Tuesday, September 24, 2019



               ஜ்யோதிர்லிங்க ஸ்தலங்கள் - இராமேசுவரம் -I

                                           சிவபாதசேகரன் 

கிழக்கு இராஜ கோபுரம்
தேவியை வவ்விய தென் இலங்கைத் தசமாமுகன்
பூவியலும் முடி பொன்றுவித்த பழி போய்அற
வேவியலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
மேவிய சிந்தையினார்கள் தம்மேல் வினை வீடுமே.

              -    திருஞானசம்பந்தர் தேவாரம்

தலத்தின் இருப்பிடம்:

சாலைப்பாலத்திலிருந்து இரயில் பாலமும் கடலும்  
பன்னிரு ஜ்யோதிர்லிங்கத் தலங்களுள் இராமேசுவரம் ஒன்று மட்டுமே  தமிழகத்தில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து சுமார் 160 கி.மீ. தொலைவிலும், இராமநாதபுரத்திலிருந்து சுமார் சுமார் 55 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள ஒரு தீவு இது. கடலைக் கடந்து செல்ல இருப்புப் பாதையும்,சாலை மேம்பாலமும் உள்ளன. வலம்புரிச் சங்கின் வடிவில் இத்தீவு உள்ளது.

தலச் சிறப்பு:
பழங்காலந்தொட்டே வடக்கே காசியும் தெற்கே இராமேசுவரமும் புனித யாத்திரைகள் செய்யப்படும் தலங்களாக விளங்குபவை. ஸனாதன தர்மமாகிய இந்து மதத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இவ்விரண்டு      தலங்களையும் ஆயுளில் ஒரு முறையேனும் சென்று தரிசிக்க வேண்டும் என்று புராணங்களையும் இதிகாசங்களையும் அறிந்த பெரியோர்கள் கூறுகின்றனர். தர்ப சயனம், தேவி பட்டினம் முதலாகத் தனுஷ்கோடி வரையில் உள்ள பகுதியை சேது ஸ்தலம் என்றும் இராம சேது என்றும் கூறுவார்கள். இங்கு கந்தமாதன பர்வதம் இருப்பதால், இங்கு செய்யப்படும் மஹா சங்கல்பத்தில், “ உபய ஸாகரயோர் மத்யே கந்தமாதன பர்வதே “ என்று சொல்வது வழக்கில் உள்ளது.

பதினெட்டுப் புராணங்களில் ஒன்றான ஸ்காந்த மஹா புராணத்தில்,     ஸனத்குமார  ஸம்ஹிதையில் ஐம்பது அத்தியாயங்களில் சேது மகாத்மியம் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அதில் ஐம்பத்திரண்டாவது அத்தியாயத்தில் இத்தலத்தின் பெருமையை விளக்கும் நான்கு  மந்திரங்கள் ரிக்வேத ஸம்ஹிதையில் ஒன்றும், யஜூர்வேத தைத்ரீய ஸம்ஹிதையில் மூன்றுமாகக் காணப்படுகின்றன.
இராமேசுவரத்தில் செய்யப்படும் ஜபம்,ஹோமம், தவம், தானம் ஆகியவை காசியில் பத்து மாதங்கள் தங்கிய பலன்களைக் காட்டிலும், அதிக பலன்களைத் தர வல்லனவாகும். 

தனுஷ்கோடியில் ஸ்நானம் செய்து ராமநாத சுவாமியை வழிபட்டால், சிதம்பரத்தில் பத்து மாதங்கள் தங்கிய பலனை அளிக்கும். கும்பகோணம்,மாயூரம்,திருவிடைமருதூர், மதுரை, திருவெண்காடு,ஸ்ரீரங்கம்,விருத்தாசலம்,திருவாரூர்,சீர்காழி,காளஹஸ்தி திருவண்ணாமலை,வைத்தீசுவரன் கோயில்,திருப்பதி,வேதாரண்யம்,காஞ்சி, ஸ்ரீ சைலம், நைமிசாரண்யம் ஆகிய ஸ்தலங்களில் ஓராண்டு தங்கிய பலனை தனுஷ்கோடி தீர்த்த ஸ்நானம் அளிக்க வல்லது.
சாதாரணமாக ஸமுத்திரத்தில் எல்லா நாட்களும் நீராடுவது இல்லை. குறிப்பிட்ட நாட்கள்(திதி,வார,நக்ஷத்திர நியமங்களை ஒட்டி) மட்டுமே நீராட வேண்டும். ஆனால், சேது, கோகர்ணம், அனந்த சயனம்,புருஷோத்தமம் ஆகிய நான்கு ஸ்தலங்களில் எப்பொழுதும் ஸ்நானம் செய்யலாம். சேதுவில் அர்த்தோதய காலத்திலும்,மஹோதய காலத்திலும் ஸ்நானம் செய்தால் மனித குலம் முழுவதும் நன்மை பெறும்.

சேது ராமேசுவர யாத்திரை : 
முதலாவதாக இராமநாதபுரத்திற்கு வடக்கில் சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள உப்பூர் என்ற தலத்திலுள்ள வெய்யில் உகந்த விநாயகரை வழிபட்டு விட்டு யாத்திரையைத் தொடங்க வேண்டும். பிறகு அங்கிருந்து தெற்கில் தேவி பட்டணம் சென்று ராம பிரான் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படும் நவபாஷாணங்களைத் தரிசிக்க வேண்டும். அதன் பின்னர் நேராகத் தனுஷ்கோடிக்குச் சென்று சேதுவில் நீராட வேண்டும். அங்கிருந்து இராமேசுவரம் சென்று, எல்லா தீர்த்தங்களிலும் நீராடி விட்டு இராமநாதரையும் பர்வதவர்த்தனியையும் தரிசித்து விட்டு, கங்கையிலிருந்து கொண்டுவந்த நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.பிறகு  இராமநாதபுரம் வழியாக திருப்புல்லாணிக்குச் சென்று வழிபட வேண்டும். மீண்டும் இராமநாதபுரத்திற்கு வந்து ஆதி சேதுபதி எனப்படும் குகனுக்கு இராமர் பட்டம் கட்டியதைக் குறிக்கும்கல்லினை இராமலிங்க விலாச அரண்மனையில் பார்த்து விட்டு , திரும்பும் வழியில் உத்தரகோச மங்கை, தீர்த்தாடனம், வெற்றியூர்,திருவாடானை ஆகிய புண்ணிய தலங்களையும் தரிசிக்கலாம்.

இராமலிங்கப் பிரதிஷ்டை: 

இலங்கை மன்னன் இராவணன் சீதா தேவியைக் கவர்ந்து சென்றதை ஜடாயுவின் மூலமாக அறிந்த இராமபிரான், பிராட்டியை அரக்கன் அசோக வனத்தில் சிறை வைத்திருப்பதை அனுமன் மூலம் அறிந்து, வானர சேனையுடன் இலங்கைக்குச் சென்று இராவணனை வீழ்த்திவிட்டுத் தேவியை மீட்டுவர ஆயத்தமானான். சேதுமூலம் என்ற தர்ப்ப சயனத்தில் (திருப்புல்லாணியில்) தர்பைப் படுக்கையில் படுத்தவாறு தசரத மைந்தன் தங்கியிருந்தான்.

நளன் முதலிய வானரங்கள் கடலில் அணை கட்டினார்கள். அதன் வழியாக இராம லக்ஷ்மணர்கள் வானர சேனையுடன் இலங்கை சென்று இராவணனது சேனையுடன் போரிட்டனர்.இராம பாணத்தால் இராவணன் வதம் செய்யப்பட்டான். ஜனக புத்திரியான ஸீதா பிராட்டி சிறை மீட்கப்பட்டாள். அயோத்திக்குத் திரும்பும் வழியில் ஸீதா தேவியுடன் இராமன் கந்தமாதன பர்வதத்தில் தங்கிய பொது, இராவணனைக் கொன்ற பாவம் தீருவதற்கு சிவ பூஜை செய்ய வேண்டும் என்று முனிவர்கள் இராமனிடம் அறிவுறுத்தினார்கள். அதன்படி, இராமனும் அனுமனைக் கயிலாயமலைக்குச்  சென்று சிவலிங்கம் கொண்டுவருமாறு பணித்தார். கட்டளையை ஏற்று வான்வழியே சென்ற மாருதியானவர் திரும்பிவரக் கால தாமதம் ஆயிற்று. பிரதிஷ்டை செய்ய வேண்டிய சுப வேளை வந்துவிட்டபடியால், ஜானகி தேவி தனது திருக்கரங்களாலே மணலால் ஒரு சிவலிங்கம் பிடித்துத் தர, அதனையே இராம பிரான் பிரதிஷ்டை செய்து பூஜித்தார்.

தாமதமாகத் திரும்பிய வாயு மைந்தன், கோபத்துடன் அந்த இலிங்கத்தைத் தனது வாலால் இழுக்கும்போது வால் அறுபட்டு இரத்தம் சிந்தியது. அனுமனை சமாதானம் செய்த இராமன், மாருதியால் கொண்டுவரப்பட்ட இலிங்கத்தை, இராமநாதருக்கு வடக்கில் பிரதிஷ்டை செய்து, பூஜித்தார். அம்மூர்த்தியே விசுவநாதர் என்று வழங்கப்படுகிறது. பூஜா காலங்களில் விசுவநாதருக்குப் பூஜை நடந்த பிறகே, இராமநாத சுவாமியின் பூஜை நடைபெறுகிறது. 
               
