலம் வந்து  எல்லா நலமும் பெறுகிறார்கள்.




தீர்த்தங்கள்: கோயிலுக்கு எதிரில் உள்ள சங்க தீர்த்தம் தீராத பல நோய்களையும் தீர்க்க வல்லது. தோல் சம்பந்தமான நோய்கள் இதில்  நீராடியதால் நீங்கப்பெற்றதாகப் பலரும் கூறக் கேட்கலாம். அருகிலுள்ள செம்பங்குடியில் பல்லாண்டுகளுக்கு முன்னர் விஜயம் செய்திருந்த ஸ்ரீ காஞ்சி  காமகோடி மகா பெரியவர்கள், 48 நாட்கள் அதிகாலையில் இங்கு வந்து ஸ்நானம் செய்துவிட்டு, நர்தனபுரீஸ்வரர் சன்னதியைப் பதினொரு முறை வலம் வந்து தரிசிப்பார்களாம்.

சோழ சூடாமணி ஆறு, கோயிலுக்குத் தெற்கில் ஓடுகிறது. இதனைக் கடுவாய் நதி என்றும் அழைப்பர். இப்புனித நதியின் கரையில் பல சிவாலயங்கள் இருக்கக் காணலாம்.

விருக்ஷம்: வடக்குப் பிராகாரத்தில் உள்ள பழமையான பலா மரமே இத்தல விருக்ஷமாகக் கருதப்படுகிறது. தலத்தின் பெயரோடு கூடிய ஆல மரம் கோயிலுக்குள் தற்போது இல்லை.

புராண வரலாறு: தமது தவ வலிமையால் அகந்தை கொண்ட தாருகாவன முனிவர்கள் ஆபிசார வேள்வி செய்து ஏவிவிட்ட முயலகனை அடக்கிய சிவபெருமான், அம்முயலகன் மீது நடனம் ஆடிய தலம் இது. எனவேதான், சுவாமிக்கு நர்த்தனபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. கிருத யுகத்தில் கபில முனிவர் பூஜித்து, தை அமாவாசை தினத்தில் சிந்தாமணியைப் பெற்றுக்கொண்டார். சரஸ்வதி தேவி பூஜித்து ஜோதிர்லிங்க தரிசனம் பெற்றாள்.  

இக்கலியுகத்திலும் சங்குதீர்த்ததில் நீராடுபவர்கள், குன்மம்,முயலகநோய், சித்தப்ரமை,வெண்குஷ்டம் முதலிய மகா ரோகங்களிளிருந்து  நிவர்த்தி பெறுகிறார்கள். 

வழிபட்டோர்: கபில முனிவர், தாருகாவன முனிவர்கள், காளி, சனி பகவான், திருநாவுக்கரசு நாயனார் ஆகியோர். இத்தலத்திற்கு மிக அருகிலுள்ள குடவாயில், நாலூர் மயானம், பெருவேளூர்,கரவீரம் ஆகிய தலங்கள் திருஞானசம்பந்தரின் தேவாரத் திருப்பதிகங்களைப் பெற்றுள்ளதால், சம்பந்தப்பெருமான் தலையாலங்காட்டிற்கும் எழுந்தருளி, பதிகங்கள் பாடியிருப்பார். அதுபோலவே, அருகிலுள்ள ஊர்களான திருவாஞ்சியத்தையும், திருவாரூரையும் பாடியுள்ள சுந்தரரும் இத்தலத்து இறைவரைப் பாடியிருப்பார். நமது தவக்குறைவால், நமக்கு அப்பதிகங்கள் கிடைக்கவில்லை.

பிற செய்திகள்: ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் கடைசி இரு நாட்களும்,  தொடரும் சித்திரை மாதத்து முதல் இரு நாட்களும் விடியற்காலை  சூரியோதயத்தின் போது, சூரியனின் ஒளிக்கதிர்கள் சுவாமியின் மீது விழும்போது சூரியபூஜை நடத்தப்படுகிறது.



சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலாம்பிகையின் மீது பாம்பு இருந்ததைப் பலரும் கண்டு புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்த போது,  அப்பாம்பு, தனது சட்டையை உரித்து அம்பாள் திருமேனியின் மீதே விட்டுவிட்டு மறைந்து விட்டது. இங்குள்ள பைரவர் மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தி. தீராத பகைகளையும் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பவர். எனவே, தேய்பிறை அஷ்டமியின்போது மக்கள் இவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, நலம் யாவும் பெறுகின்றனர். செவ்வாய்க்கிழமைகளில் காளி தேவியை வழிபட்டு, திருமண பாக்கியம், புத்திர பாக்கியம் ஆகிய கோரிய வரங்களைப் பெறுகின்றனர். ஒரு காலத்தில் பெரிய ஊராக இருந்ததால், எஞ்சிய கோயில்களின் மூர்த்திகள் ஆங்காங்கே காணப்படுகின்றன.

கல்வெட்டுக்கள்: தெற்கு ப்ராகாரச் சுவற்றிலும், வடபுறச் சுவற்றிலும் மகாமண்டப முகப்பிலும் உள்ள கல்வெட்டுக்கள் படி எடுக்கப் பட்டுள்ளன.ராஜராஜனின் ஆறாவது ஆண்டு ஆண்டில் அளிக்கப்பட தேவ தானங்களும் அருமை உடையார் குமாரன் செண்டானாதர் உடையார் மகாமண்டபம் கட்டித்தந்த செய்தியும், அம்பர் அருவந்தை அரயன் சிவதவனப் பெருமானான காளிங்க ராஜன் என்பவர்  இக் கற்றளியைத் திருப்பணி செய்த தகவலும் இக்கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது.

