Saturday, November 13, 2010

துலா காவேரி புராணம்-4


திலீபனின் மகன் ரகு அயோத்தியை ஆண்டு வந்த காலத்தில் ஒரு நாள் நகர சோதனைக்காகப் போய்க்கொண்டு இருந்தபோது, வழியில் ஒரு ராக்ஷசனால் துரத்தப்பட்ட வேதியன் அடைக்கலம் வேண்டி, அவனது காலில் வந்து விழுந்தான். சிறிது நேரத்தில், பசியுடன் வந்த ராக்ஷசன், அவனை விட்டுவிடும்படி கேட்கவே, " செய்த பாவங்கள் துலா ஸ்நானம் செய்தால் நீங்கும். ஆனால் அடைக்கலம் புகுந்தவனைக் கைவிட்ட பாவத்திற்குப் பிராயச்சித்தமே இல்லை. " என்று சொல்லிய அரசன், ஸ்ரீ பரமேச்வரனை பிரார்த்திக்க, அவரும் ஒரு வழிப்போக்கனைப்போல் எதிரில் வந்து, "அரக்கனே, நீ இதற்குமுன் சதத்துய்மன் என்ற பெயருடன் வாழ்ந்திருந்தாய்.வசிஷ்ட முனிவரை ஏளனம் செய்ததால் அரக்கனாக மாறினாய். ஒரு அரசனைக் கண்டவுடன் பழைய உருவம் பெறுவாய்" என்று வசிஷ்டர் கூறியபடி, இப்போது அரசனைக் கண்டாய். உனது பழைய உருவம் வந்துவிடும்." என்று கூறி மறைந்தார். பழைய வடிவம் பெற்ற அரக்கனும், துலா காவேரி ஸ்நானம் செய்து நற்கதி பெற்றான்.

சித்திர வர்மன் என்ற கொடுங்கோல் மன்னன், அகஸ்திய முனிவரின் சொற்படி உதய காலத்தில் துலா ஸ்நானம் செய்து வந்தான். அதைக் கண்டு மகிழ்ந்த முனிவர், " எந்த வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் அனைத்துப் பாவங்களும் துலா ஸ்நானம் செய்வதால் நீங்கிவிடுகின்றன.எத்தனையோ தர்மங்கள் செய்வதால் அடையும் பலன்களை ஒரு முறை காவரி ஸ்நானம் செய்தவன் பெறுவான் என்பது நிச்சயம். " என்றார். சோம பூஷணன் என்ற வேதியன் மிகவும் வறுமை நிலையிலும் காவேரி ஸ்நானம் செய்து வந்தான். இதனால் மகிழ்ந்த பிரம்ம தேவன் , அவன் முன் தோன்றி, "காவேரி ஸ்நான விசேஷத்தால், செல்வந்தன் ஆவாய். ஆனால் , அதைக்கொண்டு தான தர்மங்கள் செய்து வர வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் ஏழை ஆகிவிடுவாய்." என்று அருளினார். சோம பூஷணன் அதன்படி நடந்துவந்த போதிலும் அவன் மனைவி அதற்கு மாறாக நடந்ததோடு, கணவனையும் தான - தர்மங்கள் செய்யாமலும் ,காவேரி ஸ்நானம் செய்யாமலும் இருக்கும்படி மாற்றவே, அவர்கள் வீட்டில் திருடர்கள் புகுந்து, செல்வத்தைக் கொள்ளை அடித்துச் சென்றனர். அதன் பிறகு, இருவரும் நல்ல புத்தி வந்தவர்களாய், காவேரி ஸ்நானமும் பூஜையும் செய்து, மீண்டும் ஐச்வர்யங்கள் அனைத்தும் பெற்று, நீண்ட நாட்கள் தான -தர்மங்கள் செய்து வாழ்ந்தனர். இக் கதையை அகஸ்தியரிடம் கேட்ட சித்திரவர்மனும் அதன்படியே நடந்து, இறுதியில் மோக்ஷம் பெற்றான்.

துலா மாதக் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசியன்று காலையில் நல்லெண்ணெய் தேய்த்துக்கொண்டு வெந்நீரில் ஸ்நானம் செய்து, அதன் பிறகே, காவேரி ஸ்நானம் செய்ய வேண்டும். தீராத தலைவலி முதலிய உபாதைகளும் இதனால் நீங்கும் என்று பரமசிவனே சொல்லியிருக்கிறார். நரகாசுரனை சம்ஹரித்தவுடன் வீர ஹத்தி தோஷம் ஏற்ப்பட்டதால், சிவபெருமான் அருளியபடி, மகாவிஷ்ணு காவேரி ஸ்நானம் செய்து, அப்பாவத்தைப் போக்கிக் கொண்டார்.

ப்ருகு முனிவரின் புத்திரியாகத் தோன்றிய மகா லக்ஷ்மி , காவேரி ஸ்நானம் செய்து, தன சுய வடிவம் பெற்று, மகாவிஷ்ணுவை அடைந்தாள் . காவேரி ஸ்நானம் செய்த பூமா தேவி, யம தர்மனிடம், " தான தர்மங்கள் செய்யாமலும், பித்ரு கார்யங்களைச் செய்யாமலும் பாவங்களைச் சுமப்பவர்களை உன் உலகத்திற்கு அழைத்துக்கொள். காவேரி ஸ்நானம் செய்தவர்களையும் அதன் மகிமையைக் கேட்டவர்களையும் என்னிடம் விட்டுவிடு." என்று சொன்னவுடன் எமனும் அதன் படியே செய்வதாக வாக்களித்தான்.

தங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்று கங்கைக்கும் காவேரிக்கும் வாக்கு வாதம் வந்தபோது, காவிரியே சிறந்தவள் என்று பிரம்ம தேவர் தீர்ப்புக் கூறினார்.

இப்படிப்பட்ட காவேரி மகாத்மியத்தை பக்தியுடன் படிப்பவரும்,கேட்பவரும் எல்லாப் பாவங்களும் நீங்கப் பெற்று,மோக்ஷத்தை அடைவார்கள். புத்திர பாக்கியம் , நீண்ட ஆயுள், வியாதி நிவாரணம் , அஷ்ட ஐஸ்வர்யங்கள் எல்லாம் சித்திக்கும் .

" கவேரகன்யே காவேரி, சமுத்ர மகிஷிப் பிரியே
தேகிமே பக்தி முக்தி தவம் சர்வ தீர்த்த ஸ்வரூபிணி "

ஸ்ரீ காவேரி தேவ்வ்யை நம்:

துலா காவேரி மகாத்மிய சுருக்கம் நிறைவுற்றது.

