Thursday, July 25, 2019

ஜ்யோதிர் லிங்க ஸ்தலங்கள்-தொடர்ச்சி- ஒங்காரேச்வர்

நர்மதையும் ஆலயமும் 
இறைவன் ஓங்கார வடிவினன் ஆதலால் ஒங்காரேசுவரன் என்று அழைக்கப்படுகிறான். அவனது இருப்பிடமும் ஓங்கார வடிவாகிறது.     ஈங்கோய் மலை என்ற தலத்தின் மீது நக்கீரர் அருளிய பாடல் ஒன்றை நாம் இங்கு நினைவு கூர்ந்துவிட்டு, ஜ்யோதிர் லிங்க தரிசனம் செய்வோம்.

“ அடியும் முடியும் அரியும் அயனும்
 படியும் விசும்பும் பாய்ந்தேறி – நொடியுங்கால்
 இன்னதென அறியா ஈங்கோயே ஓங்காரம்
 அன்னதென நின்றான் மலை “

 ஏழு புண்ணிய நதிகளான கங்கை,யமுனை,கோதாவரி,சரஸ்வதி, நர்மதை,ஸிந்து,காவேரி ஆகியவற்றை தியானித்துக் கொண்டே அன்றாடம் நீராடுவது மரபு. இவற்றுள் நர்மதைக்கு மட்டும் மற்ற நதிகளுக்கு இல்லாத தனிச் சிறப்பு உண்டு. இந்நதி உற்பத்தியாகும் இடத்திலிருந்து, கடலோடு சங்கமம் ஆகும் இடம் வரை உள்ள தூரத்தை ஆற்றின் ஒரு கரை முழுவதுமாகக் கால்நடையாகவே சென்று விட்டு, ஆற்றின் எதிர்க் கரையை படகில் கடந்து மீண்டும் மறு கரை ஓரமாகவே உற்பத்தி ஸ்தானம் வரை நடந்து சென்று வலம் செய்வது பண்டைக்காலம் முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. ஏனைய ஆறு நதிகளை இவ்வாறு முழுவதுமாக வலம் செய்வது இல்லை. இதற்குக் காரணம், இந்நதியில் ஏராளமான சிவலிங்க பாணங்கள் வெவ்வேறு அளவில் இருப்பதே ஆகும். அத்தனை சிவலிங்க பாணங்களையும் ஒரு சேர வலம் செய்யக் கருதினார்கள் நம் முன்னோர்கள். 
வழியில் உள்ள பாண லிங்கக் கடை 

நர்மதா பரிக்கிரமத்தின் போது கையில் பணம் எடுத்துச் செல்வது தவிர்க்கப்படுகிறது. காலை முதல் மாலை வரை மட்டுமே நடக்க வேண்டும். வழியில் உள்ள கிராமங்களில் தங்கிக்   கிராமவாசிகள் அன்புடன் கொடுக்கும் உணவை உண்டு, மறு நாள் காலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். இப்படிச் செய்தால் பூர்த்தி செய்வதற்கு ஒரு வருஷத்திற்கும் மேல் ஆகும். மழை மற்றும் குளிர்க் காலங்களில் நடந்து செல்வதும் கடினம் தான். காடுகளையும் மலைப் பிரதேசங்களையும் கடந்து செல்ல வேண்டிய இப்பயணத்தை ஒப்பற்ற நியமத்துடனும் பக்தியுடனும் செய்யும் மக்கள் அநேகர். தற்காலத்தில் வாகனங்கள் மூலமாகப் பதினைந்து தினங்களில் செய்வோரும் உளர்.