ஆலய அமைப்பு: 

வடக்குக் கோபுரம் 
இராமேசுவரம் இரயிலடியிலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது ஆலயம். முதலில் தென்படுவது மேற்குக் கோபுரம். ஆலயத்தைச் சுற்றி நாற்புறமும் தேரோடும் வீதிகள் உள்ளன. நாற்புறமும் வாயில்கள் அமைந்துள்ளன. கிழக்கு வாயிலில் சுவாமி சன்னதிக்கும் அதன் வலப்புறம் அம்பாள் சன்னதிக்கும் இரு வாயில்கள் உள்ளன. சுவாமி சன்னதியின் ராஜ கோபுரம் 126 அடியும், மேற்குக் கோபுரம் 78 அடியும் உயரமுடையவை. கிழக்கு வாயில் வழியே நுழைந்தவுடன் நமக்கு வலப்புறம் தென் திசையை நோக்கியவாறு சிவந்த திருமேனியுடன் ஆஞ்சநேயர் தரிசனம் தருகிறார். 

கொடிமரத்தருகே சுதையாலான பெரிய நந்தி இருக்கக் காண்கிறோம். அதன் இருபுறமும் மதுரை நாயக்க மன்னர்களான விசுவநாத நாயக்கர், கிருஷ்ணம்ம நாயக்கர் ஆகியோரது வடிவங்களைக் காண்கிறோம். நுழைவாயிலின் இருபுறமும் விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன. நேராகச் சென்று முதல் பிராகாரத்தை அடைகிறோம்.

முதல் பிராகாரத்தின் தென் கிழக்கே உஷா –பிரத்யுஷா ஸமேத சூரிய பகவானையும் ஸஹஸ்ர லிங்க மூர்த்தியையும் ,நால்வர்,அறுபத்து மூன்று நாயன்மார்கள் தரிசனத்துடன் மேற்குப் பிராகாரத்தில் வஜ்ரேசுவரர், மனோன்மணி, சங்கரநாராயணர், முருகன், அர்தநாரீசுவரர், கங்காள மூர்த்தி, சந்திரசேகரர் ஆகியோரையும், வடக்கில் ஏகாதச ருத்ர லிங்கங்கள், விபீஷணனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஜ்யோதிர்(ஸ்படிக) லிங்கம், நடராஜர்,ஆகிய மூர்த்திகளையும், கிழக்கே வடபுறத்தில் கிருத்திகா-ரோகிணி சமேத சந்திர பகவானையும் தரிசித்துவிட்டு இராமநாத சுவாமி சன்னதியை அடைகிறோம்.

சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியது. அவருக்கு வடபுறம் உள்ளதும் அனுமனால் கொண்டுவரப்பெற்றதுமான  காசி விசுவநாதரது  சன்னதியும் கிழக்கு நோக்கியது. இங்குள்ள முன்மண்டபத்தில் ஸீதா லக்ஷ்மணருடன் இராம பிரான் காக்ஷி அளிக்கிறார். அருகில் ஸுக்ரீவன் சிரம் தாழ்ந்து நிற்கிறான். இரு கைகளாலும் தான் கொண்டுவந்த இலிங்கத்தை ஏந்திய வண்ணம் அனுமன் நின்றுகொண்டு இருப்பதைப் பார்க்கிறோம்.

முதல் ப்ராகாரத்திலுள்ள தெற்கு வாயில் வழியாக அம்பிகையின் சன்னதியை அடையலாம்.பர்வத வர்த்தனி ,மலைவளர் காதலி என்ற நாமங்கள் கொண்ட இத்தேவி கருணை மிக்க திருவுருவம். இந்த பிராகாரத்தில் தென்கிழக்கு மூலையில் கல்யாண சுந்தர மூர்த்தி, சௌபாக்கிய கணபதி , சந்தான கணபதி, சப்த கன்னிகைகள் , பள்ளிகொண்ட பெருமாள் , சண்டிகேசுவரி ஆகியோர் தரிசனம் தருகின்றனர். வடகிழக்கு மூலையில் பள்ளியறை இருக்கக்காண்கிறோம் 

இத்தலத்தின் மீது ஞான சம்பந்தரும் நாவுக்கரசரும் பாடியருளிய திருப்பதிகக்கல்வெட்டு சுவற்றில் பதிக்கப்பட்டுள்ளது. அம்பிகை சன்னதியின் முன்புறம் உள்ள மண்டபத்தில் அஷ்ட லக்ஷ்மிகளும், இருபுறமும் உள்ள தூண்களில் மனோன்மணி, மாஹேந்த்ரி, கௌமாரி,ராஜ ராஜேசுவரி,லக்ஷ்மி,காளி ,சாமுண்டி ,துவாரபாலகி, சிவ துர்க்கை, வாகீச்வரி, சேதுபதி கடம்பத்தேவர், புவனேசுவரி, அன்னபூர்ணா ஆகியோரது வடிவங்களைக் காண்கிறோம்.
அம்பாள் சன்னதி வாயிலின் இருபுறமும் உள்ள தூண்களில் விஜய ரகுநாத சேதுபதி, முத்திருளப்ப பிள்ளை ,வடுகநாத தேவர், பெரிய திருவுடைய தேவர், சேதுபதி காத்தா தேவர், சின்னண்ணத் தேவர், இரகுநாத சேர்வை ஆகியோரது திருவுருவங்கள் குறிப்பிடத்தக்கவை. 

இராமநாத சுவாமிக்குப் பின்புறம் சேதுமாதவப் பெருமாள் சன்னதி உள்ளது.

இக்கோயிலின் மூன்றாம் பிராகார அழகைக் காணக் கண்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உலகப்புகழ் வாய்ந்த இதனைச் சுற்றி வரும்போது அதன் எழிலைக் கண்டு பிரமிக்கிறோம். மேலை நாட்டவரும் வியந்து போற்றும் பெருமை மிக்கது இப்பிராகாரம்.  முத்து ராமலிங்க சேதுபதி அவர்களால் கட்டப்பெற்ற இப் ப்ராகாரத்தின் நீளம்,அகலம் மற்றும் உயரம் பற்றிய விவரங்களைக் கல்வெட்டில் பொறித்து வைத்திருக்கிறார்கள். கடல் மீது பாலங்கள் இல்லாத காலத்தில் கருங்கற்களை எடுத்து வந்து பிரம்மாண்டமான தூண்களோடு கூடிய பிராகாரங்களை அமைத்து அழியாப் புகழ் பெற்ற சேதுபதி மன்னர்களையும், வடிவமைத்துத் தந்த சிற்பிகளையும் நாம் நெஞ்சார வணங்குகிறோம்.
                                                                                          (தொடரும்)
   

Sunday, September 15, 2019

ஜோதிர்லிங்க ஸ்தலங்கள் - பீமசங்கரம்

“ டாகின்யாம் பீமசங்கரம் “  என்று ஜ்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்ரத்தில் குறிப்பிடப்படும் பீமசங்கரம் என்ற ஸ்தலம் , மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேயிலிருந்து சுமார் 125 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சலாயாத்ரி மலைத் தொடரில் டாகினி மலைப் பகுதியில் இது உள்ளது. இங்குதான் பீமா நதி உற்பத்தி ஆகிறது. பின்னர் அந்நதி தென்கிழக்காக ஓடி சமவெளியை அடைந்து சந்திரபாகா எனவும் பெயர் பெற்றது. நிறைவாக அது ராய்ச்சூர் அருகில் கிருஷ்ணா நதியோடு கலக்கிறது. திருபுராதி அசுரர்களை சிவபெருமான் போரிட எழுந்தபோது அவரது திருமேனியின் வியர்வையில் பீமா நதி தோன்றியது என்கிறார்கள்.

தல வரலாறு: கும்பகர்ணனுக்கும் கற்கடி என்ற ராக்ஷசிக்கும் மகனாகப் பிறந்தவன் பீமாசுரன். தனது தாய் வழிப் பாட்டனை சுதீக்ஷனர் என்ற முனிவரும் , தந்தையான கும்பகர்ணனை இராமனும் கொன்று விட்டதாக அறிந்த பீமாசுரன், அரசர்களையும்,முனிவர்களையும், அந்தணர்களையும் அழிக்க வேண்டிக் கடும் தவம் செய்தான். அதன் பலனாக பிரமதேவனிடம் வரம் பெற்று, அரசர்களைத் துன்புறுத்தினான்.

காமரூப நாட்டு அரசனான ப்ரியதர்மனும் அவனது மனைவியான தட்சிணா தேவியும் சிறந்த சிவபக்தர்கள். அவ்விருவரையும் சிறைப்படுத்திய பீமாசுரன், அவ்வரசனது நாட்டை அபகரித்துக் கொண்டான். அரசனும் அரசியும் தாங்கள் செய்து வந்த நித்திய சிவபூஜையை சிறைச்சாலைக்குள் இருந்தபடியே செய்து வந்தனர். சிறைக்காவலன் மூலம் இதனை அறிந்த பீமாசுரன் நேராகச் சிறைக்குச் சென்று சிவபூஜையை நிறுத்திவிடவேண்டும் என்றும் தன்னை அரசனும் அரசியும் வணங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். இருவரும் அதற்கு மறுக்கவே, கோபங்கொண்ட பீமாசுரன் ஒரு வாளை அவர்கள் மீது வீசினான். அப்போது அவர்கள் பூஜித்த இலிங்கத்திலிருந்து இறைவன் வெளிப்பட்டு அசுரனை அழித்துத் தன் பக்தர்களைக் காப்பாறியருளினான் . அதுமுதல் இத்தலத்துப் பெருமானுக்குப் பீம சங்கரன் என்ற பெயர் ஏற்பட்டது. சூர்ய குலத்து அரசர் பீம் என்பவரின் பிரார்த்தனைக்கு இணங்கி சுவாமி இங்கேயே தங்கி விட்டதால் பீம் சங்கரர் என அழைக்கப்படுகிறார் என்றும் கூறுவதுண்டு.