Monday, November 8, 2010

துலா காவேரி புராணம்- 3


மந்திரன் என்ற பிரம்மச்சாரியின் சாபத்தால் பேய் உருவம் கொண்ட மனோக்யை என்ற பெண் , சுசிதன்என்ற முனிவரின் கட்டளைப்படி, அறுபது கோடி தீர்த்தங்களும் தங்களது பாவத்தைப் போக்கிக்கொள்ளும் காவேரி நதியில் ஸ்நானம் செய்து, பழைய உருவம் பெற்றதோடு, தன விருப்பப்படி, மந்திரனையே மணாளனாகப் பெற்றாள்.

நியமத்தோடு,காவேரி ஸ்நானம் செய்துவந்த ச்வேதவதி என்ற பதிவ்ரதையின் கால் மாண்டல்ய முனிவரின் மேல் படவே, அவர் கோபப்பட்டு, "சூரியன் உதயமாவதற்குள் உயிர் நீப்பாய்" என்று சாபமிட்டார். கற்புக்கரசியான ச்வேதவதி, "அப்படியானால் சூரியனே உதிக்காமல் போகட்டும்" என்று சபிக்கவே, சூரிய உதயம் ஆகாமல் உலகம் ஸ்தம்பித்தது. பிரம்மாதி தேவர்கள் அவளிடம் சென்று, அவள் கணவன் சாபப்படி உயிர் நீங்காமல் இருக்கவும், இருவரும் துலா காவேரி ஸ்நானத்தைத் தொடர்ந்து செய்யவும் வரம் அளித்தார்கள்.

நியமம் தவறி வாழ்ந்துவந்த பிரம்ம சர்மா என்ற வேதியர் , தனது தர்ம பத்தினியான சுசீலையின் வாக்குப்படி, அவளோடு காவேரி தீரத்தை அடைந்து, அரசமர பிரதிஷ்டை செய்தும்,காவேரி ஸ்நானம் செய்தும் சிவ பூஜை செய்து கொண்டிருந்த காலத்தில், அவரது ஆயுட்காலம் முடிந்ததால் ,அவரது உயிரைக் கொண்டுபோக யமதூதர்கள் வந்தனர். சுசீலையின் கற்பு ஜ்வாலையால் அவர்களால் பிரம்ம சர்மாவை நெருங்க முடியாமல் போகவே, யமனிடமே மீண்டும் திரும்பினர். யமனுடைய கட்டளைப்படி சித்திரகுப்தன் அக்காரியத்தை செய்துவரச் சென்றான். அதை அறிந்த, சுசீலை, தனக்கு மாங்கல்யப் பிச்சை அளிக்குமாறு மன்றாடினாள். அவளது காவேரி ஸ்நானத்தின் ஒரு பங்கை எடுத்துக்கொண்டு, அவனது உடலைப் பாதுகாத்து வரும்படி சொல்லிவிட்டு, பிரம்ம சர்மாவின் உயிரை யமனிடம் கொண்டு சென்றான் சித்திர குப்தன்.

யமலோகம் செல்லும் வழியில் இரண்டு சண்டாளர்கள் வழிமறித்து, "எங்களிடம் செருப்பு வாங்கிவிட்டுப் பணம் தராமல் ஏமாற்றிவிட்டாய். இப்போது அதற்குப் பதிலாகத் தோல் தந்துவிட்டுப் போக வேண்டும்"என்றனர். தவித்துக்கொண்டு நிற்கும் பிரம்மசர்மாவின் நிலைக்கு இறங்கி அங்கு வந்த இரு பிரம்மச்சாரிகள்,தங்களது தொடையிலிருந்து தோல் எடுத்துக்கொடுத்தார்கள். சண்டாளர்கள் போனவுடன்,பிரம்ம சர்மாவை வணங்கி , இரு பிரம்மச்சாரிகளும்,"நாங்கள் இருவரும் தங்களால் வளர்க்கப்பட்ட அரச மரங்களே. அதன் பலனாகத்தான் உங்கள் பாவம் நிவர்த்தி ஆனது.நீங்கள் ஊருக்குத் திரும்பியவுடன் அந்த அரச மரங்கள் தோல் இல்லாமல் இருப்பதைப் பார்ப்பீர்கள்." என்று சொல்லிவிட்டு மறைந்தார்கள்.

யமனைத் திருப்திப் படுத்துவதற்காக ஒரு ஸ்தோத்திரத்தை பிரம்ம சர்மாவுக்கு உபதேசித்தார் சித்திரகுப்தன். அதன்படியே, யமனைக் கண்டவுடன் ,அதனைப் பக்தியோடு சொன்னார் பிரம்ம சர்மா.

(யம சுலோகம்;

தர்ம ராஜ நமஸ்தேஸ்து சாக்ஷாத் தர்ம ச்வரூபினே;
தர்மிஷ்ட சாந்த ரூபாய சத்திய ரூப நமோ நம்:
யமாய ம்ருத்யவே துப்யம் காலாய ச நமோ நம்:
சூர்யபுத்திர நமஸ்தேஸ்து சர்வ பூத க்ஷயாயதே.... )

இதைக் கேட்ட யம தர்மனும் மிகவும் மகிழ்ந்து, நீண்ட ஆயுளைக் கொடுத்தான். அதற்குக் காரணம் , சுசீலையின் காவேரி ஸ்நான பலனும் ,யம ஸ்தோத்திர பலனும் ஆகும்.

மீண்டும் தனது சரீரத்தில் புகுந்து, உறக்கத்திலிருந்து எழுந்திருப்பவனைப் போல எழுந்த பிரம்ம சர்மாவைப் பார்த்து அனைவரும் ஆச்சர்யப் பட்டார்கள். சில காலத்திற்குப்பின், சுசீலை,தனது கணவனிடமும், குழந்தைகளிடமும், தான் பகவானிடம் செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது என்று சொல்லி,எல்லோரையும் தன்னுடன் பகவன் நாமாக்களைச் சொல்லச் சொன்னாள். அவளின் காவேரி ஸ்நான பலனானது ,அவளுக்கு சுமங்கலியாக,
திவ்ய லோகம் கிடைக்கும்படி செய்தது.

