Monday, December 15, 2014

பணிக்கு ஏற்ற பலன்

அலுவலக  வேலைகளில் இருப்பவர்களுக்கு ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்வு,போனஸ்  மற்றும் ,பிற சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. பதவிக் காலம் முடிந்தும் பல சலுகைகள் தொடர்கின்றன. இதில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். அத்தனை பேருக்கும் ஒரே மாதிரியாக இச்சலுகைகளும் சம்பள உயர்வுகளும் பதவிக்குத் தகுந்தாற்போல அளிக்கப்படுவதுதான். உழைப்புக்கேற்ற ஊதியம் என்பதெல்லாம் சொல்வதோடு சரி என்று பலரும் அலுத்துக் கொள்ளக் கேட்டிருக்கிறோம். கடுமையாக உழைப்பவருக்கும் , அந்த அளவுக்கு  உழைக்காதவர்களுக்கும் ஒரே ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது என்று குறைப்படுவோர் ஏராளம்.  பதவி உயர்வு கூட வேண்டியவர்களுக்குத் தரப்படுகிறது என்ற புகார்களும் உண்டு. இது முறையா என்றும் நீதியாகுமா என்றும் கேட்கலாம். மனிதன் வழங்கும் நீதியில் இதுபோன்ற குறைபாடுகள் இருக்கக் கூடும். ஆனால் தெய்வத்தின் தீர்ப்பு ஒன்றே பாரபட்சம் இல்லாமலும் பணியின் தரத்திற்கு ஏற்பவும் வழங்கப் படுவதைப்  புராணங்கள் மூலம் அறிகிறோம்.

திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் சைவத்தின் இரு கண்கள். இருவரும் திருவீழிமிழலையில் தங்கியிருந்தபோது பஞ்சம் ஏற்பட்டது. அதுவும் இறைவன் செயல் என்றே இரு குருநாதர்களும் ஏற்றுக் கொண்டபோதிலும், அடியார்கள் விண்ணப்பிக்கும் வேளையில் அவ்விண்ணப்பத்தை இறைவனிடம் திருப்பதிகங்கள் ஓதித் தெரிவித்தனர்.  இறைவன் செவி சாய்க்காமல் இருப்பானா? காலநிலையால் கோள்கள் திரிந்து மழை விழாது போனாலும் உண்மை அடியார்களைப் பெருமான் எப்பொழுதும் கை விட மாட்டான் என்பது இவ்வரலாறு கூறும் உண்மை. அதிலும், குரு நாதர்களை அணுகித்  தங்கள் குறைகளை விண்ணப்பித்ததால் , அக் கோரிக்கை எளிதில் நிறைவேற ஏதுவாயிற்று. " உம்மை வழிபட்டார்க்கு அளிக்க அளிக்கின்றோம்" என்று வீழி நாதப் பெருமானே  உலகத்தவர் காணும்படிப் படிக்காசு  அருளிச் செய்ததாகப் பெரிய புராணம் கூறும்.

சிவாலயங்கள் தோறும் தான் ஏந்தியுள்ள உழவாரத்தால் தொண்டாற்றி வந்த அப்பர்  பெருமானுக்கு வாசியில்லாக் காசு வைத்து அருளினான் பரமன். ஞானசம்பந்தருக்கோ   வாசியுடன் காசு வைத்து அருளினான். பின்னர் சம்பந்தர் வாசி தீரப் பாடி வேண்ட, அவருக்கும் நற்காசுகளாய்த் தந்து, பஞ்சம் தீர்த்து அருளினான் என்பது புராண வரலாறு. சம்பந்தப்பெருமான் அம்மையப்பரது மகனார் ஆதலினால் இவ்வாறு திருவருள் புரிந்தான். ஆயின் அப்பரோ ஊழியம் செய்த தொண்டர் என்றபடியால் முதலில் அவருக்கு நற் காசினைக் கொடுத்தானாம். மனித நீதியாக இருந்தால் தன்  மகனுக்குத் தந்துவிட்டுத்தான் பிறருக்குக் கொடுக்கும் படியாக இருந்திருக்கும் .                       " தனக்குப் பிறகு தான் தான-  தருமம் " என்று ஒரு பழமொழியையும் தமக்குச் சாதகம் ஆக்கிக்  கொள்வர். ஆனால் நீதி வடிவான பரமேச்வரனது தீர்ப்புக்கு ஈடு இணை ஏது? ஆகவே, பெருமானை, " நீதியே " என்று வாயார அழைக்கிறார் மாணிக்க வாசகர்.

அதே சமயம், சம்பந்தருக்கும் உரிய நேரத்தில் கருணை பொழியத் தவறவே இல்லை. அவரது தந்தை சீர்காழியில் செய்யும் சிவ வேள்விக்காகத் திருவாவடுதுறைப்  பெருமானை வேண்டி நின்றபோது, சிவபூதகணம் மூலமாக ஆயிரம் பொன் தந்தருளினான் மாசிலாமணி ஈசன். அது எப்படி சாத்தியமாயிற்று?  நம் கையில் இருக்கும் பொருள்கள் எல்லாம் செலவழிந்த நேரத்தில் நாம் சிவனருள் வேண்டிச் சிந்திப்பதில்லை. மாறாக, யாரிடம் சென்றால் பொருள் கிடைக்கும் என்றுதானே சிந்திக்கத் துவங்குகிறோம்!  ஆனால் சம்பந்தரோ, " கையது வீழினும் கழிவுறினும் செய் கழல் அடி அலால் சிந்தை செய்யேன் " என்று பாடுகிறார். அப்படிப் பக்குவம் வாய்ந்த பெரியோர்களுக்கே சிவனருள் எளிதில் கைகூடும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான பலன் அலுவலகங்களில் வேண்டுமானால் சாத்தியமாகலாம்.
திருவீழிமிழலைத் தலத்தை தரிசிப்பதோடு, வீழிநாதப் பெருமானது நீதியின் திறத்தையும் நினைந்து நெக்குருகுவோர்க்கே  இந்த உண்மை புலப்படும். மேலெழுந்தவாரியாகப் புராணங்களைப் படிப்பதைவிட, அவை தரும் நீதியை மகிழ்வுடன் ஏற்று அதன்படி நடக்கக் கடவோம் என்று உறுதி பூண்பதே சிறப்பு.    

Wednesday, November 26, 2014

" ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது "

"  ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது " என்று மயிலாடுதுறைக்காரர்கள் பெருமையோடு சொல்லிக்கொள்வார்கள். ஆனால் இதைப் பொருள் அறிந்து எத்தனை பேர் சொல்கிறார்களோ  தெரியவில்லை. மயூரம் என்ற வடசொல் மயிலைக் குறிப்பது. மயில் உருவில் சிவபெருமானை அம்பிகை பூஜை செய்த தலம் ஆதலால் மயூரம் அல்லது மாயூரம் எனப்பட்டது. மயிலைக் காட்டிலும் அழகிய பறவையைக் காண்பது அரிது என்பதால் ஆயிரம் பறவைகள் இருந்தாலும் மயிலுக்கு ஒப்பாகுமா என்று இதற்கு வெளிப்படையாகப் பொருள் காண்பார்கள். ஆனாலும் இதற்கு உட்பொருள் ஒன்றும் உண்டு. மாயூரம் என்பதை மயிலுக்கு மட்டும் சம்பந்தப்படுத்தாமல்,  அவ்வுருவெடுத்து வந்து சிவபூஜை செய்த உமை அன்னைக்கு இணைத்துப் பார்ப்பதே சிறந்த பொருளைத் தரும். அவ்வாறு மயிலம்மனாக வந்து பூஜை செய்து சுய வடிவம் பெற்றுப்  பரமேச்வரனை மணந்து  கொண்ட கௌரிக்கு நிகர் யாரும் இல்லை என்பதால்  " ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது " எனப்பட்டது. சுவாமிக்கே கௌரிமாயூர நாதர் என்று பெயர் வரும்படி அரும்தவம் செய்தபடியால் ஊரின் பெயரும் மயிலாடுதுறை ஆயிற்று.

ரிஷப வாகனத்தில் வதான்யேசுவரர் 
காசிக்கு நிகரான தலங்களாக, ஸ்ரீவாஞ்சியம், திருவையாறு, திருவிடைமருதூர், மயிலாடுதுறை, சாயாவனம் ஆகிய சிவஸ்தலங்களைக் குறிப்பார்கள். அதிலும் மயிலாடுதுறையில் பல இடங்களில் காசி விஸ்வநாதர் ஆலயங்கள் இருப்பதைக் காண்கிறோம். காவிரிக் கரையில் காசியைப்போலவே டுண்டி கணபதிக்கும் கால பைரவருக்கும் சன்னதிகள் உள்ளன. உத்தர மாயூரத்தில் வதான்யேச்வரர்  கோவிலில் உள்ள மேதா தக்ஷிணாமூர்த்தி சன்னதி பிரசித்தி பெற்றது. ஐப்பசி அமாவாசை அன்று கைலாச வாகனத்தில் மேதா தக்ஷிணாமூர்த்தியும், முதலை வாகனத்தில் கங்கை அம்மனும் காவிரிக்கு எழுந்தருளித் தீர்த்தம் தருகிறார்கள். அன்று காவிரியே கங்கை ஆகிவிடுகிறது. வரங்களை வாரிவழங்கும் வள்ளலாராக மூலவர் மேற்குப் பார்த்த சன்னதியில் காட்சி அளிக்கிறார். அம்பிகையும் ஞானத்தை வழங்கும் ஞானாம்பிகையாகத் தரிசனம் தருகிறாள்.

மாயூர நாதருக்கு நான்கு திசைகளிலும் நான்கு சிவாலயங்களில் வள்ளலாராக சிவ  பெருமான் கோயில் கொண்டுள்ளார். கிழக்கே விளநகரில் துறைகாடும் வள்ளல் , மேற்கில் மூவலூரில் வழிகாட்டும் வள்ளல், தெற்கில் வாக்கு வழங்கும் வாகீஸ்வர வள்ளல், வடக்கில் வதான்யேச்வர வள்ளல் ஆகிய நாற்றிசை வள்ளல்களுக்கு மத்தியில் கௌரி மாயூர நாதர் பெரிய கோவிலில் அபயாம்பிகையுடன் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். இப்பகுதியில் உள்ள உயர்ந்த ராஜ கோபு ரங்களில் இந்த ஆலயத்தின் கோபுரமும் ஒன்று.