கிராமவாசி ஒருவர் ஒருமரத்தை வெட்ட முற்படுகையில் அதிலிருந்து இரத்தம் வெளிப்பட்டதைக் கண்டு பதறிப் போனார். அப்போது ஊரார்கள் ஒரு பசுவை அம்மரத்தருகே கொண்டு வந்து நிறுத்தியபோது அப்பசு தானாகவே அங்கு பால் சொரிந்ததைக் கண்டு அவ்விடத்திலேயே கோயில் கட்டத் தீர்மானித்ததாகவும் கூறுவர். 13 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலை 18 ம் நூற்றாண்டில் நானா பட்னாவிஸ் என்ற பேஷ்வா திருப்பணி செய்தார். சத்ரபதி சிவாஜி இங்கு வந்து தரிசித்து விட்டுக் கோயிலுக்கு நிபந்தங்கள் அளித்ததாகவும் அறிகிறோம். ஞானேஸ்வர் என்ற மகான் த்ரயம்பகேச்வருக்கும் பீம சங்கரத்திற்கும் விஜயம் செய்துள்ளார். சின்மாஜியப்பா என்ற மன்னர் போர்த்துகீசியர்களை வென்று அவர்களிடமிருந்து ஒரு பெரிய மணியைக் கைப்பற்றி வந்து இந்த ஆலயத்திற்குக் காணிக்கையாக அளித்துள்ளார். சுமார் 500 கிலோ எடையுள்ள இம்மணியை இன்றும் நாம் காணலாம்.
கோயில் நாகர பாணியில் அமைந்துள்ளது. சுவாமி கருவறை தாழ்ந்த இடத்தில் உள்ளது. ஜ்யோதிர் லிங்கத்திலிருந்து நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. கோயிலுக்குப் பின்புறத்தில் பெரிய குளம் ஒன்று உள்ளது. நானாபதன் விஷ் என்பவரால் அது நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்

பழைமை வாய்ந்த இக்கோயிலைச் சுற்றிலும் 108 கோயில்களும் பல தீர்த்தங்களும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சர்வ தீர்த்தம், மோக்ஷ தீர்த்தம்,அக்ஷய தீர்த்தம், பீமா உட்க தீர்த்தம், அமிர்த தீர்த்தம், குப்த மகேச்வர தீர்த்தம், சக்தி விநாயக தீர்த்தம் ஆகியவை சில முக்கிய தீர்த்தங்கள் ஆகும்.

சிரவண மாதத்திலும், மகா சிவராத்திரியன்றும், கார்த்திகை மாதத்திலும்  ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.ருத்ராபிஷேகம்,பஞ்சாம்ருத அபிஷேகம் ஆகியவை இந்த ஜ்யோதிர்லிங்க மூர்த்திக்குச் செய்யப்படுகிறது.

இத்தலத்தைச் சுற்றி ஹனுமான் ஏரி , பீமா நதியின் உற்பத்தி ஸ்தானம், சாக்ஷி கணபதி கோயில், போகிரி கோட்டை ஆகியன உள்ளன. மேற்குத்  தொடர்ச்சிமலையின் அடர்ந்த வனப்பகுதியான இதனை வனவிலங்குகள் சரணாலயமாக அமைத்துள்ளார்கள். காட்டு அணில் ( Malabar Giant Squirrel)  இங்கு காணப்படுவது குறிப்பிடத்தக்கது. வனப்பகுதியில் தங்கி அங்குள்ள பறவை இனங்களையும் மிருகங்களையும் காண்பதற்கு வசதியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மலை ஏற்றம் ( Trekking) செய்பவர்களும் இவ்விடத்தை நாடி வருகின்றனர். இத்தகைய இயற்கை எழில் கொண்ட காட்டுப் பகுதியைக் கடந்தே பீம சங்கரத்தை அடைகிறோம். இயற்கையையும் இறைவனையும் ஒருசேரக் காணும் பாக்கியமும் பெறுகிறோம்.     

Wednesday, August 14, 2019

ஜ்யோதிர்லிங்க ஸ்தலங்கள் - வைத்யநாதம்

பர்லி வைத்யநாத் ரயில் நிலையம் 

வைத்யநாதம் என்று சொல்லப்படும் ஜ்யோதிர்லிங்க ஸ்தலம் மகாராஷ்ட்ரத்தில் உள்ள பரலியில் உள்ளது என்று சிலரும், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளது என்று சிலரும், ஹிமாசல் பிரதேசத்தில் உள்ளது என்று சிலரும் கருதுகிறார்கள். த்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்ரத்தில் “பரல்யாம் வைத்யநாதம் “ என்று வருவதால் இத்தலம் மகாராஷ்ட்ரத்தில் உள்ள  பரலியைக் குறிப்பதாகக் கருத இடமுண்டு. 

அதே நேரத்தில்,
“ பூர்வோத்தரே பிரஜ்வாலிகா நிதனே
ஸதா வஸந்தம் கிரிஜா ஸமேதம்
ஸுராஸுராதித பாத பத்மம்
ஸ்ரீ வைத்யநாதம் தமஹம் நமாமி “
என்ற ஸ்லோகத்தைச் சுட்டிக்காட்டி, நாட்டின் வடகிழக்கில் உள்ளதாகக் குறிப்பதாலும்,” பிரஜ்வாலா நிதானம்” என்பது சிவமஹா புராணத்தில் ருத்ர சம்ஹிதையில் வரும் “ சிதா பூமி” என்பதாலும், இதுவே தியோகார் நகரின் பழைய பெயர் என்பதாலும் ஜார்கண்டில் உள்ள தியோகாருக்கு அருகில் இத்தலம் உள்ளது என்று கொள்வது பொருத்தமாகிறது என்றும் கருதுவர்.

இவற்றைத்தவிரவும், ஹிமாசல் பிரதேசத்தில் காங்க்ரா ஜில்லாவில் பாலம்பூர் அருகில் இத்தலம் உள்ளது என்றும் ஒரு கருத்து உண்டு.

( தமிழகத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில், திருமழபாடி ஆகிய தலங்களிலும் சுவாமிக்கு வைத்யநாதர் என்ற பெயர் இருந்தாலும் அவை பன்னிரு ஜ்யோதிர் லிங்கங்களுள் அடங்காமை காண்க.)

சிவலிங்கத் திருமேனிகளுக்குள் பன்னிரண்டை மட்டும் ஏன் ஜ்யோதிர் லிங்கங்கள் என்று குறிப்பிட வேண்டும் என்று ஒருவர் ஸ்ரீ காஞ்சி மகா பெரியவரைக் கேட்டபோது “ எல்லா சிவலிங்க மூர்த்திகளுமே ஜ்யோதிர் லிங்கங்கள்” தான் என்றும், அவற்றில் பன்னிரண்டை விசேஷமாகக் குறிப்பிடுகிறோம் என்றும் பெரியவர் பதில் கூறியதாக அறிகிறோம். இக்கருத்தைப் புரிந்துகொள்ளும் அறிவு இல்லாமையால் அமைதியாக இருந்ததோடு, என்றாவது ஒருநாள் சிவனருள் நமக்கு உணர்த்தும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு இருக்கலாயிற்று. ஆம். நம்பிக்கை வீண் போகவில்லை.

இன்று விடியற்காலையில் கனவின்கண் பெருமான் திருஞான சம்பந்தரின் தேவாரப் பாடல் ஒன்றைச் சுட்டிக் காட்டியருளினான். அப்பாடல் வருமாறு:

“ நனவிலும் கனவிலும் நாளும் தன் ஒளி
 நினைவிலும் எனக்கு வந்து எய்தும் நின்மலன்
 கனைகடல் வையகம் தொழு கருக்குடி
 அனல் எரி ஆடும் எம் அடிகள் காண்மினே.”

இப்பாடலில் ஒளி மயமான ( ஜ்யோதிர் மயமான ) இறை வடிவத்தைக் கனவிலும் நனவிலும் தரிசித்ததாக ஞான சம்பந்தர் போற்றுகிறார். தம்முள் யார் பெரியவர் என்ற சண்டை பிரம-விஷ்ணுக்களுக்குள் ஏற்பட்டபோது அவர்களிடையே ஒளிப் பிழம்பாக (ஜ்யோதிர்லிங்கமாக) மகா சிவராத்திரி தினத்தன்று உற்பவம் செய்ததால் அதனை லிங்கோத்பவம் என்கிறோம். அதனால் சிவலிங்கத் திருமேனிகள் அனைத்துமே ஜ்யோதிர் மயமானவை என்றும் அப்புராண நிகழ்ச்சியை ஒட்டியே அமைந்துள்ளன என்றும் நமக்குத் தெளிவாகிறது.  
      
பரலி வைத்யநாதம் பற்றி அறிவதன்முன் மற்ற இரு இடங்களில் உள்ள வைத்யநாதம் பற்றியும் அறிவது நல்லது. திருவருள் துணையோடு அவற்றையும் அன்பர்கள் தரிசிக்க வேண்டும்.

