Wednesday, March 18, 2015

ஏக பில்வம் சிவார்ப்பணம்.

தெய்வாம்சம் பொருந்திய மரங்களாக வணங்கப்படுபவைகளுள் வில்வமும் ஒன்று. இதனை மஹா லக்ஷ்மி விரும்பி உறைவதால், ஸ்ரீ வ்ருக்ஷம் என்றும் அழைப்பர். இதன் இலைகளால் சிவபெருமானை லக்ஷ்மி அர்ச்சித்து, மஹா விஷ்ணுவை அடையப்பெற்றாள் என்பது வரலாறு. மூன்று தளங்களாகத் திகழும் இதன் இலைகளைப் பறிப்பதற்கும் நியமம் உண்டு. மரத்தின் மேல் கால் வைத்து ஏறாமல் ஏணியின் மூலம் ஏறி, இலைகளைப் பறிக்க வேண்டும். சோமவாரம், சிவராத்திரி,அமாவாசை, பெளர்ணமி,த்வாதசி, ஆகிய நாட்களில் பறிக்கக் கூடாது. மரக் கிளைகளை வெட்டுவதோ அவற்றை விறகு போலப் பயன் படுத்துவதோ அறவே கூடாது. இதன் கீழ் அமர்ந்து செய்யும் ஜபம்,பாராயணம் ஆகியவற்றுக்கு அதிகப் பலன் உண்டு. இதன் மூன்று தளங்கள்,பிரம்ம, விஷ்ணு,ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளையும் குறிப்பதாகக் கூறுவர். பூச்சி அரிக்காத வில்வ இலைகளால்,பிரதோஷம், சோமவாரம்,சிவராத்திரி போன்ற நாட்களில் சிவ சஹஸ்ர நாமம்,ருத்ர த்ரிசதி அர்ச்சனைகள் செய்வர். பிற நாட்களிலும் வில்வ இலைகளால் சிவ அஷ்டோத்திரம் செய்யப் படுகிறது.

ஒரு காலத்தில் வில்வக்காடுகளாகத் திகழ்ந்த இடங்களில் சிவாலயங்கள் இருப்பதை இன்றும் காணலாம். ஒரு சில உதாரணங்களாக, திருவைகாவூர், திருக் கொள்ளம் பூதூர் ஆகிய ஸ்தலங்களைக் குறிப்பிடலாம். இங்கெல்லாம் சுவாமிக்கு வில்வாரண்யேச்வரர் என்று பெயர். இவ்விடங்களில் வில்வம், ஸ்தல விருக்ஷமாக அமைந்துள்ளது.

புலியால் விரட்டப்பட்ட வேடன் ஒருவன் திருவைகாவூரில் ஒரு மரத்தின் மீது அமர்ந்து தஞ்சமடைந்தான். அவன் அவ்வாறு அமர்ந்தது ஒரு வில்வ மரம். அன்றைய தினம் மகா சிவராத்திரி. இதை அறியாமலே, அம்மரக்கிளைகளில் இருந்து இலைகளைப் பிய்த்துக் கீழே போட்டுக் கொண்டு இருந்தான். மரத்தடியில் இருந்த அம்மையப்பர் அதனை அர்ச்சனையாக ஏற்று அவனுக்கு முக்தி வழங்கி அருளினார் என்பது அத்  தல வரலாறு.

பில்வ அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்திரம் என்ற அருமையான ஸ்தோத்திரம் இருக்கிறது. இதைப் பாராயணம் செய்து பரமேச்வரனுக்கு வில்வார்ச்சனை செய்தால் சிவ சாயுஜ்யம் பெறலாம் என்பது இதன் கடைசிப்  பாடல். நீண்ட ஆயுள்,புகழ்,வெற்றி ஆகியனவும் பெறலாம் என்கிறது இந்த ஸ்தோத்திரம். இப்படி அர்ச்சனை செய்வதால் பாப நிவர்த்தி ஏற்படும்.