விதி வசத்தால் மீண்டும் பாவங்களையே செய்ததால் பிரம்ம சர்மா,
எல்லோராலும் விரட்டப்பட்டு ஊர் ஊராகத்திரிந்து வந்தார். ஒரு வீட்டில் சிவ பூஜை செய்பவருக்குத் தீட்டு வந்து விடவே, அப் பூஜையை பிரம்ம சர்மா செய்து வந்தார். ஒரு நாள்,சாப்பிட்டு விட்டுப் பூஜை செய்த பாவத்தால், பன்றியாகப் பிறந்தார். அப்பொழுது, காவேரி ஸ்நானம் செய்யப் போய்க்கொண்டு இருந்த பத்மகர்பன் என்ற அந்தணனை காவேரி நதிக் கரை வரையில் அப்பன்றி துரத்தியது. அங்கு ஸ்நானம் செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணின் தலையில் இருந்து தெறித்த காவேரி ஜல்த்துளிகள் அப் பன்றி மேல் படவே, அப் பன்றி உருவம் நீங்கி, பழைய உருவம் பெற்றது. பாவம் நீங்கப்பெற்ற பிரம்ம சர்மனும் விமானம் ஏறி தேவலோகத்தை அடைந்தார்.

(காவேரி மகிமை தொடரும்)

Thursday, October 28, 2010

துலா காவேரி புராணம்- 2

நதி தேவதைகளிடம் பிரம்ம தேவர் மேலும் கூறுகின்றார்: "காவேரி மகிமையை கேட்டாலோ நினைத்தாலோ பாவங்கள் அகலும். மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவனும் துலா மாதத்தில் கௌரி மாயூரத்தைஅடைந்து காவிரியில் ஸ்நானம் செய்ய வேண்டும் . ஒரு சமயம் , அத்திரியின் மகனாகப் பிறந்த எனக்கும் ஊர்வசிக்கும் காவேரி மகளாகப் பிறந்தாள்அவளைத்தான் காவேர ராஜனுக்கு மகளாகக் கொடுத்தேன். அவளே இப்பொழுது நதியாக வந்துள்ளாள். நீங்கள் துலா ஸ்நானம் செய்து உங்களிடம் படிந்துள்ள பாவங்களை நீங்கப் பெறுவீர்களாக." என்று அருளினார்.

காவேரி ஸ்நானம் செய்து விட்டுத் திரும்பிக்கொண்டிருந்த இரு வேதியர்களிடம் பாவங்கள் பல செய்த ஒரு பெண் , பேய் வடிவம் கொண்டு எதிரில் வரவே, அவளுக்கு நல்ல கதி கிடைக்க வேண்டும் என்ற கருணையோடு, அவ்வேதியர் இருவரும், அவளை துலா மாதத்தில் கௌரி மாயூரம் சென்று காவேரி ஸ்நானம் செய்யச் சொன்னார்கள். அவளும் அவ்வாறு செய்யவே, பேய் உருவம் நீங்கியது.

துலாகாவேரி மகிமையைக் கேட்டவாறே உயிர் நீத்த சந்திரகாந்தை என்ற மகா பாபிக்கும் விஷ்ணு லோகம் கிடைத்தது. அவளது கணவனான வேத ராசி என்ற அந்தணன் புண்ணியசாலி. துலா ஸ்நானத்தைத் தவறாது செய்து வருபவன். அதன் பலனாகத் தேவலோகத்துக்கு அழைத்துச்செல்லப் பட்டான். வழியில், யம கிங்கரர்கள், பாபிகளைக் கட்டி இழுத்துக்கொண்டு போவதையும் கண்டான். அவர்கள் கொடிய பாவங்களைச் செய்தவர்கள். அருணோதய காலத்தில் நித்திரை செய்தவர்கள். கர்மானுஷ்டானங்களைச் செய்யாதவர்கள். பசியுடன் வந்தோருக்கு அன்னம் அளிக்காதவர்கள். செய்யக்கூடாதவைகளை செய்தவர்கள். பித்ரு தர்ப்பணம் செய்யாதவர்கள். தெய்வ கதைகளைக் காது கொடுத்துக் கேட்காதவர்கள். புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்யாதவர்கள். ஸ்தல யாத்திரையும் தான தர்மங்களும் செய்யாதவர்கள். பகலில் நித்திரை செய்தவர்கள். என்னைவிட மேலானவன் யாரும் இல்லை என்று பெரியவர்களை அவமதித்தவர்கள். சத்தியமே பேசாதவர்கள். சிவ பூஜை,விஷ்ணு பூஜை செய்யாதவர்கள். இவர்கள் நரகத்துக்குச் செல்வதைக் கண்டு ,வேத ராசிக்கு அவர்கள் மீது கருணை மேலிட்டது. " நரகத்தை அனுபவிக்கும் உங்களுக்கு எனது ஒரு நாள் துலா ஸ்நான பலனை அளிக்கிறேன் " என்றான். அடுத்த கணமே, நரகம்,சுவர்க்கமாக மாறியது. இதனைக் கண்ட வேத ராசி, பகவன் நாமாக்களைக் கூறிக்கொண்டே ஆனந்தக் கூத்தாடினான். இதனால் கோபத்துடன் வந்த யமனால் வேத ராசியை ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம், அப்பொழுது அவன் விஷ்ணு கவசத்தைப் பாராயணம் செய்து கொண்டிருந்தான். யமனும்,அவனை வணங்கிவிட்டுத் தனது இருப்பிடத்தை அடைந்தான்.