இவ்வளவு பெருமைகளுக்கும் மேலாக, ஐப்பசி முப்பது தினங்களும் காவிரியின் இரு கரைகளிலும் அமைந்துள்ள பெரிய கோவிலில் இருந்தும், வள்ளலார் கோவிலில் இருந்தும் சுவாமி காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் தரும் தனிச் சிறப்பு உடையது இந்த ஊர். கடைசி நாள் அன்று பெரியகோவிலில் இருந்து மட்டும் அல்லாமல், ஐயாறப்பர் கோயில், பாலக்கரை விஸ்வநாதர் கோயில், கடைத் தெரு விச்வநாதர் கோயில், வடகரையில் உள்ள துலாக்கட்ட விஸ்வநாதர் கோயில், வதான்யேச்வர சுவாமி கோயில் ஆகிய கோயில்களிருந்தும் வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் காவிரிக்கு எழுந்தருளுவர். இந்த உற்சவத்தை முன்னிட்டுப் பல வீடுகளில் வேத பாராயணங்கள் நடத்துகிறார்கள். தங்கள் வீட்டு வைபவமாகக் கருதி, வீதிகளில் உள்ள மக்கள் பங்கேற்று இறையருள் பெறுகிறார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் ஆலயத் திருவிழாக்களில் நாதஸ்வரக் கலைஞர்கள் பலர் ஒரே நேரத்தில் பல தவில் வித்வான்களோடு இணைந்து ராஜ கோபுரத்தருகில் மல்லாரி வாசிப்பதைக் கேட்கப் பெரும் கூட்டம் கூடுவது வழக்கம். கடைமுக உற்சவத்திலும் இப்படித்தான்.மழை விடாது பொழிந்தாலும்  இசைமழை நிற்காது. குடையைப் பிடித்தவாறே வாசிப்பார்கள். அவர்களது இந்த ஈடுபாட்டுக்குத் தலை வணங்கியே ஆக வேண்டும்.

துலாக் காவிரி 
சுவாமி காவிரிக்கரைக்கு எழுந்தருளுவதற்கு முன்பாகவே, மக்கள் கூட்டம் காவிரியில் இறங்கி ஆவலோடு பஞ்சமூர்த்திகள் வரவை எதிர் பார்த்துக் கொண்டிருக்கும். சிறுவர்கள் உற்சாகத்துடன் நீச்சல் அடித்த வண்ணம் இருப்பர் . நிறைவாக இருகரைகளிலும் தமது வாகனங்களோடு பஞ்ச மூர்த்திகள் நிற்பதைக் காண இரண்டு கண்கள் போதாது. தீர்த்தவாரி முடிந்து சுவாமி மண்டபத்தில் தங்கிவிட்டு இரவு ஒன்பது மணி அளவில் கோயிலுக்குத் திரும்புகிறார்.

தேவார பாராயணம் செய்தபடியே ஒதுவா மூர்த்திகள் இறைவனைப் பின்தொடர்கின்றனர். வீதிகளில் வசிக்கும் அந்தணர்களில் , வயது முதிர்ந்தோர் உட்படப் பலர், அந்த ஓதுவார்களை வலம் வந்து தம்மால் இயன்ற காணிக்கை தந்து, அவர்களுக்கு வீதியிலேயே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்வதைக் காணமுடிகிறது.

வழி நெடுகிலும் பட்டு சார்த்தித் தீபாராதனைத் தட்டு சமர்ப்பிப்போர் பலர். சுவாமியும் அம்பாளும் ஒருவரை ஒருவர் நோக்கியவாறு ரிஷப வாகனங்களில் எழுந்தருளுவதை எவ்வாறு வருணிக்க முடியும்? சுவாமிக்கு வெட்டி வேர் ஜடை சார்த்தியும், அம்பிகைக்குக் கல் இழைத்த ராக் கோடி சார்த்தியும் பின் அலங்காரங்கள் செய்யப்பட்டு நம் கண்களை விட்டு அகலாமல் நிற்கின்றன. இந்த தம்பதியரை தரிசிக்க என்ன தவம் செய்தோமோ என்று கண்ணீர் மல்க நெகிழ்கிறோம்.

யானை வரும் முன்னே பஞ்சமூர்த்திகள் வரும் பின்னே 
இத்திருவிழாவைத் தரிசிக்க ஒரு முடவன் வடதிசையிலிருந்து இங்கு வந்து  சேர்ந்தபோது, ஐப்பசி மாதம் முடிந்து  கார்த்திகை மாதம் பிறந்து விட்டதால் தமக்கு அந்த பாக்கியம் கிட்டவில்லையே என்று மனம் உடைந்தபோது, அவனுக்கு இரங்கிய பெருமான், இன்றும் உனக்காகக் காவிரியில் தீர்த்தம் தருகிறோம். அதில் மூழ்கினால் ஐப்பசி முப்பது நாளும் மூழ்கிய பலன்களைப் பெறுவாயாக என்று அருள் செய்தார் அக் கருணாமூர்த்தி. இப்போதும் அதுபோலவே கார்த்திகை முதல் நாள் அன்று நடைபெறும் முழுக்கை,  முடவன் முழுக்கு என்று அழைக்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள். " ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது " என்பது சத்தியமான வாக்கு அல்லவா?  
       

Sunday, October 26, 2014

திருக்கொள்ளம்பூதூரில் ஓடத் திருவிழா

இதுவரை  எத்தனை பிறவிகள் எடுத்திருப்போமோ , நமக்குத் தெரியாது. இன்னும் எத்தனை    பிறவிகள் எடுக்கப்போகிறோமோ , அதுவும் தெரியாது. பிறவியைக் கடல் போன்றது என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதுவும் , " பெருங்கடல்" என்று வள்ளுவர் சொன்னார். இனிப்பிறவாதபடிக் காப்பாய் என்று இறைவனை வேண்டுவார்கள் பெரியோர்கள். ஆகவே, கடலைக் கடப்பது என்பது சுலபமான காரியம் இல்லை. நடுக்கடலுள் அகப்பட்டவன் சாதாரணத் துடுப்பைக் கொண்டு எப்படிக் கரை சேர முடியும். அதனால் தான், பஞ்சாக்ஷரமாகிய துடுப்பைக் கொண்டு கரை சேரும் வழியை அருளுவாய் எனத் திருவாசகம் வேண்டுகிறது.

சத்குருநாதனது அருளால் பிறவிக்கடலைத் தாண்டி இறைவனை அடைவது சுலபமாகிவிடுகிறது. பிறவியாகிய பெரிய கடலைத் தாண்டுவதற்குத் திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங்களை ஒதிவந்தாலே போதுமானது என்கிறார் நம்பியாண்டார் நம்பிகள். ஏனென்றால் அப்பதிகங்களே  தோணியாக ஆகி, நம்மை ஏற்றிக்கொண்டு கரை சேர்ப்பன என்று அவர் அருளினார்.  அவை ஞானத் தமிழ்ப் பனுவல்கள் என்பதால் அவ்வளவு சக்தி வாய்ந்தவைகளாக ஆகின்றன.

சம்பந்தப்பெருமான் தல யாத்திரையாக சோழ நாட்டுத் தலங்களைத் தரிசித்து வந்தபோது, காவிரியின் கிளை நதியான வெட்டாற்றின் மறுகரையில் இருந்து பஞ்சாரண்யங்களுள் ஒன்றான வில்வாரண்யம்  தெரிவதைக்  கண்டார். அந்த ஆறு,  முள்ளியாறு என்றும் வழங்கப்படும்.   வில்வாரண்யத்தின் மற்றொரு பெயர் திருக் கொள்ளம் பூதூர்  என்பதாகும். கூவிளம் பூதூர் என்பது இவ்வாறு மாறிற்று என்பர். கூவிளம் என்பது வில்வத்தைக் குறிக்கும்.

வில்வாரண்யத்தில் சுயம்பு மூர்த்தியாகச் சிவபெருமானைத்தரிசித்த பிரம தேவன் , அங்கு ஒரு தீர்த்தம் தனது பெயரில் உண்டாக்கி , இறைவனை வழிபட்டு வந்தான். இதனால் மகிழ்ந்த பெருமான், பூத கணங்களோடும், உமா தேவியாரோடும் எழுந்தருளி, பஞ்சாக்ஷர உபதேசம் செய்தருளி,பிரமனுக்கு மீண்டும் படைப்புத் தொழிலை அருளியதாகத் தல புராணம் கூறுகிறது.   எனவே,இத்தலம், பிரம வனம் என்றும்,பஞ்சாக்ஷர புரம் என்றும் பெயர்கள் பெற்றது. தேவர்கள் அமுதம் வேண்டிப் பாற்கடலைக் கடைந்தபோது, அமுதத் திவலைகள் சிதறி இங்கு விழுந்து, வில்வ மரங்களாக மாறி, வில்வ வனம் ஆகியது என்பர்.

பொதிகை மலையிலிருந்து இங்கு எழுந்தருளிய அகத்திய முனிவர் , வெட்டாற்றில் நீராடி, இறைவனை வழிபட்டு , ரிஷப வாகன தரிசனம் பெற்றார். நதிக்கும் அகஸ்திய காவேரி என்ற பெயர் ஏற்பட்டது. அர்ச்சுனன் இப்பெருமானை வழிபட்டுப் பாசுபதம் பெற்றதால், காண்டீப வனம் என்று இத்தலம் பெயர் பெற்றது. கொள்ளை அடிக்கும் எண்ணத்தோடு  இத்தலத்திற்கு வந்து இரவு முழுதும் கண் விழித்திருந்த திருடனும் நற்கதி பெற்றான். இத்தலத்தின் அருகே, பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவரான இடைக்காட்டுச் சித்தரின் கோயில் அமைந்துள்ளது.

முல்லைவனமாகிய திருக்கருகாவூரில் உஷக் காலத்திலும், பாதிரி வனமாகிய அவளிவ நல்லூரில் கால சந்தி காலத்திலும், வன்னி வனமாகிய ஹரித்துவார மங்கலத்தில் (அரதைப்பெரும் பாழியில்)   உச்சிக்காலத்திலும், பூளைவனமாகிய ஆலங்குடியில் (திரு இரும்பூளையில்) சாயரக்ஷையிலும் , திருக்கொள்ளம்பூதூரில் அர்த்த ஜாம தரிசனமும் செய்வது மிகவும் சிறந்த பலன்களை அளிக்க வல்லது என்பார்கள். இவை ஐந்தையும் ஒரே நாளிலும் தரிசிப்பர்.

கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் உள்ள வலங்கைமானிலிருந்து , குடவாசல் செல்லும் பாதையில் சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். செல்லூர் நிறுத்தத்தில் இறங்கி மேற்கே 1 கி.மீ. தொலைவு நடந்து வந்து கோவிலை அடையலாம்.   கும்பகோணத்திலிருந்து குடவாசல்,ஓகை வழியாகக் கொரடாச்சேரி செல்லும் வழியில் செல்லூரில் இறங்கியும் வரலாம். குடவாசலில் இருந்து செல்லூர் 6 கி.மீ. தொலைவில் உள்ளது.

