Monday, February 27, 2017

அதிசய ஆலயம்

தேப்பெருமாநல்லூரில் நாகம் வழிபடுதல் 
திருக்கோயில்களில் மக்கள் கூட்டம் பரிகாரங்கள் செய்யவோ அல்லது அங்கு நடந்த அதிசயம் பற்றி அறிந்ததாலோ வரத் துவங்கியுள்ளது. அப்படியாவது கிராமக் கோயில்களை நாடி மக்கள் வருகிறார்களே என்று ஆறுதல் அடைய வேண்டியுள்ளது. 

அதிசயம் அநேகம் நடைபெற்ற கோயில்களில் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள தேப்பெருமாநல்லூரும் ஒன்று. கடந்த 2010 ம் ஆண்டில் இங்குள்ள விசுவநாத சுவாமி கோயிலில் உள்ள வில்வமரத்திலிருந்து வில்வத்தைப் பறித்து வந்து கருவறையின் கோமுகம் வழியாக நுழைந்து இறைவனின் திருமுடிமீது ஒரு நாகமானது அர்பணித்ததைப்  படம் எடுத்து வெளியிட்டிருந்தார்கள். அதைக் கண்டவுடன் வெளியூர் அன்பர்கள் ஏராளமாக வரத் துவங்கினர். சூரிய கிரகணத்தின்போது இவ்வாறு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இது வழக்கமாக நடைபெறுவது என்றாலும், மக்கள் மத்தியில் பிரபலம் அடையத் துவங்கியது அந்த ஆண்டு முதல் தான்! அப்போதெல்லாம் கிரகணத்தன்று வழக்கத்திற்கு மாறாகக் கோயில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்றும் தற்போது மூடி வைக்கப்படுவதாகவும் அறிகிறோம். ஆனால் கிரகணம் முடிந்து கோயிலைத் திறந்தால்  சன்னதியில் பாம்புச் சட்டைகள் காணப்படுவதாகக் கூறுகின்றனர்.


கும்பகோணத்திலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தொலைவிலுள்ளஇந்த ஆலயத்திற்குச் செல்பவர்கள்  திருநாகேஸ்வரம் வரைசென்று அங்கிருந்து இரண்டு கி.மீ. பயணிக்கலாம். ரயில் மூலம்வருபவர்கள் கும்பகோணத்திற்கு அடுத்த நிலையமான திருநாகேஸ்வரத்தில் பாசஞ்சர் வண்டி மூலம் வந்து இறங்கிசுமார் அரை கி.மீ சென்றால் ஆலயத்தை அடையலாம். 
தேப்பெருமாநல்லூரைச் சுற்றிலும் சிறந்த சிவஸ்தலங்கள் அமைந்துள்ளன. திருவிடைமருதூர் (4 கி.மீ.) ,திருவியலூர் என்னும் திருவிசநல்லூர் (5 கி.மீ.) , திருந்துதேவன்குடி என்னும் கர்கடேசுவரர் கோயில் ( 6.5 கி.மீ.) ,தண்டந்தோட்டம் ( 5 கி.மீ.) , ஏன நல்லூர் (6.5 கி.மீ) , திருநறையூர் என்னும் நாச்சியார் கோயில் ( 6.5 கி.மீ) , திருச்சேறை (11 கி.மீ) ,திருமங்கலக்குடி ( 7 கி.மீ.) , கூகூர் (10 கி.மீ), ஆகிய சில ஊர்களை இங்குக்  குறிப்பிடலாம். 

இது ஒரு புண்ணிய பூமி எனலாம். எனவே புண்ணியம் செய்தவர்க்கே இங்கு வந்து தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று தல புராணம் கூறுகிறது. கிழக்கு நோக்கிய இவ்வாலயத்தின் எதிரே திருக்குளம் காணப்படுகிறது. 

