Monday, February 13, 2017

கஞ்சனூரில் கயிலைக் காட்சி

ஹரதத்தர் ஆலயம், கஞ்சனூர் 
மகான் ஹரதத்தர் பற்றி நீண்டதொரு வலைப்பதிவைக்  கடந்த அக்டோபர் மாதத்தில் வெளியிட்டிருந்தோம். அனைவருக்கும் தெரிந்திருக்கவேண்டிய அற்புத சரித்திரம் அது. அந்த அவதார புருஷர் கஞ்சனூரில் வாசம் செய்து ,பல நூல்கள் மூலம் சிவபரத்துவத்தை நிலை நாட்டியதைக்   குறிப்பிட்டிருந்தோம். கஞ்சனூரில் அக்னீசுவர சுவாமி கோயிலுக்குச் செல்லும் வழியில் ஹரதத்தருக்கென்று ஒரு சிறு ஆலயம் கிழக்கு நோக்கியவாறு உள்ளது. ஒரு பிராகாரமே கொண்ட இவ்வாலயத்தின் கருவறையில் அக்னீசுவரரை நோக்கிக் கைகள் அஞ்சலி செய்தபடி ஹரதத்தர் நின்ற வண்ணம் காட்சி அளிக்கிறார். இங்கு தினசரி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 

ஆண்டுதோறும் தை மாத சுக்ல பஞ்சமியில் ஹரதத்தருடைய ஆராதனை, பழங்காலந்தொட்டு விமரிசையாக நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடந்து வந்த இவ்வைபவம் நாளடைவில் ஏக தின உற்சவமாக ஆகியது. அக்னீசுவரர் ஆலயத்திலிருந்து பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு ஆகி , ஹரதத்தர் ஆலய வாயிலுக்கு வந்ததும், ஹரதத்தர் மற்றும் அவரது குடும்பத்தார்களுக்குக் கயிலைக் காட்சி வழங்கி,முக்தி கொடுத்த வரலாற்றின் அடிப்படையில் இது நடத்தப்படும். சமீப காலமாகப் பஞ்ச மூர்த்தி புறப்பாடும் நின்று போய், ஹரதத்தரை மாத்திரம் வீதியில் உள்ள அவரது கோயிலுக்கு எழுந்தருளச் செய்து  உபயதாரர் மூலம் இந்த ஆராதனையை நடத்தி வந்தனர் . இந்த ஆண்டு மீண்டும் பஞ்ச மூர்த்தி புறப்பாடு அதே உபயதாரர் மூலம் நடத்தப்படுவது மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது. முன்போலவே, இது மூன்று நாள் விழாவாக நடைபெற அக்னீசுவரப்பெருமான் அருள் துணை நிற்க வேண்டும்.

ஹரதத்தரது ஆலய மகாமண்டபக் கூரையில் அவரது வரலாற்றைச் சித்திரமாக எழுதி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு சித்திரம் பற்றிய சிறு குறிப்பும் அதன் கீழ் தரப்பட்டுள்ளது. 

அக்னீசுவர சுவாமி ஆலயத்தில் காலையிலேயே பஞ்ச மூர்த்திகள் அபிஷேகமாகி, அலங்காரம் செய்விக்கப்பெற்று மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர்.  அதே நேரத்தில், ஹரதத்தர் ஆலயத்தில் சுமார் பத்து மணி அளவில் அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. மூலவருக்குச் செய்யப்படும் புஷ்பாலங்காரத்தைக்  கண்ட கண்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். கண் பெற்ற பயனே அதுதானே! 

கயிலைக் காட்சி 
சுமார் பதினோரு மணி அளவில் அக்னீசுவரப்பெருமானும், கற்பகாம்பிகையும் வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளுகின்றனர். ஒரு தனி ரதத்தில் விநாயகர், வள்ளி-தெய்வானை சமேதரான சுப்ரமண்யர், சண்டிகேசுவரர் ஆகியோரும் எழுந்தருளுகின்றனர். கூடவே,தனிப் படிச்சட்டத்தில் ஹரதத்தர்,தனது குடும்பத்துடன் எழுந்தருளுகிறார். இம்மூர்த்திகளுக்குக் கோபுர வாசலில் தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் சன்னதித்தெருவில் உள்ள ஹரதத்தரது ஆலயத்திற்கு மூர்த்திகள் எழுந்தருளுகின்றனர். ஆலயத்தின் உள்ளே சுவாமிக்கும் ஹரதத்தருக்கும் தீபாராதனை நடைபெற்றவுடன், வாசலில் எழுந்தருளியுள்ள மூர்த்திகளுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடத்தப்படுவது கண் கொள்ளாக் காட்சியாகும். இவ்வாறு ஹரதத்தருக்குக் கயிலைக்   காட்சி வழங்கியபின் பஞ்ச மூர்த்திகள் திருவீதிக்குச் சென்று விட்டு ஆலயத்தை அடையும்போது சுமார் ஒரு மணி ஆகிறது.

இதெல்லாம் நடந்ததா, ஹரதத்தர் கயிலைக்குச் சென்றபோது கூடவே வந்த நாயையும் தன்னுடன் கயிலைக்கு அழைத்துச் சென்றார் என்பதை எப்படி நம்புவது என்பவர்களுக்காக இங்கு அன்றைய தினம் நடந்த நிகழ்ச்சியைத் தருகிறோம்.  பஞ்ச மூர்த்திகளையும் சுற்றி மக்கள் கூட்டம் இருந்த அந்த வேளையில், அக்கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்த ஒரு வெள்ளை நிற நாய் சுவாமிக்கு நேராக நின்று சுவாமியையே பார்த்துக் கொண்டு இருந்ததை மிகச் சிலரே கண்டு ஆனந்தித்தார்கள். அடுத்த கணம் அந்த நாயைக் காண முடியவில்லை. ( யாரும் அதை விரட்டவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது). இதற்கு மேல் எழுத வார்த்தைகள் வரவில்லை. 

2 comments:

  1. No doubt at all , that it was another TiruviLaiyaadal, dear Sekhar. Thanks for sharing!

    ReplyDelete
  2. சிவாய நம அய்யா,
    கோவையிலிருந்து பாடல் பெற்ற தல யாத்திரை செல்பவர்கள் இருந்தால் அவர்கள் விவரம் தர வேண்டுகிறேன்
    அஸ்வத்த நாராயணன்
    கோவை
    8527817014

    ReplyDelete