 மக்கள் இந்நதியைத் தாயாகவே கருதுவர். “ நர்மதா மையா “ என்றும் “ மா ரேவா “ என்றும் அழைப்பார்கள். ரேவா என்பதற்குப் பாய்ச்சல் என்று அர்த்தம் சொல்வார்கள். நர்மதை அப்படிப் பாய்ந்தோடி வந்து அனைவரது வாழ்வையும் செழிக்கச் செய்து அருளுகிறாள் அல்லவா? சுமார் 1300 கி. மீ. தூரம் ஓடி வந்து நம் வாழ்வை வளம் செய்கிறாள். மத்தியப் பிரதேசத்திலுள்ள மைகல் மலைத்தொடரிலுள்ள அமர்கண்ட் என்ற இடத்தில்(Mai ki bagiya) உற்பத்தி ஆகி, மகாராஷ்டிரத்தைக் கடந்து, குஜராத் மாநிலத்தில் பரூச் பகுதியில் மிதி தலாய்(Mithi thalai) என்னும் இடத்தில் கடலுடன் சங்கமிக்கிறாள். கங்கையின் இடது கரை மட்டுமே புனிதம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது. ஆனால் மேற்குத் திசை நோக்கிச் செல்லும் இந்நதியின் இரு கரைகளுமே புனிதமானவை. அதன் இரு கரைகளில் ஜோதிர்லிங்கத் தலங்கள் சிலவும்,பிற சிவாலயங்களும் அமைந்திருக்கக் காணலாம். இந்நதியை வலம் செய்வதால் பிறப்பின் நோக்கம் பூர்த்தி அடைவதாகக் கருதுவர். கங்கையில் ஒரு நாளும் சரஸ்வதியில் ஒரு நாளும் மாதுர் கயையில் ஒரு நாளும் நீராடிய பலனை நர்மதையைத் தரிசித்தவுடனேயே  பெற்று விடலாம் என்று புராணம் கூறுகிறது.

படகிலிருந்து தெரிவது மலையின் எழில் தோற்றம் 
நர்மதை இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்றாகச் சேர்ந்து ஓங்கார வடிவில் தோற்றமளிப்பதால் தற்போது  ஓங்காரேஷ்வர் என்று இந்த  ஜ்யோதிர் லிங்கத் தலம் அழைக்கப் படுகிறது. படகின் மூலமாக நர்மதையின் மறு கரையில் உள்ள மலைக் கோயிலை அடையலாம். நர்மதையின் குறுக்கே பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரை ஓரமாக உள்ள இம்மலை கோயிலுக்குப் போகப் படிக்கட்டுகள் அமைந்துள்ளன. பஞ்ச முக கணபதியைத்தரிசித்து விட்டு மலை ஏறுகிறோம். மகா சிவராத்திரியின் போதும் விசேஷ தினங்களிலும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். முப்பத்து முக்கோடி தேவர்கள் எப்போதும் வாசம் செய்து ஈசனை வழிபடும் தலம் இது. 

ஒங்காரேச்வரரையும், மகாகாலேச்வரரையும், சித்தீச்வரரையும் இங்கு தரிசனம் செய்கிறோம். நூற்றெட்டு சிவலிங்கங்களைக் கொண்ட புண்ணிய பூமி இதுவாகும். சிவபுரியில் ஒங்காரேச்வரர் ஆலயமும், விஷ்ணுபுரியில் அமரேச்வரர் அல்லது மல்லேச்வரர் ஆலயமும் உள்ளன. ஒங்காரேச்வரர் சன்னதியை அடைந்ததும் சுவாமி பள்ளமான இடத்தில் சிறிய லிங்க வடிவில் காட்சி அளிக்கக் காணலாம். இரவில் ஆரத்தி நடந்து முடிந்தபிறகு கோயிலில் யாரும் தங்குவதில்லை. அப்போது சுவாமியும் பார்வதி தேவியும் சொக்கட்டான் ஆடுவதாகவும் அதை யாரும் பார்க்கக்கூடாது என்றும் ஐதீகம். ஒருமுறை இதனை மறைந்திருந்து பார்த்து சோதிக்கச் சென்ற அயல் நாட்டுக்காரர் ஒருவர் மீண்டும் உயிருடன் வரவில்லை என்று கூறப்படுகிறது.    
    
மாந்தாதா என்ற இக்ஷ்வாகு குலத்து அரசன் சௌபரி என்ற முனிவருக்குத் தனது ஐம்பது பெண்களையும் மணம் செய்து கொடுத்தான். அவனது மகனாகிய முசுகுந்தன் மகா சிவ பக்தன். மாந்தாதா ஆண்ட பகுதி மாந்தாதா ஆசிரமம் என்று வழங்கப்படுகிறது. இம்மன்னனது விக்கிரகம் ஒங்காரேச்வரர் ஆலயத்தில் வழிபாட்டில் உள்ளது.

ஒரு காலத்தில் கோகரணத்தில் வழிபட்டு விட்டு, நாரத முனிவர் விந்திய மலையை அடைந்தார். அப்போது அவர் மேரு மலையின் பெருமையை விந்திய மலையிடம் எடுத்துரைத்தார். அதைக் கேட்டுப் பொறாமை கொண்ட விந்தியமலை, தானும் மேருவைப் போலவே பெருமை அடைய வேண்டும் எனக் கருதி, ஓங்கார ரூபத்தில் ஒரு சிவலிங்கத்தையும், பார்த்திவ லிங்கத்தையும் நர்மதைக் கரையில் வழிபட்டு வந்தது. இதனால் மகிழ்ந்த சிவபெருமான், விந்தியத்தின் முன் தோன்றி, வேண்டிய வரத்தைக் கேட்குமாறு அருளினான்.