சுவாமிக்கு விசுவநாதர் என்றும் அம்பிகைக்கு வேதாந்த நாயகி என்றும் பெயர்கள் அமைந்துள்ளன. ஆண்டு முழுவதும் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவரின் திருமேனியின் மீது விழுகின்றன. சுவாமிக்கு ருத்ராக்ஷ கவசம் அணிவிக்கப்படுகிறது. மேலும், ருத்திராக்ஷத்தால் அர்ச்சனை செய்யப்படுகிறது. சுவாமிக்கு ருத்ராக்ஷேசுவரர்  என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இத்தலத்தை வழிபடுவோர்க்கு மறு பிறப்பு இல்லை என்றும் தல வரலாற்றால் அறியலாம். பிரளய காலத்தில் மகா கணபதியே பிரமனுக்கு இத்தலத்தின் மகிமையைக் கூறியது, அம்பிகையே வேத மந்திரங்களின் பெருமையை வெளிப்படுத்தி, வேதாந்த நாயகி ஆனது, பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களும் இங்கு அமைந்தது, யாளி முகம் கொண்ட மகரந்த மகரிஷி, அகஸ்தியரின் அறிவுரைப்படி,ருத்ராக்ஷத்தால் இறைவனை அர்ச்சித்து சாப விமோசனம் பெற்றது, மேதா தக்ஷிணா மூர்த்தியே அன்னதான மகிமையை உரைத்தது ஆகிய வரலாறுகளைத் தல புராணத்தில் காணலாம்.

 பிராகாரத்தில் கன்னி மூலையில் மகா கணபதியின் அருமையான தரிசனம்கிடைக்கிறது. அதற்கு அடுத்த சன்னதியில் முருகன்-வள்ளி- தேவசேனை சமேதராய் காட்சி அளிக்கிறார். மூலவரின் பின்புற கோஷ்டத்தில்சாதாரணமாக லிங்கோத்பவர், அர்த்தநாரீசுவரர்,மகாவிஷ்ணு ஆகிய மூர்த்திகளையே காண முடியும். ஆனால் இங்கு அந்த கோஷ்டத்தில் விநாயகரைக் காண்கிறோம். 

ஆலயத்தின் பல பகுதிகளில் சுதைச் சிற்பங்கள் மிகுந்து காணப்படுகின்றன. அவற்றில் படமெடுக்கும் பாம்பின் உருவமும் காணப்படுகிறது. மூலவரது கருவறை கோமுகத் துவாரத்தின் அருகில் நாகம் படமெடுத்து ஆடுவது போன்ற சுதைச் சிற்பம் காணப்படுகிறது. இதன் வழியாகத்தான் நாகப்பாம்பு உள்ளே நுழைவதாக அறிகிறோம். 

சுவாமியை நோக்கியவாறு உள்ள நந்தி அழகான வேலைப்பாடு உடையது. பிரதோஷ வழிபாடு இவருக்குச்  சிறப்பாக நடை பெறுகிறது. 

சுவாமிசன்னதிக்குச் செல்லும் வழியில் ராகுவுக்கும் கேதுவுக்கும் ஒரு சன்னதி இருக்கிறது. இருவரும் அருகருகே நின்று காட்சி அளிக்கின்றனர். வேதாந்த நாயகியின் சன்னதி தெற்கு நோக்கியது. சுவாமியின் கோஷ்டத்தில்  மேதா தக்ஷிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம்.

ஊர்ப்பெயருக்குக்  காரணம் என்ன என்று தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும், இறையருளால் ஓரளவு ஊகிக்க முடிகிறது. தேப்பெருமான் என்பது தேவாதி தேவனாகிய சிவபெருமானைக் குறிப்பது. " தே உறைகின்ற இடைமருது ஈதோ"  என்று திருஞான சம்பந்தர் வாக்கில் வருவது காண்க. இந்தப்பகுதியில் பழமை வாய்ந்த பல ஊர்கள் நல்லூர் என்ற அடைமொழியால் வழங்கப்படுவதால் ( திரு நல்லூர், திருக் கலைய நல்லூர், மணவாள நல்லூர், அவளிவணல்லூர் ஆகிய தலப் பெயர்களை நோக்குக) இதற்கும் தேப்பெருமா(ன்) நல்லூர்  என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கலாம். 

இந்த ஊரில் வேத விற்பன்னர்கள் பலர் வாழ்ந்தனர். தேப்பெருமாநல்லூர் அன்னதான சிவம் என்ற பெரியவர்  சிவத்தலங்கள் பலவற்றிற்குச் சென்று ஏராளமான அன்னதானம் செய்தவர். இவரது பெருமையைக்  காஞ்சி காமகோடி பெரியவர்கள் கூறுவதுண்டு. 