பவிஷ்ய புராணத்திலும் மஸ்ய புராணத்திலும் சிறப்பிக்கப்படும் வைத்யநாத க்ஷேத்ரம், ஜார்கண்ட் மாநிலத்தில் ஹவ்ராவிலிருந்து பாட்னா வழியாக டெல்லி செல்லும் ரயில் பாதையில் ஜைஸித்தி என்ற இரயில் நிலையத்திற்கு சுமார் 7 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. வைத்யநாத் திருக்கோயில் கிதௌர் மன்னர்களால் நன்கு பராமரிக்கப்பட்டு வந்தது. பின்னர், கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகைக்கு வந்தபோது, கீட்டிங் என்ற ஆங்கிலேயரின் நேரடியான நிர்வாகத்திற்குள் வந்தது. பின்பு அவரே, இக்கோயிலைத் தலைமை அர்ச்சகரிடம் ஒப்படைத்துவிட்டாராம். இங்கு நடைபெறும் கண்வார் யாத்ரா மிகவும் பிரபலமானது. அப்பொழுது தியோகாருக்கு அருகிலுள்ள ஸுல்தான் குஞ்ஜ் என்ற இடத்திலிருந்து கங்கை நீரை எடுத்துக் கொண்டு, சுமார் ஒரு கோடி பக்தர்கள் சிரவண மாதத்தில்( ஜூலை- ஆகஸ்ட் ) வைத்யநாத்துக்கு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்வார்கள். 

ஹிமாசல் பிரதேசத்தில் சுமார் மூவாயிரம் அடிக்கும் அதிக உயரத்தில் இமய மலைத்தொடரில் அமைந்துள்ள வைத்யநாத க்ஷேத்ரம், இந்தியத் தொல்பொருள் துறையால் பராமரிக்கப்படுகிறது. காங்ரா ஜில்லாவில் பாலம்பூருக்கு 16 கி.மீ. தொலைவில் உள்ள இக்கோயில், பதான்கோட் – மாண்டி நெடுஞ் சாலையில் காங்ராவுக்கும் மாண்டிக்கும் இடையில் அமைந்துள்ளது. பியாஸ் நதியின் உபநதியான பின்வா நதிக் கரையில் இக்கோயில் உள்ளது. இங்குள்ள ஜ்யோதிர் லிங்கம் ஸ்வயம்பு மூர்த்தி ஆவார். கயிலாயத்தில் சிவபெருமானிடமிருந்து பெறப்பட்ட சிவலிங்க மூர்த்தியை இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இராவணன் இங்கு தங்கி, அந்தணச் சிறுவன்  உருவில் வந்த விநாயகரிடம் தந்துவிட்டு அனுஷ்டானங்கள் செய்யப் போனதும், மும்முறை அவனைக் கூப்பிட்டுவிட்டு, அவன் வருவதற்குள் அப் பாலவிநாயகர், சிவலிங்கத்தைப் பூமியில் வைத்துவிட்டு மறைந்து விட்டதாகவும், பிறகு, இராவணனால் அம்மூர்த்தியை அங்கிருந்து பெயர்க்க முடியாமல் போனதால் சுவாமி அங்கேயே கோயில் கொண்டு விட்டதாகவும் புராணங்கள் வாயிலாக அறிகிறோம்.
கி.பி. 1204 ம் ஆண்டில் மன்யுகா- அஹுகா சகோதரர்கள் இக்கோயிலை நிர்மாணித்ததாகக் கூறுவர். இங்குள்ள கல்வெட்டுக்கள் அதற்கு முன்பும் கோயில் இருந்ததைக் குறிப்பிடுகின்றன.

ஆலய முகப்பு 
பரலி வைத்யநாதம் என்ற ஸ்தலம் மகாராஷ்ட்ரத்தில் பீட் ஜில்லாவில் அமைந்துள்ளது. அவுரங்காபாதிலிருந்து 210 கி.மீ.தொலைவிலும் நான்டெட் என்ற ஊருக்கு 105 கி.மீ. தூரத்திலும் உள்ள இத்தலத்தை அடைவதற்கு பர்லி வைஜ்நாத் ரயிலடியில் இறங்கி அங்கிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள கோயிலை அடையலாம். நான்டெட் நகரில்உணவு விடுதிகள் பலவற்றில் தாங்கும் வசதிகள் உள்ளன. அங்கிருந்து சாலை மார்க்கமாக சுமார் மூன்று மணி நேரத்தில் பரலி ஆலயத்தை அடையலாம்.

இராவணனால் பூஜிக்கப்பட்ட ஜ்யோதிர் லிங்கமூர்த்தியின் ஆலய நுழைவு வாயிலில் பல படிகள் அமைந்துள்ளன. இங்குள்ள சுவாமிக்கு நாமே அபிஷேகம் செய்யலாம். தீரா நோய் தீர்க்கவல்ல பெருமானாக விளங்குவதால் வைத்ய நாதர் எனப்படுகிறார்.

மூலவர் விமானம் 
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது தன்வந்திரியோடு அமிர்தமும் வெளிப்பட்டது. அதனை அடையவேண்டி அசுரர்கள் முயற்சிக்கும்போது, விஷ்ணுவானவர் அதனையும் தன்வந்திரியையும்  இங்குள்ள சிவலிங்கமூர்த்தியிடம் மறைத்து வைத்தார். கோபம்கொண்ட அசுரர்கள்,சிவலிங்க மூர்த்தியை சேதப்படுத்த முயன்றபோது அதிலிருந்து ஒரு பேரொளி எழுந்தது. கோடி சூரிய ப்ரகாசத்துடன் தோன்றிய அவ்வொளியைக்கண்டு அஞ்சிய அசுரர்கள் அவ்விடத்திலிருந்து அகன்றனர் என்பது புராணம். எனவேதான் இம்மூர்த்தியைத் தீண்டி பூஜித்தால் நோய்கள் அகலும் என்பது நம்பிக்கை.

ஹரியும் ஹரனும் இணைந்து அருள் புரிவதால் இருவருக்கும் பூஜைகள் நடைபெறுகின்றன.இருவரது விசேஷ தினங்களும் கொண்டாடப்படுகின்றன. விஷ்ணுவுக்கு வில்வ தளத்தாலும் சிவபெருமானுக்குத துளசியாலும் அர்ச்சனை செய்கிறார்கள். அருகிலுள்ள ஹரிஹர தீர்த்தத்திலிருந்து திருமஞ்சன நீர் கொண்டு வரப்பட்டு மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்குள்ள மலைப் பிரதேசத்தில் மூலிகைகள் பல உள்ளன.இராவணன் கயிலையிலிருந்து கொண்டுவந்த சிவலிங்கபாணம் இவ்விடத்தில் பெயர்க்கமுடியாதபடி நிலைபெற்றுவிட்டது என்பதும் தலபுராணம் தரும் தகவல். கோயிலில் மூலவருக்கு எதிரில் உள்ள ஜன்னல் வழியாக சூரியனின் ஒளிக் கதிர்கள் மூலவர் மீது படும்போது சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. சிரவண மாதம்,நவராத்திரி,விஜயதசமி மற்றும் மகாசிவராத்திரி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

மராட்டா மால்வா மன்னர்களால் சிறப்பாகப் பராமரிக்கப்பட்ட இந்த ஆலயம், மகாராணி அகல்யாபாய் ஹோல்கர் அவர்களால் கி.பி. 1700 களில் கட்டப்பட்டது. த்ரிசூல்தேவி மலையிலிருந்து கற்கள் கொண்டுவரப்பட்டுக்  கோயிலைக் கட்டினார்கள். மகாமண்டபத்தில் உள்ள மரவேலைப்பாடுகள் கண்களைக் கவருவனவாக உள்ளன. உயரமாகவும் பருமனாகவும் உள்ள தூண்கள் அங்கே இருக்கக் காண்கிறோம்.

அருகாமையில் உள்ள ஜ்யோதிர்லிங்கத் தலங்களின் தொலைவு விவரம்:
அவுந்த் நாகநாதம்: 118 கி.மீ.
பீமசங்கரம்: 387 கி.மீ.
க்ருஷ்ணேஷ்வர்: 246 கி.மீ.
த்ரயம்பகேஷ்வர் : 397 கி.மீ.                 
இவற்றுள் பீமசங்கரம், த்ரயம்பகேஷ்வர் ஆகிய தலங்களைப் புனேயிலிருந்து அடைவது எளிது.   

Thursday, July 25, 2019

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள்-தொடர்ச்சி- ஒங்காரேச்வர்

நர்மதையும் ஆலயமும் 
இறைவன் ஓங்கார வடிவினன் ஆதலால் ஒங்காரேசுவரன் என்று அழைக்கப்படுகிறான். அவனது இருப்பிடமும் ஓங்கார வடிவாகிறது.     ஈங்கோய் மலை என்ற தலத்தின் மீது நக்கீரர் அருளிய பாடல் ஒன்றை நாம் இங்கு நினைவு கூர்ந்துவிட்டு, ஜ்யோதிர் லிங்க தரிசனம் செய்வோம்.