பாரத்வாஜ மகரிஷியின் அருளால் அவரது ஆசிரமத்தில் இருந்த கிளியும் பூனையும் துலா ஸ்நானம் செய்து,சுவர்க்கத்தை அடைந்தன. அகத்திய முனிவரின் சாபத்தால் பாம்பாகிய நகுஷன் என்பவன், கிருஷ்ணனின் அருளால் துலா காவேரிக்கு சென்று ஸ்நானம் செய்து பழைய உருவம் பெற்றான். வாங்கிய கடனைத் திருப்பித்தராத பாவத்தால் குதிரையாகைப்பிறந்து, வசிஷ்டரின் உரைப்படி, கௌரி மாயூரத்தை அடைந்து, துலா ஸ்நானம் செய்து தேவலோகம் பெற்றது. முற்பிறவியில் கொலை செய்த பாவத்தினால் குள்ள நரியாகவும் , முனிவர்களின் ஆசிரமத்திலிருந்து பழங்களைத் திருடித் தின்றதால் குரங்காகவும் மாறியவர்களைக் கண்டு , காசிப முனிவர் அவர்களைத் துலா காவேரியில் ஸ்நானம் செய்யும்படி அருளினார். அதன்படி செய்ததால், அவை, தேவ உருவம் பெற்றன. சிங்கத்துவஜன் என்ற வேடர் குல அரசன், ஓடி வரும் வழியில், பாரத்வாஜ முனிவர் மீது அவனது கால் படவே, அவனைக் கழுதையாக மாறும் படி அம்முனிவர் சாபமிட்டார். அதன்படி கழுதையாகத் திரிந்த அவனுக்கு எதிரில் பகவான் தோன்றி , காவேரி ஸ்நானம் செய்து சாபம் நீங்கப் பெறுவாய் என்று அருளினார். ஸ்ரீ ராமனிடம், வசிஷ்டர், சுதர்சனன் என்ற அந்தணன் , பாபியாக இருந்தபோதிலும் விதிவசத்தால் துலா காவேரி ஸ்நானம் செய்து, கௌரி மாயூர நாதரையும், அபயாம்பிகையையும் தரிசித்து, இறுதியில் சிவலோகம் பெற்றதையும், தனது தவத்தைக் கெடுத்ததால் விஸ்வாமித்திரர் ரம்பையை கல்லாக்கியதும், பிறகு அக்கல்லை வியாழ பகவான் காவேரியில் இட்டவுடன் பழைய உருவம் பெற்றதையும் விவரமாகச் சொன்னார். அதைகேட்ட ராமனும் , கௌரி மாயூரத்தை அடைந்து, பல தான தர்மங்களைச் செய்து, மாயூரனாதரையும், மயிலம்பிகையையும் வணங்கிவிட்டு, அயோத்திக்குத் திரும்பினார்.

( காவேரி மகிமை தொடரும் )

Monday, October 18, 2010

துலா காவேரி புராணம்


முன்னுரை: சோழ நாட்டைப் பொன்னி நாடு என்றும் , சோழ அரசனைப் பொன்னி நாடன் என்றும் சொல்வதுண்டு. தனது இரு கரைகளிலும் சிவ ஸ்தலங்களையும் விஷ்ணு ஸ்தலங்களையும் கொண்டு ,தெய்வப் பொன்னி இதனை "சோறுடைய" நாடாகச் செய்கிறாள். "சோறு" என்பதற்கு மோக்ஷம் என்றும் பொருள் உண்டு. இப் பிறவிக்கு உணவையும் அடுத்த பிறவியே இல்லாத மோக்ஷத்தையும் அளிக்கும் வள்ளல் இவள். இத் தெய்வ நதியின் பெருமைகளை ஆக்னேய புராணம் முப்பது அத்தியாயங்களால் விரித்துரைக்கிறது. காவேரி ரகசியம் என்றும் வழங்கப்படுகிறது. இதனைத் துலா (ஐப்பசி) மாதத்தில் பாராயணம் செய்வதும் ,உபன்யாசம் செய்வதும் சிறந்த பலன்களைத் தரும். காவேரியைத் தியானித்து, இதனைப் படிப்பவர்கள் காவேரி ஸ்நான பலன்களைப் பெறுவார்கள் என்று சொல்லப் படுகிறது. இதில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களைச் சுருக்கமாகவாவது எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால், இதனை வாரம் ஒரு பகுதியாக நான்கு வாரங்கள் துலா மாதத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைவதோடு, அனைவரும் எல்லா நலன்களும் பெற்று உய்ய வேண்டும் என்று, ஸ்ரீ காவேரி மாதாவின் மலரடிகளை வாழ்த்தி வணங்குகிறோம்.

துலா காவேரி மகாத்மியம்

अच्चास्वच्चालासध्धुकूलावासनाम पद्मासनाध्यायिनीम
हस्थान्यास्थावाराभायाब्जकालासाम राकेंधुकोतिप्रभाम।
भास्वध्बूशानागंधामाल्यारुचिराम चारूप्रसंनानानाम
गाधिसमास्थाथीर्थानिलायाम ध्यायामि कावेरिकाम।
- ஸ்ரீ காவேரி ஸ்துதி

ஆதியில் உமாதேவிக்கு ஸ்ரீ பரமேச்வரன் சொன்ன காவேரி மகாத்மியத்தை , தேவ வன்மன் என்ற அரசனுக்கு,சுமத் திரங்கி என்ற ரிஷி சொல்லத் தொடங்குகிறார். ஒரு சமயம் பார்வதி-பரமேச்வரர்கள் ஒரு நந்தவனத்தில் தங்கியிருந்தபோது அங்கு பறவைகள் வடிவில் வந்த நதி தேவதைகள், துலா மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்துவிட்டு அவ்விருவரையும் தரிசிக்க வந்தன. அவர்கள் வேண்டிய வரங்கள் எல்லாவற்றையும் தந்த ஈச்வரன் , மேலும் கூறலானார்: கங்கைக்கு நிகரான காவிரியில் நீராடினாலும்,தரிசித்தாலும், அதனை பக்தியுடன் தொட்டாலும் அதன் கரையில் தானம்,தர்ப்பணம் செய்தாலும் எல்லா பாவங்களும் விலகி, புண்ணியம் கிட்டும். இதன் கரைகளில் காசிக்கு சமமான ஸ்தலங்களும் இருக்கின்றன. நினைத்ததைத் தரும் சிந்தாமணியான காவேரியின் பெருமையை இன்னும் சொல்கிறேன் கேள்" என்றார்.அஸ்வமேத யாகம் செய்யத் தொடங்கிய அரிச்சந்திர மகாராஜாவை , முனிவர்கள் , பிராயச்- சித்தமாக துலா மாதத்தில் காவிரியில் நீராடிவிட்டு வரச்சொன்னார்கள்.
காவிரியின் பெருமையை யாரால் சொல்ல முடியும்?

நாத சனமா என்பவன் , பரம பதிவ்ரதையான அனவித்யை என்பவளுடன் காவேரி ஸ்நானம் செய்வதற்காகவும் இருவரும் மோக்ஷ சாம்ராஜ்யத்தைப் பெற வேண்டியும் , கௌரி மாயூர க்ஷேத்திரத்தை நோக்கி வந்தான். முனிவர்கள்,தங்கள் பத்திநிகளுடனும்,புத்திரர்களுடனும் தங்கி, ஹோமாக்னி செய்து,பலவித தானங்களை செய்துவரும் அந்த மோக்ஷ புரியில் நாமும் தங்கி நற்கதி பெறுவோம் என்றான் நாதசன்மன். அப்படியானால். காவேரி, மற்ற எல்லா தீர்த்தங்களை விட எவ்வாறு உயர்ந்தது என்று, அனவித்யை கேட்க, நாத சந்மனும் கூறத்தொடங்கினான்.