அதிசயங்கள் வெளிப்படும் நேரத்தில் தான் வெளிவரும். அப்படி வெளிவராவிட்டால் மகிமை இல்லை என்று ஆகி விடாது. ஒவ்வொரு ஊருக்கும் தனிச் சிறப்பும் சாந்நித்தியமும் நிச்சயம் உண்டு என்பதை நாம் உணர வேண்டும். எனவே, பரிகாரத்தையோ, அதிசயத்தையோ நாடிச் செல்பவர்கள் அத்தலங்களின் அருகிலுள்ள புராதனமான தலங்களை அவசியம் தரிசிக்க வேண்டும். அப்படித்  தரிசித்துக் கொண்டே வந்தால், பக்குவ நிலை தானாகவே ஏற்பட்டு விடும். இறைவன் எங்கும் நீக்கமற இருப்பதைக் கண் கூடாகக் காணும் பேறும், அவன் தாள் மலர்களை வணங்குவதால் சித்தித்து விடும்.

Sunday, February 26, 2017

சூல விரதமும் சூல மங்கையும்

சூல மங்கலம் கோபுர வாயில் காட்சி 
விரதம் என்பது மனதை ஒருமுகப்படுத்துவதற்கும் , பண் படுத்துவதற்கும் ஏற்பட்ட சிறந்த சாதனம் ஆகும். இதைக் கடைப்பிடிக்கும்போது நியமம் அத்தியாவசியமாகிறது. உணவு உட்கொள்லாமலிருந்துவிட்டால்  மட்டும் விரதம் பூர்த்தியாகிவிடாது. உணர்வு செம்மை ஆகவேண்டுவதே இதன் உயரிய நோக்கம். விரதம் என்று பெயரளவில் இருந்துவிட்டு, ஒவ்வாத காரியங்களை மேற்கொள்வதால் என்ன பயன் ? பிறரை ஏமாற்றுவதோடு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். அதனால் தான் விரதங்களைக் கடைப்பிடிக்கும் முறைகளைப் புராணங்கள் எடுத்துரைக்கின்றன. 

விரதம் இருப்பவர்கள் தான் மட்டும் பலன்களைக் கோருவது ஒரு வகை. பிறருக்காக வேண்டுவதும், அவர்களுக்கு உதவுவதும் அதனைக் காட்டிலும் உயர்ந்த வகை. எனவே, விரத தினங்களில் ஆத்ம பூஜை, ஆலய வழிபாடு செய்வதோடு,நமது  சக்திக்கு ஏற்பதான தருமங்களை மேற்கொள்வது சிறப்பு என்று அறிகிறோம். 

விரத தினத்தன்று வழக்கமாகச்  செய்யும் எல்லாச் செயல்களையும் முடிந்த அளவிலாவது குறைத்துக் கொள்ள வேண்டும். பொய் பேசுவது, பொறாமைப் படுவது, கோபப்படுவது , நாள் முழுவதும் கிடைத்ததை எல்லாம் உண்பது போன்றவை இதில் அடங்கும். பெரிய தியாகம் எதுவும் செய்ய முடியாவிட்டாலும், தினசரி நாம் மேற்கொள்ளும் பாதையைச் சிறிதாவது செப்பம் செய்திருக்கிறோம் என்று நமது மன சாட்சி சொல்லும்போது விரதம் மேற்கொண்டதற்கு ஓரளவாவது திருப்தி கிடைத்து விடும். 

