Sunday, October 5, 2014

அம்பிகை வடதிசை நோக்கிய சிவத்தலம்

மனோன்மணியாகிய சிவசக்தியின் சன்னதிகள் சிவாலயங்களில் பெரும்பாலும் கிழக்கு அல்லது தெற்குத் திசையையே நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். சுவாமி சன்னதி கிழக்கு  நோக்கியவாறு  இரு க்கும்போது அம்பிகையும் கிழக்கு நோக்கிய வண்ணம் காட்சி தரும் அமைப்பினுக்கு, மதுரை, வட- திருமுல்லைவாயில், மயிலாடுதுறை  போன்ற ஆலயங்களையும் , சுவாமி கிழக்கு நோக்குகையில் அம்பாள் தெற்கு நோக்கிக் காட்சி தரும் தலங்களாகத் திருவலிதாயம்(பாடி), திருவாலங்காடு போன்ற தலங்களையும் சில எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். , சுவாமி மேற்கை நோக்கிக் காட்சி அளிக்கும் தலங்களில் அம்பிகை தெற்கு நோக்குவதை  மயிலாப்பூர், திருவான்மியூர் ,மணக்கால் போன்ற தலங்களிலும், சுவாமி மேற்கு நோக்குகையில் அம்பிகையும் மேற்கு நோக்குவதை சாட்டியக்குடியிலும் தரிசிக்கிறோம். ஆனால் அம்பிகை வடக்கு நோக்கி சன்னதி கொண்டுள்ள  சிவாலயம் , பண்ருட்டிக்கு அருகிலுள்ள திருத்துறையூரில் உள்ளது. (இதேபோல் பந்தநல்லூர் பசுபதீச்வரர் ஆலயத்திலும் இறைவனை மணக்க வேண்டித் தவம் புரிபவளாக அம்பிகை வடதிசை நோக்கி சன்னதி கொண்டுள்ளாள். இதனை சுட்டிக்காட்டிய அன்பர்க்கு நமது நன்றி).

திருத்துறையூர் என்ற சிற்றூர் , விழுப்புரத்திலிருந்து கடலூர் செல்லும் மார்கத்திலுள்ள இரயில் வண்டி நிலையத்திலிருந்து சுமார்  2 கி. மீ. தொலைவில் உள்ளது. பேருந்து மார்க்கமாக வருபவர்கள், விழுப்புரம்- திண்டிவனம் தேசீய சாலையில் விக்ரவாண்டிக்கு அருகில் உள்ள சுங்கச் சாவடிக்கு அருகே பிரியும் தஞ்சாவூர் சாலையில் பயணித்து, பண்ருட்டிக்கு முன்னால்  வரும் கந்தர்வகோட்டை என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து மேற்கில் சுமார் 4 கி. மீ. செல்லும் பாதையில் சென்றால் ஊரை அடையலாம்.  வழி நெடுகிலும்,கரும்பும்,காய் கறிகளும் பயிரிடப்படும் பசுமையான வயல்கள். பண்ருட்டியிலிருந்து நகரப்பேருந்து நேராக இவ்வூருக்குச் செல்கிறது. கோயில் வாயிலிலேயே இறங்கிக்கொள்ளலாம்.

கிழக்கு வாயில் வழியாக ஆலயத்திற்குள் நுழைகிறோம். இவ் வாயிலிலும் அதற்கு அடுத்த வாயிலிலும் கோபுரம் கட்டப்படவில்லை. நந்தவனத்தில் பூச்செடிகள்  காட்சி அளிக்கின்றன. முதலாவதாகத் தெரிவது, வடக்கு நோக்கிய அன்னையின் சன்னதி. அழகும் கருணையும் ஒருங்கே நமக்குக் காணக் கிடைத்தமைக்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அற்புதமான  கோலம் கொண்டு காட்சி அளிக்கும் இந்த அன்னையை சிவலோக நாயகி என்று அழைக்கிறார்கள். பொதுவாக வடக்கு நோக்கிய கோலத்தைத் தவக்கோலம் என்பர். ஜபம் செய்பவர்களும் வடதிசை நோக்கி அமர்ந்து ஜபம் செய்வதுண்டு. இத்திருக்கோயிலில் இறைவனுக்கு சிஷ்ட குரு நாதர் என்ற திருநாமம் வழங்கப்படுகிறது. சுந்தர மூர்த்தி நாயனாருக்கு  இப்பெருமான்  தவ நெறி  அருளியதாகப்  புராணம் கூறுகிறது. எனவே அதற்கு முன்பாக அம்பிகையும் பெருமானிடம் உபதேசம் பெற்று, தவக்கோலத்தில் இருப்பதாகக் கொள்ள இடம் உண்டு . ஆகையால் அம்பாளுக்கு சிவலோக நாயகி என்பதைவிட, சிவயோக நாயகி என்ற நாமம்  மிகவும் பொருத்தமாகத் தோன்றுகிறது. நமக்கும் சிவஞானத்தைத் தந்தருளுமாறு அம்பிகையைப் பிரார்த்திப்போம். மந்திர உபதேசம் பெற்றுக் கொள்பவர்கள், திருத்துறையூர், ஓமாம்புலியூர், தென்திருமுல்லைவாயில், திருப்பனந்தாள் போன்ற தலங்களில் தக்க குருநாதர் மூலம் உபதேசம் பெற்றுக்கொள்வது சிறப்பு.