பூஜைகளும் விழாக்களும்: இந்து அற நிலையத்துறைக்குச் சொந்தமான இக்கோயிலில் காலையும் மாலையும் பூஜைகள் நடைபெறுகின்றன. பிரதோஷ பூஜை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. குளத்தங்கரை விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி பூஜை  நடக்கிறது. தவிரவும், தை அமாவாசையை முன்னிட்டு இரு தினங்கள் சுவாமி புறப்பாடாகி, சங்க தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. சித்திரை மாத பௌர்ணமி, சித்திரை சதயத்தன்று அப்பர் குரு பூஜை, வைகாசி விசாகம், ஆடிப்பூரம்,ஆடி-தை வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு விசேஷ அலங்காரம்,விநாயக சதுர்த்தி, நவராத்திரி, ஸ்கந்த சஷ்டி,அன்னாபிஷேகம்,  கார்த்திகை தீபம், மார்கழி உஷக் கால பூஜை, மகர சங்கராந்தி, மகாசிவராத்திரி,  ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

திருப்பணிகள்: இக்கோயிலில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. 5.7.1970 அன்று இதற்கு முந்தைய கும்பாபிஷேகம் நடைபெற்றது. சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலாலயம் செய்து திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அன்பர்கள் ஆதரவும் ஆடல்வல்லானின் அருளும் இருந்தால் விரைவில் திருப்பணிகள் நிறைவேறி கும்பாபிஷேகம் நடைபெறும் என்பது உறுதி.

உள்ளூர்க் கோயில்கள்: மயிலம்மன், திரௌபதி அம்மன், ஐயனார்,காளி புத்தடி அம்மன் ஆகிய தெய்வங்களின் கோயில்களும் இவ்வூரில் இருக்கின்றன.

சுற்றிலும் உள்ள தலங்கள்: இங்கிருந்து திருவாரூர் செல்லும் வழியிலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் எண்கண் சிவாலயம் உள்ளது. இதிலுள்ள முருகன் சன்னதி பிரசித்தமானது. திருவாரூர் சாலையில் காப்பணாமங்கலமும், அங்கிருந்து ஒரு கி. மீ. தொலைவில் கங்கா தேவி பூஜித்த  பெரும்பண்ண்யூர்  கைலாசநாத சுவாமி ஆலயமும் உள்ளன. இதன் அருகில் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற த்ரியம்பகபுரம் உள்ளது. திருவாரூர் சாலையில் இன்னும் சற்றுத் தொலைவில் சம்பந்தரும் அப்பரும் பாடிய பெருவேளூரும், கரவீரமும் அமைந்துள்ளன. வடகிழக்கில் நான்கு கி. மீ. தொலைவில், நால்வராலும் பாடப்பெற்ற ஸ்ரீ வாஞ்சியம் உள்ளது. கும்பகோணம் செல்லும் பாதையில் குடவாயில், நாலூர், நாலூர் மயானம் ஆகிய தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் உள்ளன. இன்னும் சற்றுத் தொலைவில் திருச்சேறையும், நறையூர் சித்தீஸ்வரமும் உள்ளன. சேங்காலிபுரம், ஓகை, பருத்தியூர், சிமிழி ஆகிய ஊர்களிலும் சிவாலயங்கள் இருக்கின்றன. தலையானங்கானத்துப் போருக்காக வில்லுக்கு நாண் தயார் செய்து கொடுத்த இடம் நாணல்சேரி எனப்படுகிறது. இங்கு இரு சிவாலயங்கள் உள்ளன.

சமயப்பணி: சமயப் பணி செய்யும் ஆர்வலர்களும் தல யாத்திரை செய்யும் அன்பர்களும் இக்கோயிலின் வளர்ச்சியில் பங்காற்றினால் ஆலயம் புதுப்பொலிவுடன் விளங்கி நன்கு பராமரிக்கப்பட ஏதுவாகும்


மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 9443500235

Thursday, June 9, 2011

வேதமும் வேள்வியும் ஆயினான்



மறையுமாய் மறையின் பொருளுமாய் நிற்பவன் சிவபெருமான் என்கிறார் மாணிக்க வாசகர். அவனன்றி செய்யும் வேள்வியும் பயன் அற்றதாகிவிடுவதை தக்ஷ யாகம் நிர்மூலமானதின் மூலம் தெரிந்து கொள்கிறோம். எல்லா உயிர்களிலும் மறைந்து நிற்கும் மாமணி ஜோதியான பரம்பொருளை அறிவார் சிலரே. அவனைத்தவிர வேறு எதையும் நினையாத அருளாளர்களுக்கு மட்டுமே அவனது காட்சி கிட்டுகிறது. இதனை உணர்ந்து கொள்ள அம்பர் மாகாளம் என்ற தலத்தில்நடக்கும் ஐதீக விழாவை அவசியம் தரிசிக்க வேண்டும்.