“ அடியும் முடியும் அரியும் அயனும்
 படியும் விசும்பும் பாய்ந்தேறி – நொடியுங்கால்
 இன்னதென அறியா ஈங்கோயே ஓங்காரம்
 அன்னதென நின்றான் மலை “

 ஏழு புண்ணிய நதிகளான கங்கை,யமுனை,கோதாவரி,சரஸ்வதி, நர்மதை,ஸிந்து,காவேரி ஆகியவற்றை தியானித்துக் கொண்டே அன்றாடம் நீராடுவது மரபு. இவற்றுள் நர்மதைக்கு மட்டும் மற்ற நதிகளுக்கு இல்லாத தனிச் சிறப்பு உண்டு. இந்நதி உற்பத்தியாகும் இடத்திலிருந்து, கடலோடு சங்கமம் ஆகும் இடம் வரை உள்ள தூரத்தை ஆற்றின் ஒரு கரை முழுவதுமாகக் கால்நடையாகவே சென்று விட்டு, ஆற்றின் எதிர்க் கரையை படகில் கடந்து மீண்டும் மறு கரை ஓரமாகவே உற்பத்தி ஸ்தானம் வரை நடந்து சென்று வலம் செய்வது பண்டைக்காலம் முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. ஏனைய ஆறு நதிகளை இவ்வாறு முழுவதுமாக வலம் செய்வது இல்லை. இதற்குக் காரணம், இந்நதியில் ஏராளமான சிவலிங்க பாணங்கள் வெவ்வேறு அளவில் இருப்பதே ஆகும். அத்தனை சிவலிங்க பாணங்களையும் ஒரு சேர வலம் செய்யக் கருதினார்கள் நம் முன்னோர்கள். 
வழியில் உள்ள பாண லிங்கக் கடை 

நர்மதா பரிக்கிரமத்தின் போது கையில் பணம் எடுத்துச் செல்வது தவிர்க்கப்படுகிறது. காலை முதல் மாலை வரை மட்டுமே நடக்க வேண்டும். வழியில் உள்ள கிராமங்களில் தங்கிக்   கிராமவாசிகள் அன்புடன் கொடுக்கும் உணவை உண்டு, மறு நாள் காலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். இப்படிச் செய்தால் பூர்த்தி செய்வதற்கு ஒரு வருஷத்திற்கும் மேல் ஆகும். மழை மற்றும் குளிர்க் காலங்களில் நடந்து செல்வதும் கடினம் தான். காடுகளையும் மலைப் பிரதேசங்களையும் கடந்து செல்ல வேண்டிய இப்பயணத்தை ஒப்பற்ற நியமத்துடனும் பக்தியுடனும் செய்யும் மக்கள் அநேகர். தற்காலத்தில் வாகனங்கள் மூலமாகப் பதினைந்து தினங்களில் செய்வோரும் உளர்.

 மக்கள் இந்நதியைத் தாயாகவே கருதுவர். “ நர்மதா மையா “ என்றும் “ மா ரேவா “ என்றும் அழைப்பார்கள். ரேவா என்பதற்குப் பாய்ச்சல் என்று அர்த்தம் சொல்வார்கள். நர்மதை அப்படிப் பாய்ந்தோடி வந்து அனைவரது வாழ்வையும் செழிக்கச் செய்து அருளுகிறாள் அல்லவா? சுமார் 1300 கி. மீ. தூரம் ஓடி வந்து நம் வாழ்வை வளம் செய்கிறாள். மத்தியப் பிரதேசத்திலுள்ள மைகல் மலைத்தொடரிலுள்ள அமர்கண்ட் என்ற இடத்தில்(Mai ki bagiya) உற்பத்தி ஆகி, மகாராஷ்டிரத்தைக் கடந்து, குஜராத் மாநிலத்தில் பரூச் பகுதியில் மிதி தலாய்(Mithi thalai) என்னும் இடத்தில் கடலுடன் சங்கமிக்கிறாள். கங்கையின் இடது கரை மட்டுமே புனிதம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது. ஆனால் மேற்குத் திசை நோக்கிச் செல்லும் இந்நதியின் இரு கரைகளுமே புனிதமானவை. அதன் இரு கரைகளில் ஜோதிர்லிங்கத் தலங்கள் சிலவும்,பிற சிவாலயங்களும் அமைந்திருக்கக் காணலாம். இந்நதியை வலம் செய்வதால் பிறப்பின் நோக்கம் பூர்த்தி அடைவதாகக் கருதுவர். கங்கையில் ஒரு நாளும் சரஸ்வதியில் ஒரு நாளும் மாதுர் கயையில் ஒரு நாளும் நீராடிய பலனை நர்மதையைத் தரிசித்தவுடனேயே  பெற்று விடலாம் என்று புராணம் கூறுகிறது.

படகிலிருந்து தெரிவது மலையின் எழில் தோற்றம் 
நர்மதை இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்றாகச் சேர்ந்து ஓங்கார வடிவில் தோற்றமளிப்பதால் தற்போது  ஓங்காரேஷ்வர் என்று இந்த  ஜ்யோதிர் லிங்கத் தலம் அழைக்கப் படுகிறது. படகின் மூலமாக நர்மதையின் மறு கரையில் உள்ள மலைக் கோயிலை அடையலாம். நர்மதையின் குறுக்கே பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரை ஓரமாக உள்ள இம்மலை கோயிலுக்குப் போகப் படிக்கட்டுகள் அமைந்துள்ளன. பஞ்ச முக கணபதியைத்தரிசித்து விட்டு மலை ஏறுகிறோம். மகா சிவராத்திரியின் போதும் விசேஷ தினங்களிலும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். முப்பத்து முக்கோடி தேவர்கள் எப்போதும் வாசம் செய்து ஈசனை வழிபடும் தலம் இது. 

ஒங்காரேச்வரரையும், மகாகாலேச்வரரையும், சித்தீச்வரரையும் இங்கு தரிசனம் செய்கிறோம். நூற்றெட்டு சிவலிங்கங்களைக் கொண்ட புண்ணிய பூமி இதுவாகும். சிவபுரியில் ஒங்காரேச்வரர் ஆலயமும், விஷ்ணுபுரியில் அமரேச்வரர் அல்லது மல்லேச்வரர் ஆலயமும் உள்ளன. ஒங்காரேச்வரர் சன்னதியை அடைந்ததும் சுவாமி பள்ளமான இடத்தில் சிறிய லிங்க வடிவில் காட்சி அளிக்கக் காணலாம். இரவில் ஆரத்தி நடந்து முடிந்தபிறகு கோயிலில் யாரும் தங்குவதில்லை. அப்போது சுவாமியும் பார்வதி தேவியும் சொக்கட்டான் ஆடுவதாகவும் அதை யாரும் பார்க்கக்கூடாது என்றும் ஐதீகம். ஒருமுறை இதனை மறைந்திருந்து பார்த்து சோதிக்கச் சென்ற அயல் நாட்டுக்காரர் ஒருவர் மீண்டும் உயிருடன் வரவில்லை என்று கூறப்படுகிறது.    
    
மாந்தாதா என்ற இக்ஷ்வாகு குலத்து அரசன் சௌபரி என்ற முனிவருக்குத் தனது ஐம்பது பெண்களையும் மணம் செய்து கொடுத்தான். அவனது மகனாகிய முசுகுந்தன் மகா சிவ பக்தன். மாந்தாதா ஆண்ட பகுதி மாந்தாதா ஆசிரமம் என்று வழங்கப்படுகிறது. இம்மன்னனது விக்கிரகம் ஒங்காரேச்வரர் ஆலயத்தில் வழிபாட்டில் உள்ளது.

ஒரு காலத்தில் கோகரணத்தில் வழிபட்டு விட்டு, நாரத முனிவர் விந்திய மலையை அடைந்தார். அப்போது அவர் மேரு மலையின் பெருமையை விந்திய மலையிடம் எடுத்துரைத்தார். அதைக் கேட்டுப் பொறாமை கொண்ட விந்தியமலை, தானும் மேருவைப் போலவே பெருமை அடைய வேண்டும் எனக் கருதி, ஓங்கார ரூபத்தில் ஒரு சிவலிங்கத்தையும், பார்த்திவ லிங்கத்தையும் நர்மதைக் கரையில் வழிபட்டு வந்தது. இதனால் மகிழ்ந்த சிவபெருமான், விந்தியத்தின் முன் தோன்றி, வேண்டிய வரத்தைக் கேட்குமாறு அருளினான்.

எல்லோரைக் காட்டிலும் உயர்ந்தவனாகத தான் ஆக வேண்டும் என்ற வரத்தை அம்மலை கேட்டது. அவ்வாறு அருளுகையில், “ நீ ஒருக்கால் இறுமாப்புக் கொண்டால் எனது அடியவன் உன்னை சிறியதாக ஆக்கி விடுவான் “ என்றார். ( பின்னர் அகத்திய முனிவர், மேருவைக் குறுக வைத்ததையும் , உக்கிர பாண்டியன் மேருவைச் செண்டால் அடித்து அதன் செருக்கை அடக்கியதையும் புராணங்கள் கூறுகின்றன.) விந்திய மலை யந்திர வடிவில் பூஜித்த லிங்க மூர்த்தி ஒங்காரேச்வரராகவும், பார்த்திவ லிங்கம் அமலேச்வரமாகவும் தற்போது அங்கு தோற்றமளிக்கின்றன. பன்னிரு ஜ்யோதிர் லிங்கங்களைக் குறிப்பிடும் ஸ்தோத்திரத்திலும் “ ஓங்காரம் அமலேச்வரம் “ என்று இவ்விரு ஆலயங்களையும் இணைத்தே கூறப்பட்டிருக்கிறது.

அமலேச்வரத்தைச் சிலர் அமரேச்வரம் என்றும் வழங்குவர். இதற்குக் கர்த்தமேச லிங்கமானது உபலிங்கமாகும். இதனைத் தவிரவும், வைடூர்ய மணி பர்வதத்தில் கௌரி சோமநாதர் கோயிலும் உள்ளது. சுமார் ஐந்தடி உயரமுள்ள சோமநாத மூர்த்தியைத் முன்னால் நின்று தரிசிப்போருக்குத் தங்களது முற்பிறப்பும், பின்னால் நின்று தரிசிப்போருக்கு பிற் பிறப்பும் தெரியவரும் என்று கேள்விப்பட்ட     அவுரங்கசீப், முன்னின்று பார்த்தபோது அதில் பன்றி உருவம் தெரிந்ததாகவும் கோபமுற்ற அவன், அம்மூர்த்தியை நெருப்புக்கு இரை ஆக்கியதால் வெண்ணிறமாக இருந்த மூர்த்தி கறுத்து விட்டதாகவும் கூறுவார்கள்.    

வழித்தடம்: உஜ்ஜைன் நகரிலிருந்து ஓங்காரேஷ்வர் வருவதற்குப் போக்குவரத்து வசதிகள் உள்ளன. வடக்கிலிருந்து வருபவர்கள் இந்தூர் வழியாக உஜ்ஜைனியை அடைந்து அங்கிருந்து ஓங்காரேஷ்வரை அடையலாம்.  