இனி, நாம் நந்தி,கொடிமரம்,பலிபீடத்தொடு கூடிய வெளிப்ராகாரத்தை அடைகிறோம். இது விசாலமாக அமைந்துள்ளது. தெற்கு நோக்கிய சன்னதியில் ஆறுமுகப்பெருமான் தேவியர்கள் இருபுறமும் நிற்க,மயில் மீது அமர்ந்து காட்சி அளிக்கிறார். அழகிய திருவுருவம். இருபுறமும் உள்ள சன்னதிகளில் மகாவிஷ்ணுவையும், பால முருகனையும் தரிசிக்கிறோம். ஸ்தல விருக்ஷமாகச் சரக்- கொன்றை  மரம் அமைந்துள்ளது.

கிழக்கே உள்ள கோஷ்டத்தில்  லிங்கோத்பவமூர்த்தியின் பழமையான திருவுருவத்தையும், தெற்கில் தக்ஷிணாமூர்த்தியின் சன்னதியையும் தரிசிக்கிறோம். விமானத்திலும் மூர்த்திகளின் அழகிய சுதை வேலைப்பாடுகளைக்  காண்கிறோம். இதன் அருகாமையில் உள்ள  சுவற்றில் இறைவன் சுந்தரருக்கு உபதேசிக்கும் சிற்பம் காணப்படுகிறது.

கருவறையில் நாகாபரணம் அணிந்து சிஷ்டகுருநாதர்  மேற்குத் திசையை நோக்கியவாறு  தரிசனம் தருகிறார். இப்பெருமான் மீது சுந்தரர் பாடியருளிய ஒரு தேவாரப் பதிகம் உள்ளது. இதில் பெருமானின் புகழோடு, ஊரின் அருகாமையில் ஓடும் பெண்ணை ஆற்றின் வளமும் பேசப்படுகிறது. தனக்குத் தவ நெறி  தந்து அருளுமாறு சுவாமியிடம் இப்பதிகம் மூலம் விண்ணப்பிக்கிறார் சுந்தரர்.இறைவனும் அவ்வாறே அருளிச் செய்ததாகப் பெரியபுராணம் மூலம் அறிகிறோம்.

ஆலயத்திற்கு நேர் கிழக்கில் சைவ சமய சந்தனாசாரியர்களுள் ஒருவரான அருள் நந்தி சிவாசாரியாரின் ஆலயம் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தார் இதற்குத் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்துள்ளனர்.  இருபா இருபது, சிவஞான சித்தியார்  ஆகிய ஒப்பற்ற சைவ சித்தாந்த நூல்களை அருளிய இவரை சகலாகம பண்டிதர் என்று குறிப்பிடுவர். " சித்திக்கு மேல் சாத்திரம் இல்லை" என்றது, சிவஞான சித்தியார் என்ற இவரது சைவ சித்தாந்த சாத்திர நூலைக் குறிக்கும்.

நடு நாட்டிலுள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றான திருத்துறையூரை அன்பர்கள் தரிசிப்பதோடு , பிறரையும் தரிசிக்குமாறு ஆற்றுப்படுத்த வேண்டும். இத்தலத்தில் மந்திரோபதேசம் பெறுவதும், ஜபம்,வழிபாடு முதலியன செய்வதும் அளவற்ற நற்பலன்களைத் தருவதை அனுபவ மூலம் அறிந்து கொள்ளலாம். அரை மணி நேரமாவது சன்னதியில் அமர்ந்து தியானம்,பாராயணம் ஆகியவற்றைச்  செய்து, அதோடு இக் கோயிலின் வளர்ச்சிக்கு நம்மாலான உதவியும் செய்தால் நமது யாத்திரை பூரணமாவதை உணர முடியும்.

2 comments:

  1. Thanks for the excellent information about Thiruthuraiyur,i am sure u know Pandanallur Ambal is also facing north,,,

    ReplyDelete
    Replies
    1. Thank you for reminding me about Pandanallur where Parvathi did penance to marry Pasupatheeswara.

      Delete