கோயில் திருமாகாளம் என்று தற்போது அழைக்கப்படும் இத்தலம் , சம்பந்தரின் தேவாரப் பதிகம் பெற்றது. மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரிலிருந்து கிழக்கே காரைக்கால் செல்லும் பாதையில் சுமார் நான்கு கி. மீ. தொலைவில் உள்ளது. அருகில் அரசலாறு ஓடுகிறது. ஏழு நிலை கோபுரத்தோடு மதில்கள் சூழ , கிழக்கு நோக்கியவாறு ஆலயம் அமைந்துள்ளது. எதிரில் அழகான திருக்குளம் அமைந்து உள்ளது. இரண்டாம் கோபுர வாயிலைத் தாண்டினால் பிராகாரத்தில் சுதையினால் ஆகிய காளியும், நாக கன்னிகையும் காட்சி அளிக்கக் காணலாம். மூலஸ்தானத்தில் சிறிய, அழகிய லிங்க வடிவில் சிவ தரிசனம் கிடைக்கிறது. அம்பராசுரனை சம்ஹரித்ததால் , வீரஹத்தி தோஷம் நீங்க காளிதேவி பூஜித்த மூர்த்தி. இந்த தேவி, வெளிப் பிராகாரத்தில் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கிறாள். சுவாமிக்கு வலது புறம் வெளிப்ராகாரத்தில் , தனி ப்ராகாரத்துடன் பய க்ஷயாம்பிகை என்ற நாமத்துடன் அம்பிகை காட்சி அளிக்கிறாள்.


இறைவனின் முடியைக்கண்டதாகப் பொய் சொன்ன பிரமன் , இங்கு வந்து, அன்னதீர்த்தம் ஏற்படுத்தி, அதில் ஸ்நானம் செய்து முப்போதும் வழிபட்டதால் , தனது தெய்வ வடிவத்தைத் திரும்பப்பெற்றான். சம்மார சீலன் என்பவனிடம் இந்திரா பதவியைப் பறிகொடுத்த தேவேந்திரன், இத்தளத்தை அடைக்கலமாக அடைந்து, தவம் செய்யவே, இறைவன் பிரவ வடிவில் சென்று சம்மார சீலனை அழித்து, அவனது அங்கத்தைத் தண்டமாக ஏற்று, சட்டைனாதராகக் காட்சி அளிக்கிறார். விஸ்வாமித்திரரின் தவத்தைக் கலைத்ததால், முனிவரின் சாபத்துக்கு ஆளான மன்மதன், இங்கு வந்து, சாபம் நீங்கப் பெற்றான். புத்திர பாக்கியம் பெற வேண்டி, ஸ்தலயாத்திரையாகக் காசியிலிருந்து வந்த விமலன் என்பவன், தனுர் மாதம் முழுவதும், நியமத்துடன் இங்கு வழிபாட்டு, மகாதேவன் என்ற மைந்தனைப் பெற்றான். இங்கு தை முதல் நாள் மகர சங்கராந்தி அன்று கங்கை வெளிப்படுவதாக ஐதீகம். முனிவர் ஒருவரை அறியாமல் கொன்றதால் ஏற்பட்ட பிரமஹத்தி தோஷம் அகல, காம்போஜ நாட்டு நந்தன் என்ற மன்னன் இங்கு வந்தவுடன் அத்தோஷம் நீங்கியது



இங்கிருந்து சுமார் ஒரு கி. மீ. தொலைவில் உள்ள அம்பர் என்ற ஊரில் சோமாசி மாரர் என்ற அந்தணர் தன்மனைவி சுசீலை என்பவளுடன் வசித்து வந்தார். இங்குள்ள சிவாலயம் பிரம தேவனால் வழிபடப் பெற்றது. அதனால்,சுவாமி , பிரம்மபுரீஸ்வரர் எனப்படுகிறார்.இது கோச்செங்கட்சோழ நாயனார் கட்டிய மாடக் கோயில். சம்பந்தர் பதிகம் பெற்ற தலம். மூலஸ்தான சிவலிங்க மூர்த்திக்குப் பின்னால் சுவற்றில் உமமகேஸ்வரர்களைக் காணலாம். சோமாசி மாறநாயனார் சிவனடியார்களிடத்தில் மிகுந்த பக்தி கொண்டவர்.அக்காலத்தில் திருவாரூரில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் வசித்து வந்தபோது, அவரிடம் சென்று, தான் ஒரு சோம யாகம் செய்ய இருப்பதாகவும் அதற்கு தியாகராஜப் பெருமானை அழைத்துக்கொண்டு சுந்தரர் வைகாசி ஆயில்யத்தன்று அம்பருக்கு வரும்படியும் வேண்டவே, சுந்தரரும் அவ்விதம் செய்வதாக உடன்பட்டார்.



அம்பருக்கும் அம்பர்மாகாளம் கோயிலுக்கும் இடையில் யாக சாலை அமைக்கப்பட்டது. சுந்தரரும்சோமாசி யாரும் இறைவனை எதிர் பார்த்து இருக்கும் போது, சுவாமி ஒரு நீச்ச வேடம் பூண்டு, கையால் பறையை முழங்கிக் கொண்டு, நான்கு வேதங்களும் நான்கு நாய்களாகச் சூழப்பெற்றவனாக, இறந்த கன்றுக்குட்டியைத் தொளில்சுமந்தவனாக யாகசாலைக்கு எழுந்தருளுகிறான். அம்பிகையும் மதுக்குடத்தைத் தலையில் சுமந்தவளாக கணபதியும் கந்தனும் இரு சிறுவர்களாக உடன் வர, இறைவனோடு வருகிறாள். இதைக் கண்ட அந்தணர்கள் யாகசாலையில் இருந்து வெளியேறவே, அவர்களை சுவாமி சபித்தார். பதற்றத்தில் இருந்த நாயனார் இருவரது அச்சத்தையும் தீர்த்துவைக்க மகா கணபதி அந்த இடத்தில் அச்சம் தீர்த்த வினாயகராகக் காட்சி அளித்தார். பின்னர், இரு நாயன்மார்களுக்கும் சுவாமியும் அம்பாளும் நீச்ச ரூபம் மறைத்து, ரிஷப வாகனத்துடன் காட்சி அளித்தனர். அக்கணமே, சோமாசி மாரர்,சுசீலை இருவரும் முக்தி பெற்றனர்.