வாழ்வில் ஒரு தடவையேனும் வழிபட வேண்டும் என்று எழுதாமல் பலமுறைகள் சென்று நர்மதையில் நீராடி ஓங்காரேச்வரரின் அருள் பெற வேண்டும் என்றே எழுதுமாறு உள்ளிருந்து நம்மைத் திருவருள் தூண்டுகிறது. தரிசித்து விட்டுப் பிரிய மனமில்லாமல் திரும்பிப் பார்த்தபடியே விடை பெறும் அற்புதத் தலங்களுள் இதுவும் ஒன்று. நர்மதையில் ஸ்நானம் செய்யும்போது பெறும் ஆனந்தத்தை வெறும் வார்த்தைகளால் எப்படி விவரிக்க முடியும் ?

Wednesday, July 3, 2019

ஜ்யோதிர்லிங்க ஸ்தலங்கள் – 3. உஜ்ஜைனி


தூரத்தில் தெரிவது மஹாகாளேசுவர சுவாமி ஆலயம் 

ஏழு மோக்ஷபுரிகளுள் ஒன்றான உஜ்ஜைனி, முற்காலத்தில் அவந்திகா என்று வழங்கப்பட்டது. மாளவ தேசமாகிய அவந்தி நாட்டுத் தலை நகராக விளங்கிய இதுவே விக்கிரமாதித்தன் தோன்றியதும், அவனது மரணத்திற்குக் காரணமாக இருந்த சாலிவாகனன் வசித்ததும் ஆகிய சரித்திரப்புகழ் பெற்றது. இவ்விருவரையும் முன்னிட்டு இரு சகாப்தங்கள் தோன்றின. நர்மதை நதிக்கு வடக்கே விக்கிரம சகமும், தெற்கில் சாலிவாகன சகமும் தோன்றின. மகாகவிகளான காளிதாசன்,தண்டி,பர்திருஹரி ஆகியோர் வாழ்ந்ததும் இந்நகரில்தான். இந்நாட்டை ஜைன மன்னனாகிய சுதன்வா என்பவன் ஆண்டதால் உஜ்ஜைனி என்ற பெயர் மாற்றம் ஏற்பட்டது. சிப்ரா நதியின் கரையில் உள்ள இந்நகர எல்லையில் மாள்வா என்ற புராதன பட்டணமும், விக்கிரமாதித்தன் காலத்திய கோட்டையின் சின்னங்களும் உள்ளன.

விக்கிரமாதித்தன் 
விக்கிரமாதித்தனுக்கு அருளிய காளி நகருக்கு உள்ளும் , காளிதாசனுக்கு அருள் செய்த காளி ஊருக்கு 2 கி. மீ. வெளியிலும் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். தேவகியின் எட்டாவது குழந்தையால் தனக்கு மரணம் வரும் என்று அறிந்த கம்சன், அவள் ஈன்றெடுத்த பெண் குழந்தையை வீசி எறிந்து கொல்ல முயன்றபோது அப்பெண் குழந்தை காளியாக உருக்கொண்டு, பின்னர் உஜ்ஜைனியில் வந்து தங்கியதாகப் புராணம் கூறும். கயிலை மலையிலிருந்து இராவணன் கொண்டு வந்த காளியே இங்கு தங்கியதாகவும் கூறுவர். இவளே விக்கிரமாதித்தனுடன் நேரிடையாகப் பேசியதாகவும் காளிதாசனை மகா கவியாக ஆக்கியவள் என்றும் உலகம் போற்றுகிறது. விக்கிரமாதித்தனுக்கு அருளிய காளியை ஹரசித்தி மாதா என்றும் அழைக்கிறார்கள்.

மேகத்தைத் தூதுவிடுவதாக அமைக்கப்பெற்ற மேகதூதம் என்ற தனது காப்பியத்தில், மகாகவி காளிதாசன், மேகத்தை நோக்கி, “ விந்திய மலைக்கு வடக்கே செல்லும் மேகமே, நீ செல்லும் வழியிலிருந்து சற்று விலகியிருந்தாலும், அவந்திகா நகரையும், அங்கு எழுந்தருளியுள்ள ஈசனையும் காணத் தவறாதே. ஒருவேளை நீ காணாவிட்டால் கண் பெற்ற பயனை அடைய மாட்டாய்” என்று சொல்வதாக அமைத்துள்ளது இன்புறத்தக்கது.

சிப்ரா நதி 
ஊர் நடுவே உள்ள மகா காளேச்வரர் ஆலயத்திற்கு ஏராளமான யாத்ரீகர்கள் வருகை தருகிறார்கள். இந்த ஆலயம் ஐந்து நிலைகளைக் கொண்டது. கருவறையில் சுமார் மூன்று அடி உயரத் தோற்றத்துடன் மகாகாள நாதர் காட்சி அளிக்கிறார். ஆவுடையார் பூமிக்கு அடியில் இருக்கிறது. சுவாமி தெற்கு முகமாக எழுந்தருளியுள்ளார்.ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்களுள் தக்ஷிண முகமாக அமைந்துள்ள மூலவர் சன்னதி இது மட்டுமே ஆகும்.  ஜ்யோதிர் லிங்க பாணத்தைக் கண் குளிரத் தரிசிக்கலாம். தினமும் விடியற்காலை சுமார் நான்கு மணிக்கு நடைபெறும் விபூதி அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆரத்தியும் (பஸ்மாரத்தி) பிரசித்தியானவை. நாள்தோறும் ஐந்து முறை ஆரத்தி நடைபெறும். நடுவில் உள்ள நிலையில் ஓங்காரேச்வரர் சன்னதியும், மேல் தளத்தில் நாக சந்திரேசுவரர் சன்னதியும் உள்ளன.நாக பஞ்சமியன்று மட்டுமே நாக சந்திரேசுவரரைத் தரிசிக்கலாம். பிராகாரத்திலுள்ள கோடி தீர்த்தம் புனிதமானது .இந்த ஆலயம் மராட்டிய, சாளுக்கிய, பூமிஜா கலைப் பாணியில் அமைந்துள்ளது. சுவாமி கருவறை விமானம் நேர்த்தியாக அமைந்துள்ளது.திருநாவுக்கரசர் தேவாரத்தில் இத்தலம் உஞ்சேனை மாகாளம் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ரத்னமாலா என்ற மலையில் வசித்து வந்த அரக்கன் ஒருவன் மகாகாளநாதரின் பரம பக்தர்களாக விளங்கிய நான்கு அந்தணச் சிறுவர்களைக் கொன்று விடுவதாக மிரட்டவே, அச்சிறுவர்கள் ஈசனைத் தஞ்சம் அடைந்தனர். பெருமானும் அங்குத் தோன்றி, அரக்கனை அழித்து.அவர்களைக் காப்பாற்றினான். அத்தலத்திலேயே நிரந்தரமாக வீற்றிருந்து அடியார்களுக்கு எல்லா நலன்களையும் அருளுமாறு அக்குழந்தைகள் வேண்டவே, அதற்கிசைந்த சிவபிரான், அதுமுதல் அந்நகரில் கோயில் கொண்டு விளங்குகின்றான் என்று தல புராணம் கூறுகின்றது.

இங்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகா கும்பமேளாவில் நீராடி , இறைவனைத் தரிசிக்கப் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். சந்நியாசிகள் பலரும் வருகை தருவர்.

கால பைரவர் ஆலயம் 
காசியைப்போலவே இங்கும் பைரவருக்கென்று தனிக் கோயில் உள்ளது. அவருக்கு எதிரில் நின்ற வண்ணமாக நாய் காணப்படுகிறது. குங்குமத்தால் அலங்கரிக்கப்பட்டும் மராட்டா பாணியில் தலையில் பக்ரி அணிவிக்கப்பட்டும் பெரிய உருவில் கால பைரவர் காட்சி தருகிறார். அவரே இந்நகரக் காவல் தெய்வமாகவும்,சேனாபதியாகவும் போற்றப்படுகிறார். காலபைரவ வழிபாடு,கபாலிகர்களுக்கும், அகோரிகளுக்கும் மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. 

மாலை நேரங்களில் இக்கோயிலில் ஏற்றப்படும் தீபங்கள் காண்போரைப் பரவசப்படுத்துபவை. உயர்ந்து விளங்கும் தீபஸ்தம்பத்தின் மீது ஏறி விளக்குகளை ஏற்றுகிறார்கள்.

ஆதியில் இருந்த கோயிலைப் பத்ரேசன் என்பவர் கட்டியதாக ஸ்காந்த புராணத்தில் உள்ள அவந்தி காண்டம் குறிப்பிடுகிறது. மூன்றாம் பானிப்பட்டு போருக்குப் பிறகு, மகாதாஜி ஷிண்டே என்பவர் உஜ்ஜைனியை மீட்டார். போரில் வெற்றி பெற்றால் பைரவருக்குப் பக்ரி (தலைப்பாகை) அணிவிப்பதாக வேண்டிக் கொண்டார். அவரது பிரார்த்தனை பலித்தபின் , தானே முன்வந்து இக்கோயிலைத் திருப்பணி செய்தார். 

உஜ்ஜைனியில் உள்ள முக்கியக் கோயில்கள்:

ஹர்சித்தி மாதா கோயில் : 52 வது சக்தி பீடமாக இதனைக் கூறுகிறார்கள். இவளது அருளுக்குப் பாத்திரமான விக்கிரமாதித்தன், தனது தலையை பதினோரு முறை வெட்டி அர்ப்பணித்தான் என்றும் ஒவ்வொரு முறையும் காளி தேவியின் அருளால் தலையானது உடலோடு மீண்டும் சேர்ந்து விடும் என்றும் வரலாறு கூறும்.