கவே ரன் என்ற அரசன், தனக்குப் புத்திர பாக்கியம் இல்லாததால் பிரம்மாவைக் குறித்துத் தவம் செய்தான். பிரம்மாவானவர், "உனக்குப் புத்திர பாக்கியம் இல்லாவிட்டாலும், ஒரு குழந்தையை அளிக்கிறேன்" என்று கூறி, தன மனத்தால் ஒரு பெண் குழந்தையை உண்டாக்கி அவனிடம் அளித்தார். காவேரி என்ற பெயரில் அவனிடம் வளர்ந்த அப்பெண், தகுந்த கணவனை வேண்டித் தவம் செய்யலானாள். பின்னர், அகஸ்த்திய முனிவரைக் கண்ட காவேரியானவள், இவரே தனது மணாளர் ஆவார் என்று நினைத்து, லோபாமுத்ரா என்ற பெயருடன் அவரை திருமணம் செய்துகொண்டவுடன், அவள் விரும்பியபடியே, நதி ரூபமாகி, பிற நதிகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்பட்ட பாவங்களை நீக்கவும், மோக்ஷத்தை அளிக்கவும் மறு அம்சமாகத் திகழுமாறு, அகஸ்த்ய ரிஷி அருளினார்.

துலா மாதத்தில் காவிரியில் ஸ்நானம் செய்யும் முறைகளை,நாதசன்மா விளக்கினார்: உதய காலத்தில் நியமத்துடன் எழுந்தும், சிவபூஜை செய்தும் தீய பழக்கங்களை நீக்கியும், விரதத்துடனும் பரமேச்வர தியானத்துடன் இருக்க வேண்டும். மூன்றரைக்கோடி தீர்த்தங்கள் துலா மாதத்தில் காவிரியில் வந்து சேருவதால்,இதில் ஸ்நானம் செய்வதன் மூலம், அழகு,ஆயுள், ஆரோக்கியம், செல்வம்,கல்வி, வலிமை, மாங்கல்ய பாக்கியம். புத்திர பாக்கியம் முதலியவை சித்திக்கும். இதைக் காட்டிலும் புண்ணியச் செயல் எவ்வுலகிலும் இல்லை. எனவே, ஜன்மத்தில் ஒரு முறையாவது, துலா ஸ்நானம் செய்ய வேண்டும். "
பிறகு இருவரும் துலா ஸ்நானம் செய்து, ஸ்ரீ அபயாம்பிகையையும் ஸ்ரீ கௌரி மாயூர நாதரையும்,தரிசித்து, மோக்ஷம் பெற்றனர்.

(குறிப்பு: மாயூரம் ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்திலும் காவிரியின் வடகரையில் உள்ள ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி ஆலயத்திலும், ஸ்ரீ நாதசன்ம- அனவித்யாம்பிகை தம்பதிகளின் பெயரில் சிவ லிங்கங்களை உடைய சன்னதிகள் உள்ளன.)
(காவேரி மகிமை தொடரும்)

Friday, September 10, 2010

ஸ்ரீ கணேச மகிமை


இன்பங்களில் பல வகை உண்டு. நாம் விரும்பிய பொருளைப் பெறுவதால் ஏற்படும் இன்பம் "பிரமோதம்" எனப்படும். காணாத பொருளை விரும்பி அது கிடைக்கும் எனும்போது தோன்றுவது,"ஆமோதம்" என்பது. விரும்பிய பொருளைப் பெற்று அதனால் வரும் இன்பத்தை அனுபவிப்பது, "சுரானந்தம்" எனப்படும். இந்த மூன்று வகை இன்ப வடிவாக இருந்து, தனது பக்தர்களுக்கு அவற்றை வாரி வழங்கும் தெய்வம் ஸ்ரீ மகா கணபதி ஆவார். அவரை மனத்தினால் தியானிக்கும் போதே ஆனந்தம் ஏற்பட்டு விடுகிறது. ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம் அவரை, "கிரீடி,குண்டலி,ஹாரி,வனமாலி" என்று போற்றுகிறது. அவரது வடிவம் கண்ணுக்குள்ளேயே நின்று,"சர்வநேத்ராதி வாச:" என்ற நாமாவுக்கு விளக்கம் தருகிறது. கோபம் கொண்டவர்களையும் அந்தக் கணமே சாந்தமாகவும் குதூகலமாகவும் ஆக்கிவிடுவது அவரது அழகிய பால ரூபம். அப் பெருமான் பரமேச்வரனுக்கே ஹாஸ்யத்தை உண்டாக்குபவர் என்பதை, " சம்பு ஹாச்யபூ:" என்ற நாமமும், அம்பாளுக்கும் ஆனந்தத்தை விளைவிப்பார் என்பதை "கௌரி சுகாவஹா" என்ற நாமமும் தெரிவிக்கிறது.

" சிந்தாமணி த்வீப பதி:கல்பத்ருமவனாலய ரத்ன மண்டப மத்யஸ்த ரத்ன சிம்ஹா-சனாச்ர யா: " என்பதால் சிந்தாமணித் தீவில் அதிபதியாகவும்,கற்பக வனத்தின் நடுவில் ரத்னமண்டப மத்தியில் ரத்ன சிம்ஹாசனத்தில் வீற்று இருப்பவராகவும் ஸ்ரீ கணபதி காட்சி அளிக்கிறார். தீவ் ரா, ஜ்வாலினி, நந்தா, போக்தா ,காமதாயிநீ, உக்ரா, தேஜோவதீ,சத்யா, விக்ன நாசினி, ஆகிய ஒன்பது சக்திகள் , பீட சக்திகளாக விளங்குகிறார்கள். திவ் ரா என்ற பீட சக்தி ஸ்ரீ கணபதியின் பாதங்களைத் தலையால் தாங்குகிறாள். ஐம்பது எழுத்துக்கள் நிறைந்த தாமரை மலரில் சூரிய மண்டலம், சந்திர மண்டலம், அக்னி மண்டலம் என்ற மூன்றின் மேல் சுவாமி அமர்ந்து இருக்கிறார்.

