Thursday, October 6, 2016

திருத்தினைநகர் சிவக்கொழுந்தைச் சென்றடைவோம்

திருத்தினைநகர் சிவாலயம் 
தல யாத்திரை செய்வதில் தற்போது பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆன்மீக இதழ்களும், தொலைக் காட்சிகளும்  திருத்தல தரிசனமாகப் பல ஊர்களை அறிமுகம் செய்து வைக்கின்றன. ஜோதிடர்களும் மக்களைப பரிகாரத் தலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். கவலைகள் பெருகி வரும் இந்நாளில் மக்கள் இறைவனை நாட ஆரம்பித்து விட்டனர் என்றும் சொல்லலாம். அரசின் சுற்றுலாத் துறையும் பல தனியார்களும்  ஸ்தல யாத்திரைக்கு அழைத்துச் செல்கிறார்கள். இதனால் மக்கள் பெரும்பாலும் பிரபலமான கோயில்களையும், பரிகாரக் கோயில்களையும் நாடுகின்றனர். அவற்றுக்குச் செல்லும் வழியில் உள்ள கோயில்களுக்கு அவர்கள் செல்வதில்லை. உதாரணமாக, சந்திரக் கிரகப் பிரீதி செய்கிறேன் என்று திங்களூருக்குச் செல்பவர்களில் எத்தனை பேர்  வழிலுள்ள பாடல் பெற்ற தலமாகிய திருப் பழனத்திற்குச் செல்கிறார்கள்?  கோயில் சுற்றுலா செல்பவர்களும் எத்தனை கோயில்களுக்குச் செல்கிறோம் என்ற எண்ணிக்கையிலேயே குறியாக இருக்கிறார்கள்.

பாடல் பெற்றவையும், பாடல் கிடைக்கப்பெறாததும் ஆகிய எண்ணற்ற தலங்கள் திரும்பிப் பார்க்கக் கூட ஆளில்லாத நிலையில் உள்ளன.அந்த ஊர்களில் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தவர்கள் நகரங்களை நோக்கி நகர்ந்து விட்டதன் விளைவே இது. போதாக் குறைக்கு ஆலய நிலங்களும் சொத்துக்களும் சூறையாடப்பட்டும் தீர்வு காணாத நிலை ! இப்படி இருக்கும் போது  கைவிடப்பட்ட கோயில்களைப்  பற்றிக் கவலைப் படுவோர் மிகச் சிலரே. 

இம்மாநிலத்திலும், பிற மாநிலங்களிலும், அயல் நாடுகளிலும் வாழ்ந்துவரும் அன்பர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். பிரபலமான கோயில் உண்டியல்களை நிரப்பிவிட்டுச் செல்வதைச்  சற்றுக்  குறைத்துக் கொண்டு,  ஏழ்மை நிலையில் உள்ள ஆலயங்களையும் அவற்றில் பணி புரியும் சிப்பந்திகளையும் பற்றி சிந்திக்க ஆரம்பிக்கலாம் அல்லவா? அக்கோயில்களுக்கு முடிந்தபோதெல்லாம் சென்று வழிபாடுகள், உழவாரப் பணிகள் போன்றவற்றையும் செய்யலாம். அப்போதுதான் அக்கோயில்களில் தீபம் எரியும். அர்ச்சகர்கள் வாழ்விலும் ஒளி ஏற்றப்படும். மன்னர்கள் தமது பிற்கால சந்ததியர்களின் மீது வைத்த நம்பிக்கை பாழாக விடலாமா? 

கடலூரிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் இரண்டு அற்புதமான பாடல் பெற்ற தலங்கள் உள்ளன. ஆலப்பாக்கத்திற்கு அண்மையில் உள்ள தியாகவல்லி என்று அழைக்கப்படும் திருச்சோபுரமும் , மேட்டுப்பாளையம் என்ற ஊரிலிருந்து  5 கி.மீ. தொலைவில் தீர்த்தனகிரி என்ற பெயரில் உள்ள திருத்தினை நகரில் உள்ள சிவக் கொழுந்தீசுவரர் கோயிலும் அவ்விரண்டு ஆலயங்கள். 

                                                     திருத்தினை நகர்

 தல இருப்பிடம்:  கடலூருக்குத் தென்மேற்கில் 16 கி.மீ. தொலைவில் பெண்ணை ஆற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது  

தல வரலாறு: இவ்வூருக்கு அருகிலுள்ளதும் கருடனால் உண்டாக்கப்பட்டதுமான பெருமாள் ஏரியின் தென்புறம் உள்ள ஐஎழுமூர் என்ற ஊரில் பெரியான் என்பவன் வாழ்ந்து வந்தான். வறுமை வந்த காலத்திலும் சிவனடியார்களுக்கு உணவு அளித்து வந்தான். தனது நிலத்தில் தினையைப் பயிரிட்டு அதன் மூலம் கிடைத்த வருமானத்திலிருந்து அடியார்களுக்கு அமுதளித்து வந்தான். அவனது தொண்டை உலகம் அறிய வேண்டி இறைவன் ஒருநாள் அவன் முன்னர் ஜங்கம வடிவில் தோன்றி, அமுதளிக்குமாறு வேண்டினான். அதைக் கண்டு இரங்கிய பெரியானும், " நான் தற்போது நிலத்தை உழுது கொண்டிருக்கிறேன். அதில் பயிரிட வேண்டி, தினை  விதைகளை இதோ வைத்திருக்கிறேன். தாங்களோ பசியால் மிகவும் வாடிக் களைத்திருக்கிறீர்கள் . நான் எனது வீட்டிற்குச் சென்று உணவு எடுத்து வருகிறேன். அதுவரையில் தாங்கள் தினை  விதைகளை உட்கொள்ளலாம்." என்று கூறிவிட்டுத் தனது இல்லத்திற்குச் சென்றான்.  இறைவனோ பெரியான் திரும்பி வருவதற்குள் கையில் இருந்த தினை  விதைகளை நிலத்தில் விதைத்துவிட்டு ,  அன்றே அவை முதிர்ந்து விளையும்படி செய்தருளினான். 

சிவனடியார் வந்த செய்தியை இல்லம் திரும்பிய பெரியான் தன்  மனைவியிடம் கூறினான். வீட்டில் உணவுப் பொருள்கள் எதுவும் இல்லாததால் நிலத்தில் விதைப்பதற்காக வைத்திருந்த தினை விதைகளைக் கையில் எடுத்துக் கொண்டு  மனைவியுடன் நிலத்திற்குத் திரும்பினான். அங்கு தினைப் பயிர் விளைந்திருந்த அதிசயம் கண்டான். இருவரும் எங்கு தேடியும் வந்திருந்த அடியாரைக் காணவில்லை. கொன்றை மர  நீழலில் ஒரு சிவலிங்கம் இருந்ததைக் கண்டு அதிசயித்து நின்றனர். அப்போது வான வீதியில் உமாதேவியுடன் சிவபெருமான் காட்சியளிக்க, இருவரும் திருவருட் கருணையை எண்ணி எண்ணி நெகிழ்ந்து தொழுதனர். இவ்வாறு அன்றே தினை  விளைத்து அன்றே விளைந்ததால் இத்தலம் தினை  நகர்  என்று பெயர் பெற்றது. இவ்வரலாறு  தென்புறச்  சுவற்றில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இப்போதும் தினை  அமுது சுவாமிக்கு நிவேதிக்கப்படுகிறது.

சம்பந்தரை அடியார்கள் எதிர்கொண்டு வரவேற்றல் 
பிற செய்திகள்: இத்தலத்துப் பெருமானை திருமாலானவர் மூன்று தினங்கள் வழிபாட்டு,    முராசுரனை  வதைத்ததால் முராரி என்ற சிறப்புப் பெயர் பெற்றார். 

ஜாம்பவான் இங்கு வந்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து நீண்ட ஆயுள் பெற்று, ராம பிரானுடன் ராவணனைத் தேடும் வானர சேனைகளுக்குத் துணை புரிந்தார். அம்பாள் சன்னதியில் இவர் பூஜித்த சிவ லிங்கம் உள்ளது. தீர்த்தம் ஒன்றும் இவர் பெயரில் அமைந்துள்ளது.  

ஸ்தல விருக்ஷமான  கொன்றை மரத்தடியில் நந்திதேவர் இறைவனை வழிபட்டுள்ளார். பிராகாரத்தில் உள்ள கொன்றை மரத்தடியில் சிவலிங்கமும் நந்தியும் இருப்பதைக் காணலாம். 

பதஞ்சலி,வியாக்கிரபாதர் ஆகியோரும் இங்கு வந்து இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றனர். 

வங்க தேசத்து மன்னனான விசுவ நிருபன் என்பவன் பிரமஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு ஒவ்வொரு சிவத்தலமாகத் தரிசனம் செய்து கொண்டு வரும்போது திருத்தினை நகரை அடைந்து அங்கிருந்த  தாமரைத் தடாகத்தில் விதிப்படி ஸ்நானம் செய்து இறைவனைக் காலந்தோறும் தொழுது வந்தான். அதனால் அவனது சரும நோயும், பிரமஹத்தி தோஷமும் நீங்கின. அவனது மகனான வீர சேனன் என்பவன் இங்கு மூன்று ஆண்டுகள் தங்கித் திருப்பணிகள் செய்வித்தான். இவனது வில்லேந்திய உருவச்சிலையை நால்வர் சன்னதியில் காணலாம். 

கோயிலமைப்பு:  ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் நமது வலப்புறம் தெற்கு நோக்கியவாறு அமைந்துள்ள கருந்தடங்கண்ணி அம்பிகையின் சன்னதி அமைந்துள்ளது. 

ராஜ கோபுரமும் அம்பாள் சன்னதியும் 
வடமொழியில் தேவியின் திருநாமம் நீலாயதாக்ஷி என்பதாகும். அம்பிகையின் இப்பெயர், இத்தலத்தின் மீது சுந்தரர் அருளிய தேவாரத் திருப்பதிகத்தில், " கருந் தடங் கண்ணி பங்கனை "  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அம்பிகையின் மகாமண்டபத்திலுள்ள சுவற்று ஓவியங்கள் சம்பந்தர், அப்பர் ஆகியோர் இத்தலத்துக்கு வருகை தந்தபோது அடியார்கள் எதிர்  கொண்டு அழைப்பதைச் சித்தரிப்பதாக வரையப்பட்டுள்ளன.  

மூலவர் விமானம் 
மூலவர் சன்னதி கிழக்கு நோக்கியவாறு அர்த்த மண்டபம், மகா மண்டபத்துடன் விளங்குகிறது. சதுர ஆவுடையாரோடு பெருமான் அற்புதக் காட்சி வழங்குகிறார்.தெற்கு நோக்கிய நடராஜர் சபையில் விஷ்ணு  சங்கு  ஊதுபவராகவும்,பிரமன் பஞ்சமுக வாத்தியம் வாசிப்பவராகவும் இருபுறமும் விளங்க ஆடல்வல்லான் அம்பிகையுடன் அருட் காட்சி அளிக்கின்றான். 

பிராகாரச் சுவற்றில் தலவரலாற்றுச் சிற்பங்களின்  வரிசையில், பெரியான், ஜன்கமராக வந்த இறைவன், தினை விதைத்தது, தினை முதிர்ந்து நிற்பது,கொன்றையடியில் காட்சி தருவது பெரியானும் அவனது மனைவியும் வணங்குவது போன்ற சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

ஆண்டு முழுதும் பூக்கும் சரக்கொன்றை மரம் தல விருக்ஷமாகப் பிராகாரத்தில் அமைந்துள்ளது. ஜாம்பவான் பூஜிக்கும் சிற்பமும் அம்பிகை பூஜித்த பெரிய லிங்கமும் இருக்கக் காணலாம். தேவ கோஷ்டங்களிலுள்ள மூர்த்தங்களில் இரு கால்களையும் மடக்கிய வண்ணம் காட்சி தரும் தக்ஷிணாமூர்த்தி குறிப்பிடத்தக்கவர் . சண்டிகேசுவரரும்,சண்டிகேஸ்வரியும் சேர்ந்து ஒரே சன்னதியில் காட்சியளிக்கின்றனர். 

தீர்த்தங்கள்:  
1 கௌரி தீர்த்தம்: பிராகாரத்தில் கிணற்று வடிவிலுள்ளது. சிவபூஜைக்காக அம்பிகையால் உண்டாக்கப்பட்டது. 
2 ஜாம்பவான் தீர்த்தம்: ஜாம்பவானால் ஏற்படுத்தப்பட்ட இத்தீர்த்தம் தற்போது தாமரைக்            குளமாகக்  கோயிலின் வடபுறம் அமைந்துள்ளது.
3 கருட தீர்த்தம்: ஏரி  வடிவிலுள்ள இத்தீர்த்தத்தின் அருகில் கருட லிங்கக் கோயில் உள்ளது.
4 தேவ தீர்த்தம்: அருகிலுள்ள கடல்,  தேவ தீர்த்தம் எனப்படுகிறது. 
5 சக்கர தீர்த்தம் :  ஊரின் மூலையில் உள்ள மற்றொரு தீர்த்தம் 

சிவரகசியத்தில் இத்தல மகாத்மியம் கூறப்பட்டுள்ளது. இதனைத் தமிழில் குமார மைய மருந்தார் என்பவர் 854 விருத்தங்களால் இயற்றியுள்ளார். 

இத்தலத்தைத்  தேவாரம் பாடிய மூவரும் வந்து தரிசித்ததாகப் பெரிய புராணம் கூறும். ஆனால் தற்போது நமக்கு சுந்தரர் அருளிய ஒரு பதிகம் மட்டுமே கிடைக்கிறது. ஏனையவை மறைந்து போயின. வாழ்க்கை நிலையாமையை உணர்த்தும் அற்புதமான திருப்பதிகத்தை இத்தலத்து இறைவன் மீது சுந்தரர் பாடியருளியுள்ளார். அப்பதிகத்தைப் பாடவல்லார்கள் முக்தி பெறுவர் என்று பதிகப்பலனும் அறிவிக்கின்றார் அவர். 

 நடுநாட்டிலுள்ள தேவாரப்பாடல்களைப்  பெற்ற தலங்களில் ஒன்றான திருத்தினை நகரைச் சென்றடைந்து சிவக் கொழுந்தீசனின் திருவருளைப் பெற அன்பர்கள் அனைவரையும்  அழைக்கிறோம்.  இவ்வாலய  அர்ச்சகரைத் தொடர்பு கொள்ள வேண்டிய   தொலை பேசி எண்கள்: 097864677593; 09150151192; 09047140464. 

3 comments:

  1. What a beautiful post, dear Sekhar! Apart from the joy of learning about the immeasurable love of Lord Sivakkozhuntheeswara towards the devout and hospitable farmer, it was interesting to learn that millets were significant crops near Pennai river beds and Swami enjoyed nivedana made of Thinai. Of course you would know that millets are far superior to rice or wheat in food value.
    Regards. Desikan

    ReplyDelete
  2. Elaborate details. Very nice. If more photographs, including Sivacharyas, their agraharam, holy tanks etc.etc.would have been enchanting. Thanks

    ReplyDelete
  3. Elaborate details. Very nice. If more photographs, including Sivacharyas, their agraharam, holy tanks etc.etc.would have been enchanting. Thanks

    ReplyDelete