சிவபெருமானின் அருள் பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் விரதங்களில், சோம வார விரதம், மகா பிரதோஷ விரதம்,கேதார கௌரி விரதம்,மகா சிவராத்திரி விரதம் போன்றவை அதிகமாக  மேற்கொள்ளப் பட்டு வருபவை. அஷ்ட மகா விரதங்களில் ஒன்றான சூல  விரதம் என்பதும் சிறந்த பலன்களைத் தர வல்லது. தை அமாவாசையன்று இவ்விரதம் மேற்கொள்ளப் படுகிறது. அன்றையதினம் விடியற்காலையில் துயில் எழுந்தவுடன் நீராடி, விபூதி ருத்திராக்ஷம் தரித்து, சிவபூஜை செய்து விட்டு, சிவாலயத்திற்குச் சென்று தரிசனம் செய்து, ஏழை-எளியவர்களுக்கு  முடிந்த அளவில் தான தருமங்கள் செய்ய வேண்டும். ஒரு வேளை  மட்டுமே உணவு மேற்கொள்ளுவது சிறப்பு. இவ்வாறு விரதம் மேற்கொள்பவர்கள், பகை , வியாதி ஆகியவை நீங்கப்பெற்று, விரும்பிய பலன்களை எல்லாம் பெறுவர் என்று புராணம் கூறுகிறது. 

சூல மங்கை சிவாலயப் பிராகாரம் 
சூல  விரதத்தன்று , சூல  தேவரால் பூஜிக்கப்பெற்ற பெருமை வாய்ந்த சூல  மங்கைக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீ அலங்கார வல்லி சமேத ஸ்ரீ  க்ருத்திவாசேசுவரர்  ஆலயத்தை வழிபாட்டு அங்கு நடைபெறும் ரிஷப வாகனப்  புறப்பாட்டைக் கண்டு களித்துத் தீர்த்தவாரியையும் தரிசிக்கலாம்.  

சூல தேவர் 
சூல  மங்கை என்று தேவாரத்தில் குறிப்பிடப்படும் இத்தலம் , தற்போது சூல மங்கலம் என்று வழங்கப்படுகிறது. கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியிலுள்ள ஐயம் பேட்டை என்ற ஊரிலிருந்து சுமார்  2  கி. மீ. தொலைவில் உள்ளது. ஐயம் பேட்டையிலிருந்து ஆட்டோ வசதி இருக்கிறது. மூன்று நிலை ராஜ கோபுர வாயிலுக்கு எதிரில் சூல  தீர்த்தம் அமைந்துள்ளது.கோபுர வாயிலைக் கடந்தால் விசாலமான பிரகாரத்தை அடைகிறோம் நந்தி பலிபீடம் ஆகியவை முன்னால் அமைந்துள்ளன. அடுத்த வாயிலின் அருகில் சூல  தேவர் காட்சி அளிக்கிறார். அவரது சிரத்தின் மீது திரிசூலம் காட்டப்பட்டிருக்கிறது.இருகைகளையும் சேர்த்துக் கோர்த்த வண்ணம் அருட்காட்சி வழங்குகிறார் இவர். பிராகாரத்தில் கணபதி,கந்தன்,கஜலக்ஷ்மி, சண்டிகேசுவரர் ஆகியோரது சன்னதிகள் உள்ளன. சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும் அம்பிகை சன்னதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. 

இத்தலத்தில் சூல விரதத்தை அனுஷ்டித்த திருமாலானவர் நோய் நீங்கப்பெற்றும், காலநேமி என்ற அசுரனை வெல்லும் வலிமை பெற்றும், சிவனருள் பெற்றார். பரசுராமரும் இத்தலத்து இறைவனை வழிபட்டுக் கார்த்த வீர்யார்ஜுனனை வென்றார். பிரமனும் இங்கு வழிபட்டுத் தனது தீராத வாயிற்று வலி நீங்கப்பெற்றான். சுதன்மன் என்பவன் இவ்விரத மகிமையால், மரணத்தை வென்றான். மேகாங்கன் என்ற மன்னன் கல்வி அறிவில் சிறந்த மக்களைப் பெற்றெடுத்தான். முடிவில் சிவலோகத்தை அடையும் பேறு பெற்றான். 