செல்லூரில் உள்ள குணாம்பிகை சமேத கைலாச நாத சுவாமி ஆலயம் தொன்மையானதும் தரிசிக்க வேண்டுவதும் ஆகும். பிராகாரத்தில் எங்கு நோக்கினாலும் நந்தியாவட்டை மரங்கள் பூத்துக் குலுங்குவதைக்  காணலாம். தனது கலைகளை இழந்த சந்திரன்  இங்கு வழிபட்டு, மீண்டும் அக்கலைகளைப் பெற்றான்.சந்திரனும் சூரியனும் வழிபட்ட புவன பைரவ மூர்த்தி  சக்தி வாய்ந்தவர். வேண்டிய வரம் யாவும் தருபவர். நாகநாதர், சட்டைநாதர் ஆகிய லிங்கமூர்த்திகளின் சன்னதிகள், மூலஸ்தானத்தின் இருபுறமும் அமைந்துள்ளன. இடைவிடாது சித்தர்கள் வழிபடும் புண்ணிய மூர்த்தியாகக் கைலாசநாதர் கிழக்கு நோக்கியும் தெற்கு நோக்கியவளாகக்  குணா ம்பிகையும் அருட்காட்சி வழங்குகின்றனர். இந்த ஆலயம் திருப்பணி பெற்று, 2.5.2013 அன்று  கும்பாபிஷேகம் செய்யப்பெற்றுப் புதுப்பொலிவுடன் விளங்குகிறது.

செல்லூரிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது அபிவிருத்தீச்வரத்தில் உள்ள அபிமுக்தீச்வரர்  ஆலயம். இந்த ஆலயம் மேற்கு நோக்கியது. திருப்பணி செய்யப் பெற்று  வண்ணப்பூச்சுடன்  அழகுற  விளங்குகிறது.

திருக்கொள்ளம்பூதூர் சிவாலயத்தை முழுதும் கருங் கல்லால் அமைத்து மகத்தான சிவபுண்ணியச்  செயலைச் செய்துள்ளவர்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள். நச்சாந்துப்பட்டி பெ. ராமன் செட்டியாரும்,பெ.லட்சுமணன் செட்டியாரும் 1930 ல்  இக்கருங்கல் திருப்பணியைத் தொடங்கி,  ஈசுவர ஆண்டு ஆனி 14 ம் தேதி ஞாயிறன்று ( 27.6.1937 ) பெரும் பொருட் செலவில் மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர். இவர்களது  உருவச்சிலைகள் அம்பாள் (சௌந்தர நாயகி ) சன்னதியின் முன்னர் அமைக்கப்பட்டுள்ளது. வீதியில் சத்திரம் ஒன்றையும் அமைத்துள்ளார்கள்.

கோயிலுக்கு முன் புறம் பிரம தீர்த்தம் அமைந்துள்ளது.கோவிலின் முன் வாயிலில் கோபுரம் இல்லை. ரிஷப வாகன சுதை காணப்படுகிறது , வாயிற் சுவரில் சம்பந்தர்  ஆற்றில் நாவன்மையால் ஓடம் செலுத்திய அற்புதத்தைச்  சுதை வடிவில் வண்ணப் பூச்சோடு அமைத்துள்ளார்கள். இருபுறமும் விநாயகர் திருவுருவங்கள் உள்ளன.சலவைக் கல்லில் தலத்  திருப்பதிகம் பொறிக்கப்பட்டுள்ளது. இதைத் தாண்டினால் வலப்புறம் வசந்த மண்டபம் உள்ளது. இதை ஒட்டி மஹா லக்ஷ்மியின் சன்னதி உள்ளது.இரண்டாம் பிராகாரத்தில் பூச்செடிகளும் மரங்களும் வளர்ந்துள்ளன. அடுத்த வாயிலில் ஐந்து நிலை கோபுரம் உள்ளது. இருபுறமும் பொய்யாக் கணபதி,தண்டபாணி திருவுருவங்கள் உள்ளன.

 உட்பிராகாரத்தில் மடைப்பள்ளியும், நால்வர், ஆதி வில்வமரம், வலம்புரி விநாயகர், சோமாஸ்-கந்தர்  ஷண்முகர், மகாலக்ஷ்மி ,பள்ளியறை, பைரவர்,நவக்கிரகங்கள் ஆகியவற்றைத் தரிசிக்கிறோம். கோஷ்டங்களில்  கணபதி,தக்ஷிணாமூர்த்தி,லிங்கோத்பவர்,பிரம்மா,துர்க்கை ஆகிய மூர்த்திகளைத்தரிசனம் செய்கிறோம். அம்பிகையின் சன்னதி தெற்கு நோக்கியது. அழகியத் திருவுருவக் காட்சியை நமக்கு அருளுகிறாள் அன்னை.  மூலவரான  வில்வாரண்ய மூர்த்தியின் அற்புதக் காட்சியைத் தரிசித்துப் பிறவி பெற்ற பயனை அடைகிறோம்.

திருக்கொள்ளம்பூதூரைத் தரிசிக்கத் திருஞானசம்பந்தர் அடியார்களுடன் எழுந்தருளியபோது வெட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் மறுகரையில் உள்ள ஆலயத்தை அடையப் பரிசில் மூலமாகவே செல்ல வேண்டியிருந்தது. வெள்ளத்தால், படகு விடுவோரும் அப்போது இல்லாததால் , சம்பந்தர், அடியார்களோடு பரிசிலில் ஏறித் தனது நாவன்மையே கோலாகக் கொண்டு " கொட்டமே  கமழும்" எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடத் துவங்கியதும், ஓடம் தானாகவே அந்த ஆற்றில் செல்லத் துவங்கியது. " ஓடம் வந்து அணையும் " என்ற பாடலை அருளும் போது பரிசில்  மறுகரையை வந்து அடைந்தது, இந்த அற்புதத்தைச்  செய்தவாறு அப்பதிகத்தை நிறைவு  செய்தபடி, ஆலயத்தை வந்தடைந்து பெருமானைத் தரிசித்தார் சம்பந்தர் என்று பெரிய புராணம் கூறுகிறது.

வெட்டாற்றின் கரையில் பல்லக்கு.மறுகரையில் தெரிவது நம்பர் கோயில்
இவ்வாறு வெட்டாற்றில் ஓடம் செலுத்தி ஞான சம்பந்தர் அற்புதம் செய்ததை ஆண்டு தோறும் ஐதீக விழாவாக நடத்தி வருகிறார்கள். ஐப்பசி அமாவாசையைத் தொடரும் பிரதமை அன்று, இவ் விழா நடைபெறுகிறது. வெளியூர் அன்பர்கள் பலர் இதனைத் தரிசிக்க வருகின்றனர். இரவு சுமார் 10 மணி அளவில் திருஞான சம்பந்தர் , அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கோவிலில் இருந்து எழுந்தருளுகிறார். திரு வீதி எங்கும் ஒவ்வொரு வீட்டு வாயிலிலும் பெருமானுக்கு உற்சாக வரவேற்பு. வெடி மற்றும் வாண வேடிக்கை முழக்கம் ஒருபுறம். இரவு சுமார்  1 மணிக்கு ஆற்றங்கரையை அடைகிறது பல்லக்கு.

விழாக்காண வந்தவர்கள் படகில் ஏறிக்கொண்டு மறு கரையில் உள்ள நம்பர் கோயிலை அடைகிறார்கள். நிறைவாக ஞானசம்பந்தப்பெருமான் பரிசிலில் எழுந்தருளுகிறார். அக்கரையில் உள்ள நம்பர் கோயிலை அடைகிறார். அங்கு ஒரு சிறிய  சிவாலயம் உள்ளது. அங்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று முடிந்தவுடன், மறு நாள் விடியற்காலை சுமார் 5 மணிக்குத் திருப்  பதிகம் பாடியவாறே ஒடமேறி த் திருக் கொள்ளம்பூதூர் வந்தடைகிறார் சம்பந்தர்.
இதே சமயத்தில் கோயிலில் இருந்து சுவாமி அம்பிகையோடு ரிஷப வாகனத்தில் எழுந்தருளித் திருவீதியில் சம்பந்தப்பெருமானுக்கு சுமார் 6 மணி அளவில் எதிர் காட்சி அளித்தருளுகிறார். இந்த அருட் காட்சியை நாமும் கண்டு நெகிழ்கிறோம். கண் பெற்ற பயன் பெறுகிறோம். சம்பந்தர் பதிகத்தை நாமும் பாடுகிறோம். நதி வெள்ளத்தைத் தாண்டும் அற்புதம் செய்த அப்பதிகத்தை ஓதியதால் பிறவிப் பெருங்கடலையும் நிச்சயமாக நீந்தி வீடு பெறுவோம் என்ற நிறைவுடன் ரிஷப வாகன தரிசனம் கண்ட கண்கள் வேறொன்றையும் காண வேண்டுமோ என்ற பேரின்பத்தில் திளைத்துக்   கண்கள் நீர்மல்க அவ்விடத்தை நீங்க மனமில்லாமல் நிற்கிறோம்.  

Thursday, October 9, 2014

கழுத்தளவு நீரில் நின்று ருத்ர ஜபம்

புரட்டாசி மாத அச்வினி நன்னாள் - அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான உருத்திர பசுபதி நாயனார் ஸ்ரீ பரமேச்வரனது குஞ்சித பாத கமலங்களை அடைந்ததை முன்னிட்டு அந்நாளில்  அவரது குருபூஜை  பலதலங்களில் நடைபெறுகிறது. "உருத்திர பசுபதிக்கும் அடியேன் " என்று சுந்தரமூர்த்தி நாயனாரால் சிறப்பிக்கப்பெற்ற இவர் தலையூர் என்ற தலத்தில் தோன்றியவர். தலையூர் என்ற பெயரில் இரண்டு இடங்களில் ஊர்கள் இருக்கின்றன. மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியிலுள்ள கொல்லுமாங்குடி என்ற ஊரிலிருந்து காரைக்கால் செல்லும் பாதையில் ஒன்றும், முசிறி வட்டத்தில் ஒன்றும் , ஆக இரு இடங்கள் இவ்வாறு உள்ளன. இவ்விரு இடங்களிலும் உள்ள சிவாலயங்களில்  உருத்திர பசுபதி நாயனாரது மூர்த்தம் உள்ளது. குருபூஜை இந்த இரண்டு இடங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  அதைக் கொண்டாடிவிட்டு அடுத்த ஆண்டு புரட்டாசி அசுவினி அன்று நாயனாரது நினைவோ ஸ்ரீ ருத்ரத்தின் நினைவோ வருவதைக் காட்டிலும், நாயனார் நமக்குக் காட்டிய சிவபக்தியையும், நியமத்தோடு நாள் தோறும் அவர் ஸ்ரீ ருத்ர பாராயணம் செய்து வந்ததையும் கடைப் பிடிப்பதே சிறந்தது.