மேற்கண்ட புராண வரலாறு, ஐதீக விழாவாக வைகாசி ஆயில்யத்தன்று மிகவும் விமரிசையாக இந்த ஆலயத்தில் நடைபெறுகிறது. அதிகார நந்தியும், விநாயகரும் , சுந்தரர்-பரவையாரும், சோமாசி மாரர் -சுசீலை ஆகியோர் முன்னதாகவே , அச்சம் தீர்த்த விநாயகர் கோயில் அருகில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலைக்கு எழுந்தருளுகின்றனர். யாகம் முடியும் நேரத்தில் சுவாமியும் அம்பாளும் அங்கு நீச்ச வடிவம் கொண்ட தியாகராஜராகவும் நீலோத்பலாம்பிகை எனவும் வந்தவுடன், தீபாராதனைகள் நடைபெறுகின்றன. இறைவனை அறிந்துகொண்ட சோமாசி மாரர்-சுசீலை தம்பதிகள் மும்முறை பிரதட்சிணம் வந்தவுடன் ஐக்கியக் காட்சி நடைபெறுகிறது. உடனே, காட்சிகொடுத்த மூர்த்தி அங்கு எழுந்தருள்கிறார். பக்தர்கள் பரவசத்துடன் "தியாகேசா, மகாதேவா" என்று கோஷிக்கின்றனர். நாமும் கண் பெற்ற பயனைப் பெறுகிறோம்.

Tuesday, April 12, 2011

ஞானப்பால் தந்த ஞானமூர்த்தி










சீர்காழிப் புராணத்தை அறிந்து கொள்வதற்குமுன் அதற்குத் தொடர்புடைய ஸ்ரீ ஸ்காந்த மகாபுராணத்தில் சீர்காழியில் தேவேந்திரன் இந்திராணியுடன் சூர- பத்மனுக்குப் பயந்து மூங்கிலில் மறைந்து வாழ்ந்து வந்த சரிதத்தில் இருந்து அறிந்து கொள்வது நல்லது.


வீர மகேந்திர புரத்தில்ஆட்சி செய்துவந்த சூரபத்மன் , அதைச் சுற்றி ஹேமபுரி நீலபுரி , ச்வேதபுரி,வாமாபுரி, பத்மபுரி முதலிய பட்டினங்களை அமைத்தான். பிரம்மா அவனுக்குப் பட்டாபிஷேகமும் செய்து வைத்தார். தேவர்களை வேலைக்காரர்களாக நடத்தினான். இவை எல்லாம் தக்ஷ யாகத்தின் போது , பரமேச்வரனை அழைக்காமல் யாகம் செய்த தக்ஷன் பக்கம் சேர்ந்ததால் ஏற்பட்ட சிவாபராதத்திற்குக் கிடைத்த தண்டனை.


சிவபூஜைக்காகக் காவேரி நதியை வரவழைக்க வேண்டுமாதலால் ,நாரதரின் சொற்படி இந்திரன் கணபதி பூஜை செய்தான். இதனால் சந்தோஷமடைந்த கணபதியானவர், காக்கை வடிவில் சென்று அகஸ்த்தியரின் கமண்டலத்தில் இருந்த காவேரியைக் கவிழ்த்து விட்டார். காக்கை இருந்த இடத்தில் ஒரு பிரம்மச்சாரி தோன்றவே, அகத்தியர் அவனைக் குட்டும் எண்ணத்துடன் அவனைத் தொடர்ந்தார். அப்பொழுது, விநாயகமூர்த்தி, தந்து சுய வடிவத்தைக் காட்டினார். தன தவறுக்கு வருந்திய முனிவர், தன தலையைத் தானே குட்டிக் கொண்டார். அதே நேரத்தில், காவேரியும் பெருக்கெடுத்து ஓடலாயிற்று. சீர்காழி க்ஷேத்ரத்தையும் வளப்படுத்தியது. சோலைகளில் பூத்த பூக்களைக் கொண்டு, தேவேந்திரனும் சிவபூஜையைச் செய்துவந்தான். ஒரு நாள் ,தேவர்களுடன் கைலாயம் சென்று ஸ்ரீ மகாதேவனிடம் முறையிட விரும்பிய இந்திரன், தன மனைவிக்குக் காவலாக, சாஸ்தாவை நியமித்துவிட்டுச் சென்றான். அப்போது இந்திராணியை இழுத்துச் செல்ல முயன்ற அஜமுகியின் கைகளை சாஸ்தா வெட்டி வீழ்த்தினார். இவ்வாறு வேணு (மூங்கில்) வடிவில் ஒளிந்திருந்து இந்திரன் சிவ பூஜை செய்ததால் சீர்காழிக்கு வேணுபுரம் என்ற பெயர் ஏற்பட்டது.