சிவந்த மேனியும் சிவந்த ஆடைகளையும் சிவந்த மாலைகளைத் தரித்தவராகவும் உடைய இம்மூர்த்தி வெள்ளை நிறத்திலும் விருப்பம் உள்ளவர் என்பதை,

"ஸ்வேத ஸ்வேதாம் பரதர: ஸ்வேத மால்ல்ய விபூஷன:
ஸ்வேதாத பத்ரருசிற: ஸ்வேத சாமர வீஜ்ஹித:"

என்பதால், வெண்மையான சரீரத்தையும் வெண்மையான ஆடையையும் மாலைகளையும் வெண் குடையையும் வெண் சாமரத்தையும் உடையவர் என்று பொருள். இவர் ,தும்பிக்கையில் உள்ள தங்கக் கலசத்தில் உள்ள ரத்தினங்களை அடியார்களுக்குக் கருணையோடு பொழியும் தெய்வம் என்பதை,

புஷ்கரச்த ச்வர்ணகடீ பூர்ண ரத்னாபி வர்ஷகாய" என்ற நாமாவளி தெரிவிக்கிறது. இவரது ஆவரண தேவதைகளாக லக்ஷ்மீ நாராயணரும் பூமா தேவியும் ரதி மன்மதர்களும் ,ஆறு கணபதிகளும், அவர்களின் பத்தினிகளும் சங்க நிதி,பத்ம நிதி ஆகியவையும், பீடத்தில் பிராண சக்தியாக ஜெயா முதலான ஒன்பது சக்திகளும் விளங்குகின்றனர்.

இவரது பெருமையை, சஹஸ்ரநாமம் வர்ணிக்கும்போது, சப்த ரிஷிகளால் துதிக்கப் படுபவராகவும், சப்த ஸ்வர வடிவாகவும் சப்த மாதாக்களால் வழிபடப் படுபவராகவும், அஷ்ட மூர்த்தியாக விளங்கும் ஸ்ரீ பரமேச்வரனுக்குப் பிரியமான வராகவும், அஷ்ட ஐச்வர்யங்களையும் வாரி வழங்கும் வள்ளலாகவும் நவ நாராயணர் களால் துதிக்கப்படுபவராகவும் ஒன்பது குரு நாதர்களுக்கு மேலான குருநாதராகவும் உலகுக்கு உயிராகவும் பதினான்கு வகை இந்திரர்களுக்கும் வரம் அளிக்கும் வள்ளலாகவும்பதினான்கு உலகங்களுக்கும் பிரபுவாகவும் பதினெட்டு வகையான தான்யங்களை மக்களுக்கு உணவாகப் படைத்தவராகவும்,பரம தத்துவ வடிவினராகவும், முப்பத்தெட்டு கலைகளோடு கூடிய கடவுளாகவும் அறுபத்து நான்கு கலைகளின் நிலையமாகவும் நான்கு லக்ஷம் முறை தனது மந்திரத்தை ஜெபிக்கும் பக்தர்களிடம் மிகவும் பிரியமானவராகவும், ஏழு கோடி மகா மந்திரங்களின் வடிவமாகவும் துதிக்கப் படுகிறார்.

இவ்வளவு பெருமை வாய்ந்த ஸ்ரீ மகா கணபதி சகஸ்ரனாமத்தைப் பாராயணம் செய்யும் வீட்டை விட்டு மகாலட்சுமி அகல மாட்டாள். துர்தேவதைகளும்,வியாதிகளும் நீங்கும். தடைகள் நீங்கி வெற்றி உண்டாகும். இதனால் ஹோமம் செய்தால் கை மேல் பலன் உண்டாகும். பரம தரித்திரனாக இருந்தாலும் மகத்தான ஐச்வர்யத்தைப் பெறுவான் இது பரமேச்வர ஆக்ஞை" என்று மஹா கணபதியே சொல்வதாக சஹஸ்ர நாம பலச்ருதியில் சொல்லப் பட்டிருக்கிறது.

பக்தர்கள் அனைவரும் கணபதி சஹஸ்ரநாம பாராயணம் செய்து எல்லா ஐச்வர்யமும் பெற்று, நீண்ட ஆயுளோடும்,குணவதியான மனைவியோடும், நல்ல புத்திரர்களோடும் ,பிறப்பற்ற வாழ்வு வாழும்படி, "கர்ம கர்த்தா"வாகவும் "கர்ம சாக்ஷி"யாகவும் விளங்கும் கணேச மூர்த்தியின் பாத தாமரைகளைப் பிரார்த்திக்கிறோம்.

Monday, May 24, 2010

அஷ்ட புஷ்பங்கள்

புஷ்பங்கள் பற்றி ஆகமங்களும் புஷ்பவிதி என்ற நூலும் விவரமாகச் சொல்லியிருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் இன்ன இன்ன புஷ்பங்களை சுவாமிக்குச் சார்த்த வேண்டிய காலம் பற்றியும் கூட சொல்லியிருப்பதைக் காணலாம். தோஷமில்லாத , அதாவது பூச்சி அரிக்காத, எச்சம் இடப்படாத விடியற்காலத்தில் பறிக்கப்பட்ட புஷ்பங்களால் பூஜை செய்வது விசேஷமாகச் சொல்லப்பட்டுள்ளது. இதைத்தான் "நன் மாமலர்" என்று ஞானசம்பந்தர் பாடுகிறார்.

இனி, அஷ்ட புஷ்பங்கள் எவை என்று பார்ப்போம்.புன்னை,சண்பகம்,பாதிரி, வெள்ளெருக்கு, நந்தியாவர்தம்,அரளி, நீலோத்பலம், தாமரை என்பனவே அஷ்டபுஷ்பங்களாக பூஜைக்கு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் நந்தியாவர்தம்,அரளி ஆகியவை வீடுகளிலேயே வளர்க்கப்படுகின்றன. இவற்றைத் தவிரவும், மல்லிகை,முல்லை,பாரிஜாதம், மயில் கொன்றை ,விருக்ஷி போன்ற புஷ்பச் செடிகளையும், வில்வ மரத்தையும் வீடுகளில் பூஜைக்காக வளர்ப்பது உண்டு.