எல்லோரைக் காட்டிலும் உயர்ந்தவனாகத தான் ஆக வேண்டும் என்ற வரத்தை அம்மலை கேட்டது. அவ்வாறு அருளுகையில், “ நீ ஒருக்கால் இறுமாப்புக் கொண்டால் எனது அடியவன் உன்னை சிறியதாக ஆக்கி விடுவான் “ என்றார். ( பின்னர் அகத்திய முனிவர், மேருவைக் குறுக வைத்ததையும் , உக்கிர பாண்டியன் மேருவைச் செண்டால் அடித்து அதன் செருக்கை அடக்கியதையும் புராணங்கள் கூறுகின்றன.) விந்திய மலை யந்திர வடிவில் பூஜித்த லிங்க மூர்த்தி ஒங்காரேச்வரராகவும், பார்த்திவ லிங்கம் அமலேச்வரமாகவும் தற்போது அங்கு தோற்றமளிக்கின்றன. பன்னிரு ஜ்யோதிர் லிங்கங்களைக் குறிப்பிடும் ஸ்தோத்திரத்திலும் “ ஓங்காரம் அமலேச்வரம் “ என்று இவ்விரு ஆலயங்களையும் இணைத்தே கூறப்பட்டிருக்கிறது.

அமலேச்வரத்தைச் சிலர் அமரேச்வரம் என்றும் வழங்குவர். இதற்குக் கர்த்தமேச லிங்கமானது உபலிங்கமாகும். இதனைத் தவிரவும், வைடூர்ய மணி பர்வதத்தில் கௌரி சோமநாதர் கோயிலும் உள்ளது. சுமார் ஐந்தடி உயரமுள்ள சோமநாத மூர்த்தியைத் முன்னால் நின்று தரிசிப்போருக்குத் தங்களது முற்பிறப்பும், பின்னால் நின்று தரிசிப்போருக்கு பிற் பிறப்பும் தெரியவரும் என்று கேள்விப்பட்ட     அவுரங்கசீப், முன்னின்று பார்த்தபோது அதில் பன்றி உருவம் தெரிந்ததாகவும் கோபமுற்ற அவன், அம்மூர்த்தியை நெருப்புக்கு இரை ஆக்கியதால் வெண்ணிறமாக இருந்த மூர்த்தி கறுத்து விட்டதாகவும் கூறுவார்கள்.    

வழித்தடம்: உஜ்ஜைன் நகரிலிருந்து ஓங்காரேஷ்வர் வருவதற்குப் போக்குவரத்து வசதிகள் உள்ளன. வடக்கிலிருந்து வருபவர்கள் இந்தூர் வழியாக உஜ்ஜைனியை அடைந்து அங்கிருந்து ஓங்காரேஷ்வரை அடையலாம்.  

வாழ்வில் ஒரு தடவையேனும் வழிபட வேண்டும் என்று எழுதாமல் பலமுறைகள் சென்று நர்மதையில் நீராடி ஓங்காரேச்வரரின் அருள் பெற வேண்டும் என்றே எழுதுமாறு உள்ளிருந்து நம்மைத் திருவருள் தூண்டுகிறது. தரிசித்து விட்டுப் பிரிய மனமில்லாமல் திரும்பிப் பார்த்தபடியே விடை பெறும் அற்புதத் தலங்களுள் இதுவும் ஒன்று. நர்மதையில் ஸ்நானம் செய்யும்போது பெறும் ஆனந்தத்தை வெறும் வார்த்தைகளால் எப்படி விவரிக்க முடியும் ?

3 comments:

  1. நர்மதாதர்சனம் போலவே இனித்தது இந்த வியாசம். நன்றி.
    தேசிகன்.

    ReplyDelete
  2. Casino, Hotel and Racing in Maricopa - Mapyro
    Casino, Hotel and 서울특별 출장안마 Racing in Maricopa, AZ. 천안 출장안마 95780, USA. Map. 구미 출장안마 Phone. Map. View Map. Directions. Map. Directions. 경상남도 출장마사지 Casino, Hotel 나주 출장마사지 and Racing

    ReplyDelete