சிவ நாமாக்கள் ஏராளமாக அமைந்து வருவதால் எளிமையாகப் புரிந்து கொண்டு பாராயணம் செய்யலாம்.
சிவம் சாந்தம் உமாநாதம் மஹாத்யான பராயணம்
ஞானப்ரதம் க்ருத்திவாஸம்  ஏகபில்வம் சிவார்ப்பணம்
என்பதால், மங்களமானவனும், சாந்த மூர்த்தியும், தியானங்களுக்கு இருப்பிடமானவனும், ஞானத்தை வழங்குபவனும், யானைத் தோல் போர்த்தவனுமான ஈச்வரனை வணங்கி , ஒரு பில்வத்தை சிவார்ப்பணமாக அர்ச்சிக்கிறேன் என்பது பொருள்.

இதேபோன்று, ருத்ராக்ஷதாரியாகவும், பார்வதிக்குப் பிரியமான நாயகனாகவும், பிறை சூடிய பெருமானகவும் வருணனை வருகிறது:
அக்ஷமாலாதரம் ருத்ரம் பார்வதி ப்ரிய வல்லபம்
சந்திரசேகரம் ஈசானம் ஏகபில்வம் சிவார்ப்பணம்.

சிவாஷ்டோத்திர நாமாக்களை நினைவு படுத்துவதாக அமைந்த
ஸாமப்ரியம் ஸ்வர மயம் பஸ்மோத்தூளித விக்ரஹம்
ம்ருத்யுஞ்ஜயம் லோகநாதம் ஏக பில்வம் சிவார்ப்பணம்
என்பதும் ,

 ஸ்ரீ ருத்ரத்தை நினைவு படுத்துவதாக,
சிபி விஷ்டம் சஹஸ்ராக்ஷம்  துந்துப்யம் ச நிஷங்கிணம்
ஹிரண்ய பாஹும் ஸேனான்யம் ஏக பில்வம் சிவார்ப்பணம் .
என்பதும் நாம் அறிந்து மகிழத் தக்கன.

யக்யேச்வரனே யாகத்திற்கு ஏற்படும் இடையூறுகளைப் போக்கி, ஹவிர் பாகத்தை ஏற்றுக் கோரிய பலனை வழங்குகிறான் என்பதை,
யக்ஞ கர்ம பலாத்யக்ஷம்  யக்ஞ விக்ன விநாசகம்
யக்ஞேசம் யக்ஞ போக்தாரம் ஏகபில்வம் சிவார்ப்பணம்
என்பதால் அறியலாம்.

மூன்று பிறவிகளின் பாவங்களை நீக்கி, சாளக்ராம வழிபாடு, கன்னிகாதானம், கிணறு - குளம் வெட்டுதல் ஆகியவற்றால் கிடைக்கும் பலனை ஒரு வில்வதளத்தால் சிவனை அர்ச்சிப்பதால் சித்திக்கும் என்கிறது இந்த ஸ்தோத்திரம்.

வில்வ மரத்தைப் பார்ப்பதும், அதனைத் தொடுவதும், பாவங்களைப் போக்க வல்லது என்பதை,    " தர்சனம் பில்வ வ்ருக்ஷஸ்ய ஸ்பர்சனம் பாப நாசனம் "   என்பதால் இதன் பெருமை அறிய வருகிறது.  அன்பர்கள் அனைவரும் இந்த அற்புதமான ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்வதோடு,வில்வ தளங்களால் சிவ பூஜை செய்து இகபர பலன்கள் யாவும் பெற வேண்டும் என்று எல்லா உலகங்களுக்கும் தாயாகவும் தகப்பனாகவும் இருந்து அருளும் கருணைக்கடலைப்  பிரார்த்திக்கிறோம்:
ஸர்வ லோகைக பிதரம்   ஸர்வ லோகைக மாதரம்
ஸர்வ லோகைக நாதஞ்ச ஏக பில்வம் சிவார்ப்பணம்.    

No comments:

Post a Comment