Saturday, September 26, 2020

 ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள் காசி  விச்வநாதம் IV

                                                    சிவபாதசேகரன்


                                                    ஷண்முக நாதன் -நன்றி-வலைத்தளப்படம் 

ஒழுக்கம் எவ்வாறு இன்றியமையாதது என்று  முருகப்பெருமான் கூறத் தொடங்கினார்: “ ஒழுக்கமே ஐசுவரியம் என்பதை அறிந்தும் அதனைப் பின்பற்றாதவர்கள் நரகத்திடைத் துயர் அனுபவிப்பார்கள். நியமத்துடன் வாழ்பவர்கள், பொய் கடிந்து இன்புறும் வண்ணம் பேசுதல், புலன்களை வெல்லுதல், கொலை போன்ற குற்றங்களைக் கடிதல், புனித நதிகளில் நீராடுதல், தீயவர்களது நட்பைத் தவிர்த்தல், விரதம் பூண்டல் , தரும நூலைகளை ஓதுதல் ஆகிய நன்னெறிகளைக் கடைபிடிப்போர் காசி நகரை அடையும் பேறு பெறுவார்கள்.

வைகறையில் துயில் நீங்கி,கணபதி, நீலகண்டன், உமாதேவியார், திருமால் , பிரமன் இந்திரன் ஆகியோரையும்,  மலைகளையும், கடல்களையும் ,தந்தை – தாயரையும் , வசிஷ்டர் முதலிய முனிவர்களையும் அருந்ததி முதலாய கற்புக்கரசிகளையும் ஊர்வசி ஆகிய மாதரையும், காசி மாநகரத்தையும், கௌஸ்துபம் முதலிய மணிகளையும், மந்தாரம் முதலிய விருக்ஷங்களையும் . ஐராவதம் என்ற தேவலோக யானையையும் ஜனகன் முதலான யோகிகளையும், ஆதி சேஷன் ஆகிய நாகங்களையும் வேதங்களையும், நாரதர் ஆகிய ரிஷிகளையும், காமதேனுவையும் , அரிச்சந்திரன் முதலிய வாய்மை குன்றாத வேந்தரையும்,ததீசி முனிவர் உள்ளிட்ட தரும வழி நிற்போரையும், இந்திரனது குதிரையையும், முத்தீ ஓம்பும் மறையோர்களையும், ஆசார வழி நிற்போரையும் மனத்துள் தியானிக்க வேண்டும்.

நீராடியபின், உத்தரியத்தைப் பிழிந்து தோளில் சேர்த்துக் கொண்டு, சந்தியா கிரியைகளை வழுவாது செய்து, மூச்சினை  அடக்கி முறையோடு பிராணாயாமம் செய்து காயத்திரி மந்திரம் ஜபிப்போர், தங்களது  பாவம் நீங்கப்பெற்று , பன்னிரண்டு ஆண்டுகள் தவம் செய்த பலனைப் பெறுவர். இவ்வாறு ஆயிரத்தெட்டு முறை ஜபித்து சூரியனுக்கு அர்க்கியம் கொடுத்தல் வேண்டும்.  பின்னர் வைச்வதேவம் செய்து, தேவ பூஜை செய்யக் கடவர். வேதம் ஓதுபவர், பிரமசாரிகள், துறவிகள், வயது முதிர்ந்தோர் ஆகியோருக்கு உணவு அளிக்க வேண்டும். பிறகு போஜன விதிப்படி உணவருந்தல் வேண்டும். பிறகு இதிகாச புராணங்களைப் பயிலுதலில் பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் சந்த்யாதி காயத்ரி ஜபங்களைச் செய்ய வேண்டும். பிறகு அகஸ்தியர், முசுகுந்தன் ஆகியோரைத் தியானித்து, சிவபிரானை பூஜித்து வணங்குதல் வேண்டும். தென் திசையில் தலை வைக்காமல் கிழக்குத் திசையில் தலை வைத்துத் துயில் கொள்ள வேண்டும்.  

மக்கட்பேறு கிட்டியவுடன் அக்குழந்தைக்கு வேத விதிப்படி சிகை அமைத்து, பின்னர் நாமகரணம் செய்து, அன்னம் ஊட்டி, எட்டாவது வயதில் அந்தணர்க்கும், பதினொன்றாம் வயதில் க்ஷத்ரியர்க்கும், பன்னிரண்டாம் வயதில் வைசியர்க்கும் உபநயனம் செய்தல் வேண்டும். வேத விதிப்படி அந்தணச் சிறுவர்கள் பிற மனைக்குச்சென்று அன்னம் ஏற்க வேண்டும். குரு சேவை புரிதலை  மிக முக்கியமாகக் கொள்ள வேண்டும். உலக விஷயங்களில் ஈடுபடாமல், தண்டம் தாங்கிய கையுடன் பதினாறு ஆண்டுகள் கல்வி கற்பதிலேயே கவனம் செலுத்த வேண்டும். அரச குமாரர்களுக்கு இருபத்திரண்டு ஆண்டுகளும் இருபத்து நான்கு ஆண்டுகளும் இவ்வாறு பிரம சரியம் காத்தல் வேண்டும். மறையோர்க்குப் பலாச தண்டமும், மன்னவர்க்கும் வைசியர்க்கும் பலாச மற்றும் வில்வமும் தண்டங்களாகக் கூறப்பட்டுள்ளன. வேதம் பயின்ற பின்னர் சமாவர்தனம் செய்திடல் முக்கியமானது. மாதா,பிதா, குரு ஆகியோரைப் பழிப்பவரிடம் சேர்தலாகாது.

இவ்வாறு பிரமச்சரிய இலக்கணம் கூறிய ஷண்முகக் கடவுள், மகளிர்க்கான இலக்கணத்தைக் கூறத் தொடங்கினார்.       

                                                    ( காசியின் பெருமைகள் தொடரும் ) 

1 comment: