Wednesday, March 18, 2015

ஏக பில்வம் சிவார்ப்பணம்.

தெய்வாம்சம் பொருந்திய மரங்களாக வணங்கப்படுபவைகளுள் வில்வமும் ஒன்று. இதனை மஹா லக்ஷ்மி விரும்பி உறைவதால், ஸ்ரீ வ்ருக்ஷம் என்றும் அழைப்பர். இதன் இலைகளால் சிவபெருமானை லக்ஷ்மி அர்ச்சித்து, மஹா விஷ்ணுவை அடையப்பெற்றாள் என்பது வரலாறு. மூன்று தளங்களாகத் திகழும் இதன் இலைகளைப் பறிப்பதற்கும் நியமம் உண்டு. மரத்தின் மேல் கால் வைத்து ஏறாமல் ஏணியின் மூலம் ஏறி, இலைகளைப் பறிக்க வேண்டும். சோமவாரம், சிவராத்திரி,அமாவாசை, பெளர்ணமி,த்வாதசி, ஆகிய நாட்களில் பறிக்கக் கூடாது. மரக் கிளைகளை வெட்டுவதோ அவற்றை விறகு போலப் பயன் படுத்துவதோ அறவே கூடாது. இதன் கீழ் அமர்ந்து செய்யும் ஜபம்,பாராயணம் ஆகியவற்றுக்கு அதிகப் பலன் உண்டு. இதன் மூன்று தளங்கள்,பிரம்ம, விஷ்ணு,ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளையும் குறிப்பதாகக் கூறுவர். பூச்சி அரிக்காத வில்வ இலைகளால்,பிரதோஷம், சோமவாரம்,சிவராத்திரி போன்ற நாட்களில் சிவ சஹஸ்ர நாமம்,ருத்ர த்ரிசதி அர்ச்சனைகள் செய்வர். பிற நாட்களிலும் வில்வ இலைகளால் சிவ அஷ்டோத்திரம் செய்யப் படுகிறது.

ஒரு காலத்தில் வில்வக்காடுகளாகத் திகழ்ந்த இடங்களில் சிவாலயங்கள் இருப்பதை இன்றும் காணலாம். ஒரு சில உதாரணங்களாக, திருவைகாவூர், திருக் கொள்ளம் பூதூர் ஆகிய ஸ்தலங்களைக் குறிப்பிடலாம். இங்கெல்லாம் சுவாமிக்கு வில்வாரண்யேச்வரர் என்று பெயர். இவ்விடங்களில் வில்வம், ஸ்தல விருக்ஷமாக அமைந்துள்ளது.

புலியால் விரட்டப்பட்ட வேடன் ஒருவன் திருவைகாவூரில் ஒரு மரத்தின் மீது அமர்ந்து தஞ்சமடைந்தான். அவன் அவ்வாறு அமர்ந்தது ஒரு வில்வ மரம். அன்றைய தினம் மகா சிவராத்திரி. இதை அறியாமலே, அம்மரக்கிளைகளில் இருந்து இலைகளைப் பிய்த்துக் கீழே போட்டுக் கொண்டு இருந்தான். மரத்தடியில் இருந்த அம்மையப்பர் அதனை அர்ச்சனையாக ஏற்று அவனுக்கு முக்தி வழங்கி அருளினார் என்பது அத்  தல வரலாறு.

பில்வ அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்திரம் என்ற அருமையான ஸ்தோத்திரம் இருக்கிறது. இதைப் பாராயணம் செய்து பரமேச்வரனுக்கு வில்வார்ச்சனை செய்தால் சிவ சாயுஜ்யம் பெறலாம் என்பது இதன் கடைசிப்  பாடல். நீண்ட ஆயுள்,புகழ்,வெற்றி ஆகியனவும் பெறலாம் என்கிறது இந்த ஸ்தோத்திரம். இப்படி அர்ச்சனை செய்வதால் பாப நிவர்த்தி ஏற்படும்.

சிவ நாமாக்கள் ஏராளமாக அமைந்து வருவதால் எளிமையாகப் புரிந்து கொண்டு பாராயணம் செய்யலாம்.
சிவம் சாந்தம் உமாநாதம் மஹாத்யான பராயணம்
ஞானப்ரதம் க்ருத்திவாஸம்  ஏகபில்வம் சிவார்ப்பணம்
என்பதால், மங்களமானவனும், சாந்த மூர்த்தியும், தியானங்களுக்கு இருப்பிடமானவனும், ஞானத்தை வழங்குபவனும், யானைத் தோல் போர்த்தவனுமான ஈச்வரனை வணங்கி , ஒரு பில்வத்தை சிவார்ப்பணமாக அர்ச்சிக்கிறேன் என்பது பொருள்.

இதேபோன்று, ருத்ராக்ஷதாரியாகவும், பார்வதிக்குப் பிரியமான நாயகனாகவும், பிறை சூடிய பெருமானகவும் வருணனை வருகிறது:
அக்ஷமாலாதரம் ருத்ரம் பார்வதி ப்ரிய வல்லபம்
சந்திரசேகரம் ஈசானம் ஏகபில்வம் சிவார்ப்பணம்.

சிவாஷ்டோத்திர நாமாக்களை நினைவு படுத்துவதாக அமைந்த
ஸாமப்ரியம் ஸ்வர மயம் பஸ்மோத்தூளித விக்ரஹம்
ம்ருத்யுஞ்ஜயம் லோகநாதம் ஏக பில்வம் சிவார்ப்பணம்
என்பதும் ,

 ஸ்ரீ ருத்ரத்தை நினைவு படுத்துவதாக,
சிபி விஷ்டம் சஹஸ்ராக்ஷம்  துந்துப்யம் ச நிஷங்கிணம்
ஹிரண்ய பாஹும் ஸேனான்யம் ஏக பில்வம் சிவார்ப்பணம் .
என்பதும் நாம் அறிந்து மகிழத் தக்கன.

யக்யேச்வரனே யாகத்திற்கு ஏற்படும் இடையூறுகளைப் போக்கி, ஹவிர் பாகத்தை ஏற்றுக் கோரிய பலனை வழங்குகிறான் என்பதை,
யக்ஞ கர்ம பலாத்யக்ஷம்  யக்ஞ விக்ன விநாசகம்
யக்ஞேசம் யக்ஞ போக்தாரம் ஏகபில்வம் சிவார்ப்பணம்
என்பதால் அறியலாம்.

மூன்று பிறவிகளின் பாவங்களை நீக்கி, சாளக்ராம வழிபாடு, கன்னிகாதானம், கிணறு - குளம் வெட்டுதல் ஆகியவற்றால் கிடைக்கும் பலனை ஒரு வில்வதளத்தால் சிவனை அர்ச்சிப்பதால் சித்திக்கும் என்கிறது இந்த ஸ்தோத்திரம்.

வில்வ மரத்தைப் பார்ப்பதும், அதனைத் தொடுவதும், பாவங்களைப் போக்க வல்லது என்பதை,    " தர்சனம் பில்வ வ்ருக்ஷஸ்ய ஸ்பர்சனம் பாப நாசனம் "   என்பதால் இதன் பெருமை அறிய வருகிறது.  அன்பர்கள் அனைவரும் இந்த அற்புதமான ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்வதோடு,வில்வ தளங்களால் சிவ பூஜை செய்து இகபர பலன்கள் யாவும் பெற வேண்டும் என்று எல்லா உலகங்களுக்கும் தாயாகவும் தகப்பனாகவும் இருந்து அருளும் கருணைக்கடலைப்  பிரார்த்திக்கிறோம்:
ஸர்வ லோகைக பிதரம்   ஸர்வ லோகைக மாதரம்
ஸர்வ லோகைக நாதஞ்ச ஏக பில்வம் சிவார்ப்பணம்.    

Monday, March 2, 2015

கண் தந்த கடவுள்

மனித உடலில் சிரசே பிரதானம் என்பார்கள். பஞ்ச இந்திரியங்களுள் வாய்,கண்,மூக்கு,செவி ஆகிய நான்கும்  தலைப் பகுதியிலேயே உள்ளன. ஐந்தாவதாகிய மெய்யின் ஒரு பகுதியில் தலையும் அடங்கும்.மெய் என்பதற்குப் புறந்தோல் என்றும் சிலர் பொருள் கொள்வது உண்டு. இந்த ஐந்திலும் கண்ணுக்குத் தனிச் சிறப்பு உண்டு. அது செயல் படாவிட்டால் மனிதன் முடங்கிப் போகிறான். பிறர் துணையைத் தேடுகிறான். இறைவனது படைப்புக்களைக் கண் கொண்டே காண்கிறான். அப்படிக் காணும் போது,  நல்லனவற்றையும் தீயனவற்றையும் ஒருசேரக் காண்கிறான். திரு அங்க மாலை என்ற திருப் பதிகத்தை அருளிச் செய்த நாவுக்கரசர், கண்களின் பயன் கடல் நஞ்சு உண்டு அண்டங்கள் அனைத்தையும் காத்த பரமேச்வரனைக் காண்பதற்கே என்கிறார். அவனது குஞ்சித பாதத்தைக் கண்ட கண்களால் வேறொன்றையும் காணவும் வேண்டுமோ என்பார் . கண்கள் இரண்டால்  அவன் கழல் கண்டு களிக்க வேண்டும் என்று பாடுகிறார் மணிவாசகர். இறைவனைக் கண்ட களிப்பை, " கண்ணாரக் கண்டேன் நானே " என்று வெளிப்படுத்துகிறது தேவாரம்.

கண் இல்லாதவரும் கண்ணில் குறைபாடு உள்ளவரும் படும் வேதனை கொஞ்சநஞ்சமல்ல. திருவொற்றியூரை நீங்கேன் என்று சபதம் செய்துவிட்டு, மகிழ மரத்தடியில் சங்கிலியாரை மணந்த சுந்தரர் , திருவாரூர் வசந்தோற்சவம் காண வேண்டி ஒற்றியூர் எல்லையை நீங்கியபோது இரு கண் பார்வையை இழந்தார். மீண்டும் ஒற்றியூர் பெருமானிடமே வந்து ஒரு பதிகம் பாடுகிறார். அதில், கண் இழந்தவன் ,பார்வை உள்ளவனது துணையுடன் ஒரு  கோலைப் பற்றியபடி மெதுவாகப் பின்பற்றிச் செல்லும்போது, கண்ணுள்ளவன் அவனைக் கறகற என்று இழுத்துச் செல்வதுபோன்ற நிலை எனக்கு வந்துவிடாதபடி அருள்வாய் என்று பெருமானிடம் விண்ணப்பிக்கிறார். வீட்டில் உள்ள பெண்டிர்களை  அழைத்தால் ," போ குருடா " என்பார்களாம்.  அடியேனுக்கு அந்நிலை வர விடலாமா என்று இறைவனைத் துதிக்கிறார் நம்பியாரூரர்.

இக்காலத்தும் கண் நோயால் பாதிக்கப்படுவோர் எத்தனையோ பேர் உளர். பலருக்குத் தீர்வு காண முடியாதபடி வேறு பல உடற்கோளாறுகள் தடை செய்கின்றன. அவர்கள் இப்படி எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் இறைவன் ஒருவனே நம்மைக் கை விடான் எனத் துணிந்து அவனைச் சரண் அடைகின்றனர்.  கண் நோயைத்  தீர்த்து நலம் தரும் ஆலயங்களை நாடுகின்றனர்.  சிலர் வீட்டிலிருந்தபடியே, ஆதித்ய ஹ்ருதயம் , சூர்ய சதகம்  ஆகிய வடமொழி சுலோகங்களையும், சம்பந்தர் அருளிய புறவார் பனங்காட்டுப்  (பனையபுரம்) பதிகத்தையும், சுந்தரர் கண் பெற வேண்டி அருளிய காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் தலத்துப் பதிகங்களையும் பாராயணம் செய்வது வழக்கம்.

கண் நோய் தீர்க்கும் திருத்தலங்களுள் கண் கொடுத்த வனிதம் என்ற தலம் சிறப்பு வாய்ந்ததும் தொன்மையானதும் ஆகும்.  இத்திருக்கோயில், திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்காவில் அமைந்துள்ளது. திருவாரூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தை மன்னார்குடி செல்லும் வழியிலுள்ள கமலாபுரம் வழியாக 5  கி. மீ. பயணித்தால் அடையலாம். தஞ்சாவூர் - திருவாரூர் சாலையில் கொரடாச் சேரியிலிருந்து 7 கி.மீ. சென்றாலும் அடைய முடியும். கொரடாச்சேரி, கமலாபுரம்,  ஆகிய ஊர்களில் இருந்து கண் கொடுத்த வனிதம் கோயில் வாசல் வழியாக மினி பஸ்கள் செல்கின்றன. ஆட்டோ வசதியும் உண்டு.

தான் பெற்ற குழந்தை கண் பார்வை இல்லாதது கண்ட ஒரு பெண் , தனது கண் பார்வையை எடுத்துக் கொண்டு குழந்தைக்குப் பார்வை அளிக்குமாறு இத்தலத்து இறைவனை வேண்ட, அதற்கு மனமிரங்கிய இறைவன், அக்குழந்தைக்குப் பார்வை தந்து அருளினான் என்பது தல வரலாறு. அதனால் சுவாமிக்கு நயன வரதேசுவரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு வந்து சுவாமி,அம்பாள்,சூரியன் ஆகியோருக்கு அபிஷேகம்,அர்ச்சனை செய்து நலம் பெறுவோர் பலர்.

பாண்டியர்களும்,சோழர்களும் இக்கோயிலைத் திருப்பணி செய்திருக்கிறார்கள்.

திருவெண்காட்டைப் போலவே,இங்கும் சித்திரைப் பரணியன்று அமுது படையல் உற்சவம் நடைபெறுகிறது. புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டுவோர் அன்றையதினம் இங்கு வந்து வழிபட்டுத் திருவருள் பெறுகிறார்கள்.
உயரத்தில் அமைந்துள்ள சன்னதியில் அம்பாள்,தேவநாயகி என்ற பெயருடன் காட்சி தருகிறாள். சுமார் ஐந்தரை ஆடி உயர சுயம்பு மூர்த்தியாகப் புகழாபரணீ ச்வரர் , சுவாமி சன்னதிக்கு நேர் பின்புறம் தனிச் சன்னதியில் காட்சி அளிக்கிறார். இவரை வழிபட்டால் நல்ல ஆற்றலும், செல்வமும்,நோய் நீக்கமும் பெறலாம் என்பது நம்பிக்கை.

திருக்குளக்கரையில் உள்ள ஆத்தி மரம் 
பாண்டவை ஆற்றின் வடகரையில் உள்ள இவ்வூர் தீர்த்தச் சிறப்புக் கொண்டது. கோயிலுக்கு எதிரில் அழகிய திருக்குளம் உள்ளது. இதன் கரையில் மிகப்பழமையான ஆத்தி மரம் உள்ளது.

தொன்மையான இந்த ஆலயத்தில் மூன்றாம் குலோத்துங்கன், முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆகியோரது ஆட்சிக் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் பல உள்ளன. ஊரின் பெயர் ஆலத்தாங்குடி என்று கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. பிற்காலத்தில் வனிதை (பெண்) ஒருத்திக்குக் கண் கொடுத்தமையால் கண் கொடுத்த வனிதம் எனப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். இக்கோயில், 190 அடி அகலமும், 270 அடி நீளமும் கொண்டு பரந்து விளங்குகிறது.

பலகாலமாக இக்கோயில் மேடிட்டும் இடிந்தும் முட்புதர்களுடனும் காணப்பட்டது. கல்வெட்டு ஆர்வலர்களின் முயற்சியால் மேடிட்ட பகுதிகளை அகற்றி,ஆழ்ந்து பார்க்கும்போது பாண்டியன் குலசேகரனது ஆட்சிக் காலக் கல்வெட்டு ஒன்று முப்பத்திரண்டு அடி நீளமுள்ள வரிகளுடன்  இருப்பது  காணப்பட்டுப் படி எடுக்கப்பட்டது. ஒவ்வொரு வரியும் 24 அடி நீளத்துடன் பத்து வரிகளைக் கொண்ட மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்துக் ( கி.பி. 1185 ) கல்வெட்டும் படி எடுக்கப்பட்டது. 2004 ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டுத் திருப்பணிகள் செய்விக்கப்பெற்ற இவ்வாலயம் , வரும் ஏப்ரல் மாதம் 3 ம் தேதி அன்று குட முழுக்கு விழாக் காண இருக்கிறது.  மேலும் தகவல்களைத் திரு கண்ணன் அவர்களிடமிருந்து (  9443135129) பெற்று இவ்வைபவத்தில் பங்கேற்கலாம்.

உலகிற்கே கண்ணாக  இருந்து காப்பவனைக் காண வேண்டாமா? கண்டு தொழுது கண் கொடுத்த கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டாமா? அவனைக் காணக் கண் அடியேன் பெற்றவாறு என்று எண்ணி எண்ணி நெக்குருக வேண்டாமா? அதோடு நின்று விடாமல், நாம் பெற்ற இந்த அற்புத தரிசனம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று வேண்ட வேண்டும் அல்லவா? அதற்காக நயன வரதீச்வரனின் கோயிலை நாடுவோம். அனைவரும் நலம் பெற வேண்டுவோம்.