தை அமாவாசையன்று இங்கு சிறப்பு அபிதேக ஆராதனைகள் சுவாமி அம்பாளுக்கும் சூல  தேவருக்கும் நடைபெறுகின்றன. பிறகு, ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் புறப்பாடு நடைபெறுகிறது. வீதி வலம் வந்த பின்னர் தீர்த்தவாரி நடைபெறுகிறது. வெளியூர் அன்பரின் பெருமுயற்சியாலும் அயராத சிவபக்தியாலும் இவ்விழா  ஏற்பாடு செய்யப்பட்டு வருவது அனைவராலும் போற்றப்பட வேண்டியது ஆகும். இவ்வளவு தூரம் முன்வந்து விழாவினை  நடத்துபவருக்கு உறுதுணையாக இனி வரும் ஆண்டுகளில் உள்ளூர் மக்களும் , இந்து அறநிலையத்துறையும் ஒத்துழைத்து பஞ்ச மூர்த்திகளையும் புறப்பாடு செய்ய வேண்டும் என்பது பல அன்பர்களின் விருப்பமும் வேண்டுகோளும் ஆகும். தஞ்சை,குடந்தை அன்பர்களும் முன்வந்து இவ்விழாவைக் கோலாகலமாக நடைபெறச் செய்யலாம் அல்லவா? 

ஆலய வழிபாடு என்பது ஆண்டுக்கு ஒருமுறை விழா நடத்துவதோடு முடிவது அல்ல. நித்தியபூஜைகளும் வழிபாடுகளும் சிறப்பாகவும் நியமத்தோடும் ஆலயத்தில் நடைபெறச் செய்வது அதை விட முக்கியம். இதில் உள்ளூர் மக்களின் ஆர்வமும், பக்தியும்,ஒத்துழைப்பும் மிகவும் தேவைப்படுகிறது. இது இல்லாமல் போகும் பட்சத்தில் தான் ஒருகால பூஜைக்குத் தள்ளப்படும் அவலநிலை ஏற்படுகிறது. பூஜா காலங்களில் கோயில் பூட்டப்பட்டுக் கிடக்கலாமா என்று கிராம மக்கள் சிந்திக்க வேண்டும். எனவே தகுந்த சிவாச்சாரியார்களைக் கொண்டு தங்கள் கிராமத்தில் ஆலய பூஜைகளைத்  தினந்தோறும் , காலம் தோறும் நடைபெறச் செய்ய வேண்டிய கடமை உள்ளூர் வாசிகளுக்கு நிச்சயம் உண்டு. அதேபோல் வெளியூர் அன்பர்களும் அவகாசம் கிடைக்கும் போதெல்லாம் இது போன்ற கோயில்களுக்குச்         சென்று தங்களாலான உதவிகளைச் செய்ய வேண்டும். அந்த எண்ணம் எல்லோரது மனதிலும் உண்டாக வேண்டும் என்று கிருத்திவாசேசுவரப்  பெருமானைப் பிரார்த்திக்கிறோம். 

Monday, February 13, 2017

கஞ்சனூரில் கயிலைக் காட்சி

ஹரதத்தர் ஆலயம், கஞ்சனூர் 
மகான் ஹரதத்தர் பற்றி நீண்டதொரு வலைப்பதிவைக்  கடந்த அக்டோபர் மாதத்தில் வெளியிட்டிருந்தோம். அனைவருக்கும் தெரிந்திருக்கவேண்டிய அற்புத சரித்திரம் அது. அந்த அவதார புருஷர் கஞ்சனூரில் வாசம் செய்து ,பல நூல்கள் மூலம் சிவபரத்துவத்தை நிலை நாட்டியதைக்   குறிப்பிட்டிருந்தோம். கஞ்சனூரில் அக்னீசுவர சுவாமி கோயிலுக்குச் செல்லும் வழியில் ஹரதத்தருக்கென்று ஒரு சிறு ஆலயம் கிழக்கு நோக்கியவாறு உள்ளது. ஒரு பிராகாரமே கொண்ட இவ்வாலயத்தின் கருவறையில் அக்னீசுவரரை நோக்கிக் கைகள் அஞ்சலி செய்தபடி ஹரதத்தர் நின்ற வண்ணம் காட்சி அளிக்கிறார். இங்கு தினசரி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 