சீர்காழிக்கு மொத்தம் பன்னிரண்டு பெயர்கள் புராணத்தில் குறிப்பிடப்படுகின்றன. பிரமன் வழிபட்டதால் பிரமபுரம் எனவும், தேவர்கள் தஞ்சம் அடைந்ததால் புகலி எனவும், அசுர குருவும் தேவ குருவும் பூஜித்ததால் வெங்குரு எனவும், பிரளய காலத்தில் உமா மகேஸ்வரர்கள் தொனியில் வந்ததால் தோணிபுரம் எனவும் தரையைப் பிளந்து இரணியாக்கனை வராகமூர்த்தி கொன்றதால் பூந்தராய் எனவும், தலை வடிவில் ராகு பூஜித்ததால் சிரபுரம் எனவும், புறாவால் சோதிக்கப் பட்ட சிபிச் சக்கரவர்த்தி வழிபட்டதால் புறவம் என்றும், சண்பைப் புல்லால் யாதவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட பழி தீரக் கண்ணன் வணங்கியதால் சண்பை எனவும், காளிதேவி பூஜித்ததால் ஸ்ரீ காழி (சீர்காழி) எனவும்,பராசரர் பாவம் நீங்கப் பூஜை செய்ததால் கொச்சைவயம் என்றும், உரோம்ச முனிவர் தனது மலவாதனை நீங்க வழிபட்டதால் கழுமலம் என்றும் பல பெயர்களால் இத்தலம் வழங்கப்படுகிறது.


குரு, லிங்க சங்கம வடிவில் பரமேச்வரன் இத் தோணி சிகரத்தில் காட்சி அளிக்கிறார். கீழ் தளத்தில் லிங்கஸ்வரூபமான பிரம்மபுரீஸ்வரர் சன்னதி. அதன் மேல் இருபது பறவைகள் சுமக்கும் தோணி சிகரம். படிக்கட்டுகளில் ஏறினவுடன் உமாமகேஸ்வரர் தோணி யில் அமர்ந்து இருக்கும் சன்னதியைத் தரிசிக்கலாம். கையில் மான் மழு இல்லாமல் சுவாமி தோன்றுவதால், அவைகளைக் கைகளில் ஏந்துவதற்கு முன்பே ஒரு ஊழிக் காலத்தில் தோன்றிய மூர்த்தி என்பது தெரிய வருகிறது. சிகர உச்சியில் சட்டைநாத சுவாமி சன்னதி இருக்கிறது. பிரம்ம விஷ்ணுக்களை பிரளைய முடிவில் எலும்பாகவும், தோல் சட்டையாகவும் , தண்டமாகவும் கொண்டு காட்சி அளிக்கிறார். இவருக்கு வெள்ளிக் கிழமைகளில் அர்த ஜாம வேளையில் விசேஷ பூஜைகள் நடை பெறுகின்றன.




அம்பாளும் சுவாமியைப் போலவே கிழக்கு நோக்கி சன்னதி கொண்டுள்ளாள். அவளது நேர் பார்வையில் பிரம தீர்த்தக் குளம் இருக்கிறது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடுவில் திருஞான சம்பந்தருக்குப் ப்ராகாரத்துடனும், திரு- மாளிகைப்பத்தி மண்டபத்துடனும் கூடிய பெரிய சன்னதி உள்ளது. இதன் வாயிலில் அவரது புராண வரலாற்று சுதைகள் அழகாக அமைக்கப் பட்டிருக்கின்றன. வாயிலருகில் சம்பந்தப் பெருமானைக் குருவாகக் கொண்டு தொண்டு செய்துவந்த கணநாத நாயனாருக்குத் தனிச் சன்னதி இருக்கிறது.


சோழ மன்னர்களது திருப்பணிகளையும், கல்வெட்டுக்களையும் கொண்ட இக்கோயில் தருமபுர ஆதீனத்தால் பராமரிக்கப் படுகிறது. இங்கு பிரமோற்சவம் சித்திரை மாதம் நடைபெறுகிறது. அதில் இரண்டாம் திருநாளன்று, திருஞான சம்பந்தருக்கு இறைவன் ஞானப் பால் அளித்த ஐதீக விழா ஒவ்வொருவரும் காண வேண்டியதொன்று. தனது மூன்றாவது பிறந்த நாளன்று தந்தையுடன் கோயிலுக்குச் சென்ற குழந்தை, பிரமதீர்த்தத்தில் மூழ்கி அகமர்ஷன ஜபம் செய்யும் தகப்பனாரைக் காணாது, பசி மேலிட, தோணி சிகரத்தை நோக்கி அம்மே அப்பா என்று அழவே, அக்குழந்தையின் பசி தீர்க்குமாறு சுவாமி அம்பிகையை அனுப்பினார். அம்பிகையும் பொற்கிண்ணத்தில் தனது ஞானப் பாலைக் கறந்து அக் குழந்தைக்கு அளிக்க, அது சிவ ஞானப் பால் ஆதலால், அந்தக் கணமே, எல்லா ஞானமும் அக்குழந்தைக்கு அருளப் பெற்று,சிவஞானசம்பந்தர் ஆனார். சிறிது நேரத்தில் நீரிலிருந்து வெளியில் வந்த தந்தை, குழந்தையின் வாயில் பாலைக் கண்டு, ஒரு குச்சியை ஓங்கி "யார் கொடுத்த பாலை வாங்கி உண்டாய்?" என்று கோபிக்கவே, தனக்குப் பால் கொடுத்த ஆதி தம்பதிகளை அடையாளங்களுடன் தந்தைக்குத் தெரியும்படியாகத் "தோடுடைய செவியன்" எனத் தொடங்கித் தேவாரப் பதிகம் பாடினார்.