புன்னை: இம்மரம் பெரும்பாலும் கடற்கரைப் பகுதிகளில் காணப்படுவது. மயிலாப்பூரில் புன்னை மரத்தின் நீழலில் கபாலீச்வரர் வீற்றிருப்பதை , "மட்டிட்ட புன்னையங்கானல்" என்று துவங்கியபடி பதிகம் பாடுகிறார் சம்பந்தர். இக்கோயிலில் புன்னை மரம் ஸ்தல விருக்ஷமாக இருக்கிறது. பசுமையான இலைகளையும் வெள்ளை நிறம் கொண்ட பூக்களையும் கொண்டது இம்மரம். இதில் கோடைக்காலத்தில் பூக்கள் அதிகமாக இருக்கும்.






சண்பகம்: வாசனை மிக்க இம்மலர்கள் சித்திரை முதல் புரட்டாசி வரை பூக்கக் கூடியவை. இம்மரத்தின் இலைகளும் பசுமையாக இருப்பவை. செண்பகவல்லி என்று அம்பாளுக்கும் சென்பகாரன்யேச்வரர் என்று சுவாமிக்கும் பெயர்கள் வழங்குவதைப் பார்க்கலாம்.





பாதிரி: நீண்ட மலர்களைக் கொண்ட பாதிரி மரம் உயரமாக வளரக்கூடியது. இம் மலர்கள் வாசனையானவை. இதனைத் தல விருக்ஷமாகக்கொண்ட ஸ்தலம் திருப்பாதிரிப்புலியூர் ஆகும்.

வெள்ளெருக்கு:
வெள்ளெருக்கும் பாம்பும் சுவாமியின் ஜடையில் விளங்குவதை, "வெள்ளெருக்கு அரவம் விரவும் சடை" என்று அப்பர் தேவாரம் குறிப்பிடுகிறது. முதலில் சிறிய செடியாக விளங்கி , சிறிய மரமாகவும் வெள்ளெருக்கு வளர்ச்சி பெறுகிறது. வெண்மை நிறம் கொண்ட இம்மலர்கள் ஆண்டின் பல மாதங்களில் பூக்கக் கூடியவை. எருக்கத்தம்புலியூர் என்ற சிவ ஸ்தலத்தில் இம்மரம் விருக்ஷமாக விளங்குகிறது.

நந்தியாவர்தம்: நந்தியாவட்டை என்று பேச்சு வழக்கில் சொல்லப்படுவது. வருடம் முழுவதும் பூக்கக்கூடியது. வெள்ளை நிறம் கொண்ட இம்மலர்களை மாலையாகவும் அர்ச்சனைக்கும் பயன் படுத்துவர்.


அரளி:

இதுவும் மாலைகளில் பயன்படுத்தப்படுவது. அர்ச்சனைக்கும் பயன்படுத்துவர். அநேகமாக ஆண்டு முழுவதும் பூப்பதால் நந்தவனங்கள் மற்றும் வீடுகளில் இச்செடியை வளர்க்கிறார்கள்.

நீலோத்பலம்:

நீர்நிலைகளில் வளரக்கூடியது. இதைக் குவளை என்றும் சொல்வர். கண்களுக்கு இதை உதாரணம் காட்டுவார்கள். "குவளைக்கண்ணி " என்று அம்பாளைத் திருவாசகம் குறிப்பிடுகிறது. திருவாரூரில் அம்பாளுக்கு, நீலோத்பலாம்பிகை என்று பெயர்.

தாமரை: தாமரையில் மகா லக்ஷ்மி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. இத் தாமரை மலர் குளங்களிலும் நீர் நிலைகளிலும் வளர்வதைக் காணலாம். ஆயிரம் தாமரை மலர்களால் திருவீழிமிழலையில் மகாவிஷ்ணு சிவ பூஜை செய்து சக்கரம் பெற்றதாக அந்த ஊர்ப் புராணம் சொல்கிறது. அதற்காகவே பஞ்சாக்ஷர சஹஸ்ரநாமம் சொல்லி அர்ச்சனை செய்தாராம் விஷ்ணு.

ஊமத்தை ,மந்தாரை, மகிழம்பூ,போன்ற புஷ்பங்களையும் ஈச்வரன் ஏற்றுக்கொள்கிறான். இருந்தாலும் மேலே சொன்ன அஷ்ட புஷ்பங்களே மிகவும் உயர்வாகக் கூறப்படுகின்றன. இந்த "எட்டு நாண்மலர் " கொண்டு ஈசனது பாதார விந்தங்களுக்கு அர்ச்சித்தால் எல்லாப் பாவங்களும் நீங்கும் என்று அப்பர் தேவாரம் நமக்கு உணர்த்துகிறது.

ஸ்ரீ பரமேச்வரனது பாதங்களோ இயற்கையிலேயே வாசனை மிக்கவை. அம மலர்ப்பாதங்களுக்கு மலர்களால் அர்ச்சிக்கிறோம். "நறுமலராய் நாறும் மலர்ச் சேவடி " என்று இதைக் குறிப்பிடுவார் அப்பர் ஸ்வாமிகள். இப்படி இயற்கையிலேயே மணம்மிக்க பாதங்களைச் சுற்றி ரீங்காரம் செய்கின்றனவாம் வண்டுகள். ஆகவே, "வண்டினங்கள் சூழ்ந்த அடி" என்பார் அப்பர் பெருமான்.

முருக நாயனார் திருப்புகலூர் வர்தமாநீச்சரத்தில் புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தவர்.பக்தியையும் கூடவே பகவானுக்கு மாலையாகச் சார்த்தி மகிழ்ந்தவர்.அந்த ஊர்ப் பதிகத்தில் முருக நாயனாரது இத்தொண்டு திருஞான சம்பந்தரால் போற்றப்படுகிறது.


அத்தகைய மலர்ப்பாதங்களை நாமும் அஷ்ட புஷ்பங்களால் அர்ச்சித்து சஞ்சித வினைகள் நீங்கி , பிறப்பு இறப்பு இல்லாத நிலையை அடைவோமாக.