பசுபதி என்ற இயற்பெயரோடு விளங்கிய நாயனார், அனுதினமும் கழுத்தளவு நீரில் நின்று ,இரு கைகளையும் உச்சிமேல் குவித்துக் கொண்டு ஸ்ரீ ருத்ர பாராயணம் செய்து வந்ததைப் பெரிய புராணம் குறிப்பிடுகிறது. மறையின் பயனாக ருத்ர மந்திரம் திகழ்வதை, சேக்கிழார் பெருமான்,

அரு மறைப் பயன் ஆகிய உருத்திரம் அதனை
வரு முறைப் பெரும் பகலும் எல்லியும் வழுவாமே

திருமலர்  பொகுட்டிருந்தவன் அனையவர் சில நாள்                                                      

ஒருமை உய்த்திட உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார்.

இவ்வாறு இரவும் பகலும் முறை வழுவாது ருத்ர பாராயணம் செய்தமையால் உலகத்தோர் அவரை ருத்ர பசுபதியார் என்று அழைக்கலாயினர்.
பாராயணம் செய்வோரது கவனத்திற்குப்  பெரியபுராணத்திலிருந்து உணரப்படும் கருத்துக்களைக் காண்போம். பாராயணம் செய்வோருக்கு பக்தியும் ஈடுபாடும் மிகமிக அவசியம் என்பதை ,

" தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி                                                          
   நேய நெஞ்சினராகி அத்தொழில் தலை நின்றார்."

என்ற வரிகள் நமக்குக் காட்டுகின்றன.

அவரது பாராயணம் அரும் தவமாகிறது. கழுத்தளவு நீரில் அத்தவச்சுடர் நிற்பதை ,

" நீரிடை நெருப்பு எழுந்தனைய " என்று காட்டுவார்  தெய்வச் சேக்கிழார். பிரமதேவனைப்போல் ஜொலிக்கிறார் நாயனார். அந்த வேத மந்திரத்தை நியதியுடன் ஓதிய நிலையோடு பெருமானது   " ஆடு சேவடி அருகுற அணைந்தனர்."

இது எதனால் நிகழ்ந்தது? ஸ்ரீ ருத்ர பாராயணம் ஸ்ரீ பரமேச்வரனை மகிழ்விப்பது. அதைத்தான் சேக்கிழாரும், " உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார்." என்கிறார். நாம் அனு  தினமும் பாவங்களைச் செய்கிறோம். அதற்குப் ப்ராயச்சித்தமாகச் சொல்லப்படுவது ருத்ர பாராயணம். அதனைச் செய்வோரும் செய்விப்போரும் எல்லாப் பாவமும் நீங்குவர். பிணிகளிலிருந்து விடுபடுவர். நீண்ட ஆயுளைப் பெறுவார். மக்கட் செல்வம் பெறுவர். இவ்வாறு அதன் பலன் அளவிடமுடியாததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருளுமாறு இறைவனை ருத்ர மந்திரம் வேண்டுகிறது. நம்மைச் சேர்ந்தவர்களையும் தண்டிக்காமல் பிழை பொறுக்குமாறு வேண்டுகிறது.

ருத்ர பகவானே! எங்களது பெரியவர்களையும் குழந்தைகளையும் துன்புறுத்தவேண்டாம்    (மாநோ மஹாந்த முத மாநோ அர்ப்பகம் மாந உக்ஷந்த முதமான உக்ஷிதம் ) யௌவனர்களையும் ,   கருவிலுள்ள சிசுக்களையும் துன்புறுத்தவேண்டாம்.மேலும் எமது தாய் தந்தையரையும் , பிரியமானவர்களையும் துன்புறுத்தவேண்டாம்.( மா நோ வதீ: பிதரம் மோத மாதரம் ப்ரியா மா நஸ் தனுவோ ருத்ர ரீரிஷா:) உமது மங்கள உருவத்துடன் எங்களிடம் காக்க வேண்டி வருவீராக.இந்த அழியும் சரீரத்தில் அழியாத சுகத்தை அளிப்பீராக. உமது கணங்கள் சத்ருக்களை அழிக்கட்டும்               (ம்ருடா ஜரித்ரே ருத்ரஸ்தவா நோ அன்யந்தே அஸ்மந்நிவபந்து ஸேனா: ) இப்படி பினாகபாணியும், நீலக்ரீவனும் , ஸஹஸ்ராக்ஷனும், கபர்தியும் ,பசுபதியும் ஆகிய பரமேச்வரனை வேதம் துதிக்கிறது. வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாக பஞ்சாக்ஷர மஹா மந்திரம் நடுநாயகமாகத் திகழ்வது இதன் ஒப்பற்ற பெருமையைக் காட்டுகிறது. எனவே ஸ்ரீ ருத்ரத்தின் பெருமைகளை அறிந்து  அதனை ஜபித்து, ஆத்ம பூஜையும், ஆலய பூஜையும் நடைபெற்றால் வீடு மட்டுமல்ல. நாடே நலம் பெறும்.    

Sunday, October 5, 2014

அம்பிகை வடதிசை நோக்கிய சிவத்தலம்

மனோன்மணியாகிய சிவசக்தியின் சன்னதிகள் சிவாலயங்களில் பெரும்பாலும் கிழக்கு அல்லது தெற்குத் திசையையே நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். சுவாமி சன்னதி கிழக்கு  நோக்கியவாறு  இரு க்கும்போது அம்பிகையும் கிழக்கு நோக்கிய வண்ணம் காட்சி தரும் அமைப்பினுக்கு, மதுரை, வட- திருமுல்லைவாயில், மயிலாடுதுறை  போன்ற ஆலயங்களையும் , சுவாமி கிழக்கு நோக்குகையில் அம்பாள் தெற்கு நோக்கிக் காட்சி தரும் தலங்களாகத் திருவலிதாயம்(பாடி), திருவாலங்காடு போன்ற தலங்களையும் சில எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். , சுவாமி மேற்கை நோக்கிக் காட்சி அளிக்கும் தலங்களில் அம்பிகை தெற்கு நோக்குவதை  மயிலாப்பூர், திருவான்மியூர் ,மணக்கால் போன்ற தலங்களிலும், சுவாமி மேற்கு நோக்குகையில் அம்பிகையும் மேற்கு நோக்குவதை சாட்டியக்குடியிலும் தரிசிக்கிறோம். ஆனால் அம்பிகை வடக்கு நோக்கி சன்னதி கொண்டுள்ள  சிவாலயம் , பண்ருட்டிக்கு அருகிலுள்ள திருத்துறையூரில் உள்ளது. (இதேபோல் பந்தநல்லூர் பசுபதீச்வரர் ஆலயத்திலும் இறைவனை மணக்க வேண்டித் தவம் புரிபவளாக அம்பிகை வடதிசை நோக்கி சன்னதி கொண்டுள்ளாள். இதனை சுட்டிக்காட்டிய அன்பர்க்கு நமது நன்றி).

திருத்துறையூர் என்ற சிற்றூர் , விழுப்புரத்திலிருந்து கடலூர் செல்லும் மார்கத்திலுள்ள இரயில் வண்டி நிலையத்திலிருந்து சுமார்  2 கி. மீ. தொலைவில் உள்ளது. பேருந்து மார்க்கமாக வருபவர்கள், விழுப்புரம்- திண்டிவனம் தேசீய சாலையில் விக்ரவாண்டிக்கு அருகில் உள்ள சுங்கச் சாவடிக்கு அருகே பிரியும் தஞ்சாவூர் சாலையில் பயணித்து, பண்ருட்டிக்கு முன்னால்  வரும் கந்தர்வகோட்டை என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து மேற்கில் சுமார் 4 கி. மீ. செல்லும் பாதையில் சென்றால் ஊரை அடையலாம்.  வழி நெடுகிலும்,கரும்பும்,காய் கறிகளும் பயிரிடப்படும் பசுமையான வயல்கள். பண்ருட்டியிலிருந்து நகரப்பேருந்து நேராக இவ்வூருக்குச் செல்கிறது. கோயில் வாயிலிலேயே இறங்கிக்கொள்ளலாம்.

கிழக்கு வாயில் வழியாக ஆலயத்திற்குள் நுழைகிறோம். இவ் வாயிலிலும் அதற்கு அடுத்த வாயிலிலும் கோபுரம் கட்டப்படவில்லை. நந்தவனத்தில் பூச்செடிகள்  காட்சி அளிக்கின்றன. முதலாவதாகத் தெரிவது, வடக்கு நோக்கிய அன்னையின் சன்னதி. அழகும் கருணையும் ஒருங்கே நமக்குக் காணக் கிடைத்தமைக்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அற்புதமான  கோலம் கொண்டு காட்சி அளிக்கும் இந்த அன்னையை சிவலோக நாயகி என்று அழைக்கிறார்கள். பொதுவாக வடக்கு நோக்கிய கோலத்தைத் தவக்கோலம் என்பர். ஜபம் செய்பவர்களும் வடதிசை நோக்கி அமர்ந்து ஜபம் செய்வதுண்டு. இத்திருக்கோயிலில் இறைவனுக்கு சிஷ்ட குரு நாதர் என்ற திருநாமம் வழங்கப்படுகிறது. சுந்தர மூர்த்தி நாயனாருக்கு  இப்பெருமான்  தவ நெறி  அருளியதாகப்  புராணம் கூறுகிறது. எனவே அதற்கு முன்பாக அம்பிகையும் பெருமானிடம் உபதேசம் பெற்று, தவக்கோலத்தில் இருப்பதாகக் கொள்ள இடம் உண்டு . ஆகையால் அம்பாளுக்கு சிவலோக நாயகி என்பதைவிட, சிவயோக நாயகி என்ற நாமம்  மிகவும் பொருத்தமாகத் தோன்றுகிறது. நமக்கும் சிவஞானத்தைத் தந்தருளுமாறு அம்பிகையைப் பிரார்த்திப்போம். மந்திர உபதேசம் பெற்றுக் கொள்பவர்கள், திருத்துறையூர், ஓமாம்புலியூர், தென்திருமுல்லைவாயில், திருப்பனந்தாள் போன்ற தலங்களில் தக்க குருநாதர் மூலம் உபதேசம் பெற்றுக்கொள்வது சிறப்பு.

இனி, நாம் நந்தி,கொடிமரம்,பலிபீடத்தொடு கூடிய வெளிப்ராகாரத்தை அடைகிறோம். இது விசாலமாக அமைந்துள்ளது. தெற்கு நோக்கிய சன்னதியில் ஆறுமுகப்பெருமான் தேவியர்கள் இருபுறமும் நிற்க,மயில் மீது அமர்ந்து காட்சி அளிக்கிறார். அழகிய திருவுருவம். இருபுறமும் உள்ள சன்னதிகளில் மகாவிஷ்ணுவையும், பால முருகனையும் தரிசிக்கிறோம். ஸ்தல விருக்ஷமாகச் சரக்- கொன்றை  மரம் அமைந்துள்ளது.

கிழக்கே உள்ள கோஷ்டத்தில்  லிங்கோத்பவமூர்த்தியின் பழமையான திருவுருவத்தையும், தெற்கில் தக்ஷிணாமூர்த்தியின் சன்னதியையும் தரிசிக்கிறோம். விமானத்திலும் மூர்த்திகளின் அழகிய சுதை வேலைப்பாடுகளைக்  காண்கிறோம். இதன் அருகாமையில் உள்ள  சுவற்றில் இறைவன் சுந்தரருக்கு உபதேசிக்கும் சிற்பம் காணப்படுகிறது.

கருவறையில் நாகாபரணம் அணிந்து சிஷ்டகுருநாதர்  மேற்குத் திசையை நோக்கியவாறு  தரிசனம் தருகிறார். இப்பெருமான் மீது சுந்தரர் பாடியருளிய ஒரு தேவாரப் பதிகம் உள்ளது. இதில் பெருமானின் புகழோடு, ஊரின் அருகாமையில் ஓடும் பெண்ணை ஆற்றின் வளமும் பேசப்படுகிறது. தனக்குத் தவ நெறி  தந்து அருளுமாறு சுவாமியிடம் இப்பதிகம் மூலம் விண்ணப்பிக்கிறார் சுந்தரர்.இறைவனும் அவ்வாறே அருளிச் செய்ததாகப் பெரியபுராணம் மூலம் அறிகிறோம்.

ஆலயத்திற்கு நேர் கிழக்கில் சைவ சமய சந்தனாசாரியர்களுள் ஒருவரான அருள் நந்தி சிவாசாரியாரின் ஆலயம் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தார் இதற்குத் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்துள்ளனர்.  இருபா இருபது, சிவஞான சித்தியார்  ஆகிய ஒப்பற்ற சைவ சித்தாந்த நூல்களை அருளிய இவரை சகலாகம பண்டிதர் என்று குறிப்பிடுவர். " சித்திக்கு மேல் சாத்திரம் இல்லை" என்றது, சிவஞான சித்தியார் என்ற இவரது சைவ சித்தாந்த சாத்திர நூலைக் குறிக்கும்.

நடு நாட்டிலுள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றான திருத்துறையூரை அன்பர்கள் தரிசிப்பதோடு , பிறரையும் தரிசிக்குமாறு ஆற்றுப்படுத்த வேண்டும். இத்தலத்தில் மந்திரோபதேசம் பெறுவதும், ஜபம்,வழிபாடு முதலியன செய்வதும் அளவற்ற நற்பலன்களைத் தருவதை அனுபவ மூலம் அறிந்து கொள்ளலாம். அரை மணி நேரமாவது சன்னதியில் அமர்ந்து தியானம்,பாராயணம் ஆகியவற்றைச்  செய்து, அதோடு இக் கோயிலின் வளர்ச்சிக்கு நம்மாலான உதவியும் செய்தால் நமது யாத்திரை பூரணமாவதை உணர முடியும்.

Monday, August 25, 2014

நாகையில் முக்திக்காட்சி

நாகப்பட்டினம் , காரைக்கால் அம்மையாரது காலத்திலிருந்தே வணிகத்தில் சிறந்து விளங்கிய கடற்கரை நகர் என்பதைப்  பெரியபுராணத்தின் மூலம் அறிகிறோம்.இன்றும் அப்படித்தான். அது மட்டுமல்ல. சிறந்த சிவஸ்தலமும் கூடத்தான். சிவராஜதானி என்று அது குறிப்பிடப்படுகிறது.  நாகை நீலாயதாக்ஷி என்று அம்பிகையும் இங்கு  பிரபலமாகச்  சன்னதி கொண்டு அருளுகிறாள். சப்த விடங்கத் தலங்களுள் இதுவும் ஒன்று. தேவார மூவராலும் பாடப்பெற்ற சிறப்பையும் உடையது.மகாசிவராத்திரியன்று நாகராஜா வழிபடுவதும்,புண்டரீக முனிவரைக் காயத்தோடு ஆரோகணித்ததும் ஆகிய  புராண வரலாறுகளைக் கொண்டது.

அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான அதிபத்தநாயனார் வாழ்ந்ததும் இங்குதான். இவரைத் திருத்தொண்டத்தொகையில்  சுந்தரமூர்த்தி நாயனார், "கடல் நாகை அதிபத்தன் அடியார்க்கும் அடியேன் " என்று பாடுகிறார்.
பக்த என்ற வடமொழிச்சொல் பத்த என்று தமிழில் வரும். " பத்தனாய்ப் பாடமாட்டேன்.." "பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்" ஆகிய தேவாரத் தொடர்களை நோக்குக. பக்தி என்பது பத்தி என்று வரும். ..."பத்தி செய்த அப்பரசுராமர்க்குப் பாதம் காட்டிய" என வரும் சுந்தரர் வாக்கைக் காண்க. பக்தியிலும் அதிதீவிர பக்தி உடையவர் ஆதலால் அதி பக்தராய் விளங்கிய நாயனார் , அதிபத்தர் என்று தூய  தமிழால் அழைக்கப்பட்டார். இவர் மீனவ குலத்திற்கு விளக்காக   அதில் அவதரித்தவர்.சிவபெருமானிடம் இருந்த அதீதமான  பக்தியினால், தமது வலையில் விழும் மீன்களுள் ஒன்றை மீண்டும் கடலிலேயே சிவார்ப்பணமாக விடும் வழக்கத்தை ஒவ்வொருநாளும் மேற்கொண்டிருந்தார். ஒருநாள் அவ்வலையில் ஒரே ஒரு மீன் மட்டும் அகப்பட்டது. அதுவும் தங்கமாக ஜொலிக்கும் விலையற்ற ஒன்று. அப்படி இருந்தும் அதனை ஒரு பொருட்டாகத் தனக்கென்று எடுத்துக்கொள்ளாமல் மீண்டும் கடலிலேயே விட்டுவிட்டார். நாயனாரது பக்தியை மெச்சிய பெருமான் ரிஷபவாகனத்தில் அம்பிகையுடன்  தோன்றி அவருக்கு அருளினார் என்பது பெரியபுராணம் காட்டும்  வரலாறு.

நாயனார் அருள் பெற்ற ஆவணி மாத ஆயில்ய நக்ஷத்திரத்தன்று நாகை காயாரோகணேச்வர சுவாமி ஆலயத்தில் ஐதீக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும்  இதனைக்   காண அடியார்பெருமக்கள் வருகிறார்கள். பகலில் நடைபெறும் உற்சவம் இது.

சுவாமி அம்பாள் சன்னதிகளில் தீபாராதனை நடந்தபின்னர், சந்திரசேகரர் மற்றும் அதிபத்தர் ஆகிய மூர்த்திகளுக்குத் தீபாராதனை நடைபெறுகிறது. மதியம் சுமார் 3 மணி அளவில் சுவாமி வெள்ளி ரிஷபவாகனத்திலும் நாயனார் படிச்சட்டத்திலும் கடற்கரையை நோக்கிப் புறப்படுகிறார்கள்.

பக்தர்கள் குழாம் பெருமானோடு பின்தொடர்கிறது. மாலை 5 மணி அளவில் கடற்கரையை வந்து அடைந்தவுடன் ,சுவாமி ஒரு பந்தலில் கடலை நோக்கியவண்ணம் தங்குகிறார். சிறிது நேரத்தில் மீனவர்கள் மீன்கொடியை ஏந்திய வண்ணம் ,சீர்வரிசைகளைக் கொண்டு வருகிறார்கள். கடலில் பல படகுகள் இங்கும் அங்குமாகக் கடற்கரையை ஒட்டியவண்ணம் செல்லும்காட்சியை சிறியவர்களும் பெரியவர்களும் கண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள். சில படகுகளில் நமது தேசீயக்கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது.

சிறிது நேரத்தில் நாயனாரது விக்கிரகம் ஒரு படகில் ஏற்றப்படுகிறது. மீனவ நண்பர்களுடன் சிவனடியார்களும் அதில்  பயணிக்கிறார்கள். கரையிலிருந்து சுமார் இருநூறு அடி சென்றதும் அதிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட தங்க மற்றும் வெள்ளி மீன் பதுமைகளைக் கடலில் எறிகிறார்கள். அவற்றை மீண்டும் கைகளில் ஏந்தியவர்களாக அனைவரும் கரையை வந்து அடைகிறார்கள். அதிபத்த நாயனார் ரிஷபத்தில்  எழுந்தருளியுள்ள இறைவனை மும் முறை வலம்  வருகிறார். சுவாமிக்கும் நாயனாருக்கும் தீபாராதனை நடைபெறுகிறது. இந்த முக்திக் காட்சியைப் பார்த்து அனைவரும் பரவசம் அடைகின்றனர். விபூதிப் பிரசாதம் அன்பர்களுக்கு வழங்கப் பட்டதும், மூர்த்திகள் மீண்டும் திருக்கோயிலுக்கு எழுந்தருளுகின்றனர்.

கிடைத்தற்கு இந்த அரிய காட்சி வாழ்க்கையில் எத்தனை பேருக்குக் கிடைக்கிறது? ஒருமுறையாவது இதனைக் காண வேண்டாமா? கண் பெற்ற பயனை அடைய வேண்டாமா? இதுவரையில் காணாதவர்கள் அடுத்த ஆண்டு நாகை சென்று காண வேண்டும் என்று எண்ணுவோமா? இறைவனை வேண்டுவோமா? நாம் ஒவ்வொருவரும் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது.

Friday, June 20, 2014

திருத்திலதைப்பதி (திலதர்ப்பணபுரி) தல புராணம்

                                                                              ௨

                                    திருத்திலதைப்பதித்  தலபுராணம்

கங்கை திங்கள் வன்னி துன் எருக்கின்னோடு கூவிளம்
செங்கண் நாகம் விரிசடையில் வைத்த விகிர்தன் இடம்
செங்கயல் பாய் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி
மங்குல் தோயும் பொழில் சூழ்ந்தழகார் மதிமுத்தமே.
                                                         ---திருஞான சம்பந்தர் தேவாரம்

படம்: நன்றி:templesonnet.com

தெய்வப்பொன்னி நதியின் இருகரைகளிலும் சோழ வள நாட்டில் அமைந்துள்ள புண்ணியத்    தலங்கள் பலவற்றுள் , திருத்திலதைப்பதி என்ற சிறந்த சிவஸ்தலம் ஒன்று உள்ளது. ஆதியில் "மந்தாரம்" என்று வழங்கப்பட்ட இத்தலம், திருஞான சம்பந்தரின் திருப்பதிகம் பெற்றது.இச் சிவாலயம், "மதிமுத்தம்" என்று அத்திருப்பதிகத்தில் திரு ஞானசம்பந்தரால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனைத் தற்காலத்தில் கோயில்பத்து என்றும் திலதர்ப்பணபுரி என்றும் வழங்குகிறார்கள்.

இருப்பிடம்:  மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்குக் கிழக்கே நாச்சியார்கோயில் செல்லும் பாதை பிரிகிறது. இதில் சிறிது தூரத்தில் மற்றும் ஒருபாதை பிரிந்து, நம்மை சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்திற்கு அழைத்துச் செல்கிறது. கோயிலின் தென்புறம் சந்திர தீர்த்தமும்,வடபுறம் அரசலாறும் உள்ளன.

இப்பழமையான சிவாலயம், ஒரு பிராகாரம் மட்டுமே கொண்டது. நாட்டுக்கோட்டை நகரத்தாரால் திருப்பணி செய்யப்பட்டது. சென்ற ஆண்டு மீண்டும் திருப்பணிகள் செய்விக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் விமரிசையாக  நடந்தேறியது. கோயிலுக்கு அண்மையில் நரமுக விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. மனித முகம் கொண்ட இவர், யானை முகம் கொள்வதற்கு முன்னமே இவ்வாறு தரிசனம் தருவதால் இவரை ஆதி விநாயகர் என்று அழைக்கிறார்கள். சங்கடஹர சதுர்த்தி போன்ற நாட்களில் ஏராளமான அன்பர்கள் வந்து தரிசிக்கிறார்கள்.

சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியது. அம்பிகை தெற்கு நோக்கியவாறு  அழகிய வடிவுடன் காட்சி அளிக்கிறாள்.சுவாமிக்கு முக்தீஸ்வரர், மந்தார வநேச்வரர், ஆகிய பெயர்களும், அம்பிகைக்கு சுவர்ணவல்லி, மலர்க்கொடி ஆகிய பெயர்களும் வழங்கப்படுகின்றன. ராம பிரான் இத்தலத்தில் தனது தந்தையாகிய தசரதருக்குத்  திலதர்ப்பணம் செய்ததால், பிராகாரத்தில்,   அந்த ஐதீகத்தைக் காட்டும் சன்னதி இருப்பதைக்காணலாம். கன்னி மூலையில் உள்ள  கணபதிக்கு அருகிலுள்ள மண்டபத்தில் ராம-லக்ஷ்மணர்கள் மண்டியிட்ட நிலையில் மண்டியிட்டுப் பிண்டம் போடும் நிலையில் உள்ளனர்.இதனை அடுத்து, முருகன், கஜலக்ஷ்மி ஆகியோரது  சன்னதிகள் உள்ளன. தலமரமாகிய மந்தாரை, வடக்குப் பிராகாரத்தில் உள்ளது. எனவே, அமாவாசை தர்ப்பணம் செய்வது இங்கு விசேஷமாகக் கருதப்படுகிறது.

அரிசில் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இத்தலத்தின் பிற பெருமைகளைக் காண்போம். முன்னொருகாலத்தில் திருக்கைலாயமலையில் எல்லாத்தேவர்களும் சிவதரிசனம் செய்துகொண்டிருக்கையில், விதிவசத்தால் பிரமதேவன் தனது கவனத்தை ஊர்வசியின்பால் செலுத்தியதால் சிவபெருமானது சாபத்தால் பூமிக்கு  வந்து அதனைப் போக்கிக்கொள்ளத் தவம் செய்யலானார். அவ்வாறு தவம் செய்த இடமே மந்தார வனமாகும்.அங்கிருந்த புற்றினை அகற்ற முயன்றபோது, பொன்மேனியளாக அம்பிகை காட்சி அளித்து அருளினாள். இதனால் பெருமகிழ்ச்சி அடைந்த பிரமன்,  அழகிய ஆலயம் ஒன்றை நிர்மாணித்தான். பிரமனது பக்திக்கு இரங்கிய பரமசிவனும் பார்வதி தேவியோடு ரிஷபவாகனத்தில் காட்சி அளித்தார். பிரமதீத்தத்தில் நீராடி, ரோகிணியன்று இங்கு வந்து தரிசிப்போர் எல்லா நலன்களும் பெற்று , இறுதியில் ஈசனது திருவடிப்பேற்றை அடையவேண்டும் என்று பிரமன் வரம் வேண்ட, இறைவனும் அவ்வாறே கொடுத்து அருளினான் என்று தல புராணம் கூறுகிறது.  

இத்தலம் நான்கு யுகங்களிலும் முறையே, மந்தார வனம் என்றும், ஹரி க்ஷேத்திரம் என்றும், பிரம நாயகம் என்றும் திலதர்ப்பணபுரி என்றும் பெயர் பெற்றது.

வாலகில்லியர்கள் என்ற குறு வடிவம்கொண்டோர்கள் வைகுண்டம் சென்ற போது, அவர்களது வடிவைக்கண்ட லக்ஷ்மியானவர் நகைக்கவே, அவர்கள் கோபமுற்று, வைகுண்டத்திலிருந்து நீங்குவாயாக என்று சபித்தனர். பின்னர் அவர்களது சொற்படி, லக்ஷ்மிதேவி, தனது நாயகனாகிய மகாவிஷ்ணுவுடன் மந்தார  வனத்தை அடைந்து,சக்ர தீர்த்தத்தை உண்டாக்கித் தன்பெயரால் வைகாசிப் பௌர்ணமியன்று சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, நியமப்படி பன்னிரண்டு ஆண்டுகள் பூசித்ததும் ,   முக்தீசப்பெருமானின் திருவருள் பெற்று, வைகுண்டம் திரும்பினர். அம்பிகையும் முன்னொருசமயம் தனது தந்தை தக்ஷன் செய்த யாகத்திற்குச் சென்ற பழி நீங்க மனதார வநேசனைப் பூசித்து, அப்பழி நீங்கப்பெற்றாள் . வடநாட்டரசன் ஒருவன் இங்கு வந்து நாரதர் சொற்படி பிதிர் தர்ப்பணங்களை இங்கு செய்து தேவ வர்மேச லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூசித்து நற்கதி பெற்றான். எனவே இத்தலத்தில் பித்ரு சிரார்த்தம், அடியார்களுக்கும் அந்தணர்களுக்கும் அன்ன தானம்  ஆகிவற்றைச் செய்தால் பெறும் பலன் அளவிடமுடியாதது.

தேவி தீர்த்தம்,  பிரம தீர்த்தம், சக்கர தீர்த்தம்,வசிஷ்ட தீர்த்தம், அரிசிலாறு ஆகியவை இத்தலத்தின் தீர்த்தங்களாக அமைந்துள்ளன.
 
 அருகில் உள்ள கூத்தனூர்  சரஸ்வதி தேவி ஆலயத்தையும்,. அம்பர்,அம்பர் மாகாளம்,  திருவீழிமிழலை ஆகிய பாடல் பெற்ற தலங்களையும் அன்பர்கள் அவசியம் தரிசிக்க வேண்டும்.

Sunday, May 18, 2014

கண்டறியாதன கண்டேன்

தமிழகக் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்பு வாய்ந்த திருவிழாக்களில்  சித்திரை மாதத்தில்  திருவையாற்றில் நடைபெறும் சப்த ஸ்தான விழாவும் ஒன்றாகும். திருவையாறு உள்ளிட்ட ஏழு தலங்களின் பல்லக்குகள் ஒரு சேர பவனி வந்து காட்சி தரும் அற்புதக் காட்சியை வாழ்நாளில் ஒவ்வொருவரும் அவசியம் தரிசிக்க வேண்டும். ஏழு ஊர் மக்களும் ஒருங்கிணைந்து நடத்தும் வைபவம் இது.  காவிரியின் வறண்ட படுகையில் கொதிக்கும் மணலில் கால்கள் சுடுவதையும் பொருட்படுத்தாமல் ஆற்றைக் கடந்து  பல்லக்குகளைச் சுமந்து வருவார்கள். கரை ஏறும்போது மிகவும் பிரயத்தனப்பட்ட்டால் தான் , பல்லக்கை ஏற்ற முடியும். சுடுமணலில் தென்னை ஓலைகளைப் பரப்பி வைத்திருப்பார்கள். கரை ஏறியவுடன் வீதிகளில் நீரைத் தெளித்தும் ,பல்லக்குத் தூக்கிகளுக்கு நீரும், மோரும் வழங்கியும் ஊர் மக்கள் தொண்டு செய்வார்கள்.

சப்த ஸ்தான விழாவின் பின்னணியை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். சிலாத முனிவருக்குத் தவப்புதல்வனாகத் தோன்றிய அதிகார நந்திகேச்வரருக்குத்  திருமழபாடியில் தோன்றிய சுயசாம்பிகை என்ற பெண்ணைத் திருமணம் செய்துவைக்கத் திருவையாற்றிலிருந்து ஐயாறப்பரும் தர்மசம்வர்தனி அம்பிகையும் பங்குனி மாதம் புனர்பூசத்தன்று திருமழபாடிக்குப்  பல்லக்கில் எழுந்தருளுகிறார்கள். அன்று இரவே, புதுமணத் தம்பதியரோடு கொள்ளிடத்தைக் கடந்து, திருவையாற்றை அடைகிறார்கள்.  
புது மணத் தம்பதியரை அழைத்துக் கொண்டு ,சித்திரை மாதத்தில் பவுர்ணமியை ஒட்டி வரும் விசாகத்தன்று திருவையாற்றை விட்டுக் கண்ணாடிப் பல்லக்கில் புறப்பட்டு, அதைச் சுற்றிலும் உள்ள ஆறு ஊர்களுக்கு எழுந்தருளி அவர்களை ஊர் மக்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதே இவ்விழாவின் அடிப்படை. நோக்கம்.

திருவையாறு பல்லக்கு முதலில் கும்பகோணம் செல்லும் சாலையில்  சுமார் 3 கி.மீ. தொலைவிலுள்ள திருப்பழனத்தை அடைகிறது. இது திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர் ஆகியோரின் தேவாரப் பாடல்களைப் பெற்ற தலம். இத்தலத்து இறைவரான ஆபத்சகாயர் , அம்பிகையுடன் பல்லக்கில்; எழுந்தருளி வீதி வலமாகத் திருவையாற்றுப் பல்லக்குடன் , திருவேதிகுடியை அடைகிறார். வேதங்களால் வழிபடப்பெற்ற வேதபுரீஸ்வரரும் தமது பல்லக்கில் மற்ற இரு பல்லக்குகளுடன் சேர்ந்துகொள்கிறார்.

மூன்று பல்லக்குகளும் திருச்சோற்றுத்துறையை அடைகின்றன. மூவர் பாடலும் கொண்ட இத்தலம்  , கண்டியூருக்குக் கிழக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கோயிலில் அண்மையில் புதியதாகச் செய்யப்பெற்ற கண்ணாடிப்பல்லக்கில், ஒதனவநேச்வரரும்,அன்னபூரணி தேவியும் எழுந்தருளுகிறார்கள். தலத்தின் பெயருக்கு ஏற்ப அன்னதானம் செய்யப்படுகிறது. ஊரே விழாக்கோலம் பூண்டு விளங்குகிறது.

நான்கு பல்லக்குகளும்  அஷ்ட வீரட்டத்துள் ஒன்றான திருக்கண்டியூரை வந்து அடைகின்றன. அங்கு பிரம்ம சிர  கண்டீஸ்வரர் அம்பாளுடன் பல்லக்கில் எழுந்தருளி, வீதி வலமாகத் திருப்பூந்துருத்தி என்ற பாடல் பெற்ற தலத்தை  அடைகிறார். அப்பர் பெருமான் பல காலம் தங்கி, சிவப்பணி செய்த இத்தலத்திலிருந்து ஆறு பல்லக்குகளும் காவிரிக்கரையில் உள்ள திரு நெய்த்தானத்தை வந்து சேர்கின்றன. தில்லைஸ்தானம் என்று தற்காலத்தில் வழங்கப்படும் இப்பாடல் பெற்ற தலத்தில் ஏழு பல்லக்குகளையும்  கோயிலுக்குள் காணலாம். பாலாம்பிகையும் க்ருதபுரீஸ்வரரும் பல்லக்கில் எழுந்தருளி, ஏனைய ஆறு பல்லக்குகளுடன் திருவையாற்றை நோக்கிப் புறப்படும்போது தீபாராதனை, வாணவேடிக்கைகள் ஆகியன நடைபெறுகின்றன.

ஏழு பல்லக்குகளும் திருவையாற்று வீதிகளில் எழுந்தருளி , ஐயாறப்பரின் திருக்கோயில் வாயிலை அடைந்தவுடன் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் பிற தலங்களில் இருந்து வந்த பல்லக்குகள் தமது ஊருக்குத் திரும்புகின்றன.

கண் பெற்ற பயன் கண்ணாடிப் பல்லக்கைத் தரிசிப்பது தான். அது உண்மை என்பதை இவ்விழாவை நேரில் கண்டு களித்தவர்கள் உணர்வார்கள். ஒரே நேரத்தில் ஏழு தலத்து மூர்த்திகளையும் தக்ஷிண கயிலாயமான திருவையாற்றில் காணும்போது நம் கண்கள் நீர் பனிக்க,  அப்பர் பெருமானின் வாக்கான " கண்டேன் அவர் திருப்பாதம் ; கண்டறியாதன கண்டேன்" என்ற பாடல் வரிகளை இசைத்து,  சிந்திப்பரிய ஐயாறன் அடித்தலத்தை மீண்டும் மீண்டும் தரிசிக்கிறோம். கண்கள் அத்திருவடிகளை விட்டு அகல மறுக்கின்றன. 

Tuesday, May 6, 2014

செங்காட்டங்குடியதனுள் கண்டேன்

திருச்செங்காட்டங்குடி என்ற பழமை வாய்ந்த சிவஸ்தலத்தில் சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் பரணி நட்சத்திரத்தன்று அமுது படையல் என்ற வைபவம் நடைபெறுகிறது. இதனைத் தரிசிக்க அருகிலுள்ள கிராமங்களிலிருந்தும் தொலைவிலுள்ள ஊர்களிலிருந்தும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். பிள்ளைக்கறி பிரசாதம் பெற்றுக்கொண்டு, விடியற்காலையில் ரிஷப வாகன தரிசனமும் செய்து கொண்டு, நிறைவான மனத்துடன் தமது ஊருக்குத் திரும்புகிறார்கள்.

கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்த தோஷம் நீங்குவதற்காக விநாயகப் பெருமான் சிவபூஜை செய்ததால் சுவாமிக்குக் கணபதீஸ்வரர் என்றும் ஆலயத்திற்குக் கணபதீச்வரம் என்றும் பெயர்கள் வழங்கலாயின. அசுரனுடைய இரத்தம் பெருகி ஆறாக ஓடியபடியால், இத்தலம் செங்காட்டங்குடி எனப்பட்டது.

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பேருந்தில் ஏறி, திருமருகலில் இறங்கி அங்கிருந்து சுமார் மூன்று கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். ரயிலில் வருபவர்கள் நன்னிலத்தில்     இறங்கிக்  காரைக்கால் ,நாகை செல்லும் பேருந்துகள்  மூலம் திருமருகலை அடையலாம். திருவாரூரிலிருந்தும்  பேருந்து மூலம் திருச்செங்காட்டங்குடியை வந்து  அடையலாம்.

ராஜகோபுரத்தைக் கடந்தவுடன் வெளிப் பிராகாரத்தில் நந்தி,கொடிமரம்,அலங்கார மண்டபம் அம்பாள் சன்னதி ஆகியவற்றைத் தரிசித்துவிட்டு, உள்ளே நுழைகிறோம். அடுத்த பிராகாரத்தில் அமைந்துள்ள திருமாளிகைப்பத்தியில்  சிறுத்தொண்ட நாயனார்  தனது குடும்பத்தினருடன் உத்திராபதீஸ்வரர் சன்னதியை நோக்கி அஞ்சலி செய்தவராகக் காட்சி தருகிறார். எதிரில் மிகப்பழமையான ஆத்தி மரம் இருக்கிறது. மூல சன்னதியில் கணபதியால் வழிபடப்பெற்ற கணபதீஸ்வரர் தரிசனம் தருகிறார். பிராகாரத்தில் வாதாபி கணபதியின் சன்னதி இருக்கிறது.

சிவனடியார்க்கு நாள் தோறும் அமுதளிப்பதை நியமமாகக்கொண்ட சிறுத்தொண்டரைச்  சோதிக்க ,பைரவக் கோலத்தோடு உத்திராபதியாராக வந்த சிவபெருமானைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்ற சிறுத்தொண்டர், வந்தவர் கேட்டபடியே, மனமுவந்து, தனது ஒரே மகனான சீராளனைத் தன் மனைவியார் பிடிக்கத்தானே அரிந்து அமுதாக்கி , அடியவர்க்குப் படைத்தார் என்று பெரிய புராணம் கூறுகிறது. இறைவன் திருவருளால் அக்குழந்தை உயிர்பெற்றதோடு, அவனது பெற்றோரும்,தாதியாரும் காணும்படியாக, உமையும் கந்தனும் தன்னோடு ரிஷப வாகனத்தில் வர, அவர்களுக்குக் காட்சி தந்து, முக்தி அளித்த வரலாற்றை நினையும்படி இன்றும் அதனை விழாவாக நடத்திக் காட்டுகிறார்கள்.

காலையில் உத்திராபதீச்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் நடை பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து, சுவாமிக்கு வெள்ளை சார்த்தி, சுமார் பத்து மணி அளவில் உள்  பிராகாரத்திலும், வெளிப்பிராகாரத்திலும் சுவாமி வலம் வந்துவிட்டு தனது சபையை அடைகிறார். வழி நெடுகிலும் சுவாமிக்குப் பன்னீரைக் காணிக்கை ஆக்குகிறார்கள் பக்த கோடிகள்.
நண்பகலில் சுமார் இரண்டு மணிக்கு மீண்டும் உத்திராபதியார் புறப்பாடு நடைபெறுகிறது. அதற்காக அலங்கரிக்கப்பட்ட பவழக் கால் சப்பரத்தில் எழுந்தருளியவாறு, தெற்கு வீதியின் கோடியில் உள்ள சிறுத்தொண்டரது மனைக்குச் செல்கிறார் பெருமான். சிவனடியாரைத்தேடிக்கொண்டு சிறுத்தொண்டர் வெளியில் சென்று விட்டபடியால், அவரது மனைவியான திருவெண்காட்டு நங்கையும்,சந்தனத்தாதியாரும் சுவாமியை எதிர் கொண்டு அழைக்கிறார்கள். ஆண்கள் இல்லாத வீட்டில் நுழைவது முறை அன்று என்று சுவாமி மீண்டும் கோயிலில் உள்ள ஆத்தி மரத்தடிக்கே வந்து அமர்கிறார்.

சிவனடியார் வந்துவிட்டுப் போன செய்தியை மனைவியின் மூலம் அறிந்த சிறுத்தொண்டர் ஆனந்தம் மேலிடக் கோயிலுக்குச் சென்று அவரை வணங்கி, உணவு அருந்தத் தனது  மனைக்கு அழைக்கிறார். தான் உண்பது நரப்பசு என்று சொல்லியும், அதற்கு உடன்பட்ட சிறுத்தொண்டர் , பெருமானைத் தன்  மனைக்கு வர அழைக்கிறார். இரவு சுமார் ஒன்பது மணிக்குச்  சிறுத்தொண்டர் பெருமானை அழைக்க வரும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. அதற்கான பெரியபுராணப் பாடல்களை ஓதுவாமூர்த்திகள் பாடுகிறார்கள். இரவு இரண்டு மணி அளவில் உத்திராபதீச்வார் , சிறுத்தொண்டர்  மனைக்கு எழுந்தருளுகிறார். மக்கள் கூட்டம் வெளியில் அமர்ந்தவாறு அப்போது ஓதப்படும் பெரியபுராணப் பாடல்களை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருக்கிறது. அமுது படைக்கும் பொது உள்ளேயிருந்து ஒரு சப்தம் கேட்கிறது. சற்று நேரத்திற்கெல்லாம் சுவாமி விரைவாகக் கோயிலுக்குச் சென்று விடுகிறார்.

உத்திராபதியார் அருளால் மீண்டும் உயிர் பெற்ற தனது குமாரனுடனும் மனைவி,தாதி ஆகியோருடனும்  கோயிலை நோக்கி சிறுத்தொண்டர் வரும்போது,தெற்கு வீதியில் விடியற்காலையில் ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்த வடிவில்  அவர்களுக்குத் தரிசனம் கிடைக்கிறது. பாடல்கள் இசைக்கப்படுகின்றன. தீபாராதனை பெருமானுக்கும் சிறுத்தொண்டருக்கும் நடைபெறுகிறது. நால்வரும் பெருமானை வலம் வந்து விட்டுக் கோயிலுக்குச் சென்று விடுகின்றனர். சுவாமி நான்கு வீதிகளையும் வலம் வந்தவாறு திருக்கோயிலைச் சென்று அடைகிறார். 

கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் தோளில் சுவாமியைத் தூக்கி வரும் ஆட்கள் பாராட்டுக்கு உரியவர்கள். வீதியில் உள்ள மக்களும் அந்த ஆட்களின் பாதங்கள் வெய்யிலால் வருந்துமே என்று, வழி நெடுகிலும் தண்ணீர் தெளித்து வைக்கிறார்கள். தரிசிக்க வரும் அன்பர்களின் தாகம் தீர்க்கத் தண்ணீர், நீர்மோர் ஆகியவை பலரால் ஆங்காங்கே தரப்படுகிறது. இவை எல்லாமே சிவபுண்ணியம் தான்! 

" சிறுத்தொண்டன் பணி செய்ய" அதனைப் பெருமான் அன்று ஏற்று அருளியவாறு, இக்காலத்திலும் அவனுக்குப் பணி செய்தால் அவனருளைப் பெறலாம் என்பது நிச்சயம்.   கண்கள் தாரையாக உருகும் சிறந்த அடியார்களைக் காண வேண்டும் என்றால் அமுது படையல் உற்சவத்தில் காணலாம். எத்தனையோ குடும்பங்களுக்குக் குல தெய்வமான உத்திராபதீச்வரரையும் அவனே கதி என இருக்கும் அடியார்களையும் "செங்காட்டங்குடியதனுள்  கண்டேன் நானே"  என்று அப்பர் பெருமான் அருளியதுபோல் நாமும் காண்கிறோம்.


Friday, April 11, 2014

ஏனமால் வழிபட்ட ஏனங்குடி

வராஹ வடிவெடுத்துத்  திருமாலானவர்  சிவபூஜை செய்த ஸ்தலங்கள் பல உண்டு. அவற்றுள் முக்கியமாகக் கும்பகோணத்திற்கு அண்மையில் உள்ள சிவபுரம் என்ற தலத்தைக் குறிப்பிடலாம். இங்கு வெள்ளைப் பன்றி வடிவத்தில் பல காலம் தங்கி மகாவிஷ்ணு தவம் செய்ததைத் தேவாரமும் குறிப்பிடுகிறது.

" பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது பலநாளும் வழிபட்டு ஏத்தும் ..." என்பது தேவார வாக்கியம். வராகராக  வந்த திருமாலைக் குறிப்பிடும்போது, " ஏன மால்"  என்பார் ஞானசம்பந்தர். ஏனம் என்ற சொல் பன்றியைக் குறிக்கும். அப்போது தனது பிறை போன்று வளைந்த கொம்பை சிவபிரானுக்கு அர்ப்பணித்தார் திருமால்.  பரமேச்வரனது மார்பில் எவை எல்லாம் அணிகலன்களாகத் திகழ்கின்றன என்பதைத் தான் அருளிச்செய்த முதல் திருப்பதிகத்திலேயே குறிப்பிடுகிறார் சம்பந்தப்பெருமான். " முற்றல் ஆமை இள நாகமோடு ஏன முளைக்கொம்பு அவை பூண்டு , வற்றல் ஓடு கலனாப் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்..."  என்றார்.

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் உள்ள சன்னா நல்லூர் என்ற ஊருக்குக் கிழக்கே காரைக்கால் செல்லும் வழியில் சுமார் நான்கு கி. மீ. தொலைவில் உள்ளது ஏனங்குடி என்ற சிறிய கிராமம். இங்கும் ஏன(பன்றி) வடிவில் மகாவிஷ்ணு சிவபூஜை செய்திருக்கிறார். ஆகவேதான் ஊருக்கு ஏனங்குடி என்ற பெயர் ஏற்பட்டது. பேருந்து சாலையிலிருந்து சுமார் ஒரு கி. மீ. தொலைவில் உள்ளது சிவாலயம். ஊர் எல்லையில் இருப்பதால் கோயிலுக்கு அருகிலேயே வயல்கள் அமைந்துள்ளன.

நுழைவு வாயிலின் மேலே ரிஷப வாகனத்தில் உமாமகேச்வரர்கள் சுதை வடிவில் காட்சி தருகின்றனர். நுழைந்தவுடன் சுவாமி சன்னதியை நோக்கிய நந்தியைத் தரிசிக்கிறோம். நந்திமண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கர்ப்பக் கிருகம் ஆகியவை கருங்கற்களால் அமைக்கப்பெற்றவை.நந்தி மண்டப மேற்புறம் பருத்த வேர்கள் ஊடுருவியிருப்பதால் உடனே திருப்பணி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. மேற்கூரையும் ஆங்காங்கே சிதிலம் அடைந்துள்ளது. எல்லா விமானங்களும் செப்பனிடவேண்டிய நிலை. திருமாளிகைப்பத்தி மண்டபமும் , சுற்று மதிலும் இதுபோலத்தான் இருக்கிறது பிராகாரத்தில் தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் வில்வ மரம் இருக்கிறது.

அம்பாள் சன்னதிக்கு நேர் எதிரில் மதில் சுவர் வாயில் வழியாகத் திருக்குளம் அமைந்துள்ளதைக் காணலாம். கிழக்கு நோக்கிய திருமாளிகைப்பத்தியில் முதலில் விநாயகரது சன்னதியும், அதை அடுத்துப் பண்டரிநாதனின் சன்னதியும் உள்ளது. இருகைகளையும் இடுப்பில் வைத்தவாறு, தேவியுடனும் நாரதருடனும் காட்சி அளிக்கின்றார் பண்டரிநாதன். இதனை அடுத்து சுப்பிரமணியர், கஜலக்ஷ்மி ஆகியோரது சன்னதிகள் உள்ளன. சண்டிகேஸ்வரர் சன்னதி வடக்குப் பிராகாரத்தில் உள்ளது. கோயில் கிணற்றையும் இந்தப் பிராகாரத்தில் காண்கிறோம். மேற்கு நோக்கிய மண்டபத்தில் நவக்ரகங்கள் ஒரே திசையை நோக்கியவாறு காட்சி அளிக்கின்றனர்.

கர்ப்பகிருகத்தில் அழகிய சிவலிங்க மூர்த்தியாக திருவாலந்துறையார் என்ற பெயருடன் மூலவர் தரிசனம் தருகிறார். இந்த மூர்த்தியை வழிபட்ட வராகப் பெருமாள், மகாமண்டபத்தில் இருப்பதைக் காணலாம். சுவாமியின் பெயர் ஆல விருக்ஷத்தை ஒட்டி அமைந்திருப்பதால் , ஸ்தல விருக்ஷம் ஆலமரமாகக் கருத இடமுண்டு. அதற்கேற்ப, கோயிலுக்கு வெளியில் ஆல மரம் ஒன்றும் இருக்கிறது. மகாமண்டபத்தில் இருந்தபடியே அம்பிகையின் சன்னதியையும் தரிசிக்கிறோம். மகிழம்பிகை என்று தேவி அழைக்கப்படுகிறாள்.புத்திர பாக்கியம் வேண்டி மகாவிஷ்ணு மகிழ மலர்களால் பூஜித்து, மன்மதனைப் புத்திரனாகப் பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது. ஆலயத்தில் மகிழமரமும் இருக்கக் காணலாம். எனவே இங்குள்ள வராக தீர்த்தத்தில் நீராடி சுவாமியையும் அம்பாளையும் வழிபடுவோர் புத்திர பாக்கியம் கிடக்கப் பெறுவர் என்று கூறுவர். இங்குள்ள பைரவ மூர்த்தியை செவ்வரளி மலர்களால் அர்ச்சித்தால் வேண்டிய வரங்கள் யாவும் பெறலாம் என்றும் கூறப்படுகிறது. திருவாதிரை நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய ஆலயம் இது என்றும் சொல்லப்படுகிறது.

அபூர்வ தரிசனம்: எங்கும் இல்லாத வகையில் இங்கு மட்டுமே சண்டிகேஸ்வரர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ஆலய சிவாசாரியார் திருப்புகலூரிலிருந்து வந்து பூஜை செய்கிறார்.
இத்தலத்தின் அருகில் உள்ள புத்தகரம், ஆதலையூர், கோட்டூர் ஆகிய ஊர்களின் சிவாலயங்களையும் அன்பர்கள் தரிசிக்க வேண்டும். 
  
இத்தனை பழைமையும் பெருமையும் வாய்ந்த ஏனங்குடி ஆலயத்தைப் புனரமைக்க முன்வந்துள்ள கிராம வாசிகளைப் பாராட்ட வேண்டும். விநாயகர் மற்றும் சுவாமி சன்னதிகளின் விமான வேலைகள் நடந்து கொண்டிருந்த நிலையில், சென்ற மாதம் எதிர்பாராத விதமாக இத்திருக்கோயில் தரிசனம் கிடைக்கப்பெற்றோம். நாமும் இப்பணியில் பங்கேற்கவேண்டும் என்ற எண்ணத்தைத் திருவருள் தோற்றுவித்ததால், அன்பர்களின் உதவியுடன் அம்பாள், சுப்பிரமணியர், கஜலக்ஷ்மி, சண்டிகேஸ்வரர் விமானவேலைகளைத் துவக்கினோம். தற்போது அவை முடியும் தருவாயில் இருக்கின்றன.

எஞ்சியுள்ள திருப்பணிகளாவன மேற்கூரை, மதில் ஆகியவற்றைப் பழுது பார்த்தலும், பிராகாரத்தில் வலம் வரத் தரை அமைப்பதும் ஆகும். அன்பர்கள் முன்வந்தால் இவற்றையும் விரைவிலேயே பூர்த்தி செய்து, வரும் ஆனி மாதத்தில் கும்பாபிஷேகம் செய்து விடலாம். திருவருள் துணை இருந்தால் முடியாததும் உண்டோ?  
   

 இதுபோன்ற கிராமக் கோயில்களை நாம் அவசியம் பராமரிக்க வேண்டும். அவை ஒவ்வொன்றும் சிறப்பு வாய்ந்தவை. புராண வரலாறுகளை நமக்கு உணர்த்துபவை. அவற்றைத் தரிசிப்பதோடு நின்று விடாமல் நம்மால் இயன்ற அளவுக்கு அக்கோயிலின் பராமரிப்புக்கோ, திருப்பணிக்கோ உதவ முன்வர வேண்டும். புகைப்படங்களோடு கட்டுரை எழுதுவதோடு நின்றுவிடாமல் அக்கோயிலுக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய நேரம் இது. பல கிராமக் கோயில்கள் பாழடைந்துவிட்ட  நிலையில் இத்தகைய சிந்தனை நிச்சயமாகப் பலன் தரும். வெளியூர்க் காரர்கள் நம் ஊருக்கு  வந்து திருப்பணி செய்வதைக் கண்டு நாமும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று உள்ளுர்க்காரர்கள் முன்வருவதைக் காணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நம்பிக்கை வளர்கிறது.