சம்பந்தர் ன்னதியில் காலையில் நால்வர் அபிஷேகம் நடைபெறுகிறது. பிறகு சம்பந்தருக்கு விசேஷ அலங்காரங்கள், தீபாராதனைகள், தருமபுர ஆதீன கர்த்தரின் முன்னிலையில் நடக்கிறது. பிறகு, சம்பந்தரை பல்லக்கில் எழுந்தருள செய்கிறார்கள். ஒரு ஒதுவாமூர்த்திக்குப் பாராட்டு நடைபெறுகிறது. பிரம தீர்த்தக் குளக்கரைக்கு வரும் வழியில் சம்பந்தரின் புராணமும் அவர் ஆற்றிய அற்புதங்களும் மக்கள் அறியும்படி எடுத்துஉரைக்கப் படுகிறது.


சம்பந்தர் குளக்கரைக்கு வந்தவுடன், மலைக்கோவிலில் இருந்து கையில் தங்கக் குடத்தில் பாலும் , தங்கக் கிண்ணமும் ஏந்தியபடி அம்பிகை சம்பந்தரிடம் வருகிறாள்.இருவருக்கும் தீபாராதனை நடைபெறுகிறது. அம்பிகையிடமிருந்து, ஞானப்பாலை வாங்கி, சம்பந்தப்பெருமானின் வாயில் ஊட்டு கிறார்கள். பக்தர் கூட்டம் ஆனந்த பரவசம் அடையும் அந்த வேளையில் அம்பிகை திரும்பவும் சுவாமியிடம் சென்றுவிடுகிறாள். சிவபாதஹ்ருதையர் கேட்டவுடன் ஞானக் குழந்தை தோடுடைய செவியனைக் காட்டிய ஐதீகப் படியே, சுவாமியும் அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளுகிறார்கள். பட்டு சார்த்தி தீபாராதனை நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் தாம் கொண்டுவந்த பாலை சுவாமி-அம்பாளுக்கு நிவேதிக்கச் செய்து, அதை விநியோகிக்கிறார்கள்.நாமும் அந்த ஞானப் பாலைப் பெறுவதோடு, தூ வெண் மதி சூடி விடையின் மேல் வந்த உமா-மகேஸ்வரர்களைத் தரிசிக்கும் பாக்கியமும் பெறுகிறோம்.

Saturday, November 13, 2010

துலா காவேரி புராணம்-4


திலீபனின் மகன் ரகு அயோத்தியை ஆண்டு வந்த காலத்தில் ஒரு நாள் நகர சோதனைக்காகப் போய்க்கொண்டு இருந்தபோது, வழியில் ஒரு ராக்ஷசனால் துரத்தப்பட்ட வேதியன் அடைக்கலம் வேண்டி, அவனது காலில் வந்து விழுந்தான். சிறிது நேரத்தில், பசியுடன் வந்த ராக்ஷசன், அவனை விட்டுவிடும்படி கேட்கவே, " செய்த பாவங்கள் துலா ஸ்நானம் செய்தால் நீங்கும். ஆனால் அடைக்கலம் புகுந்தவனைக் கைவிட்ட பாவத்திற்குப் பிராயச்சித்தமே இல்லை. " என்று சொல்லிய அரசன், ஸ்ரீ பரமேச்வரனை பிரார்த்திக்க, அவரும் ஒரு வழிப்போக்கனைப்போல் எதிரில் வந்து, "அரக்கனே, நீ இதற்குமுன் சதத்துய்மன் என்ற பெயருடன் வாழ்ந்திருந்தாய்.வசிஷ்ட முனிவரை ஏளனம் செய்ததால் அரக்கனாக மாறினாய். ஒரு அரசனைக் கண்டவுடன் பழைய உருவம் பெறுவாய்" என்று வசிஷ்டர் கூறியபடி, இப்போது அரசனைக் கண்டாய். உனது பழைய உருவம் வந்துவிடும்." என்று கூறி மறைந்தார். பழைய வடிவம் பெற்ற அரக்கனும், துலா காவேரி ஸ்நானம் செய்து நற்கதி பெற்றான்.

சித்திர வர்மன் என்ற கொடுங்கோல் மன்னன், அகஸ்திய முனிவரின் சொற்படி உதய காலத்தில் துலா ஸ்நானம் செய்து வந்தான். அதைக் கண்டு மகிழ்ந்த முனிவர், " எந்த வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் அனைத்துப் பாவங்களும் துலா ஸ்நானம் செய்வதால் நீங்கிவிடுகின்றன.எத்தனையோ தர்மங்கள் செய்வதால் அடையும் பலன்களை ஒரு முறை காவரி ஸ்நானம் செய்தவன் பெறுவான் என்பது நிச்சயம். " என்றார். சோம பூஷணன் என்ற வேதியன் மிகவும் வறுமை நிலையிலும் காவேரி ஸ்நானம் செய்து வந்தான். இதனால் மகிழ்ந்த பிரம்ம தேவன் , அவன் முன் தோன்றி, "காவேரி ஸ்நான விசேஷத்தால், செல்வந்தன் ஆவாய். ஆனால் , அதைக்கொண்டு தான தர்மங்கள் செய்து வர வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் ஏழை ஆகிவிடுவாய்." என்று அருளினார். சோம பூஷணன் அதன்படி நடந்துவந்த போதிலும் அவன் மனைவி அதற்கு மாறாக நடந்ததோடு, கணவனையும் தான - தர்மங்கள் செய்யாமலும் ,காவேரி ஸ்நானம் செய்யாமலும் இருக்கும்படி மாற்றவே, அவர்கள் வீட்டில் திருடர்கள் புகுந்து, செல்வத்தைக் கொள்ளை அடித்துச் சென்றனர். அதன் பிறகு, இருவரும் நல்ல புத்தி வந்தவர்களாய், காவேரி ஸ்நானமும் பூஜையும் செய்து, மீண்டும் ஐச்வர்யங்கள் அனைத்தும் பெற்று, நீண்ட நாட்கள் தான -தர்மங்கள் செய்து வாழ்ந்தனர். இக் கதையை அகஸ்தியரிடம் கேட்ட சித்திரவர்மனும் அதன்படியே நடந்து, இறுதியில் மோக்ஷம் பெற்றான்.