மகா கணபதி கோயில் :
மகாகாளேச்வரர் ஆலயத்திற்கு வடக்கில் உள்ளது. இங்கு விநாயகப்பெருமான் மிகப்பெரிய சுதை உருவில் காட்சி அளிக்கிறார். இக்கோயிலில் இளம் சிறுவர்கள் வேதம் கற்கிறார்கள்.
வேத வகுப்பு 


ஸ்ரீ கோபால் மந்திர்: சாத்ரி சௌக்கில் உள்ள இந்தக் கோயிலில் ராதை, கிருஷ்ணன் ஆகிய மூர்த்திகளைத் தரிசிக்கலாம். இதனைக் கட்டியவர், பைஜா பாய் ஆவார்.

காளி கோயில்: மேற்கண்ட கோபால் மந்திர் அருகில் உள்ளது. காளிதாசனுக்கு அருளிய காளி இவள். பெரிய உருவுடன் காட்சி அளிக்கும் இவளைக் கண்கண்ட தெய்வமாக யாத்ரீகர்கள் வழிபடுகின்றனர்.

மற்றும் ஓங்காரேசுவரர், அகலேசுவரர், ரிண முக்தேசுவரர், மங்களேசுவரர், ஆகியோரது சன்னிதிகளையும், கிருஷ்ணனின் குருவான சந்தீப ரிஷியின் ஆசிரமம் இருந்த இடத்தையும், பர்த்திருஹரியின் குகையையும் தரிசிக்கலாம். 

வேத காலம் முதற்கொண்டே உஜ்ஜைனி நகரம் சிறந்து விளங்கியதாகத் தெரிகிறது. அசோகச் சக்கரவர்த்தி இதனை ஆண்டிருக்கிறார். பின்னர் முகலாயர் ஆட்சிக்கு உட்பட்ட இந்நகரம், 1810 ம் ஆண்டு முதல் சிந்தியா அரசர்களின் ஆளுகைக்கு வந்தது.
இந்தூர் வழியாக வருபவர்கள் அங்கிருந்து ரயில் மூலமாகவும் சாலை மார்கத்திலும் உஜ்ஜைனியை வந்து அடையலாம். இங்கு தங்குவதற்கான வசதிகள் இருப்பதால் அனைத்து ஆலயங்களையும் நிதானமாகத் தரிசிக்க முடியும். மேலும் மோக்ஷத்தைத் தரவல்ல தலமாக இருப்பதால் ஒரிரவேனும் தங்கி ,சிப்ரா நதியில் நீராடிவிட்டு மகாகாளேசுவரரையும் , காளி, பைரவர் ஆகிய மூர்த்திகளையும் தரிசனம் செய்துவிட்டு  வருதல் மரபு ஆகும்.           

Saturday, April 13, 2019

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் ஸ்ரீ சைலம் 3 ம் பகுதி

ஸ்ரீ  சைலத்தைப் பல நூல்கள்  புகழ்ந்து பேசுகின்றன. ஸ்கந்த மகா புராணத்தில் வரும் ஸ்ரீ சைல காண்டம், இத்தலத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. மேலும் மகாபாரத வன பர்வம், பத்ம புராண உத்தர காண்டம், மார்க்கண்டேய புராணம், சிவ புராண ருத்ர ஸம்ஹிதை, பாகவத பத்தாம் ஸ்கந்தம்,ஆதித்ய புராண சூத ஸம்ஹிதை,, ரச ரத்னாகர ரசாயன காண்டம், ஆதி சங்கரரின் சிவானந்த லஹரி, சோமேஸ்வரரின் கதா சரித்ர சாகரம், மாலதி மாதவம், பாணபட்டரின் காதம்பரி, ரத்னாவளி, ஆகியவை  இத்தலத்தின் மகிமையைக்  கூறும் நூல்களாகும். தேவார மூவரான திருஞான சம்பந்தர்,திருநாவுக்கரசர்,சுந்தரர்  ஆகியோர்  இத்தலத்தின் மீது திருப் பதிகங்கள் பாடி அருளியுள்ளார்கள். 

கி.பி. 1 ம் நூற்றாண்டில் இத்தலம் சாத வாகனர்களால் சிரிதான்  என்று வழங்கப்பட்டது. புலமாவி என்ற சாதவாகன மன்னனின் நாசிக் கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகிறது. சாதவாகனர்களின் தோழர்களான இக்ஷுவாக்கள் இதனை ஸ்ரீ பர்வதம் என்று அழைத்தார்கள். பின்னர் நான்காம் நூற்றாண்டில் சிம்ம வர்ம பல்லவன் இப்பகுதியைத் தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டான். த்ரிலோசனபல்லவன் என்பவன் ஸ்ரீ சைலக் காட்டின் ஒரு பகுதியைப் புனரமைத்து அந்தணர்களை அங்கு இருத்தினான். இப்பணியைப் பின்னர் பல்லவர்களை வென்ற சோழர்கள் செய்து முடித்தார்கள். நான்காம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த விஷ்ணுகுண்டியர்கள் இப்பகுதியை ஆண்டனர். அப்போது ஸ்ரீ சைல ஆலயம் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டது. 

பின்னர்  கடம்பர்கள் இதனைச்  சிறிது காலம் ஆண்டனர்.  ஆறாம் நூற்றாண்டில் கரிகால் சோழனின் சந்ததியினர் கடப்பா, கர்னூல் பகுதிகளை ஆண்டனர். பின்னர் கி.பி. 973 வரை ராஷ்ட்ரகூடர்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனர். மீண்டும் சாளுக்கியர்களது ஆட்சி மலர்ந்தபோது, சோழர்கள்  அவர்களை வென்றனர். 12 ம் நூற்றாண்டில் ஸ்ரீசைலம் காகதீயர்களின் வசமாயிற்று.  பிரதாப ருத்ரன் என்பவர் தன்  மனைவியோடு இங்கு வந்து மல்லிகார்ஜுனருக்குத்  துலாபாரம் தந்ததாக வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. கி.பி. 1323 ல்  காகதீய அரசன் முகமதியர்களால் சிறை பிடிக்கப்பட்டு டெல்லிக்குக்  கொண்டு செல்லும் வழியில் இறந்தான். காகதீய அரசும் அதோடு வீழ்ந்தது. 

ஆந்திரத்தின் 72 சிற்றரசர்கள் முகமதியர்களோடு போரிட்டு  மீண்டும் இந்து ராஜ்ஜியங்களை நிறுவினார்கள். இவர்களுள் அத்தங்கி வேமா ரெட்டி என்பவர் குறிப்பிடத்தக்கவர். அவரது குல தெய்வம் திரிபுராந்தகத்தில் உள்ள மூர்த்தியே ஆவார். ப்ரோலய ரெட்டி என்பவர் தன்னை  ஸ்ரீசைல மல்லி கார்ஜுனரின்  பாத சரண தாசன் என்று சொல்லிக் கொண்டார். ஸ்ரீ சைல மலை ஏறி வரும் பக்தர்களுக்காக ரெட்டி மன்னர்கள் படிக்கட்டுக்களை அமைத்ததாக சாசனங்கள் மூலம்  அறிகிறோம். ஸ்ரீ சைலத்தில் பாதாள கங்கை எனப்படும் கிருஷ்ணா நதிக்குச் செல்வதற்குப்  படிக்கட்டுக்கள் கட்டப்பட்டன.  அன மேவா ரெட்டியின் ஆட்சிக்கு ஸ்ரீ சைலம், மகா நந்தி பகுதிகள் உட்பட்டன. விஜயநகரப் பேரரசு இப்பகுதியை வசமாக்கிக் கொண்ட பிறகு, ஆலய முன் மண்டபம், தெற்கு கோபுரம்  ஆகியவை கட்டப்பெற்றன. நிறைய தானங்கள் அளிக்கப் பட்டன. கிருஷ்ண தேவ ராயர் காலத்தில் கிழக்கு கோபுரமும் ரத வீதியில் மண்டபங்களும் கட்டப்பட்டன. விமானத்திற்குத் தங்க முலாம் பூசப்பட்டது. பிற்காலத்தில் அனேக பக்தர்கள் மூலம்  கொடிமரம், நந்தவனம், கோயில் மணி ஆகியவை அளிக்கப்பட்டன. 

கி.பி. 1674 ல் சத்ரபதி சிவாஜி மகாராஜ்  இக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். பிற்காலத்தில் ஸ்ரீ சைல ஆலயத்தின் மீது படையெடுப்பு நிகழ்ந்தபோது மராட்டிய வீரர்கள் கடைசி வீரன் உள்ளவரை போரிட்டதாகக் கூறுவர். அவர்களது சந்ததியினர் இன்றும் ஆண்டுக்கு ஒரு முறை  தங்களது முன்னோரது நினைவாக இங்கு வருகை தந்து வழிபடுகிறார்கள். 

முகலாய அரசன் ஔரங்கசீப்பின்  ஆட்சிக்கு உட்பட்ட பிறகு இப்ராஹீம் கான் என்பவன் அனுதாப அடிப்படையில் ஸ்ரீ சைல ஆலய சொத்துக்களை மீண்டும் ஒப்படைத்தான். இப்பிரதேசம் ஹைதராபாத் நவாபுகளின் வசமான பிறகு இச்சொத்துக்கள் ஸ்ருங்கேரி சங்கர மடத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் நவாப் தனது அரசாட்சிக்கு உட்பட்ட பகுதிகளைக் கிழக்கிந்திய கம்பெனிக்குக் கொடுத்து விட்டான். அதில் ஸ்ரீசைல தேவஸ்தானமும் அடங்கும். ஆங்கிலேயர்கள் , இவ்வாலய நிர்வாகத்தைப் புஷ்பகிரி பீடத்திடம் ஒப்படைத்தனர். ஆனால் நிர்வாகம் சரிவர செயல் படாது போகவே, ஆலயம் மிகவும் பழுதடைந்தது. 1949 வரை ஒரு குழுவின் பொறுப்பில் இருந்த இவ்வாலய நிர்வாகத்தை  , அறநிலையத் துறை மேற்கொண்டது. 