ஆண்டுதோறும் தை மாத சுக்ல பஞ்சமியில் ஹரதத்தருடைய ஆராதனை, பழங்காலந்தொட்டு விமரிசையாக நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடந்து வந்த இவ்வைபவம் நாளடைவில் ஏக தின உற்சவமாக ஆகியது. அக்னீசுவரர் ஆலயத்திலிருந்து பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு ஆகி , ஹரதத்தர் ஆலய வாயிலுக்கு வந்ததும், ஹரதத்தர் மற்றும் அவரது குடும்பத்தார்களுக்குக் கயிலைக் காட்சி வழங்கி,முக்தி கொடுத்த வரலாற்றின் அடிப்படையில் இது நடத்தப்படும். சமீப காலமாகப் பஞ்ச மூர்த்தி புறப்பாடும் நின்று போய், ஹரதத்தரை மாத்திரம் வீதியில் உள்ள அவரது கோயிலுக்கு எழுந்தருளச் செய்து  உபயதாரர் மூலம் இந்த ஆராதனையை நடத்தி வந்தனர் . இந்த ஆண்டு மீண்டும் பஞ்ச மூர்த்தி புறப்பாடு அதே உபயதாரர் மூலம் நடத்தப்படுவது மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது. முன்போலவே, இது மூன்று நாள் விழாவாக நடைபெற அக்னீசுவரப்பெருமான் அருள் துணை நிற்க வேண்டும்.

ஹரதத்தரது ஆலய மகாமண்டபக் கூரையில் அவரது வரலாற்றைச் சித்திரமாக எழுதி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு சித்திரம் பற்றிய சிறு குறிப்பும் அதன் கீழ் தரப்பட்டுள்ளது. 

அக்னீசுவர சுவாமி ஆலயத்தில் காலையிலேயே பஞ்ச மூர்த்திகள் அபிஷேகமாகி, அலங்காரம் செய்விக்கப்பெற்று மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர்.  அதே நேரத்தில், ஹரதத்தர் ஆலயத்தில் சுமார் பத்து மணி அளவில் அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. மூலவருக்குச் செய்யப்படும் புஷ்பாலங்காரத்தைக்  கண்ட கண்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். கண் பெற்ற பயனே அதுதானே! 

கயிலைக் காட்சி 
சுமார் பதினோரு மணி அளவில் அக்னீசுவரப்பெருமானும், கற்பகாம்பிகையும் வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளுகின்றனர். ஒரு தனி ரதத்தில் விநாயகர், வள்ளி-தெய்வானை சமேதரான சுப்ரமண்யர், சண்டிகேசுவரர் ஆகியோரும் எழுந்தருளுகின்றனர். கூடவே,தனிப் படிச்சட்டத்தில் ஹரதத்தர்,தனது குடும்பத்துடன் எழுந்தருளுகிறார். இம்மூர்த்திகளுக்குக் கோபுர வாசலில் தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் சன்னதித்தெருவில் உள்ள ஹரதத்தரது ஆலயத்திற்கு மூர்த்திகள் எழுந்தருளுகின்றனர். ஆலயத்தின் உள்ளே சுவாமிக்கும் ஹரதத்தருக்கும் தீபாராதனை நடைபெற்றவுடன், வாசலில் எழுந்தருளியுள்ள மூர்த்திகளுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடத்தப்படுவது கண் கொள்ளாக் காட்சியாகும். இவ்வாறு ஹரதத்தருக்குக் கயிலைக்   காட்சி வழங்கியபின் பஞ்ச மூர்த்திகள் திருவீதிக்குச் சென்று விட்டு ஆலயத்தை அடையும்போது சுமார் ஒரு மணி ஆகிறது.

இதெல்லாம் நடந்ததா, ஹரதத்தர் கயிலைக்குச் சென்றபோது கூடவே வந்த நாயையும் தன்னுடன் கயிலைக்கு அழைத்துச் சென்றார் என்பதை எப்படி நம்புவது என்பவர்களுக்காக இங்கு அன்றைய தினம் நடந்த நிகழ்ச்சியைத் தருகிறோம்.  பஞ்ச மூர்த்திகளையும் சுற்றி மக்கள் கூட்டம் இருந்த அந்த வேளையில், அக்கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்த ஒரு வெள்ளை நிற நாய் சுவாமிக்கு நேராக நின்று சுவாமியையே பார்த்துக் கொண்டு இருந்ததை மிகச் சிலரே கண்டு ஆனந்தித்தார்கள். அடுத்த கணம் அந்த நாயைக் காண முடியவில்லை. ( யாரும் அதை விரட்டவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது). இதற்கு மேல் எழுத வார்த்தைகள் வரவில்லை.