Thursday, February 11, 2010

சிவார்ப்பணம் மலர்-1 இதழ்- 1 March2010


அன்பார்ந்த வாசகர்களுக்கு:

சிவார்ப்பணம் என்ற இப்பகுதியை வெளியிடவேண்டும் என்ற ஆவல் மகாசிவராத்திரியை முன்னிட்டு ஈடேறுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
மற்ற வெளியீடுகளைப் போல் இதுவும் இளைய தலைமுறைக்கு எளிமையாகப் புரியும் படி அமையும் என்று நம்புகிறோம். இதன் மூலம் புராண வரலாறுகள் , மகான்களின் வரலாறுகள் மற்றும் உபதேசங்கள் , பண்டிகைகளின் சிறப்புக்கள் ஆகியவை வெளி வர உள்ளன. தங்களின் மேலான கருத்துக்கள் இதனை மேலும் பயனுள்ளதாக ஆக்கும் என்பதால் அவற்றை வரவேற்கிறோம்.
எல்லாம் சிவன் செயல்.
"எல்லாம் அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே."
சிவ சிவ

மகா சிவராத்திரியின் மகிமை

இறைவன் உருவமும் அருவமும் ஆனவன். "உருவமும் அருவமும் ஆகி" என்று கந்த புராணத்தில் சொல்லப்படுகிறது. பிரம்ம விஷ்ணுக்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டை போட்டுக்கொண்டபோது இருவருக்கும் இடையில் அக்னி மலையாக சிவ பெருமான் தோன்றினான். அம்மலையின் முடியைத் தேடி அன்ன வடிவில் பிரமனும் அடியைத்தேடி பன்றி வடிவில் விஷ்ணுவும் சென்றனர்.இறைவனது முடியில் இருந்து விழுந்த தாழம்பூ, பிரமனுக்கு அஞ்சி,பிரமன் முடியைப் பார்த்ததாகப் பொய் சாட்சி சொல்லியது. அதனால் பிரமனுக்கு உலகில் கோயில் இல்லாமலும்,சிவ பூஜைக்கு தாழம்பூ பயன்படாமலும் சாபம் ஏற்பட்டது. பாதத்தைக் காண முடியவில்லை என்று விஷ்ணு உண்மையை ஒப்புக் கொண்டதால் இறைவனது அருளால் உலகத்தவர் வணங்கும்படி வரம் பெற்றார். இது நிகழ்ந்த தினம் மாசி மாத கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி அன்று நடு இரவில் ஆகும். சிவ லிங்கமாக பிரம்ம விஷ்ணுக்களுக்கு நடுவில் தோன்றியதால் இந்த நேரத்தை லிங்கோத்பவ காலம் என்பார்கள்.


உருவமும் இல்லாமல் அருவமும் இல்லாமல் உருவாருவமாய் ஏற்பட்டதே இதன் தனிச் சிறப்பு ஆகும். சோழர் கால ஆலயங்கள் பலவற்றிலும் சிவ சன்னதியின் பின்புறம் தேவகோஷ்டத்தில் லிங்கோத்பவ மூர்த்தியை தரிசிக்கலாம்.

சிவ ராத்திரி வகைகள்: மாசி மாத தேய் பிறை சதுர்தசி அன்று வருவது மகாசிவராத்திரி.

யோக சிவராத்திரி வகைகள் நான்கு:

சோம வாரத்தில் 24 மணி நேரமும் அது யோக சிவராத்திரி.

சோம வாரத்தில் இரவு நான்கு ஜாமமும் தேய் பிறை சதுர்தசி இருப்பது.

சோம வாரத்தில் இரவு 3 மணி முதல் 6 மணி வரை உள்ள நேரத்தில் அரை நாழிகை அமாவாசை இருப்பது.

சோம வாரத்தில் இரவு நாலாம் ஜாமத்தில் தேய் பிறை சதுர்தசி அரை நாழிகை இருப்பது.

நித்திய சிவராத்திரி:12 மாதங்களிலும் வரும் 24 சதுர்தசிக்கள்.

பக்ஷ சிவராத்திரி: தை மாத தேய் பிறை பிரதமையிளிருந்து 14 நாட்கள் அனுசரிக்கப் படுவது.

மாத சிவராத்திரி: பெரும்பாலும் மாதத்தின் அமாவாசைக்கு முதலில் வரும் சதுர்தசி.

சிவ ராத்திரி விரதம்: சிவ ராத்திரிக்கு முன்தினம் ஒரு வேலை உணவு உண்டு மறு நாள் காலை நீராடிவிட்டு,நியமம்,பூஜைகளை செய்துவிட்டு,சிவாலய தரிசனம் செய்யவேண்டும். மாலையில் சிவாலத்தில் இரவு பூஜைக்கு வேண்டிய சாமான்களைக் கொடுக்க வேண்டும்.வீட்டில் சிவ பூஜை செய்யாதவர்கள் கோயில்களில் நடக்கும் 4 கால பூஜைகளைத் தரிசிக்கலாம்.

முதல் ஜாம பூஜை: பசும் பால்,பசுந்தயிர், பசு நெய்,கோமூத்ரம்,பசுஞ்சாணம் ஆகியவற்றை 1:2:3:1:1 என்ற அளவில் பஞ்சகவ்யமாகக் கலந்து சுவாமிக்கு அபிஷேகிக்க வேண்டும்.வில்வம்,தாமரை ஆகியவற்றால் அர்ச்சனையும் பொங்கல் நைவேத்யமும் ரிக் வேத பாராயணமும் செய்ய வேண்டும்.

இரண்டாம் ஜாமம் பாயசம் நைவேத்யமும் யசுர் வேத பாராயணமும் செய்யவேண்டும்.

மூன்றாம் ஜாமத்தில் தேன் அபிஷேகமும், சாம வேத பாராயணமும் செய்வது விசேஷம்.

நாலாம் ஜாமத்தில் கரும்பு சாறினால் அபிஷேகமும் அதர்வண வேத பாராயணமும் செய்யவேண்டும்.

சிவராத்திரி பிரபலமாக எல்லா இடங்களிலும் நடைபெற்றாலும் காசி,ராமேச்வரம்,நேபாளம் ஆகிய இடங்களில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.


சுவாமி மலைக்குப் பக்கத்தில் திரு வைகாவூர் என்ற பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது.புலிக்குப் பயந்த வேடன்,இரவு முழுவதும் வில்வ மரத்தின் மேல் கண் விழித்தபடியே உட்கார்ந்திருந்தான். வில்வ இலைகளை கீழே போட்டுக் கொண்டிருந்தான். கீழே இருந்த சுவாமிக்கு அவை யாவும் வில்வார்ச்சனையாக ஆகியது. அன்றைய தினம் மகா சிவராத்திரி ஆதலால் அவன் முக்தி பெற்றான் என்பது அந்த ஸ்தல வரலாறு.சிவ ராத்திரி என்று தெரியாமல் கண் விழித்தவனுக்கே முக்தி கிடைக்கும்போது அறிந்து செய்யும் சிவராத்திரி விரதம்,பூஜை,சிவ தரிசனம் ஆகியவற்றின் மகிமையை யாரால் சொல்ல முடியும்?