துலா மாதக் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசியன்று காலையில் நல்லெண்ணெய் தேய்த்துக்கொண்டு வெந்நீரில் ஸ்நானம் செய்து, அதன் பிறகே, காவேரி ஸ்நானம் செய்ய வேண்டும். தீராத தலைவலி முதலிய உபாதைகளும் இதனால் நீங்கும் என்று பரமசிவனே சொல்லியிருக்கிறார். நரகாசுரனை சம்ஹரித்தவுடன் வீர ஹத்தி தோஷம் ஏற்ப்பட்டதால், சிவபெருமான் அருளியபடி, மகாவிஷ்ணு காவேரி ஸ்நானம் செய்து, அப்பாவத்தைப் போக்கிக் கொண்டார்.

ப்ருகு முனிவரின் புத்திரியாகத் தோன்றிய மகா லக்ஷ்மி , காவேரி ஸ்நானம் செய்து, தன சுய வடிவம் பெற்று, மகாவிஷ்ணுவை அடைந்தாள் . காவேரி ஸ்நானம் செய்த பூமா தேவி, யம தர்மனிடம், " தான தர்மங்கள் செய்யாமலும், பித்ரு கார்யங்களைச் செய்யாமலும் பாவங்களைச் சுமப்பவர்களை உன் உலகத்திற்கு அழைத்துக்கொள். காவேரி ஸ்நானம் செய்தவர்களையும் அதன் மகிமையைக் கேட்டவர்களையும் என்னிடம் விட்டுவிடு." என்று சொன்னவுடன் எமனும் அதன் படியே செய்வதாக வாக்களித்தான்.

தங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்று கங்கைக்கும் காவேரிக்கும் வாக்கு வாதம் வந்தபோது, காவிரியே சிறந்தவள் என்று பிரம்ம தேவர் தீர்ப்புக் கூறினார்.

இப்படிப்பட்ட காவேரி மகாத்மியத்தை பக்தியுடன் படிப்பவரும்,கேட்பவரும் எல்லாப் பாவங்களும் நீங்கப் பெற்று,மோக்ஷத்தை அடைவார்கள். புத்திர பாக்கியம் , நீண்ட ஆயுள், வியாதி நிவாரணம் , அஷ்ட ஐஸ்வர்யங்கள் எல்லாம் சித்திக்கும் .

" கவேரகன்யே காவேரி, சமுத்ர மகிஷிப் பிரியே
தேகிமே பக்தி முக்தி தவம் சர்வ தீர்த்த ஸ்வரூபிணி "

ஸ்ரீ காவேரி தேவ்வ்யை நம்:

துலா காவேரி மகாத்மிய சுருக்கம் நிறைவுற்றது.

Monday, November 8, 2010

துலா காவேரி புராணம்- 3


மந்திரன் என்ற பிரம்மச்சாரியின் சாபத்தால் பேய் உருவம் கொண்ட மனோக்யை என்ற பெண் , சுசிதன்என்ற முனிவரின் கட்டளைப்படி, அறுபது கோடி தீர்த்தங்களும் தங்களது பாவத்தைப் போக்கிக்கொள்ளும் காவேரி நதியில் ஸ்நானம் செய்து, பழைய உருவம் பெற்றதோடு, தன விருப்பப்படி, மந்திரனையே மணாளனாகப் பெற்றாள்.

நியமத்தோடு,காவேரி ஸ்நானம் செய்துவந்த ச்வேதவதி என்ற பதிவ்ரதையின் கால் மாண்டல்ய முனிவரின் மேல் படவே, அவர் கோபப்பட்டு, "சூரியன் உதயமாவதற்குள் உயிர் நீப்பாய்" என்று சாபமிட்டார். கற்புக்கரசியான ச்வேதவதி, "அப்படியானால் சூரியனே உதிக்காமல் போகட்டும்" என்று சபிக்கவே, சூரிய உதயம் ஆகாமல் உலகம் ஸ்தம்பித்தது. பிரம்மாதி தேவர்கள் அவளிடம் சென்று, அவள் கணவன் சாபப்படி உயிர் நீங்காமல் இருக்கவும், இருவரும் துலா காவேரி ஸ்நானத்தைத் தொடர்ந்து செய்யவும் வரம் அளித்தார்கள்.