மகா சிவராத்திரி தேர்த் திருவிழா 
ஸ்ரீ சைல ஆலயம்: சுமார் இருபது அடி உயர  மதில் சுவற்றின்  வெளிப்புறம் , சிற்பங்கள் பல செதுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் , பார்வதி திருமணம், நடராஜர், கஜ சம்ஹாரம், பாற்கடல் கடைதல் , கண்ணப்பர் சிவபூஜை, கணபதியின் சிவபூஜை, பிக்ஷாடனர், கணபதியின் நாட்டியத்திற்கு அனுமன் குழல் ஊதுதல், மகிஷாசுர மர்த்தனி , லக்ஷ்மி கணபதி முதலிய மூர்த்திகள் இவற்றுள் சிலவாகும். பிராகாரத்தின் எட்டுத் திக்குகளிலும் அஷ்ட திக் பாலகர்களைக் காண்கிறோம். 
ஆலயத்தின் கிழக்குக் கோபுரம் கிருஷ்ண தேவராயரால் 15  ம்  நூற்றாண்டில் கட்டப்பட்டது. வடக்குக் கோபுரத்தை  கி.பி. 1677 ல்  சத்ரபதி சிவாஜி கட்டினார். பின்னர் மேற்கு கோபுரம், 1966 ல் கட்டப்பட்டது. மல்லிகார்ஜுன சுவாமியின் விமானம் கி.பி. 1230 ம் ஆண்டு காகதீய கணபதி ராஜனின் சகோதரி மைலம்ம தேவியால் கட்டப்பட்டது. கருவறையில் உள்ள ஜ்யோதிர் லிங்க மூர்த்தி சிறிய அளவில் காணப்பட்டாலும் கீர்த்தி மிகவும் பெரிது. விசேஷ நாட்கள் தவிர, அதிக கூட்டம் இல்லாதபோது சுவாமியைத் தீண்ட அனுமதிக்கிறார்கள். 

ஆலயத்தின் முன்புறம் உள்ள ரங்க மண்டபத்தை  விஜய நகர அரசர் இரண்டாம் ஹரிஹர ராயர் கட்டினார். இதனுள்  ரத்ன கர்ப்ப கணபதி, பத்ர காளி, வீரபத்திரர் ஆகியோரைத் தரிசிக்கிறோம். இம்மண்டபத்தின் முன் புறம் உள்ள வீர மண்டபம், 38 தூண்களோடு கட்டப்பட்டது. ஆனால் தற்போது 16 தூண்களே உள்ளன. நந்தி மண்டபத்தில் நந்திக்கு ( சென கல பசவண்ணா ) கடலை மாலை சமர்ப்பிக்கப்படுகிறது. நந்தியம்பெருமானின் திருவுருவம் காண்போரைக் கவர வல்லது. ஆலய வடகிழக்குப் பகுதியில் சப்த மாதர்களைத் தரிசிக்கலாம். இங்குள்ள ஆழ் கிணறு மேற்கூரையோடு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல மற்றோர் ஆழ்கிணறு சுவாமி சன்னதிக்குத் தென்புறம் உள்ளது. சப்த மாதா மண்டபத்தை ஒட்டிய ஆழ்கிணறு, விஷ்ணு குண்டம் எனப்படுகிறது. சுவாமி சன்னதிக்கு வடகிழக்கில் அன்னபூர்ணா சன்னதி உள்ளது. இங்கு யாத்ரீகர்களுக்கு அன்னதானம் செய்யப்படுகிறது. 

சிவபெருமானின்  மூர்த்தங்களான  பவ, சர்வ, ஈசான்ய, பசுபதி, ருத்ர, உக்ர , பீம, மகாதேவ  லிங்க வடிவங்களையும் தரிசிக்கிறோம். இவற்றோடு, ஜல லிங்கம், சூர்ய லிங்கம்,சந்த்ர லிங்கம், வாயு லிங்கம், அக்னி லிங்கம்,ஆகாச லிங்கம், மோக்ஷ லிங்கம் ஆகியவற்றையும் தரிசிக்கிறோம். குமார ஸ்வாமியான  முருகன் ஆறு திருமுகங்களோடு தரிசனம் தருகிறார். இவரது சன்னதியை ஒட்டியுள்ள மண்டபத்தை ஆஸ்தான மண்டபம் என்றும் அலங்கார மண்டபம் என்றும் அழைப்பார்கள். இதனுள்  மல்லிகர்ஜுனரின் பக்தைகளான அக்கமஹா தேவி, ஹேமா ரெட்டி மல்லம்மா  ஆகியோரின் திருவுருவச் சிலைகளைக் காணலாம். சுவாமி சன்னதிக்குப் பின்புறம் படி ஏறிச் சென்றால் பிரமராம்பிகையின் சன்னதியை அடையலாம். இந்த அம்பிகையின் சன்னதி,  சக்தி பீடங்களுள் ஒன்று.இதனருகில் சீதா தேவி பிரதிஷ்டை செய்த சஹஸ்ர லிங்கம் உள்ளது. அம்பாள் சன்னதிக்கு வடகிழக்கிலுள்ள யாகசாலையில் பௌர்ணமி தினங்களில் சண்டி ஹோமம் செய்கிறார்கள்.

மல்லிகார்ஜுனரின் பின்புறம் ஸஹஸ்ர லிங்க சன்னதி உள்ளது. ராமபிரானால்  பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பர். சுவாமிக்குக் கிழக்கில், அத்தி, அரசு, வன்னி மரங்கள் மூன்றும் இணைந்து காணப்படுகின்றன. தத்தாத்ரேயர் இதனடியில் தவம் புரிந்ததாகக் கூறுவார்கள். 

அருகிலுள்ள ஆலயங்கள்: கோயிலைத் தரிசித்துவிட்டு வெளியில் வந்தால், வீரபத்திரர், கங்காதர மூர்த்தி, கிரிஜா சங்கரர், பசுபதிநாதர் ஆகிய மூர்த்திகளையும், கங்கா- பவானி ஸ்நான கட்டம், கோகர்ண தீர்த்தம், சிவாஜி கோபுரத்தின் அருகிலுள்ள சந்த்ர குண்டம், பாதாள கங்கை, ஆகிய தீர்த்தங்களும், 2 கி.மீ. தொலைவில் சாட்சி கணபதி ஆலயமும் உள்ளன. ஸ்ரீ சைலத்தை தரிசித்ததாகக் கைலாயத்தில் சாட்சி சொல்வதல் இந்தக் கணபதியை சாட்சி கணபதி என்கிறார்கள்.  

இந்த ஆலயத்திற்கு அருகில் உள்ள பள்ளத்தாக்கில் பஞ்ச தாரைகளாக நீர் வீழ்ச்சிகளும், ஆதி சங்கரர் தவம் செய்த இடம் என்று ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்கள் காட்டி அருளிய இடமும் உள்ளன. ஒரு காலத்தில் ஸ்ரீ சைலம் வரை மலை ஏறி வர இயலாதவர்கள் ஸ்ரீ சைல பர்வதங்களிலேயே மிக உயரமான (  2830 அடிகள் ) சிகரேசுவரத்தைத்  தரிசித்தபடியே மல்லிகார்ஜுனசுவாமியைத் தியானிப்பார்கள்.  இங்கிருந்தபடியே, ராமபிரான் , மல்லிகார்ஜுனரைத் தரிசித்ததாகச் சொல்வர்.  8 கி.மீ  தொலைவிலுள்ள இச்சிகரத்தின் மேலுள்ள வீர சங்கர சுவாமிக்குப் பக்தர்கள் செக்கில் எள்ளை  ஆட்டி  அதனைப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து நந்தியின் கொம்புகளுக்கு     இடையிலிருந்து மல்லிகார்ஜுன ஆலய சிகரத்தைத் தரிசிக்கிறார்கள். பாதாள கங்கையில் கலக்கும் பீமன்குள  ஊற்றுக்கு அருகில் பீமேசுவர சுவாமி ஆலயம் உள்ளது. பாதாள கங்கையிலிருந்து பரிசிலில் கிருஷ்ணா நதியில் சென்று அக்க மகா தேவி தவம் செய்த குகையை அடையலாம். அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள இஷ்ட காமேசுவரி ஆலயத்தையும் பக்தர்கள் பிரார்த்தனைத் தலமாக வழிபடுகிறார்கள். பரிசிலில் அக்கரை  அடைந்தபின், தத்தாத்ரேயர்  தவம் செய்த கதலீ  வனத்தைக் காணலாம். தியானம் செய்வதற்கேற்ற அமைதியான இடம் இது. 

அடர்ந்த காடுகளிடையே அமைந்த அற்புதத் தலம் ;  அமைதி தேடுவோர்க்கு  ஏற்ற சூழல். புண்ணிய மூர்த்தியைத் தாங்கும் புண்ணிய சிகரங்கள்; கண்ட மாத்திரத்திலேயே பிறவிப்பிணியை நீக்கிடும் தெய்வீக மலைத் தொடர்கள்; இவை அனைத்தும் ஒருங்கே காட்சி  அளிக்கும்   ஸ்ரீசைல   பர்வதத்தை வாழ்நாளில் ஒரு முறையாவது அன்பர்கள் சென்று தரிசித்து நலம் பெற வேண்டும்.