நியமம் தவறி வாழ்ந்துவந்த பிரம்ம சர்மா என்ற வேதியர் , தனது தர்ம பத்தினியான சுசீலையின் வாக்குப்படி, அவளோடு காவேரி தீரத்தை அடைந்து, அரசமர பிரதிஷ்டை செய்தும்,காவேரி ஸ்நானம் செய்தும் சிவ பூஜை செய்து கொண்டிருந்த காலத்தில், அவரது ஆயுட்காலம் முடிந்ததால் ,அவரது உயிரைக் கொண்டுபோக யமதூதர்கள் வந்தனர். சுசீலையின் கற்பு ஜ்வாலையால் அவர்களால் பிரம்ம சர்மாவை நெருங்க முடியாமல் போகவே, யமனிடமே மீண்டும் திரும்பினர். யமனுடைய கட்டளைப்படி சித்திரகுப்தன் அக்காரியத்தை செய்துவரச் சென்றான். அதை அறிந்த, சுசீலை, தனக்கு மாங்கல்யப் பிச்சை அளிக்குமாறு மன்றாடினாள். அவளது காவேரி ஸ்நானத்தின் ஒரு பங்கை எடுத்துக்கொண்டு, அவனது உடலைப் பாதுகாத்து வரும்படி சொல்லிவிட்டு, பிரம்ம சர்மாவின் உயிரை யமனிடம் கொண்டு சென்றான் சித்திர குப்தன்.

யமலோகம் செல்லும் வழியில் இரண்டு சண்டாளர்கள் வழிமறித்து, "எங்களிடம் செருப்பு வாங்கிவிட்டுப் பணம் தராமல் ஏமாற்றிவிட்டாய். இப்போது அதற்குப் பதிலாகத் தோல் தந்துவிட்டுப் போக வேண்டும்"என்றனர். தவித்துக்கொண்டு நிற்கும் பிரம்மசர்மாவின் நிலைக்கு இறங்கி அங்கு வந்த இரு பிரம்மச்சாரிகள்,தங்களது தொடையிலிருந்து தோல் எடுத்துக்கொடுத்தார்கள். சண்டாளர்கள் போனவுடன்,பிரம்ம சர்மாவை வணங்கி , இரு பிரம்மச்சாரிகளும்,"நாங்கள் இருவரும் தங்களால் வளர்க்கப்பட்ட அரச மரங்களே. அதன் பலனாகத்தான் உங்கள் பாவம் நிவர்த்தி ஆனது.நீங்கள் ஊருக்குத் திரும்பியவுடன் அந்த அரச மரங்கள் தோல் இல்லாமல் இருப்பதைப் பார்ப்பீர்கள்." என்று சொல்லிவிட்டு மறைந்தார்கள்.

யமனைத் திருப்திப் படுத்துவதற்காக ஒரு ஸ்தோத்திரத்தை பிரம்ம சர்மாவுக்கு உபதேசித்தார் சித்திரகுப்தன். அதன்படியே, யமனைக் கண்டவுடன் ,அதனைப் பக்தியோடு சொன்னார் பிரம்ம சர்மா.

(யம சுலோகம்;

தர்ம ராஜ நமஸ்தேஸ்து சாக்ஷாத் தர்ம ச்வரூபினே;
தர்மிஷ்ட சாந்த ரூபாய சத்திய ரூப நமோ நம்:
யமாய ம்ருத்யவே துப்யம் காலாய ச நமோ நம்:
சூர்யபுத்திர நமஸ்தேஸ்து சர்வ பூத க்ஷயாயதே.... )

இதைக் கேட்ட யம தர்மனும் மிகவும் மகிழ்ந்து, நீண்ட ஆயுளைக் கொடுத்தான். அதற்குக் காரணம் , சுசீலையின் காவேரி ஸ்நான பலனும் ,யம ஸ்தோத்திர பலனும் ஆகும்.

மீண்டும் தனது சரீரத்தில் புகுந்து, உறக்கத்திலிருந்து எழுந்திருப்பவனைப் போல எழுந்த பிரம்ம சர்மாவைப் பார்த்து அனைவரும் ஆச்சர்யப் பட்டார்கள். சில காலத்திற்குப்பின், சுசீலை,தனது கணவனிடமும், குழந்தைகளிடமும், தான் பகவானிடம் செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது என்று சொல்லி,எல்லோரையும் தன்னுடன் பகவன் நாமாக்களைச் சொல்லச் சொன்னாள். அவளின் காவேரி ஸ்நான பலனானது ,அவளுக்கு சுமங்கலியாக,
திவ்ய லோகம் கிடைக்கும்படி செய்தது.

விதி வசத்தால் மீண்டும் பாவங்களையே செய்ததால் பிரம்ம சர்மா,
எல்லோராலும் விரட்டப்பட்டு ஊர் ஊராகத்திரிந்து வந்தார். ஒரு வீட்டில் சிவ பூஜை செய்பவருக்குத் தீட்டு வந்து விடவே, அப் பூஜையை பிரம்ம சர்மா செய்து வந்தார். ஒரு நாள்,சாப்பிட்டு விட்டுப் பூஜை செய்த பாவத்தால், பன்றியாகப் பிறந்தார். அப்பொழுது, காவேரி ஸ்நானம் செய்யப் போய்க்கொண்டு இருந்த பத்மகர்பன் என்ற அந்தணனை காவேரி நதிக் கரை வரையில் அப்பன்றி துரத்தியது. அங்கு ஸ்நானம் செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணின் தலையில் இருந்து தெறித்த காவேரி ஜல்த்துளிகள் அப் பன்றி மேல் படவே, அப் பன்றி உருவம் நீங்கி, பழைய உருவம் பெற்றது. பாவம் நீங்கப்பெற்ற பிரம்ம சர்மனும் விமானம் ஏறி தேவலோகத்தை அடைந்தார்.

(காவேரி மகிமை தொடரும்)